Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

சிறுகதை : அம்மா மறைத்த ரகசியம்

$
0
0

சந்தியால் நம்பவே முடியவில்லை. ரொம்ப சிலிர்ப்பாய் இருந்தது. இத்தனை நாள் தனக்கு இந்த விஷயம் தெரியாம போச்சே என்று முதன் முதலாய் வருத்தப்பட்டாள். அம்மா ஏன் இந்த விஷயத்தை என்கிட்டே மறைச்சாங்க ? என்ற கேள்வியே அவளுக்குள் காற்றாடி போல ராட்சசத் தனமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தது.

மாலையில் நடந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் அவளுக்குள் சினிமா போல ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி விரிவடைந்து கொண்டிருந்தது.

அந்தப் புள்ளி இந்த வாக்கியம் தான்.

“வசந்தி… வேலாயுதன் மாமா மதுரையில இருந்து போன் பண்ணினாங்க, நாளைக்கு தேனிக்கு வரச் சொல்றாரு… நீயும் வா…” அம்மா லட்சுமி தான் அந்த முதல் வாக்கியத்தை ஆரம்பித்து வைத்தவள்.

“நாளைக்கு காலேஜ் இருக்கேம்மா… ”

” ரெண்டு நாள் லீவ் போட்டுக்கோடி, இது ஃபஸ்ட் இயர் தானே… ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது”

“தேனீல என்னம்மா ?”

“தேனில ஒரு பழைய வீடு இருக்கு… அதை விக்கணுமாம்.. நானும் சைன் போடணுமாம். போட்டுட்டு வந்துடலாம்ன்னு பாக்கறேன்”

“தேனில வீடா ? என்னம்மா சொல்றே.. இதுவரைக்கும் நீ சொன்னதேயில்லையே… நான் பொறந்து வளந்தது எல்லாமே சென்னைல தானே ? இல்லியா ?”

“ம்ம்… வளந்தது சென்னை தான். பொறந்தது தேனில அந்த வீட்ல தான். மொதல்ல கொஞ்ச காலம் அந்த வீட்ல தான் எல்லாரும் இருந்தோம்…”

“எல்லாரும்ன்னா ? யாரெல்லாம்மா ”

“நீயும், நானும் உன் அப்பாவும் தாண்டி… எழவெடுத்தவளுக்கு கேள்வியைப் பாரு”

“அப்பா !!” வசந்தியின் கண்கள் சட்டென மின்ன சரேலென எழுந்தாள்.

“ஏண்டி அதுக்கு இப்படி குதிக்கிறே”

இல்லம்மா… அப்பா வாழ்ந்த வீடுன்னு நினைச்சுப் பாக்கவே ரொம்ப ஒரு மாதிரி சந்தோசமா இருக்கும்மா…. நீ இதைப் பத்தி என்கிட்டே சொன்னதே இல்லியேம்மா.

“வேண்டாம்ன்னு தான் சொல்லல… எதுக்கு பழசையெல்லாம் கெளறிட்டு. நீ போய் படி.. சீக்கிரம் தூங்கு, காலைல குருவாயூர் எக்ஸ்பிரஸ் புடிச்சா ரிலாக்ஸா போலாம். ரெண்டு நாள்ல சட்டுபுட்டுன்னு எல்லாத்தையும் முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடணும்.” அம்மா சொல்லிவிட்டு வீட்டுக்குள் போக, வசந்தியின் மனசில் என்றுமில்லாத ஒரு உணர்வு.

அப்பாவைப் பற்றி பலதடவை பேசியிருக்கிறாள். ஆனால் அம்மா எப்போதுமே பதில் சொன்னதில்லை. அப்படியே சொன்னாலும், அதையேண்டி கேக்கறே எழவெடுத்தவளே… நீ கண்ண தொறந்ததைப் பாக்கறதுக்குன்னே காத்திருந்தது மாதிரி, நீ கண்ண தொறந்ததும் கண்ண மூடிட்டு போயிட்டாரு. ஒத்தையாளா நின்னு உன்னை வளத்த நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும். ஊருக்குள்ள புருஷன் இல்லாதவ வாழறதுல என்ன கஷ்டம் இருக்குங்கறதை அனுபவிச்சவ நான். உசுரு இல்லாம வாழலாம், புருஷன் இல்லாம வாழக் கூடாதுங்கறது தான் ஊரோட விதி. எரியற வீட்டில புடுங்கற ஜென்மங்கள்கிட்டேயிருந்து உன்னைக் காப்பாத்த ராவோடு ராவா மெட்ராஸ் ஓடினவ நான். அன்னில இருந்து இன்னிக்கு வரைக்கும் உனக்காக தானே ஜீவிச்சிட்டிருக்கேன். உனக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போவுது, உனக்கு உன் அப்பன் பத்தி தான் நெனப்பு. என புலம்புவாள். புலம்பிப் புலம்பி அழுதுமுடிக்கும் நாட்களில் பெரும்பாலும் சாப்பிடுவதே இல்லை.

இந்த புலம்பல் புராணத்துக்குப் பயந்து கொண்டே அப்பாவைப் பற்றிய பேச்சை வசந்தி அடியோடு நிறுத்தி விட்டாள். கூடப் படிக்கிற பிள்ளைகளோட அப்பாக்களைப் பாக்கும்போதோ, அவர்களுடைய கதைகளைக் கேக்கும்போதோ ஒரு சின்ன ஏக்கம் உள்ளுக்குள் உருவாகும். அதை சட்டென முகமும் கண்களும் காட்டிக் கொடுத்தும் விடும். வசந்தி அப்பாவி. உள்ளொன்று வைத்து புறமொன்று காட்ட இன்னும் பழகலை.

இந்த ராத்திரி அப்பாவின் நினைவுகள் நிறுத்தாமல் வந்து கொண்டே இருந்தது. அப்பா வாழ்ந்த இடம். அப்பாவோட வீடு. அதில் அம்மாவும் சில வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். என் பிறப்புக்கான விதை அங்கே தான் துவங்கியிருக்கிறது. என்னுடைய பிறப்பும் அங்கே தான் நடந்திருக்கிறது. நான் சிறுவயதில் அங்கே தான் தவழ்ந்திருக்கிறேன். ஏதேதோ நினைவுகள் வசந்தியைத் தூங்க விடவேயில்லை.

கையருகே இருந்த செல்போனை எடுத்தாள். வெறுமனே கான்டாக்ட் லிஸ்டைப் புரட்டினாள்.

யாருக்காச்சும் போன்பண்ணலாமா என்ற நினைப்பு எழுந்தது. படுக்கையிலிருந்து திரும்பி சுவரைப் பார்த்தாள். ஆணியில் பின் தலை சொருகப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். அது இருட்டுக்குள் அமைதியாய் கிடந்தது. கண்ணைச் சுருக்கு உற்றுப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. “அடச்சே.. செல்போன்லயே டைம் பாக்கலாம்ல… ”

தன் தலையில் கற்பனையாய் ஒரு தட்டு தட்டி விட்டுப் பார்த்தாள். மணி 1 என்றது !

அய்யோ, காலங்காத்தால எழும்ப முடியுமா ? எப்படியாச்சும் கஷ்டப்பட்டு தூங்குவோம். கண்களை இறுக்கமாய் மூடினாள். நல்ல வேளை தூங்கிப் போனாள்.

மறு நாள் காலை.

எழும்புவதொன்றும் நேற்று ராத்திரி நினைத்தது போல கடினமாய் இருக்கவில்லை. சட்டென முழிப்பு வந்து விட்டது. அப்பா வந்து எழுப்பி விட்டிருக்க வேண்டும் என சும்மா நினைத்துக் கொண்டாள். புன்னகைத்தாள்.

சீக்கிரம் கெளம்படி, டிரெயினைப் புடிச்சா நல்லது. பஸ்ல குலுங்கிக் குலுங்கிப் போவ உடம்பு ஒத்துக்க மாட்டேங்குது…

அவசர அவசரமாய் கிளம்பி, ரெயில்வே ஸ்டேசன் போய்ச் சேர்ந்தபோது அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டுக்கு முன்னால் ஒரு நீளமான வரிசை நின்றது. ஆன்லைனில் கிளிக் பண்ணி ஹாயாய் பயணிக்கும் பொருளாதாரத்துக்கும், சில்லறை எண்ணி கக்கத்தில் பையைக் கவனமாய்ப் பிடித்திருக்கும் ஏழைக்குமான தூரம் சில பெட்டிகள் தான். அந்த சில பெட்டிகள் இடைவெளியில் எத்தனை பெரிய பள்ளத்தாக்கு. சில சங்கிலிகளால் இணைத்துக் கட்டி விடமுடியாத அளவுக்குப் பொருளாதார இடைவெளி !

எப்படியோ உட்கார இடம் கிடைத்தது புண்ணியம். நெருக்கியடித்துக் கொண்டு கிளம்பிய ரயிலில் வேறென்ன சொல்ல முடியும். வசந்தியின் மனதில் நிறைய கேள்விகள். எல்லாமே அப்பாவைப் பற்றி. ஆனால் அம்மாவிடம் கேட்கப் பயம். பயம் என்பதை விட அம்மாவை எதுக்கு இன்னொரு தடவை கஷ்டப்படுத்தறது ? எனும் நல்ல எண்ணம் என்று கூடச் சொல்லலாம்.

“ஏண்டி.. எப்பவும் அப்பா அப்பா ன்னு ஏதாச்சும் தொணதொணத்துட்டே இருப்பே.. இன்னிக்கு என்ன சும்மா இருக்கே ?”

வசந்தி அம்மாவை நம்ப முடியாமல் பார்த்தாள். “இல்லம்மா.. உனக்குப் பிடிக்காதுன்னு தான்…”

“யாரை ? அப்பாவையா ?

சே..சே இல்லம்மா.. நான் கேள்வி கேக்கறது

அப்படியில்ல வசந்தி. நான் இன்னிக்கும் உசுரோட இருக்கக் காரணம் நீ தான். நீ மட்டும் தான். உன் அப்பாவும் நானும் சேர்ந்து வாழ்ந்தது வெறும் நாலு வருஷம் தான். செல சமயம் ஒரு ஐம்பது வருஷம் வாழ்ந்தது போல தோணும். சில சமயம் ஒரு ரெண்டு மூணு நாளு தான் வாழ்ந்தோமோ ன்னு தோணும். ஒரு ஆள் போயிட்டா அப்புறம் எல்லாமே தலைகீழாயிடும் வசந்தி. உன் அப்பாவோட வாழ்ந்த பழைய ஞாபகங்கள் எனக்கு பயமாயிருக்கும் வசந்தி. மனசுல இருந்ததெல்லாம், ஏன் இப்போ இருக்கிறது கூட உன்னை வளத்தணும், அதுக்காக நான் வாழணும். அது தான். அது மட்டும் தான். அப்பாவை நினைச்சு, அப்புறம் வேற விஷயங்களை நினைச்சு செத்துப் போயிடக் கூடாதுல்ல.

வசந்தி அம்மாவின் கைகளை இறுக்கமாய்ப் பற்றினாள். ஏனோ தெரியவில்லை களுக் என கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

வேணாம்மா.. சொல்ல வேணாம்ன்னா விட்டுடுங்க.

அவருக்கு நீன்னா உசுரு. நீ பொறந்தப்போ காலு தரையில படாம குதிச்சிட்டே திரிவாரு. மூக்கு என்னை மாதிரி இருக்கு, கண்ணு என்னை மாதிரி இருக்கு, அவ என்னப் பாத்தா தான் சிரிக்கிறான்னு எப்பவும் ஒரே சந்தோசம் தான். ம்ம்… இப்போ இருந்தா ரொம்ப சந்தோசப்படுவாரு. உன்னைப் பாத்தா ரொம்ப சந்தோசப்படுவாரு.

அம்மா.. நான் அப்பா மாதிரியா இருக்கேன்.

வசந்தி சிரித்தாள். பாக்கறதுக்கு அப்பா மாதிரி இல்ல. ஆனா பல விஷயங்கள் நீ உன் அப்பா மாதிரி தான் செய்வே.

அதென்னம்மா பல விஷயம்.

இல்ல.. நீ நடந்துக்குற விதத்தைத் தான் சொல்றேன்/

ஒண்ணு சொல்லுங்களேன்.

நான் அழுதேன்னா, நீ எல்லாத்தையும் விட்டுட்டு வந்து சாரிம்மா…. இனிமே நான் எதுவும் கேக்கலன்னு சொல்லுவேல்ல. அது அப்படியே அவரை மாதிரி. நான் அழுதேன்னா அவருக்குத் தாங்காது.

அப்பா எப்படிம்மா செத்துப் போனாரு ?

ஹார்ட் அட்டாக்

சின்ன வயசுலே எப்படிம்மா ஹார்ட் அட்டாக் ?

லட்சுமி உதட்டைக் கடித்தாள். வெளியே மரங்கள் வெறித்தனமாய் ஓடிக்கொண்டிருந்தன. ‘எனக்கும் சின்ன வயசு அப்போ, அதனால ஹார்ட் அட்டாக்’

என்னம்மா புரியவே இல்லையே.

அந்த வீட்ல அப்பாவுக்கும் ஷேர் இருக்கு. அந்த வீட்டை விக்கணும்ன்னா நான் கையெழுத்துப் போடணும்ன்னு சொன்னாங்களாம். அதனாலதான் வேலாயுதம் அண்ணன் போன் பண்ணினாங்க. போய் காட்டற இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு சீக்கிரம் கெளம்பி வந்துடணும். இந்த ஊருக்கு வரதே எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.

எவ்ளோ இடம் இருக்கும்மா ? வீடு இருக்கிற இடத்தைக் கேக்கறேன்.

தெரியல ஒரு நாலு நாலரை சென்ட் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஒரு சின்ன ஓட்டு வீடு உண்டு. மெட்ராஸ் வந்தப்புறம் நான் இந்த வீட்டுக்கு வந்ததேயில்ல. வேலாயுதம் அண்ணன் தான் வீட்டைப் பூட்டி நான் எப்படியும் வருவேன்னு காத்திட்டு இருந்திருக்காக. நான் பிடிவாதமா சென்னையிலயே இருந்துட்டேன். ஒரு பத்து வருஷம் கழிச்சு தான் என்னையே கண்டுபிடிச்சாரு.  நான் இங்கே ஒரு வேலையில இருக்கேன், வரமுடியாது ன்னு சொல்லிட்டேன். நான் இங்க இருக்கிற விஷயத்தை யாருகிட்டேயும் சொல்லக் கூடாதுன்னும் சொல்லியிருந்தேன். அண்ணனும் சொல்லல. இப்போ இந்த வீடு விஷயமாதான் வரவேண்டியதா போச்சு.

லட்சுமி தனது பழைய நினைவுகளை சொல்லிக் கொண்டே வந்தாள். வசந்திக்கு சில விஷயங்கள் புரிந்தன, சில புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு புது விதமான அனுபவத்துக்குத் தயாராவதாய் மனம் குதூகலித்தது.

நெருக்கியடித்த ரயிலில் மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீள பெஞ்சில் ஏழு பேர் அமர்ந்திருந்தார்கள். கால் நீட்டினால் முன்னால் நான்கைந்து பைகள் இடித்தன. இருக்கையும் நாலு பலகைகளை இடைவெளிவிட்டு அடித்து வைத்திருந்ததில் உட்கார்வதில் பெரும் சிரமமாகவே இருந்தது. ஆனாலும் அவர்களுடைய கதை அந்த அசௌகரியங்களை மறக்க வைத்திருந்தது.

இருக்கை கிடைக்காத பலர் டாய்லெட்டுக்கு முன்னாலும், படிக்கட்டிலும் பைகளோடு குந்தியிருந்தார்கள். மேலே பொருட்கள் போட வைக்கப்பட்டிருக்கும் பலகையில் ஏழெட்டு பேர் நெருக்கியடித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

மதுரை ஸ்டேஷன்.

பல்லில்லாத கிழவன் குதப்பித் துப்பிய வெற்றிலை போல, கசங்கியும், அழுக்காகவும் மக்கள் வெளியே வந்தனர்.

வேலாயுதம் ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தார்.

அவரைப் பார்த்தபோது லட்சுமிக்கு தன்னை அறியாமலேயே கண்கள் கலங்கின. திருமணத்துக்கு முன்பு வரைக்கும் தான் அண்ணன் தங்கை பாசத்தின் அடர்த்தி. எப்போதும் கூடவே இருப்பது எத்தனை பெரிய பாக்கியம் என்பதெல்லாம் அப்போது தெரியாது. கல்யாணம் ஆனபிறகு தான் தெரியும். குடும்பம், குட்டி, புதிய வாழ்க்கை என புதுசு வந்தப்புறம் பழைய உறவுகளெல்லாம் பின் தங்கிவிடும். பாக்கவேண்டுமே என மனம் அடித்துக் கொள்ளும்போதெல்லாம் பார்க்க முடியாது. ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ தடவை தான் பார்ப்பது. அதுவும் பெரும்பாலும் ஒரு கல்யாணம், திருவிழா, துக்கம்ன்னு ஏதாச்சும் ஒரு சம்பவம் நடக்கணும். இப்போ மட்டும் ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி போக முடிஞ்சா அண்ணன் கையைக் கட்டிப் புடிச்சுக்கணும், விடவே கூடாது என நினைத்தாள் லட்சுமி.

வாம்மா… எப்டி இருக்கே… வேலாயுதம் முதுமையின் முதல் படியிலும், நடுத்தர வயதின் கடைசிப் படியிலுமாய் கால்களை வைத்திருந்தார். அவருடைய குரலில் அரைநூற்றாண்டு நேசம் தெரிந்தது.

நல்லா இருக்கேண்ணா…  வசந்தி…, மாமா..

நல்லா இருக்கீங்களா மாமா…

நல்லா இருக்கேம்மா…. நீ என்ன படிக்கிறே

பி.எஸ்.சி ஃபஸ்ட் இயர் மாமா…

நல்லா படிக்கிறியா ?

ம்ம்… (சிரிப்பு)

வாங்க, வீட்ல இன்னிக்கு தங்குங்க. காலையில ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் போலாம்…

இல்லண்ணா… எனக்கு அந்த வீட்டுக்கு இன்னிக்கு போணும் போல இருக்கு.

அங்கேயா ? அது பாழடைஞ்சு போய் கெடக்கு. அதுல யாரும் போறதில்லை.

இல்ல.. பரவால.. பொண்ணும் போணும்ன்னு ஆசப்படுது. அப்பன் வாழ்ந்த வீடில்லயா ?

பாம்பு கீம்பு ஏதாச்சும்…

பரவாயில்லன்ண்ணா.. நீங்களும் வாங்க…

ம்ம்…

என்னண்ணா.. விக்கிறதுக்கு முன்னாடி ஒரு வாட்டி பாத்துடறேன்…. இனிமே மறுபடியும் இந்தப் பக்கம் வருவேனான்னே தெரியாது.

ஏன் அப்படி சொல்றே.. இனிமே அடிக்கடி பாக்கணும். உன் பொண்ணு விசேஷத்துக்குக் கூப்பிடமாட்டியா என்ன ?

லட்சுமி சிரித்தாள்.

மதுரையிலிருந்து 42 கிலோமீட்டர் தள்ளி இருந்தது அவர்களுடைய கிராமம். லட்சுமிக்கு வேறு எதுவும் முக்கியமாய்த் தெரியவில்லை. வசந்தியோ அப்பாவின் வீட்டைப் பார்க்க வேண்டும் என்பது  மட்டுமே உலக மகா இலட்சியமாய் தோன்றியது. வேலாயுதம் மறுக்கவில்லை. வண்டியை ஏற்பாடு செய்தார்.

மரங்களடர்ந்த ஒரு காட்டுப் பகுதி போல இருந்தது மலையடிக் கிராமம். உள்ளே சிதிலமடைந்த நிலையில் அந்த ஓட்டு வீடு.

லட்சுமிக்கு திக் என்றது.

ஏய் லெட்சுமி… முற்றத்தைக் கூட்டும்மா, பாரு ஒரே இலையா இருக்கு….  ஏலே… சொல்லிட்டே இருக்கேன்ல அங்கே என்ன பண்ணிட்டிருக்கே ?

அவருக்கு வீடு எப்போதும் பளிச் என்று இருக்க வேண்டும். ஓட்டு வீடுதான். ஆனால் ஒவ்வொரு அறையும் அவ்வளவு சுத்தமாய் இருக்கும். படிக்கும் புத்தகங்களானாலும் சரி, சாப்பிடும் தட்டுகள் ஆனாலும் சரி வேலை முடிஞ்சதும் நீட்டா அதோட இடத்துல போய் இருந்துடணும். அவருக்கு அசுத்தம், குப்பை கூளம் எல்லாம் ஆவாத சமாச்சாரங்கள்.

லட்சுமி மீண்டும் ஒரு முறை பார்த்தாள். பழைய வீட்டின் சாயலாவது மிச்சமிருக்கிறதா என்று பார்த்தாள். இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் சுற்றுப் புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. வீடு தான் தனது ஒட்டு மொத்த அடையாளத்தையும் இழந்திருந்தது.

ரொம்ப வருஷமாச்சும்மா.. நீ போனப்புறம் நானும் இங்கே வரதில்லை. நம்ம சொத்துன்னு ஊர்ல எல்லாருக்கும் தெரியும். அதனால ஆரும் இங்கே வந்து தொந்தரவும் செய்றதில்லை. பாத்து வா… பூச்சி கீச்சி கிடக்கலாம்…

வேலாயுதம் சொல்லிக் கொண்டே முன்னால் நடந்தார். குவிந்து கிடந்த சருகுகளை கால்களால் அரைவட்டம் போட்டு விலக்கிக் கொண்டே முன்னேறினார்.

வீடு முழுசும் குப்பை வலை. சாவி துவாரத்தையே சுரண்டித் தேடவேண்டியிருந்தது. ஏதோ சினிமாவில் வரும் பாழடைந்த பேய் பங்களா போல் இருந்தது வீடு.

வசந்தி தான் விழிகள் விரிய பார்த்துக் கொண்டாள். தனது வேர்களைக் கண்டுபிடித்தது போல ஒரு சிலிர்ப்பு அவளுக்கு. இந்த முற்றங்களில் அப்பாவின் சுவாசம் உலவியிருக்கிறது. இந்த சுவர்களில் அப்பாவின் விரல்கள் பதிந்திருக்கின்றன. இந்த வீட்டின் கூரைகளில் அப்பாவின் குரல் தலையிடித்திருக்கிறது. சிந்தனைகள் அவளை சிலிர்க்க வைத்தன.

வீட்டுக்குள் நுழைந்தாள்.

வேலாயுதம் சட்டைப்பையிலிருந்த ஒரு பீடியை எடுத்து இடது பக்க பல்லில் வைத்துக் கடித்தார். தீப்பெட்டியை எடுத்து வலமும் இடமுமாக ஒரு ஆட்டி ஆட்டி விட்டு பெருவிரலால் திறந்தார். குச்சியை எடுத்து சின்ன ஒரு உரசல். பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே எரிந்தது குச்சி. அப்படியே மந்திரம் ஓதுபவர்கள் தண்ணீரைத் தலையில் தெளிப்பார்களே, அது மாதிரி ஒரு பாவனையில் பீடியைப் பற்ற வைத்து கவனமாய்க் குச்சியை அணைத்தார். தப்பித் தவறி கீழே விழுந்தால் எரிவதற்குத் தயாராய் கிடந்தது சருகுக் குவியல்.

வீட்டுக்குள் பல்லிகள் நிறைய ஓடின.

வசந்தி வீட்டில் நுழைந்து இடது பக்கமாய் இருந்த அறையில் நுழைந்தாள்.

அது தாண்டி அப்பாவோட ரூம். அங்கே தான் எப்பவும் இருப்பாரு !

அப்பாவோட ரூமா ? வசந்திக்குள் எழுந்த உணர்வை எப்படிச் சொல்வதென்று அவளுக்கே தெரியவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அறை நன்றாகத் தான் இருந்தது. ஓரமாய் சில புத்தகங்கள். தூசுகளுக்கு இடையே அந்த புத்தகங்களைத் தொட்டாள். அப்பா படித்த புத்தகங்கள்… புத்தகங்களைப் புரட்டினாள். புத்தகங்களுக்கு இடையே ஏதேனும் தட்டுப் படுமா என்று அவளுடைய கண்கள் அலை பாய்ந்தன.

அப்பாவைப் பாத்ததேயில்லை. ஒரு போட்டோல கூட. அம்மாவோட கல்யாண ஆல்பம், அது இதுன்னு எங்கேயாச்சும் ஒண்ணு கிடைச்சா போதும். அப்பா எப்படி இருந்தாருன்னு பாக்கணும். என்னை மாதிரி தான் இருந்தாரா ?  இந்தக் காலத்துல போட்டோ கூட பாத்ததில்லேன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. ஒரு போட்டோ கூடவா இல்லை ? ஏன் வேலாயுதம் மாமா கிட்டே கேக்கலாமேன்னு சொல்லுவாங்க. ! அட.. ஆமா. ஒருவேளை போட்டோ கெடைக்கலேன்னா வேலாயுதம் மாமா கிட்டே கேக்கலாமே….

கவனமா நில்லும்மா.. ஓடு உடஞ்சு கிடக்கு, விழுந்துடப் போவுது. உள்ளேயிருந்து அம்மா குரல் கொடுத்தாள்.

வசந்தி அந்த அறையை அக்கு வேறு ஆணி வேறாய் அலசத் தொடங்கினாள். அப்போது தான் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த குச்சி கண்ணில் தெரிந்தது. எடுத்துப் பார்த்தாள். லத்தி ! அப்பா போலீஸ்காரரா ? போலீஸ்காரங்க தானே லத்தி வெச்சிருப்பாங்க ? கையில் எடுத்தாள். அப்பாவின் கைரேகை இதில் இருக்குமா ? அப்பா கையில் வைத்திருந்த லத்தி தானா இது ?

அறையின் ஓரமாய் ஒரு ட்ரங்க் பெட்டி தட்டுப்பட்டது. திறந்தாள். காலியாய் இருந்தது. ஏமாந்தாள். மூடப்போனபோது தான் கவனித்தாள். டிரங்க் பெட்டியின் மேல் மூடியின் உள்பக்கத்தில் சட்டை பாக்கெட் போல ஒரு சின்ன அறை. அதில் ஏதோ தட்டுப்பட்டது. ஆர்வமாய் இழுத்தாள். இரண்டு கடிதங்கள். ஒரு கீசெயின். குப்புறக் கவிழ்த்தாள். ஒரு குட்டி பிளாஸ்டிக் கவர் விழுந்தது. அதை எடுக்கக் குனிந்தவள் கையில் தாவியது ஒரு பல்லி.

அம்மா..ஆ…ஆ..ஆ…..

என்னடி ? பதட்டத்துடன் ஓடி வந்தாள் அம்மா…

ஒண்ணுமில்லேம்மா.. பல்லி…. சாரி… பின்னால் கட்டிய கையில் லெட்டர் ஒளிந்து கொண்டது.

ம்ம்ம்… இது தான் என்னோட டிரங்க் பெட்டி. கல்யாணத்துல எனக்குச் சீரா கெடச்சது. நல்லா இருந்துச்சு. இப்போ தகர டப்பா மாதிரி ஆயிடுச்சு. ம்ம்… சீக்கிரம் வா.. இருட்டுறதுக்குள்ள கெளம்பிடுவோம். அண்ணன் வீட்ல நைட் தங்கலாம். நாளைக்கு ஊருக்கு போணும்.

வசந்தி மீண்டும் குனிந்தாள். மறுபடியும் பல்லி தாவக் கூடாதே எனும் கவனத்துடன் குனிந்தாள். அப்படியே குதித்தாலும் கத்தக் கூடாது என நினைத்தாள்.

குட்டியாய் மடித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர் பழுப்பு நிறத்தில் இருந்தது. பிரித்துப் பார்க்கையில் மூன்று போட்டோக்கள். இரண்டு பக்கமும் இருந்த போட்டோக்கள் பிளாஸ்டிக்கோடு ஒட்டி நோய் வந்தவனோட தோல் போல பிய்ந்து தொங்கியது. நடுவில் இருந்த புகைப்படத்தில் ஒரு இளைஞன் சிரித்தான்.

அப்பா !!!! வசந்திக்குச் சிலிர்த்தது. விரல்களால் வருடினாள். நெஞ்சோடு வைத்துக் கொண்டாள். பத்திரமாய்க் கைப்பையில் போட்டாள். தூசு படிந்திருந்த லெட்டரை உதறினாள். யாரும் பார்க்கக் கூடாதே எனும் பதை பதைப்புடன் வாசித்தாள்.

அம்மாவின் பெயருக்குத் தான் வந்திருக்கிறது. அப்பா தான் எழுதியிருக்கிறார். வாவ் !!! என்ன ஒரு அழகான கையெழுத்து !

அன்புள்ள வசந்தி… உன்னைப் பிரிந்து ஒரு மாதம் இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. மனசெல்லாம் நீ தான் இருக்கிறாய். கல்யாணம் ஆன முதல் நாள் ராத்திரி…. அடுத்தடுத்த வரிகளைப் படித்த போது உள்ளுக்குள் உறுத்தியது. அந்தரங்கமான ஒரு கடிதம். அம்மா அப்பாவுக்கு இடையே நடந்த காதல் கடிதம். இதையெல்லாம் வாசிக்கக் கூடாது என நினைத்தாள். ஆனால் கண்கள் வாசித்துக் கொண்டே இருந்தன. காதலாகிக் கசிந்துருகி அந்த கடிதம் முடிந்தது.

அடுத்த கடிதத்தை உதறினாள்.

அன்புள்ள வசந்தி… கொஞ்ச நாளிலேயே மறுபடியும் கடிதம் எழுதறேன். உன்னைப் பாக்காம இருக்க முடியல. தூங்க முடியல. இப்போ உன்னைப் பாத்தா… மீண்டும் காதல் புராணம். வசந்தி சிரித்துக் கொண்டாள். வாசித்துக் கொண்டே வந்தவள். கடைசி வரியை வாசித்த போது திடுக்கிட்டாள்.

நமக்குப் பையன் பொறந்தா சுப்ரமணியன்னு பேரு வைக்கணும், பொண்ணு பொறந்தா சுப்பு லட்சுமி ன்னு பேரு வைக்கணும். பிள்ளைங்களை நல்லா படிக்க வைக்கணும். அது தாண் கண்ணு என்னோட ஆசை… மீண்டும் வாசித்தாள். மீண்டும் மீண்டும் வாசித்தாள். அட்ரசைப் பார்த்தாள். அப்பா தான். அம்மாவுக்குத் தான். எனக்கு சுப்பு லட்சுமின்னு பெயர் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார் அப்பா. அம்மா ஏன் வசந்தின்னு பேரு வெச்சாங்க ?

கடிதத்தை பையில் திணித்தவளுக்கு மனசே அவளிடம் இல்லை.

வீட்டை சுற்றிப் பார்த்தபோதும், அறைகளில் கவனமாய் ஏறி இறங்கியபோதும் அவளுக்கு மனசுக்குள் ஒரு வரி மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்தது. நமக்கு பொண்ணு பொறந்தா சுப்புலட்சுமின்னு பேரு வைக்கணும். அப்பாவோட ஆசை நிறைவேறலையா ? ஏன் ? அப்புறம் அப்பா மனசு மாறிட்டாரா ? வசந்தின்னு வைன்னு அவர் தான் சொன்னாரா ? இல்ல அம்மாக்கு அந்த பேரு புடிக்கலையா ?

அந்த வீட்டை விட்டு விடைபெற்று மீண்டும் காரில் ஏறும்போது வசந்தியின் மனசு அடித்துக் கொண்டே இருந்தது. மனசு ஒரு கடிதத்தை எழுதியது.

அன்புள்ள அப்பா,

உங்க அறையை இன்னிக்கு சுத்திப் பாத்தேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. என்னை மாதிரி இல்லை. என்னை விட ரொம்ப அழகா இருக்கீங்க. நான் சவுக்கியமா இருக்கேன். அம்மா நல்லா பாத்துக்கறாங்க. காலேஜ் போறேன். நீங்க இருந்திருந்தா என்னென்ன பண்ணியிருப்பேன்னு எனக்கே தெரியல. ஆனா உங்க அறையைச் சுத்திப் பாத்து, நீங்க எழுதின லெட்டரைப் படிச்சுப் பாத்து, உங்க போட்டோவைப் பாத்து ரொம்ப சந்தோசப்பட்டேன். நான் நல்லா படிக்கிறேம்பா… உங்க ஆசைப்படியே நல்லா படிச்சு பெரிய ஆளா வருவேன்…

இப்படிக்கு

வசந்தி… ம்ஹூம்… இல்ல இல்ல.. சுப்பு லட்சுமி !

“அம்மா.. அப்பா போலீசாம்மா ?”

போலீசா ? அவரு செக்யூரிடி வேலை பாத்தாரும்மா.. வீட்டுக் காவலாளி – முன் சீட்டில் இருந்த வேலாயுதம் மாமா திரும்பிப் பார்த்துச் சொன்னார்.

ஓ.. அதான் அந்த லத்தியா…

ஆமா... வீட்ல இருந்துச்சா ?

ம்ம்… பாத்தேன். சுவர்ல தொங்கிட்டிருந்துது.

கண்ணை மூடி மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் அசைபோட்டாள் வசந்தி… வேலாயுதம் மாமாவின் வீட்டில் நுழையும் வரை அவளுக்கு நினைப்பெல்லாம் அந்த வீட்டைச் சுற்றியே கிடந்தது.

வீட்டுக்குள் நுழைந்தாள். பெரிய கூடம். பழையகால மரத் தூண்களுக்கு நடுவே, வீட்டின் நடுவே வெளிச்சம் விழுந்தது. சுவரில் நிறைய போட்டோக்கள். வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

இடையே ஒரு போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார் அப்பா. கையில் இருக்கும் அதே போட்டோவின் என்லார்ஜ்ட் சைஸ் ! இதில் இன்னும் கம்பீரமாய், அழகாய். கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள். அருகே ஒரு ஜோடியின் போட்டோ..

இது யாரு மாமா. கல்யாண ஜோடி ?

இது தான்மா உன் அம்மாவும் அப்பாவும், அம்மாவை அடையாளம் தெரியலையா என்ன ?

மாமா சொல்ல வசந்தி திடுக்கிட்டாள். எஸ்.. அம்மாவே தான். அப்பாவை உற்றுப் பார்த்தாள். நோ… நோ.. !!!

“இ..இது யாரு மாமா” அருகில் இருந்த போட்டோவைப் பார்த்தாள். தான் அப்பா என்று நினைத்திருந்த போட்டோவை நோக்கி விரலை நீட்டினாள்.

அது உன் அப்பாவோட தம்பி சந்திரன். உன் அப்பா சாகிறதுக்கு முந்தின நாள் ஊரை விட்டு ஓடினவன் தான். அப்புறம் இந்தப் பக்கம் வரவே இல்லை. இப்போ எங்கே இருக்கானோ.. எப்படி இருக்கானோ ? வேலாயுதன் சொல்லிக் கொண்டே உள் அறைக்குள் நுழைந்தாள்.

வசந்தி கைப்பையிலிருந்து அந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை அவசரமாய் எடுத்து யாருக்கும் தெரியாமல் பார்த்தாள். சந்திரன் ! அப்பா இல்லை !! இதெப்படி… ???

அவளுக்குத் தலை சுற்றியது. ஊருக்கு வந்திருக்கவே கூடாது என்று முதன் முறையாய்த் தோன்றியது !

சேவியர்



Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!