பிரியமே.
எதிர்ப்பில்லாத காதலை
நான் பார்த்ததில்லை.
மண்ணுக்கும் வேருக்கும்
இருக்கும் இறுக்கம்
வேலிகளுக்கு புரிவதில்லை.
பலரும்
பயம் கொள்வதெல்லாம்
பார்வையாளர்களைப்
பார்த்துத் தான்.
நான் மகிழ்கிறேன்.
உன்
நேசம் பெய்யும்
நெஞ்சுக் கூட்டில்
ஒதுங்க முடிந்ததில்,
உண்மையாகவே மகிழ்கிறேன்.
இன்றுவரை என் இதயத்தின் ஆழத்தை
உனக்குக் காட்டியதில்லை.
உன்னைப் பற்றிய என் கனவுகளை
உனக்குள்
ஒளிபரப்பு செய்ததுமில்லை.
ஆனாலும் உனக்குத் தெரியும்.
நான் உன்
நிழலைக் கூட காதலிக்கிறேன்.
என் ரத்தத்தில்
சிவப்பு இரத்த அணுக்களை விட
உன்
நினைப்பு அணுக்கள் தான் அதிகம்.
என் கண்களில்.
நீ சொல்லியதும்
நான் சொல்லாததுமான
கவிதைகள் தான் அதிகம்.
நம்
தேனிலவுக் காலத்தின்
ஓர்
தேய் நிலா வெளிச்சத்தில்
உனக்கு
என் காதலைச் சொல்லவேண்டும்.
சுற்றிலும் கடல் வேலியிட்ட
ஓர்
தீவுக்குள்
உன்னைக் கொஞ்சம் கொஞ்ச வேண்டும்..
முடிவு தெரியாத ஓர் சாலையில்
பிரியாத கரங்களுடன்
ஏதோ பேசி
நடக்கவேண்டும்.
கொஞ்சமாய் ஊடல்.
நிறையவே கூடல்.
என்று
என் அணுக்களெங்கும்
செதுக்கி வைத்திருந்த ஆசைகள்
சீனப் பெருஞ்சுவரை சிறிதாக்கும்.
என்ன செய்வது ?
கடலுக்குள் வலை விரிப்பவனும்
காதலுக்குள் அகப்படுபவனும்
கன்னங்களில்
காண்பதெல்லாம் உப்பு நீர் தானே.
நான் வேண்டும் வரமெல்லாம்
ஒன்றுதான்.
ஜென்மங்கள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை !
அப்படி ஒன்று இருந்தால்.
வினாடி நேரமும் பிரியாத உறவாய்
நீ எனக்கு வேண்டும்..
எனக்கு மட்டுமாய் !!
