அந்த தேவதை
மெல்ல மெல்ல கேசம் கலைய
மிதப்பது போல் நடந்து வந்தது
என்னை நோக்கி.
அவளுக்கும் எனக்கும்
இடையே இருந்த இடைவெளி
சொல்லாமல் கொள்ளாமல்
குறையத் துவங்கியது.
அந்த சின்ன உதடுகளை
இறுகப் பற்றி ஓர்
ஆனந்த முத்தம் அளிக்கலாமா ?.
அந்த
செம்பருத்திக் கரங்களைக் சேர்த்து,
விழிகளை விழிகளில் கோர்த்து
விடியும் வரையில்
விழித்துக் கிடக்கலாமா ?
இதயத் துடிப்பின் வேகம் நிற்க
இருகைகளால் அவளை எடுத்து
இதயம் இடிக்கும் தூரத்தில்
இணைத்துக் கொள்ளலாமா ?
கூந்தல் இடையில்
விரல் கவிதை வரையலாமா ?
கன்னங்களின் கதகதப்பில்
சிறு கவிதை படிக்கலாமா ?
சிறு மோகச் சிந்தனைகள்
சிறுகச் சிறுக வலுத்த நேரம்,
என்னை நெருங்கி.
என்னைக் கடந்து நடந்து போய்விட்டாள்..
ம்ம்ம்.
அவளுக்கென்ன தெரியும்
என் மனசு அவளுக்காய் எழுதி
கலைத்துப் போட்ட மணல் கவிதை பற்றி.
