ஆஸ்திரேலியாவிலிருந்த அந்த மருத்துவமனை வராண்டாவில் பதட்டத்துடன் காத்திருந்தார் தந்தை. உள்ளே அவருடைய மனைவிக்குப் பிரசவம். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அப்பாவுக்கு ஒரே சந்தோசம். கொஞ்ச நேரத்திலேயே மகனைக் கொண்டு வந்து காட்டினார்கள். ஆர்வத்துடன் மகனைப் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை. நிக் வாயிச்சஸ் பிறந்த 1982ம் ஆண்டு டிசம்பர் 4 பெற்றோருக்கு துயர நாளாய் ஆகிவிட்டது.
ஐயோ இவன் என்ன செய்வான் ? இவனால் நடக்க முடியாதே, கையால் செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்ய முடியாதே. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். குழந்தை சிறுவனானான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். பள்ளிக்கூடத்தில் அவமானப் பார்வையும், பரிதாபப் பார்வையும் அவனைப் புரட்டிப் போட்டன. எல்லோரைப் போலவும் தான் இல்லையே என அழுத அவனுடைய ஒரே பிரார்த்தனை என்ன தெரியுமா ? “கடவுளே முடி வளர்வது போல, என்னோட கை கால்களும் வளரட்டுமே என்பது தான்”.
முடியைப் போல கை கால்கள் வளராது எனப் புரிந்த வயதில் தற்கொலை செய்ய முயன்றான் சிறுவன் நிக். அதிலும் அவனுக்கு வெற்றியில்லை. தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு. எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தில் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும். ஒரு நாள் ஒரு மாற்றுத் திறனாளி கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கால்ஃப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன.
அதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார். அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான காலண்டர். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது. கால்ஃப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.
இன்று 24க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். இலட்சக் கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர் “லைஃப் வித்தவுட் லிம்ப்” எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.
கணினி மென்பொருள் போன்ற நிறுவனங்களில் பணியாளர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட இவருடைய வீடியோ காட்சிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. நாம் தடுமாறி கீழே விழுந்தால் கைகளை ஊன்றி எழுவோம். அல்லது கால்களைக் கொண்டு எழுவோம். காலும் கையும் இல்லாத அவர் விழுந்து விட்டு எழும் காட்சியை வீடியோவில் பார்க்கும் போது தன் மேல் குறையிருக்கிறது என்று நினைக்கும் எல்லோருமே அந்த நினைப்பை மாற்றிக் கொள்வது உறுதி !
தனக்கு ஏதோ குறையிருக்கிறது என்று நினைப்பது இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறியிருக்கிறது. நான் கொஞ்சம் கறுப்பா இருக்கேனோ ? இன்னிக்கு போட்டிருக்கிற டிரஸ் என்னை கொஞ்சம் டல்லா காட்டுதோ ? என்பது தொடங்கி தங்களுக்கு ஏதோ குறை இருப்பதாய் கற்பனை செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இன்று அனேகம்.
நல்லா இருப்பவர்களே இப்படி இருந்தால் கொஞ்சம் குறைபாடு உள்ளவர்களுடைய கதி என்னாவது ? “கொஞ்சம் முதுகு வலி. அதுமட்டும் இல்லேன்னா பட்டையைக் கிளப்பியிருப்பேன்…. ”,”எனக்கு இங்கிலீஷ் தான் பேச வராது. அது மட்டும் இல்லேன்னா நான் எங்கேயோ போயிருப்பேன்… “ என சாதாரணமான பிரச்சினைகளைக் கூட பேனர் கட்டி விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
சாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844ல் பிறந்த இவர் பிரஞ்ச் நாடக உலகையும் திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம்படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் தீரவேயில்லை. அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று ! புகழில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் ? அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள். ஆனால் அவர் அசரவில்லை. அதன் பின்பும் மரணம் வரை தனது வசீகரக் குரலாலும், நடிப்பாலும் பிரஞ்ச் உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.
தான் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலானவன். என் குணாதிசயங்களும், திறமைகளும் எனக்கு மட்டுமே எனும் சிந்தனை இன்று பலருக்கும் வருவதேயில்லை. “காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் அன்றைய தினம் முழுதும் உங்களோடு கூடவே வரும்” என்பதுதான் உளவியலின் பால பாடம்.
ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசினால் ஜான் மில்டன் அவர்களுடைய “பேரடைஸ் லாஸ்ட்” எனும் படைப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பதினேழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு இன்றும் ஆங்கில இலக்கியத்தில் அசையா இடத்தில் இருக்கிறது அந்த நூல். அதை எழுதும்போது மில்டனுக்குப் பார்வையே இல்லை தெரியாது என்பதை அறியும் போது அதிரவைக்கும் வியப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒரு டம்ளரில் பாதி தண்ணீர் ஊற்றி கொடுத்தால், அடடா பாதி காலியா இருக்கே என்று சொல்வது சோர்ந்தவர்களின் சிந்தனை. ஆஹா, பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்வது தான் நிக் போன்றவர்களின் சிந்தனை. எந்தக் குறை உடலில் இருந்தாலும் மனம் வலுவாய் இருந்தால் சாதிப்பதற்குத் தடை ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை.
“சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா ? செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்பார்கள். பதில் முடியும் என்பது தான் ! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே ! அவர் சிம்பொனி அமைத்த போது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது ! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையை ரசிக்க முடியாதா ?
எது இல்லாமலும் ஒரு மனிதனால் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் எனும் வேகமும், சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதுமானது.
1880ம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள ஆர்தர் – கேட் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகான குழந்தை ஒன்றரை வயது வரை வெகு சாதாரண குழந்தையாய் தான் இருந்தது. திடீரென வந்த ஒரு நோய் குழந்தையின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. பார்வை போய்விட்டது. கேட்கும் திறனும் போய்விட்டது. பார்க்காமல், கேட்காமல் இருந்த அந்தக் குழந்தையை எப்படி வளர்த்துவதென திகைத்தனர் பெற்றோர்.
படிக்க வைப்பது எப்படி ? பாடம் சொல்லிக் கொடுப்பது எப்படி ? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனி சுலிவன் எனும் பெண் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் துணிந்தார். எப்படி ? ஒரு கையில் பொம்மையை வைப்பார், மறு கையில் பொம்மை என ஆங்கிலத்தில் என எழுதுவார். ஆனால் குழந்தையால் ஒரு கையில் இருக்கும் பொருளுக்கான வார்த்தை தான் மறுகையில் எழுதப்படுவது என்பது மட்டும் புரியவேயில்லை. ஒரு நாள் ஒருகையில் குளிர்ந்த நீரை திறந்து விட்டுவிட்டு மறுகையில் “வாட்டர்” என எழுதியபோது தான் குழந்தைக்கு பளிச் என மனசுக்குள் பல்ப் எரிந்திருக்கிறது. பின் அசுர வேகத்தில் வார்த்தைகள் கற்பிக்கப்பட்டன.
இவளால் என்ன செய்ய முடியும் என பரிதாபமாய்ப் பார்க்கப்பட்ட அந்த பெண் உலகையே பிரமிக்க வைத்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்றார். உலகிலேயே கேட்கும் திறன் மற்றும் பார்வை இரண்டும் இல்லாமல் பட்டம் பெற்ற முதல் நபர் எனும் பெருமை அவருக்குக் கிடைத்தது. பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் முன்னேற்றக் குழுக்கள் போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினரானார். மிகச் சிறந்த பேச்சாளராகவும், அசத்தலான எழுத்தாளராகவும் பரிமளித்தார். பன்னிரண்டு நூல்கள், பல நூறு கட்டுரைகள் என அவருடைய எழுத்துப்பணி பிரமிப்பூட்டுகிறது. அமெரிக்க அரசு சிறப்பு நாணயம் வெளியிடுமளவுக்கு பெருமையடைந்த அந்தப் பெண்மணி தான் ஹெலன் கெல்லர்.
நம்மிடம் எது இல்லை என்று பார்த்து முடங்குவது துயரங்களின் தெருக்களில் நடப்பது போன்றது. நம்மிடம் என்ன ஸ்பெஷல் என்று பார்த்து வாழ்வதே வெற்றியின் வீதிகளில் வீறு நடை போடுவது போன்றது. நமது உடல் தான் நமது மனத்தைத் தூக்கிச் சுமக்கிறது என நாம் தவறாக நினைத்து விடுகிறோம். இல்லை ! நமது மனம் தான் நம்மை அதன் விருப்பத்துக்கு ஏற்ப அழைத்துச் செல்கிறது.
உறுதியான மனமே சாதனையின் ஆதாரம்.
அதுமட்டும் இல்லையேல் வாழ்வே சேதாரம்.