Quantcast
Channel:
Viewing all 490 articles
Browse latest View live

தன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்

$
0
0

தோற்றுவிடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி. 

வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்என்கிறார் ஷேக்ஸ்பியர். தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது ! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்று தான் பொருள்.

அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஆபிரகாம் லிங்கன் ஆறுமுறை தோல்வியைச் சந்தித்தபின் அரசியல் வெற்றியை ஆதாயமாக்கிக் கொண்டவர். தோல்வி என்பது வெற்றியை நோக்கிய பாதை என்பதில் அவருக்கு உறுதி இருந்தது. எனவே அவர் வெற்றியாளரானார்.

வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தோல்வி குறித்த பயத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவதில்லை என்பது தான் நிஜம்.

ஜுராசிக் பார்க் என்றால் நமது நினைவுக்கு சட்டென வரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று டைனோசர். இரண்டாவது இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். அவர் தெற்கு கலிபோர்ணிய திரைப்படக் கல்லூரியான யு.எஸ்.சி யில் சேர இரண்டு முறை விண்ணப்பித்தார். இரண்டு முறையும் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தோல்வியால் தளர்ந்து விடாமல் ஸ்பீல்பெர்க் வளர்ந்தார், உலகெங்கும் அவர் புகழ் பரவியது. எந்தக் கல்லூரி அவரை நிராகரித்ததோ அதே கல்லூரி 1994ம் ஆண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது ! தோல்விகளால் ஒரு வெற்றியாளனைப் புதைக்க முடியாது என்பதை உலகம் மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டது.

விழிப்புணர்வு என்பது வேறு பயம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால் அதுவே ஆளை விழுங்கும் பயமாக மாறி விடக் கூடாது என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயம். தோல்வி குறிந்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை பயக்கும். விபத்து குறித்த பயத்தில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வது எச்சரிக்கை உணர்வு. விபத்து குறித்த பயத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் எல்லா போட்டிகளிலும் செஞ்சுரி அடிக்க வேண்டுமென்பது ரசிகனின் விருப்பம். ஆனால் அப்படி நிகழ்வதில்லை. தோல்விகளைப் புறந்தள்ளி விட்டு, அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல வேண்டும் எனும் இலட்சியத்தோடு அவருடைய பயணம் தொடர்கிறது. வெற்றி பெறவேண்டும் எனும் வேட்கை இருந்தால் வெற்றி பெறுவோம். அதே நேரம், தோற்றுவிடுவோமோ எனும் பயம் மட்டுமே போதும் நம்மை வெற்றிபெறாமல் தடுக்க.

வாழ்க்கை பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது. அதாவது பயம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது.

தோல்வி குறித்த பயத்திலிருந்து வெளியே வர தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை கடைகளில் விற்பனையாவதில்லை. உங்களுக்கு வேறு யாரும் வந்து தன்னம்பிக்கை எனும் ஆடையைப் போர்த்தி விடவும் முடியாது. தன்னம்பிக்கை என்பதை நாமே தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். தனக்கான கூட்டைத் தானே உருவாக்கும் ஒரு சிட்டுக் குருவியைப் போல !

காலையில் எழுந்து குளித்து, ஷேவ் செய்து, புத்துணர்ச்சியுடன் நல்ல ஒரு ஆடையை அணிவதிலேயே ஆரம்பித்து விடுகிறது இந்தத் தன்னம்பிக்கைப் பயணம். “நல்ல  உடை உடுத்துபவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்என்கிறார்கள் உளவியலார்கள். அது நம்மை அறியாமலேயே நமது தன்னம்பிக்கையை அதிகரித்து விடுகிறது. நமது கண்களில் தெளிவு உருவாகிறது. கட்சிதமான நேர்த்தியான ஆடை நமது தன்னம்பிக்கையின் வேர்களில் நீரூற்றுகிறது!

உயர்வான சிந்தனைகள் நமது வெற்றிகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நம்மைப் பற்றி நமது மனம் நினைக்கும் பிம்பம் தான் நாம். நம்மைப்பற்றிய உயர்வான சிந்தனைகள் நம்மையும் உயரத்தில் கொண்டு போய் வைக்கும். நம்மைப் பற்றி தாழ்வாக எண்ணினால் நமக்கான இடமும் தாழ்வாகவே இருக்கும். 

கூண்டுக்குள்ளேயே படுத்துக் கிடக்கும் சிங்கம் காலப் போக்கில் தான் ஒரு சிங்கம் என்பதையே மறந்து விடும். அதே போல தான் நம்மை ஒரு சின்னக் கூண்டுக்குள் நாமே அடைத்துக் கொண்டால், நாம் யார் என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடும். மாறாக நம்மை நாமே தோண்ட ஆரம்பித்தால் நமக்குள்ளிருந்து பெருங்கடல்களே புறப்படக் கூடும்.

தோல்வி பயப்பட வேண்டியதல்ல, இயல்பானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். நேர் சிந்தனைகள் உங்களுக்குள் வலுவாக இருந்தாலே பயங்களெல்லாம் போய் விடும். பயங்கள் எதிர்மறை சிந்தனையின் பிள்ளைகள். உங்களுக்குள்ளே எப்போதுமே சில குரல்கள் எழுந்து கொண்டே இருக்கும். அந்தக் குரல்களில் எதிர்மறைக் குரல்களைக் கண்டு பிடித்து விலக்க வேண்டியது ரொம்ப அவசியம். 

விலக்குவது இரண்டு வகை. ஒன்று எதிர்மறை சிந்தனைகளை அலட்சியப்படுத்தி விட்டுச் விட்டுச் சென்று  விடுவது. இரண்டாவது, ஒவ்வோர் எதிர்மறை சிந்தனைக்கும் பொருத்தமான ஒரு நேர் சிந்தனையைக் கொடுப்பது. பாசிடிவ் திங்கிங் அதிகரிக்க அதிகரிக்க நெகடிவ் சிந்தனைகள் கழன்று போய்விடும். பின்பு எதிர்மறை சிந்தனைகளே இல்லாமல் நமது மனம் அக்மார்க் பாசிடிவ் மனமாகிவிடும். 

ஹாலிவுட் பட பிரியர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர்களில் ஒன்று மைக்கேல் ஃபாக்ஸ். மூன்று முறை ஏமி விருது, ஒருமுறை கோல்டன் குளோப் விருது என நடிப்பில் முத்திரை பதித்தவர். அவர் பார்க்கின்சன்ஸ் எனப்படும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனக்கு நோய் இருக்கும் விஷயத்தையே ஏழு ஆண்டுகாலம் முழுமையாக மறைத்து திரையில் கோலோச்சிக் கொண்டிருந்தார் என்பது வியப்பூட்டுகிறது. பார்கின்ஸ்சன்ஸ் என்பது உயிரையே கொல்லக்கூடிய ஒரு கொடிய வியாதி. நோயின் வீரியம் அதிகமாகி இனிமேல் நடிக்க முடியாது எனும் சூழல் வந்தபோதும் அவர் அசரவில்லை. மூன்று மிக முக்கியமான நூல்களை எழுதிப் பிரபலம் ஆனார். பாசிடிவ் மனதை பார்கின்சன்ஸ் கூட நெருங்கமுடியாது என நிரூபித்தார்.

பாசிடிவ் சிந்தனைகளுக்கு அடுத்தது பாசிடிவ் செயல்பாடு. வெறுமனே நம்மைப் பற்றி உயர்வான சிந்தனைகளை உருவாக்கினால் போதாது. நமது செயல்களிலும் அந்த தன்னம்பிக்கையும் நேர் சிந்தனையும் வெளிப்பட வேண்டும். ஒரு கை குலுக்கலில் கூட நமது தன்னம்பிக்கை வெளிப்பட வேண்டும் என்பதே இதன் பாலபாடம். இவையெல்லாம் நம்முடைய தோல்வி குறித்த பயத்தை விரட்டும் வல்லமை கொண்டவை.

தோல்விகளை விட ரொம்ப அதிகமாய் நம்மை வாட்டுவது தோல்வி குறித்த பயம் தான்.

இது நடந்தால், அது நடந்தால், இப்படி நடக்குமோ, அப்படி நடக்குமோ எனும் பயத்திலேயே நம்முடைய வாழ்வின் பெரும்பாலான செயல்கள் நொண்டியடிக்கின்றன. காரணம் சின்ன வயதிலிருந்தே நாம் கற்றுக் கொண்டிருக்கும் தவறான பாடம் தான். “வெற்றி என்பது நல்லது. தோல்வி என்பது மோசமானது”. அந்த சிந்தனையின் சிறையிலிருந்து வெளியேறுவது அவசியம். எல்லாமே இயல்பானது, சாதாரணமானது, சகஜமானது. 

உங்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்துப் பாருங்கள். உங்களுடைய கடந்தகாலத் தோல்விகள் பலவும் ஏதோ ஒரு வெற்றியில் தான் முடிந்திருக்கும். தோல்வியடைந்த காதல் ஒரு அன்பான மனைவியைத் தந்திருக்கலாம். தோல்வியடைந்த வேலை இன்னொரு நல்ல வேலையைத் தந்திருக்கலாம். தோல்வியடைந்த தேர்வு தேவையான முக்கியமான ஒரு  பட்டத்தைப் பெற உதவியிருக்கலாம். தோல்விகளோடு வாழ்க்கை முடிவடைவதில்லை, நாமாக முடித்துக் கொண்டாலொழிய. 

பிறரிடம் அன்பாய் இருப்பது, புன்னகைப்பது போன்ற மனித இயல்புகளை விட்டு விடாதீர்கள். உங்கள் மனதை அமைதியாகவும், இளமையாகவும் வைத்திருக்க இவை உதவும். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம் இரண்டுமே இலட்சியப் பயணத்தின் இரண்டு சக்கரங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெற்றிகளின் கோப்பை நமது வாசலில் வந்து காத்திருப்பதில்லை. வெற்றிக் கோப்பைகளுக்கான ஓட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்வது மட்டுமே அதைப் பெறுவதற்கான ஒரே வழி. இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் நமக்குத் தேவை முயற்சி மட்டுமல்ல, தோல்வி கண்டு அஞ்சாத மனமும் தான்.  

அமெரிக்க ஜனாதிபது ரூஸ்வெல்ட் பற்றித் தெரிந்திருக்கும். அமெரிக்காவின் முப்பத்து இரண்டாவது ஜனாதிபதி. பன்னிரண்டு ஆண்டு காலம் தொடர்ச்சியாக அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஒரே நபர் ரூஸ்வெல்ட் தான்.  அமெரிக்காவின் மவுண்ட் ரஷ்மூரில் ஒரு பெரிய மலை இவருடைய தலையாக செதுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் டைம் எனப்படும் பத்து பைசா நாணயத்தில் இருப்பதும் இவருடைய தலை தான். 

சரி, இதிலெல்லாம் வியப்பில்லை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் போலியோவினால் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழே செயலிழந்த நிலையில் இருந்தார் என்பது தான் நம்மை வியப்பின் உச்சியில் கொண்டு போய் நிறுத்துகிறது.  மன உறுதியும், வாழ்க்கையை பாசிடிவ் ஆக அணுகும் மனநிலையும் இருந்தால் வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானதே என்கிறது இவருடைய வாழ்க்கை.

மனதில் பிறக்கட்டும் துணிச்சலின் ஊற்றுகள்

கண்களில் பறக்கட்டும் விடியலின் கீற்றுகள்.


Vetrimani : போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா

$
0
0

போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா

Image result for old man advice

“கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது” என்பது மிகப் பிரபலமான ஒரு சினிமா வசனம். எந்த ஒரு கட்டுரையை வாசித்தாலும் சரி, எந்த ஒரு உரையைக் கேட்டாலும் இந்த இரண்டு வார்த்தைகளையும் பெரும்பாலும் சேர்த்தே தான் பயன்படுத்துவார்கள். போட்டி என்ற வார்த்தையை உச்சரித்தாலே அடுத்து பொறாமை எனும் வார்த்தை மனதில் குதித்து வருமளவுக்கு இந்த இரண்டு வார்த்தைகளும் ஒட்டிப் பிறந்த சயாமிஸ் இரட்டையர்களைப் போல நிலை பெற்றுவிட்டன. ஏன் இந்த இரண்டும் இணைந்தே திரிய வேண்டும் ? கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் சுவாரஸ்யமான சிந்தனைகள் மனதுக்குள் முகம் காட்டுகின்றன.

ஒரு அழகான இளம் பெண் சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறாள் என வைத்துக் கொள்ளுங்கள். ஓரமாக நின்று பார்க்கின்ற மற்ற பெண்களின் மனதில் முதலில் ஒரு ரசனையின் வாசம் எழும். “ஆஹா.. செம அழகா இருக்கா !”. அதன்பின் அவளைப் போல நாமும் மாறவேண்டும் எனும் அழகுப் போட்டி இதயத்தில் வந்தமரும். அப்படி மாற முடியாமல் போகும் போது, அவளது வசீகரத்தை நாம் அடைய முடியவில்லையே எனும் ஆதங்கம் முளைவிட்டு, பொறாமையாய் கிளைவிட்டுத் திரியும்.

பிறரோடான ஒப்பீடுகள் தான் போட்டிக்குத் தூண்டுதலாகவும், பொறாமைக்கு தூண்டு கோலாகவும் இருக்கிறது. “ஐஸ்வர்யா ராய் எவ்ளோ அழகு” என பெண்கள் பொறாமைப் படுவதில்லை. பக்கத்து சீட்ல உக்காந்து வேலை பாக்கற பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா ! என்று தான் பொறாமைப் படுவார்கள். கூடவே இருப்பவர்கள், தொடர்ந்து பயணிப்பவர்கள், ரொம்ப பழகியவர்கள் இவர்களெல்லாம் நாம் அடைய முடியாத இடத்தை அடைந்தால் நமக்குள் அந்த பொறாமையின் புலிநகம் பிறாண்டுகிறது.

பொறாமை இல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லி விடலாம். பெரும்பாலும் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு பொறாமைக் குட்டிச்சாத்தான் உட்கார்ந்து கொண்டே தான் இருக்கும். பலர் அதை வெளிப்படையாய் காட்டுவார்கள். சிலர் அதை சாதுர்யமாக மறைத்து விடுகிறார்கள். சந்தேகம் இருந்தால் உங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைன்ட் செய்து பாருங்கள். உங்களுடைய அலுவலகத்தில் உங்களை விட சிறியவர், அல்லது உங்களுடைய நிலையில் இருப்பவர் உங்களை விட அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற்றுச் செல்லும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது ? நீங்கள் கைகுலுக்கிப் பாராட்டும் அந்த நிகழ்வில் எத்தனை சதவீதம் உண்மையின் ஈரம் உறைந்திருக்கிறது ?

“அவனுக்கெல்லாம் இந்த புரமோஷன் கிடைச்சிருக்கு. இதுக்குக் காரணம் என்னன்னா…” என நாம் அடுக்குகின்ற கிசு கிசு மட்டம் தட்டுதல்களில் வெளிப்படுபவை அக்மார்க் பொறாமையே ! நாம் அடைய வேண்டும் என நினைக்கின்ற இடத்தை இன்னொருவர் அடைந்து விட்டாரே என நினைப்பது. அடையவேண்டும் எனும் இலக்கை நோக்கி ஓடும்போது போட்டி வலிமையானதாக இருக்கிறது. அடைய முடியாமல் போகும் போது அந்த இயலாமை பொறாமையை விளைவிக்கிறது.

ஓடுவது ஒரு இலக்கை நோக்கி எனும் போது போட்டியாய் இருப்பது, ஒரு நபரை நோக்கி எனும் போது பொறாமையாய் மாறி விடுகிறது. அடுத்தவன் அந்த இடத்தை அடைந்து விடக் கூடாது எனும் சிந்தனை போட்டியின் சுவாரஸ்யத்தையும், ஆரோக்கியத்தையும் குழி தோண்டிப் புதைத்து விடுகிறது. இணைந்தே பயணிக்கின்ற இருவரில் ஒருவர் உயர்ந்த இடத்தை அடைந்தபின், அந்த இருவரின் இயல்புகளிலும் பெரிய அளவில் மாற்றம் உண்டாகி விடுகிறது.

போட்டி ஒரு மனிதனை வெற்றியாளனாய் மாற்றிக் கொண்டே இருக்கிறது. பொறாமை ஒரு மனிதனை நோயாளியாய் மாற்றிக் கொண்டே இருக்கிறது. அதையே அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. பொறாமை படுகின்ற நெஞ்சில் ஏராளமான நோய்கள் வந்து குடியேறுகின்றன. உயர் குருதி அழுத்தம் முதல், கேன்சர் வரையிலான நோய்களுக்கு பொறாமையின் பாசி படிந்து கிடக்கின்ற இதயம் ஒரு காரணம் என்கின்றன ஆய்வுகள்.

எனவே பொறாமை உங்கள் மனதில் பாதம் பதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், அதை உடனே அகற்ற வேண்டிய வழிகளைப் பின்பற்ற வேண்டும். பொறாமை என்பது சீற்றம் கொண்ட சிங்கத்தைப் போல. சிங்கத்தைக் கூடவே வைத்துக் கொண்டு யாரும் குடும்பம் நடத்துவதில்லை. அதை விரட்டி விட்டால் தான் வீடு நிம்மதியாக இருக்கும். எனவே பொறாமையை விரட்ட முயற்சியை எடுக்க வேண்டும்.

பொறாமையானது நம்மை நோக்கி நாமே எய்கின்ற அம்பைப் போன்றது. ஒருவர் மீது பொறாமைப் படும்போது நாம் நம்மையே எய்கிறோம். அடுத்த நபருக்கு அது தெரிவது கூட இல்லை. அவரு பாட்டுக்கு அவரு வேலையை செய்துட்டே இருப்பாரு, நாமோ பொறாமையெனும் கூர் முனையினால் நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டு கீழே விழுந்து கிடப்போம்.

பல வேளைகளில் இது நம்மை சுய பச்சாதாபத்துக்கும் இட்டுச் செல்கிறது. ‘நம்மால முடியாது’ , நாம இதுக்கெல்லாம் லாயக்கில்லை, நாம அதை யோசிக்கவே வேண்டாம், நமக்கு திறமை இல்லை இப்படிப்பட்ட சிந்தனைகள் நம்மை மூழ்கடிக்க இந்த பொறாமையும் ஒரு காரணம் என்கிறது உளவியல்.

நமது பொறாமைக்குக் காரணம் ஒருவேளை நமக்கே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை சின்ன வயதில் நிகழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள், பொறாமையையும் வெறுப்பையும் மனதுக்குள் பதியமிட்டிருக்கலாம். அது காலப்போக்கில் நமது இயல்பாய் மாறியிருக்கும். அப்படிப்பட்ட சூழலில் அந்த பொறாமையின் ஆணிவேரைக் கண்டறிவது மிகவும் அவசியமானது. அதைக் கண்டடைவதும், புரிந்து கொள்வதும், அதை விட்டு விலக முடிவெடுப்பதும் முதன்மைத் தேவைகள்.

வாழ்க்கையில் நம்மிடம் இருப்பதைப் பாராட்டத் துவங்கினாலே, பொறாமை பெரும்பாலும் விடைபெற்று ஓடிவிடும். நோய் நொடியில்லாமல் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதே அதிகபட்ச மகிழ்ச்சிச் செய்தி. அடிப்படை வசதிகளோடு வாழ்க்கையை கொண்டாட முடிந்தால் அது மிகப்பெரிய ஆறுதல் செய்தி. இப்படி நம்மிடம் என்னென்ன இருக்கிறது என்பதைப் பட்டியலிட்டுப் பாராட்டத் துவங்கினால், ஏமாற்றங்களின் குரல் அமுங்கி விடும். பொறாமையின் பற்கள் உடைந்து விடும்.

நம்மைத் தாண்டி ஒருவர் ஓடும்போது தான் பெரும்பாலும் பொறாமை வேர்விடும். எல்லாரும் தனித்தனி இயல்புடையவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித் தனி திறமைகள் உண்டு. அவரவர் பாதையில் அவரவர் பயணிக்கின்றனர். நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை இறைவன் நிர்ணயிக்கிறார். இருக்கின்ற தளத்தில் சிறப்பாய் பணி செய்வது மட்டுமே எனது வேலை, இல்லாத தளத்தை நோக்கி ஏக்கம் கொள்வதல்ல எனும் சிந்தனையை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அது பொறாமையை புறக்கணிக்க உதவும்.

நமது வாழ்க்கையில் எது நமக்கு முக்கியம் என்கின்ற பிரையாரிட்டி, முதன்மை விஷயங்களை நாமே கட்டமைத்துக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் இரண்டு வேலை வாய்ப்புகள் வந்தன. ஒன்று குறைந்த சம்பளம் ஆனால் இடமாற்றம் தேவையில்லை, குடும்பத்தோடு இருக்கலாம் எனும் வசதி. இன்னொரு வேலைவாய்ப்புக்கு பக்கத்து மாநிலத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால் சம்பளம் மூன்று மடங்கு. ‘செம வாய்ப்பு, பெரிய பதவி, எக்கச்சக்க பணம் கொஞ்ச நாள் குடும்பத்தை விட்டுட்டு வெளியூர் போ” என்று அறிவுரை கூறினார்கள் நண்பர்கள். அவரோ, உள்ளூர் வேலையைத் தேர்ந்தெடுத்தார். தனது மகிழ்ச்சி உறவுகளோடு இருப்பது தான், கரன்சிகளோடு கிடப்பதல்ல என்பது அவரது தேர்வாக இருந்தது.

ஒவ்வொரு விஷயமும் அவரவர் தேர்வு. ஒன்று சரி, ஒன்று தவறு என்பதை நிறுவுவதல்ல நமது நோக்கம். எதை முதன்மையாய் வைக்கிறீர்களோ அதைப் பொறுத்தே உங்கள் பொறாமையும், போட்டியும் இருக்கும் என்பது தான் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

அதே போல போட்டிகள் பொறாமையாக மாறி பல்லிளிப்பதற்கு தன்னம்பிக்கைக் குறைபாடு ஒரு முக்கியமான காரணம். நம்மைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் நமக்கு இருந்தால் பெரும்பாலும் பொறாமை பின்வாசல் வழியாக ஓடியே போய்விடும். என்னால் சாதிக்க முடியும், எனக்கு அந்தத் திறமை இருக்கிறது, எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் மதிப்பு மிக்கவன் போன்ற சிந்தனைகளை தன்னம்பிக்கையின் பாடசாலையில் தான் பார்க்கமுடியும். அத்தகைய சிந்தனைகள் நம்மிடம் இருந்தால் நாம் பொறாமையெனும் பொறியில் சிக்கிக் கொள்வதில்லை.

போதுமெனும் மனம் பொறாமையை வெல்ல இன்னொரு மிக வலிமையான ஆயுதம். “நீ முன்னாடி போறியா ? போய்க்கோ”, “நீ பின்னாடி வரியா, பரவாயில்ல வா…” என்பது போன்ற சமநிலை மனநிலை இருப்பவர்களிடம் பொறாமை காணப்படுவதில்லை. வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனநிலையும், தன்னம்பிக்கையும் அவர்களிடம் நிரம்பியிருக்கும். எவ்வளவுதான் சவாலான சூழலாய் இருந்தாலும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் மனிதர்கள் புயலடித்தும் சரியாத மரமாய் வளம்பெறுவார்கள்.

நல்ல உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி செய்வதெல்லாம் பொறாமை சிந்தனையை மாற்றும் என கூறி வல்லுநர்கள் வியக்க வைக்கின்றனர். மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இது முதலில் தோன்றுகிறது. ஆரோக்கியமான மனம், நல்ல சிந்தனைகளை கொண்டு வருகிறது. நெகடிவ் சிந்தனைகளை உற்சாகமான மனம் அனுமதிக்க மறுக்கிறது. எனவே, பொறாமை தாண்டிய அழகிய வாழ்க்கைக்கு உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது தேவையாகிறது.

வாழ்க்கை அழகானது. போட்டி என்பது ஆரோக்கியமானது. அந்த போட்டி என்பது நம்மோடு நாமே நடத்துகின்ற போட்டியாய் இருப்பது சிறப்பானது. என்னை நான் மெருகேற்ற அந்த போட்டி உதவும். என்னோடு என்னை நானே ஒப்பிட்டுக் கொள்வேன். எனது திறமைகள் ஒன்றோடொன்று போட்டியிடும். எனது இயல்புகள் ஒன்றை ஒன்று சவால் விடுக்கும். அதில் பொறாமைக்கு இடமில்லை. ஒரு கிளை அதிகம் கனி கொடுக்கிறது என்பதற்காக மறு கிளை பொறாமைப் படாது, மரம் ஒன்றாக இருக்கும்போது. அத்தகைய சூழலில் போட்டியும் பொறாமையும் இரட்டைப் பிறவிகளாய் இருக்காது, இணையாத இரு கோடுகளாய் தான் பயணிக்கும்.

கடைசியாக, வாழ்க்கை என்பது எதை நாம் பெற்றுக் கொண்டோம் என்பதை வைத்து அளவிடப்படுவதில்லை. எதை நாம் விட்டுச் செல்கிறோம் என்பதை வைத்தே அளவிடப்படும். தனக்காய் சேர்த்துக் கொள்வதிலல்ல, பிறருக்காய் செலவழிப்பதில் தான் உண்மையான வாழ்வின் ஆனந்தம் நிரம்பியிருக்கும். அப்படி பிறருக்காய் கொடுப்பதில் போட்டி போடுவோம்.பிறரை வாழவைப்பதில் போட்டி போடுவோம். பிறரை ஆனந்தமாய் வைத்திருக்க போட்டி போடுவோம். அப்போது நமது வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்.

*

சேவியர்

தன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்

$
0
0

விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போலஎன்ற பாரதியார் பாடல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுதந்திரமாய்ப் பறக்கும் சிட்டுக் குருவி சிலிர்ப்பின் அடையாளம். எப்போதேனும் சிட்டுக் குருவியின் கூட்டைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா ? நேரம் கிடைக்கும் போது கவனித்துப் பாருங்கள். சிட்டுக்குருவிகளின் கூடுகள் எப்படி இருக்கின்றன ? கடந்த ஆண்டு எப்படி இருந்தன ? கடந்த நூற்றாண்டில் எப்படி இருந்தன ? வியப்பூட்டும் பதில் என்னவென்றால், நூற்றாண்டுகளாக இவற்றில் ஏதும் மாற்றம் இல்லை என்பதே!

விலங்குகள், பறவைகள் போன்றவையெல்லாம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை. மனிதனுடைய வாழ்க்கையோ மாற்றங்களால் கட்டமைக்கப்பட்டது. அந்த மாற்றங்கள் தான் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டு வருகிறது. 

சிலருக்கு மாற்றங்கள் எதுவும் பிடிப்பதில்லை. குறிப்பாக அலுவலக வேலை, பிஸினஸ் போன்றவற்றில் மாற்றம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறார்கள். கிணற்றுத் தவளையைப் போல வட்டமடித்துக் கொண்டே இருப்பதில் தான் அவர்களுக்குத் திருப்தி அதிகம். அட்டவணையை மாற்றி எதுவும் செய்யமாட்டார்கள். வட்டத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கும் கடிகார முள்போல அவர்களுடைய வாழ்க்கை பேட்டரி தீரும் வரை ஓடி முடிகிறது.

ஒரு புதிய ரக செல்போனைப் பார்த்தவுடன் நமது செல்போனை மாற்றி விடலாமா எனத் தோன்றுகிறது. ஒரு எல்..டி டிவியைப் பார்த்ததும் நமது சின்ன டிவியை மாற்றி விடலாமா என தோன்றுகிறது. புத்தம் புதிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தவுடன் மாற்றத்துக்காக மனம் தயாராகிவிடுகிறது. ஆனால் முக்கியமான வேலை சார்ந்த மாற்றங்கள் வரும்போது மட்டும் பயம் வந்து கூடாரமடிக்கிறது. 

வெற்றியாளர்கள் மாற்றத்தைக் கண்டு பயந்து ஓடுவதில்லை. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சரியான மாற்றத்தை தேடிப் போய் அணைத்துக் கொள்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் பொருளாதார வீழ்ச்சியில் வழுக்கியது. பலர் வேலையிழந்து, பணமிழந்து சிக்கலில் விழுந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். ஆனால் மாற்றங்களைக் கண்டு மிரண்டு போனவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு மடிந்தே போனார்கள்.

மாற்றம் நல்லது என்று பலரும் சொன்னாலும் மாற்றங்களை மக்கள் வெறுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. 

என்ன நடக்கப் போகிறதோ தெரியலையே ! எனும் பயம் முதலாவது. ஒரு வட்டத்துக்குள்ளேயே நீந்திக் கொண்டிருப்பவர்கள் சட்டென ஒரு மாற்றத்தைக் காணும் போது நிலை குலைந்து போகிறார்கள். தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனை பிடித்து தரையில் விட்டால் துடிப்பதைப் போல இவர்கள் துடித்து விடுகிறார்கள். உண்மையில் விடப்பட்டது தரையில் அல்ல, கடலில் எனும் வாழ்வின் உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

என்னோட வேலை என்ன ஆகும்ன்னு தெரியலையே ? என்னோட எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலையே, வாழ்க்கையை ஓட்ட என்ன செய்வேன்னு தெரியலையே என்றெல்லாம் மாற்றம் குறித்த திகில் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.  

இரண்டாவது பயம் கட்டுப்பாடு சேர்ந்தது. நம்ம கையில கண்ட்ரோல் எதுவும் இல்லையே எனும் பயம் அது !. நடக்கும் மாற்றங்களெல்லாம் வேறு ஏதோ ஒரு நபருடைய கட்டுப்பாட்டில் இருப்பது போல ஒரு எண்ணம் இவர்களுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். நமது வாழ்வின் கடிவாளம் நம்மிடம் இல்லையேல் இதில் எப்படி வெற்றி பெறுவது எனும் பயம் அவர்களுக்கு மாற்றத்தைக் கண்டு விலகி ஓடும் மனநிலையைத் தந்துவிடும்.

மூன்றாவது பயம் தோல்வி சார்ந்தது. சூழல் மாறிவிட்டால் வெற்றி பெற முடியுமா எனும் குழப்பம். புதிய இடம் எப்படி இருக்குமோ ? புதிய தலைமை எப்படி இருக்குமோ ? தரப்பட்டிருக்கும் புதிய வேலையில் திறமையாய் செயல்பட முடியுமா ? ஒருவேளை வெற்றி பெறாவிடில் வேலை நிலைக்குமா ? இப்போது இருக்கின்ற நல்ல பெயர் தொடருமா என சங்கிலித் தொடர் போலத் தொடரும் பயங்கள் இதில் அடக்கம்.

நான்காவது பயம் சோம்பேறிகளின் பயம். இந்த வேலையை நாலுவருஷமாவோ, நாப்பது வருஷமாவோ பண்றேன். இதோட எல்லா நுணுக்கங்களும் எனக்குத் தெரியும். கண்ணை மூடிட்டு கூட இந்த வேலையைச் செய்ய முடியும். இனிமே புதிய வேலையைச் செய்தா எப்படி ? இப்போ இருக்கிற இந்த ரிலாக்ஸான சூழல் நிலைக்குமா ? எனும் பயம் அது. ரொம்பவே சொகுசான வேலை சுழற்சியிலிருந்து வெளிவர பயப்படும் மனநிலை இது.

மாற்றங்களை வெறுப்பவன் அழுகத் துவங்குகிறான், மாற்றங்களை ஏற்காதவர்கள் கல்லறை மனிதர்கள் மட்டுமேஎன்கிறார் இங்கிலாந்தின் ஹேரால்ட் வில்சன். 

ஒருவர் பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து டிராஃப்டேட்டா எனும் சின்ன நிறுவனத்தை ஆரம்பித்தார். டிராபிக் சிக்னல் தகவல்களிலிருந்து தகவல்களைப் பெற்று அவற்றைப் பயனுள்ள அறிக்கைகளாக மாற்றுவது தான் அவர்களுடைய திட்டம். ஓரளவு நிறுவனம் வெற்றிகரமாய் இயங்கிக் கொண்டிருந்தபோது அவர் அதை உதறிவிட்டு மாற்றத்தை நாடினார். அந்த மாற்றம் அவருக்கு உலகப் புகழைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் !

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நம்மைச் சந்தித்துக் கொண்டே தான் இருக்கும். மாற்றங்களை எந்த அளவுக்கு எதிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு மாற்றங்களுக்குள் இணைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். திசை மாறித் திசை மாறி ஓடும் நதியின் ஓட்டத்துக்கு ஏற்ப நீந்துவதே எளிதானது. எதிரேறுதல் கடினமானது. எனவே மாற்றங்களை மனதளவில் ஏற்றுக் கொள்வதே, மாற்றங்களைப் பழகிக் கொள்வதன் முதல் படியாகும். 

ஒரே பள்ளிக்கூடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி பணிமாற்றம் பெற்றுச் செல்லும்  ஆசிரியர்களின் மன உளைச்சல் கடுமையானது. அவர்கள் பழகிய சூழலை விட்டு வெளியேறுவதை சுமையாகக் கருதுகிறார்கள். புதிய நபர்களைப் பரிச்சயப்படுதல், புதிய சூழலில் நடைபோடுதல், புதியவற்றைச் செய்தல் என பல்வேறு நல்ல அம்சங்கள் அதில் உள்ளன. இரண்டு மணிநேர திரைப்படத்துக்கே பல மாற்றங்கள், இனிய ஆச்சரியங்களெல்லாம் எதிர்பார்க்கும் நம்மில் பலரும் வாழ்க்கையில் அத்தகைய ஆச்சரியங்களைச் சந்திக்கப் பயப்படுவது வியப்பளிக்கிறது.

கோயில் திருவிழாக்களில் விற்கும் கலைடாஸ்கோப் பார்த்திருப்பீர்கள். ஒரு முனையைக் கண்ணில் வைத்து சுழற்றிச் சுழற்றிப் பார்க்கும் போது பிரம்மாண்டமான காட்சிகள் விரிவடைந்து நம்மை வியப்பூட்டும். அப்படிக் காட்டுபவை ஒரு சில வண்ணத் துண்டுகள் தான். மாற்றமும் அத்தகையதே. ஒரு சின்ன மாற்றம் கூட நம்முடைய பார்வையில் மிகப்பெரிய விஸ்வரூப வேறுபாடைக் காட்டக் கூடும். எனவே மாற்றங்களைக் குறித்து மலையளவு கற்பனைகள் வளர்க்காமல், அதன் இயல்பிலேயே அணுகுவதே சிறந்தது.

காலங்களைத் தாண்டி வாழ்பவை மிகவும் வலுவான பிராணிகளோ, மிகவும் அறிவார்ந்த பிராணிகளோ அல்ல. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பிராணிகளே  தலைமுறை தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனஎன்கிறார் டார்வின் ! மாற்றங்களை ஏற்றுக் கொள்வதன் தேவையை தனது பாணியில் சொல்கிறது டார்வினின் தத்துவம். குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் எனும் அவருடைய கோட்பாடு கூட மாற்றத்தின் மீதான கட்டமைப்பு தானே !

முன்னேற்றத்துக்கான மாற்றங்களை விரும்பும் மனம் பாசிடிவ் மனநிலையிலிருந்தே புறப்படுகிறது. நான் இந்த மாற்றத்துக்காகப் பயப்படுகிறேனா ? பயப்படுகிறேன் எனில் ஏன் பயப்படுகிறேன் ? இந்தப் பயம் நியாயமானது தானா எனும் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்பதே நமக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அள்ளித் தரும். எத்தனை முறை மாற்றத்தைக் குறித்து நேர்மறையாய் சிந்தித்திருக்கிறோம், எத்தனை முறை எதிர் மறையாய் சிந்தித்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். நீங்கள் வெற்றியாளரா, இல்லையா என்பது புரியவரும்.

அமெரிக்காவிலுள்ள மேசிஸ் எனும் மிகப்பெரிய விற்பனை நிலையம் இன்று சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்கள் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தை ஆரம்பித்த ரௌலண்ட் ஹஸி மேசி என்பவர் இந்தக் கடையை ஆரம்பிக்கும் முன் நான்கு கடைகள் ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக நான்குமே தோல்வியடைந்தன. ஒவ்வோர் தோல்வியிலும் மாற்றத்தைக் கற்றுக் கொண்டார். அதை விரும்பி ஏற்றுக் கொண்டு அடுத்த நிலைக்குத் தாவினார். கடைசியில் மேசிஸ் அவருக்கு வெற்றி தந்தது. இன்று 800 க்கும் மேற்பட்ட கடைகள் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

துணிச்சலுக்கும் முட்டாள் தனத்தும் வேறுபாடு உண்டு. விமானத்திலிருந்து பாராசூட்டுடன் குதிப்பதற்கும், எதையும் யோசிக்காமல் குதிப்பதற்குமான வித்தியாசமாய் இதைச் சொல்லலாம். எனவே மாற்றத்தை நோக்கி இடம் பெயரும் முன் அது குறித்த புரிதலும், அறிதலும் இருக்க வேண்டியது அவசியம். அதன் பின் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முதல் சுவடை வைக்கும்போதே இதன் முழு பொறுப்பும் என்னுடையது என்பதை மனதில் எழுதுங்கள். அது மாற்றத்தை வெற்றிகரமாக மாற்றும் உத்வேகத்தை உங்களுக்குத் தரும்.  

மாற்றங்களை எதிர்கொள்வோம்

வாழ்வினிலே  இனி வெல்வோம்

தன்னம்பிக்கை : இந்த வயசுலயா ?

$
0
0

இந்த வயசுல இதெல்லாம் முடியாது .. “ எனும் வாக்கியத்தை எல்லா இடங்களிலும் வெகு சகஜமாய்க் கேட்கலாம். பல சந்தர்ப்பங்களில் நாமே கூட இதைப் பயன்படுத்தியிருப்போம். நமது பிள்ளைகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது நாம் சந்திக்கும் ஏதோ ஒரு நபரிடமோ போகிற போக்கில் சொல்லி விட்டுப் போயிருப்போம்.

இந்தச் சின்ன வாக்கியம் மனதில் உருவாக்குகின்ற பாதிப்பு எவ்வளவு என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. நாம் ஜஸ்ட் லைக் தேட் சொல்லிவிட்டுப் போகும் இந்த வாக்கியம் ரொம்பவே ஆக்ரோஷமானது. இதைப் பெற்றுக் கொள்ளும் நபருடைய தன்னம்பிக்கையின் மீதும், இலட்சியங்களின் மீதும் ஒரு இடியாக இறங்கவும் வாய்ப்பு உண்டு.

பல குழந்தைகளுடைய ஆர்வமும், வேட்கையும் இத்தகைய வாக்கியங்களால் அணைத்து விடுவதுண்டு. பல இளைஞர்களுடைய இலட்சியங்கள் இதனால் சோர்வடைவதுண்டு. பல முதியவர்களுடைய இனிமையான பொழுதுகள் இதனால் சிதிலமடைவதுமுண்டு.

பெரும்பாலான மக்கள் என்ன செய்கிறார்களோ அதுவே சரியானது எனும் முடிவுக்கு நாம் சீக்கிரமே வந்து விடுகிறோம். ஒரு செயலைச் செய்வதற்கு இது தான் சரியான வயது என்பதை மற்றவர்களுடைய வாழ்க்கையிலிருந்து தான் பொறுக்கி எடுக்கிறோம். அந்த வயதுக்கு முன்போ, அந்த வயதைத் தாண்டியோ அந்த செயலைச் செய்வது நிச்சயம் தோல்வியில் தான் முடியும் என்று பிள்ளையார் சுழி போடும் போதே முடிவு கட்டி விடுகிறோம். 

இது சரிதானா ? சாதனையாளர்களுடைய பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் அவர்களுடைய சாதனைக்கு வயது எப்போதுமே ஒரு தடையாய் இருந்ததில்லை எனும் உண்மை புரியும். எதை அடைய வேண்டும் எனும் தெளிவான இலட்சியமும் அதை நோக்கிய பார்வையுமே அவர்களிடம் இருக்கும். அர்ஜுனரின் கண்ணுக்குத் தெரிந்த பறவையின் ஒற்றைக் கண்ணைப் போல நேர்த்தியான கூர்மையான இலட்சியப் பார்வை.

ஒருவர் ஒரு நூலை எழுதிப் பதிப்பிக்க வேண்டுமெனில் எத்தனை வயதாகவேண்டும் என்பதைப் பற்றி எல்லோருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கும். அடாவ்டோ கோவால்ஸ்கி டா சில்வா எனும் பிரேசில் நாட்டு எழுத்தாளர்அப்ரெண்டே லேஎனும் நூலை எழுதியபோது அவருடைய வயது என்ன தெரியுமா ? ஐந்தரை!.  பால் குடிக்கும் வயதில் நூல் வடித்திருக்கிறார் அவர்.  

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள எமிலி ரோஸாவுக்கு மருத்துவம் மற்றும்  அறிவியல் மீது அலாதி பிரியம். சின்ன வயதிலேயே அதைக் குறித்த நூல்கள், ஆய்வுகளையெல்லாம் படிக்க ஆரம்பித்தார். அவருடைய முக்கியமான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியானது. அப்போது அவருக்கு வயது வெறும் 11. 

பனினொன்று வயதிலேயே ஆராய்ச்சியா என கின்னஸ் புத்தகம் அவசர அவசரமாய் அவரது பெயரை சாதனைப் பட்டியலில் பதிவு செய்து வைத்தது. அவர் நிறுத்தவில்லை உளவியலில் தனது முதுகலைப் பட்டத்தை டென்வரிலுள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் முடித்தபோது வயது 22. 

ஐந்து வயதென்றால் ஒன்றாம் வகுப்பில் படிக்க வேண்டும் என்பது தான் உலக வழக்கம். அந்த வயதில் ஒரு நூலை எழுதுவதென்பது யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்று. “இந்த வயசுல உனக்கெதுக்கு இந்த வேலை, நாலு ரைம்ஸ் சொல்லுஎன்று யாரேனும் சொல்லியிருந்தால் அந்த நூல் அரங்கேறியிருக்காது. எமிலி ரோஸாவிடம்முதல்ல நீ ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடி, அப்புறம் ஆராய்ச்சி பற்றிப் பேசலாம்என பெற்றோர் சொல்லியிருந்தால் அவருடைய சாதனை நிகழ்ந்திருக்காது !

நியதிகளை மீறிய செயல்களே சாதனைகளாய்ப் பதிவாகின்றன. வயதைக் காரணம் காட்டி செயல்களைத் தாமதப் படுத்தும் போது அவை சாதாரண வெற்றியாய்க் கூட  மாறாமல் போய்விடுகின்றன. இந்தியாவின் கிஷன் சிரீகாந்த் தன்னுடைய முதல் படத்தை இயக்கியபோது அவருக்கு வயது வெறும் ஒன்பது ! இயக்குனராய் வெற்றிக் கொடி கட்ட வயது ஒரு தடையல்ல என்பதை அவருடைய சாதனைப் படம் நிரூபித்துக் காட்டியது.

இளைஞர்களால் மட்டுமே செய்ய முடியும் எனும் சாதனைகளைச் சிறுவர்களாலும் செய்ய முடியும். சிறு வயதினரால் செய்ய முடிகின்ற விஷயங்களை முதியவர்களாலும் செய்ய முடியும். எதைச் செய்வதற்கும் வயது ஒரு தடையல்ல எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டாலே போதுமானது !

ஜப்பானிலுள்ள டாமே வாட்டன்பே எனும் பெண்ணுக்கு எவரெஸ்டின் உச்சியை எட்டிப் பிடிக்க வேண்டும் எனும் ஆர்வம். தளராத முயற்சியின் முடிவில் அவர் எவரெஸ்டை எட்டிப் பிடித்தார். ஆனந்தத்தில் அவர் தனது கரங்களை உயர்த்தியபோது அவருக்கு வயது 63 !

வெற்றிபெறுவதற்கான முதல் தேவை வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை தான். அந்த வேட்கையும் தேடலும் இருப்பவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை. எங்கே வாய்ப்புக் கிடைக்கிறது என்பதை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ரிஸ்க் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இயங்கிக் கொண்டே, தேடிக்கொண்டே, பயணித்துக் கொண்டே இருப்பவர்கள் தான் வெற்றியடைகிறார்கள். ஓய்ந்து விட்டால் நம்மைச் சுற்றி தோல்வியின் கரையான்கள் கூடு கட்டி விடும். தலைக்கு மேல் வேதனையின் வல்லூறுகள் வட்டமிடவும் துவங்கும்.

நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டியது வெற்றிக்கான தேடலின் இன்னொரு தேவை. நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் நமக்கான உற்சாகத்தை பல வேளைகளில் வழங்குவதில்லை. பெரும்பாலும் நமது உயர்வுகளுக்குக் குறுக்கே மதில் சுவர் கட்ட முடியுமா என்றே பார்ப்பார்கள். எனவே நம்மிடம் இருக்கும் தெளிவான இலக்கும், அதை நோக்கிய பயணத்தில் நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்வதும் ரொம்பவே அவசியம்.

வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம் என்பதை உணராமல் பலர் தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். இதுவே மிகப்பெரிய தோல்விஎன்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். பலரும் வெற்றி ஃபாஸ்ட் புட் போல சட்டென கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் தான் ஏழே நாட்களில் வெள்ளையாகலாம், முப்பதே நாட்களில் ஒல்லியாகலாம், மூன்றே மாதத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் எனும் கூக்குரல்களுக்குப் பயங்கர கிராக்கி. பல்லாயிரம் முறை தோல்வியடைந்தாலும் வெற்றியடையும் வரை ஓடும் வேட்கையே சாதனைகளுக்குத் தேவை. தாமஸ் ஆல்வா எடிசன் அதையே செய்தார் !

கான்ஸ்டண்டைன் காலியாஸ் எனும் கிரீஸ் நாட்டு எழுத்தாளர் கிளான்ஸ் ஆஃப் மை லைஃப்எனும் நூலைக் கடைசியாக எழுதினார். 169 பக்கங்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட அந்த நூலை அவர் எழுதி வெளியிட்டபோது அவருக்கு வயது 101 ! 2003ம் ஆண்டு அவர் இந்த நூலை வெளியிட்டார். உலகின் மிக முதிய நூலாசிரியர் இவர் தான். ஒருவருடைய வயது, அவருடைய விருப்பத்துக்கும், இலட்சியத்துக்கும் இடையே நிற்க முடியாது என்பதை அவருடைய சாதனை எடுத்துக் காட்டுகிறது. 

சாதனையாளர்களெல்லாம் வெற்றியை ஏதோ சகஜமாக எட்டிப் பிடிக்கவில்லை, அதன் பின்னால் உழைப்பு உறைந்து கிடக்கிறது. “செயல்படக் கூடிய சின்ன அறிவு, செயல்படாமல் கிடக்கும் கடலளவு அறிவை விடப் பெரியதுஎன்கிறார் கலீல் ஜிப்ரான். ஐடியாக்களை மனதில் போட்டுப் புதைத்து வைப்பது பயனளிக்காது, அதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதையே அவருடைய கருத்து படம் பிடிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சுவாமிநாத ஐயருக்கு படிப்பின் மீது அதீத ஆர்வம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் அவர் எம்பில் பட்டம் பெற்றபோது வயது 84 ! உலகிலேயே முதிர் வயதில் தத்துவயிலலில் முதுகலைப் பட்டம் பெற்றவரும் இவரே. தனது 83வது வயதில் அந்த பட்டத்தை அவர் பெற்றார். கல்விக்கும், ஆர்வத்துக்கும், இலட்சியத்துக்கும் வயது எப்போதுமே தடையாய் இருப்பதில்லை என்பதையே அவருடைய பட்டங்கள் நமக்கு சத்தியம் பண்ணிச் சொல்கின்றன.

துணிச்சலும் ஆர்வமும் உடையவர்களை வெற்றி ஏமாற்றுவதில்லை. தங்கள் சொகுசு வளையத்தை விட்டு வெளியே வருபவர்கள் மட்டுமே அதை விட உன்னதமான இடங்களை அடைய முடியும். 

வெற்றி என்பது நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிறார் எழுத்தாளர் ஹென்ரிக் எட்பர்க். வெற்றி பெற வேண்டும் எனும் முடிவை நீங்கள் எடுத்து விட்டால் உங்களை யாரும் தோல்வியடையச் செய்ய  முடியாது என்கிறார் அவர். 

கடைசியாக ஒன்று ! வெற்றிக்கான தேடுதல் ஓட்டத்தில் நேர்மை, உண்மை, நம்பகத் தன்மை போன்றவற்றை தவற விடாதீர்கள். இல்லையேல் நீங்கள் அடையும் வெற்றி உண்மையான வெற்றியாய் இருப்பதில்லை.

வெற்றிக்கு வயதொன்றும் தடையல்ல

முயலாமல் முடங்குதல் விடையல்ல !

 

தன்னம்பிக்கை : வெற்றியின் குறுக்கே கோபம்

$
0
0

 “கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்என்கிறார் ரால்ஃப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.

எனக்குக் கோபமே வராதுங்கஎன்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப் பிறவியாய் இருக்க வேண்டும். கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லாருக்குமே வரும். சிலரிடம்நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?” என்று கேட்டால் கூடஎவண்டா அப்படிச் சொன்னது ? ” என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. “வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காதகோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறதெனில் உங்களுக்குள் கோபம் எழும். அதன் வெளிப்பாடு கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும் போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.  

மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை  முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்ல…” என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள். 

ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்த சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை. 

கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். “நீ.. எப்படிய்யா என் மனைவியைப் பற்றி பற்றி தப்பாப் பேசலாம்என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம் அது. இதை எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர் என்பார்கள். 

இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எதிராளி கமிஷனராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். இதை இம்ப்ளோசிவ் ஆங்கர் என்பார்கள். 

எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே படுத்துக் கிடக்கிறது.

மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் குருதி அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் திகிலூட்டுகிறது.  அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒரு படி மேலே போய், நோய்கள், காயங்கள் போன்றவை தீராமல் இருப்பதன் காரணமும் கோபமே என்கிறது !

கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக் கைதிகளின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும் சிறைச்சாலையில் வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.

இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும் என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவக் குறிப்புகள் பேசுகின்றன.

உறவுகளுக்கிடையே வரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. “கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்என்றோ, “ கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்என்றோ தான் விவாகரத்துக்களின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன. கத்துவது, அவமானப் படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென நிறுவுவது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது என மணமுறிவுக்கான காரணங்கள் எக்கச் சக்கம். 

அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப் பறிப்பதும், புரமோஷனைக் கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமே தான். “கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம் …”, “மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்..” . என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித் திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.

மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை. 

கோபமும் மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை ! மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.

அவரு வள் வள் ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல… ” என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங்களில் அது தொடர்ந்து அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது! 

நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், “இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள். 

கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை.

  1. யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின் படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.
  2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும் உறவுகளுக்குடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். “அடுத்தவர்கள் என்ன செய்யவில்லைஎனும் பார்வையிலிருந்து, “நான் என்ன செய்தேன்என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.
  3. கோபத்தை மூட்டைக் கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
  4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
  5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களுடைய சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்,.
  6. நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள். 
  7. சிரிக்கப் பழகுங்கள். நகைச்சுவைத் திரைப்படங்கள், கார்ட்டூன் படங்கள் பாருங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
  8. இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
  9. இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா ? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் ? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும்.
  10. 10.மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களில் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்.

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்

ஆனந்தத்தை அள்ளி வைப்போம்.

Vetrimani : எங்க காலத்துல….

$
0
0

எங்க காலத்துல….
( பழமை பேசுதல் பயன் தருமா ? )

Image result for old man advice

ஒருவனுக்குக் காதல் தோல்வி ! சில ஆண்டுகள் திகட்டத் திகட்டக் காதலித்து விட்டு, வழக்கம் போல தாடியைத் தடவியபடி ஓரமாய் உட்கார வேண்டிய காலம். உட்கார்ந்து உட்கார்ந்து தாடியும் நரைத்துப் போய், கால்களும் மரத்துப் போயிருக்கும் காலத்தில் அவனுடைய கண்ணுக்கு முன்னால் கலியுகக் காதலர்கள் பறந்து திரிகின்றனர். இந்தக் காலத்துக் காதல் புனிதமானது. அது தீண்டாமைக் கொடுமைகளைக் கடந்தது. அது பழைய காதலனுக்குப் புரிவதில்லை.

எங்க காலத்துல காதல்ன்னா எப்படி தெரியுமா ? என பேச ஆரம்பிப்பார். அப்போதெல்லாம் சன்னல் வழியே தான் கண்கள் பேசிக்கொள்ளும் என்பார். உடனே இளசு ஒன்று, இப்பவும் அப்டித்தான்.. ‘வின்டோஸ்’ வழியே விழிகள் பேசிக்கொள்கிறது என்பார். அப்போதெல்லாம் நாங்க தொட்டுப் பேசறது கூட கிடையாது, என்பார் அவர். அப்பல்லாம் நீங்க பேசறதே இல்லை அப்புறம் என்ன தொட்டுப் பேசறது என்பார் இவர்.

அந்தக் காலத்துல காதல் புனிதமானது என்பார் பழையவர். புனிதமானது எல்லாம் கோயில்ல இருக்கணும், காதல்ல எதுக்கு இருக்கு என்பார் இளையவர். காதலி எழுதற எழுத்துப் பிழையே அழகானதுப்பா என்பார் பழையவர். வீடியோ கால் காலத்துல எதுக்கு எழுத்தும், பிழையும் என்பார் இளையவர். ஒருத்தி கிட்டே மனசைக் கொடுக்கிறது தான் எங்க காலக் காதல் என்பார் அவர். மனசென்ன கடலை மிட்டாயா குடுத்ததும் தீர்ந்து போக என நக்கலடிப்பார் இவர்.

காலங்களின் இடைவெளி எப்போதுமே உரசிக் கொண்டே தான் இருக்கும். இது இன்று நேற்று நடந்ததல்ல. தலை முறை தலைமுறையாக, முந்தைய தலைமுறையைப் பற்றிய புகழ் பாக்கள் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றன. ‘நான் காதலில் கசிந்துருகினேன்’ என ஒருவர் சொல்வதில் அப்படியே உண்மை இருக்க வேண்டுமென்பதில்லை. அவர் காதலில் அடிபட்டு, மிதிபட்டு, விரட்டப்பட்டு, தோற்றுப் போனவராகவும் இருப்பார். தோற்றுப் போன நினைவுகளை மாற்றி, தேற்றிக் கொள்ளும் நினைவுகளுக்காக தனது கனவுக் கதவைத் திறந்து அவர் சுகமான நினைவுகளை உருவாக்குகிறார்.

நாம் பனங்காயில் வண்டி செய்து ஓட்டிய நினைவுகளை பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்கிறோம். பிள்ளைகள் நாளை ஃபோர்ட்நைட் வீடியோ கேம் விளையாடுவதைப் பற்றி அடுத்த தலைமுறையிடம் சொல்வார்கள். அவர்கள் விர்ச்சுவல் விளையாட்டுகளின் உயர்நிலை பற்றி தொடரும் தலைமுறைக்குப் பகிர்ந்து கொள்வார்கள். இது ஒரு வாழையடிப் பாதைப் பயணம். தவிர்க்க முடியாத யதார்த்தம்.

காலங்களின் நெடுவீதியைக் கடந்து வந்தவர்கள் தங்களுடைய பயணத்தின் வழியில் தொலைத்தவை ஏராளம் ஏராளம். பால்யத்தின் பரவச நினைவுகள். இளங்காதலின் நிராகரிப்பு நிமிடங்கள். பெற்றோரின் அரவணைப்புக் கணங்கள். நண்பர்களின் குதூகலத் தருணங்கள். கனவுகளின் மகரந்தச் சேர்க்கைகள். என அவர்கள் தொலைத்தவை ஏராளம் ஏராளம். மறைந்து போன மனிதர்களை நேரில் சந்திக்க முடியாதபோது அவர்கள் நினைவுகளின் வழியே கைகுலுக்கிக் கொள்கின்றனர். தொலைந்து போன வருடங்களை மீண்டும் சந்திக்க முடியாதபோது அவர்கள் அந்த ஞாபகங்களின் ஒலியை மறு ஒலிபரப்பு செய்கின்றனர்.

இது ஒரு வகையில் உளவியல் ஆறுதல். என் காலத்தில் எல்லாம் நன்றாக இருந்தது எனும் நம்பிக்கையின் வருடல் அவர்களுக்கு வெப்பத்தின் கணங்களை விட்டு வெளியேற துணை செய்கின்றன. அதனால் தான் பெரியவர்கள் ஆக ஆக அவர்களுடைய பழங்கதைகளின் பகிர்தல் அதிகமாகிக் கொண்டே போகிறது. முதுமை நம்மை உணர்வுகளோடு நெருக்கமாக்கி, உணவுகளிலிருந்து பிரித்தெடுக்கிறது. முதுமை நம்மை உறவுகளோடு இறுக்கமாக்கி, செல்வங்களிலிருந்து விலக்கி வைக்கிறது. அதனால் தான் மனதின் காயங்களுக்கு பழங்கதைகள் மயில்பீலிச் சாமரம் வீசுகின்றன.

அவர்களுடைய காலத்துக்கு ஒரு டைம் மெஷின் மூலம் போய்ப் பார்த்தால் அவர்கள் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் வண்டி வண்டியாக கொட்டிக் கிடப்பதைப் பார்க்கலாம். அந்த எதிர்மறை வலிகளையெல்லாம் விலக்கிவிட்டு அவர்கள் பழைய காலத்தின் பாசிடிவ் சிந்தனைகளில் சிக்கிக் கொள்வதன் காரணம் அவர்கள் விரும்பிய வகையில் தங்கள் பால்யத்தை சிந்தனைகளில் நட்டு வைப்பதே. காலப்போக்கில் அவர்களுடைய எதிர் மறை சிந்தனைகள் விலகிப் போவதை ,”ஃபேடிங் அஃபக்ட் பயஸ்” என உளவியலார்கள் கூறுவார்கள்.

பழைய காலத்தில் நம்மை வார்தெடுத்த வலிகளும், நம்மை துவைத்தெடுத்த தோல்விகளும் மறைந்து போக, பழைய காலத்தின் இனிய நினைவுகள் மட்டுமே இதயத்தின் வடிகட்டியில் ஒரு வாசனை திரவியமாய் தங்கி விடுகிறது. அது தான் பெரியவர்களின் பேச்சுகளிலிருந்து சிரிப்பும், சிலிர்ப்புமாய் புறப்படுகிறது. பழைய நினைவுகளைப் பகிரப் பகிர அவை மீண்டும் மீண்டும் மனதில் வலுவடைகின்றன. “அவ சந்திரமுகியா நின்னா, சந்திரமுகியா நடந்தா, சந்திரமுகியைப் பேசினா, சந்திரமுகியாவே மாறிப் போயிட்டா” மாதிரி, பழைய காலத்தை பாசிடிவ் ஆகப் பேசிப் பேசி அதையே உண்மையென மனம் நம்பி அதில் லயிக்க ஆரம்பித்து விடுகிறது.

யாராவது உங்களிடம் அப்படிக் கதைகள் பேசினால் அவர்களருகில் அமர்ந்து அவர்களுடைய பால்யத்தின் கதைகளைக் கேளுங்கள். குறிப்பாக முதியவர்கள் அத்தகைய கதைகளைப் பேசினால், விழிகளில் வியப்பும், இதயத்தில் ரசிப்புமாக அவர்களுடைய கதைகளைக் கேளுங்கள். அதை சிலாகியுங்கள். அதை வியந்து பேசுங்கள். இவையெல்லாம் அந்த முதியவர்களின் மனதில் சொல்லொண்ணா ஆறுதலை மழைபோல இறக்கும். அவர்களுடைய வெறுமையான பொழுதுகள் மகிழ்வினால் நிரப்பப்படும்.

“பழைய கதையைப் பேசாதீங்க” என உதாசீனப்படுத்தும் ஒவ்வொரு கணமும் நாம் அவர்களை காயப்படுத்துகிறோம். அவர்களுடைய அழகிய ஓவியத்தில் கரியைப் பூசுகின்றோம். அது அவர்களுடைய மெல்லிய மனதில் கீறல்களை உருவாக்கி விடுகிறது. அவர்களுடைய உணர்வுகளின் வாய்க்கால்களில் பாறைகளைப் புரட்டி வைக்கிறது. அதற்குப் பதிலாக, “உங்க பால்யத்துல வாழாம போயிட்டேனே” எனும் ஏக்கத்தைப் பதிவு செய்யுங்கள். அவர்களுடைய சிந்தனை வயல்களெங்கும் சிரிப்புகள் விளையும்.

பழங்கதைகள் பேசுவோர் நிகழ்கால யதார்த்தத்தை உதறிவிட்டு தன்னைச் சுற்றிய மனிதர்கள் அனைவரும் கடந்த காலத்தில் தான் வேர்களைப் பதிக்க வேண்டும் என நினைக்கும் போது தான் பிரச்சினை உருவாகிறது. நான் இப்படி இருந்தேன், எனவே நீயும் அப்படித் தான் இருக்க வேண்டும். எனது பால்யம் இப்படி இருந்தது எனவே உனது பால்யமும் இப்படித் தான் இருக்க வேண்டும். எனது வாழ்க்கையில் நான் இத்தகைய முடிவுகளைத் தான் எடுத்தேன், நீங்களும் இத்தகைய முடிவுகளைத் தான் எடுக்க வேண்டும் என கடந்த காலத்தின் சாவிகளால் நிகழ்காலத்தைப் பூட்ட நினைக்கும் போது தான் சிக்கல்கள் உருவாகின்றன.

உலகம் மோசமான நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக உலகின் 70% மக்கள் நம்புகிறார்கள். அதிலும் குறிப்பாக தங்களுடைய வாழ்க்கையே மோசமாகப் போவதாக 55 சதவீதம் மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை தான் அவர்களை பழைய காலத்தின் இடுக்குகளில் இளைப்பாற வைக்கின்றன. அதனால் தான் பழசைத் தாண்டிய விஷயங்களெல்லாம் தவறு எனும் சிந்தனை அவர்களிடம் முளைக்கிறது. அந்த சிந்தனையை ஊக்குவிப்பது போல பெண்களுக்கும், இளையவர்க்கும் எதிரான வன்முறைகளும், சமூக அவலங்களும் அவர்களை அலட்டுகின்றன.

குறிப்பாக தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எல்லோர் கைகளிலும் ஆறாவது விரலாக ஒரு ஸ்மார்ட்போனை புதைத்து வைத்திருக்கிறது. அதை அனிச்சைச் செயலாகத் தடவிப் பார்ப்பதை தவறாமல் செய்கிறது இன்றைய தலைமுறை. தொழில்நுட்பம் கொண்டு வந்திருக்கும் வாழ்வியல் மாற்றங்கள் எக்கச்சக்கம். அவற்றையெல்லாம் ஒற்றை உதறலில் அகற்ற நினைப்பது நடக்காத காரியம்.

கடந்த தலைமுறைக்குத் தவறிழைக்கக் கிடைத்த வாய்ப்புகளை விட, இன்றைய சிறுவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது. தலையில் துண்டு போட்டு காலைக்காட்சியில் ரகசியப் படம் பார்த்த கதைகளெல்லாம் வரலாறாகிவிட்டன. இப்போது விரல்நுனியில் விரசம் அவர்களுக்கு டிஜிடல் வடிவில் கிடைக்கிறது. இந்த சூழலில் அவர்கள் இதயத்தில் மனிதத்தையும், உடலில் புனிதத்தையும் காக்க நாம் என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். நான் அப்படி இருந்தேன் என்பதெல்லாம் இங்கே பயனளிக்காது.

எனது தோட்டத்தில் இப்படிப் பூக்கள் விளைந்தன, அதை இப்படிப் பராமரித்தேன். உனது தோட்டத்தில் பூக்கள் விளைவிப்பதும், களைகள் விளைவிப்பதும் உனது விருப்பத்தைப் பொறுத்தது. நான் என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் எனுமளவில் இந்தப் பகிர்தல் இருக்கும் போது எல்லம் இனிமையாகிறது.

பழங்கதைகள் பேசுவோரின் உணர்வுகளை மதிப்போம். ஏனெனில் அவர்களது களங்கமற்ற வாழ்க்கையின் அடையாளம் அங்கே தான் நிரம்பியிருக்கிறது. அவர்களின் முதுமை நாட்களில் அவர்களின் இதயம் மகிழ்வில் திளைக்க உதவுவோம். ஏனெனில், முதுமை என்பது நமது வாழ்க்கைப் பாதையிலும் காத்திருக்கும்.

*

சேவியர்

தன்னம்பிக்கை : பாராட்டுங்கள்

$
0
0

மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” – என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.  தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டதுஎன்று சொன்னால் உடனே எல்லோரும் தலையாட்டுவீர்கள். “ஆமாம். யாருமே யாரையுமே பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோஎன சட்டென பதில் வரும். அந்த பேச்சை அப்படியே ஒரு நிமிடம் நிறுத்தி விட்டுக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.

நேற்றைய தினம் நாம் எத்தனை பேரைப் பாராட்டினோம் ?” ஏதேனும் நினைவுக்கு வருகிறதா ? சரி, போன வாரத்தில் ? போன மாதத்தில் ? – ஒவ்வொரு படியாக பின்னோக்கிப் போய் சிந்தித்துப் பார்த்தால், நாமே யாரையும் பாராட்டவில்லை எனும் உண்மை உறைக்கும். “பாராட்டு என்பது நம்மைத் தவிர மற்ற எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம்என ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்கிறோம் !

மனதாரப் பாராட்டுவது மனிதனுக்கே இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான பண்பு. எந்தச் செலவும் இல்லாத விஷயம் இது. ஆனால் பணத்தினால் உருவாக்க முடியாத ஒரு ஆரோக்கியமான சூழலை பாராட்டுவதன் மூலமாய் உருவாக்கிவிட முடியும். 

நமது தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனையோ நபர்களைச் சந்திக்கிறோம். காலையில் காபி குடிப்பது முதல், அலுவலகம் சென்று, வேலை முடித்து, வீடு வந்து சேர்வது வரை ஏராளமான நபர்களோடு நாம் உரையாடுகிறோம். அவர்களில் எத்தனையோ பேர் பாராட்டுக்கு உரியவர்களாய் இருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

பலரும் செய்யும் ஒரு தவறு, பாராட்டு என்பது அலுவலக சமாச்சாரம் என நினைப்பது தான். பாராட்டு என்பது நல்ல எந்த ஒரு செயலுக்குமே உரியது ! எந்த இடத்திலும் வழங்கப்படக் கூடியது. எந்த நபருக்கும் கொடுக்கக் கூடியது !

சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். சில ஆண்டுகளுக்குப் பின், நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, நீங்கள் விதைத்த அந்த சின்னச் சின்னப் பாராட்டுகள் பூஞ்சோலையாய் வளர்ந்து புன்சிரிக்கக் காண்பீர்கள்.

பணம் வாங்கறாங்க, வேலை பாக்கறாங்கஎனும் மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டியது முதல் தேவை. உதாரணமாக உங்கள் வீட்டை அழகாகத் துடைத்து வைக்கும் வேலைக்காரப் பெண்ணுக்குக் கொடுக்கலாம் ஒரு பாராட்டு ! வீட்டில் தோட்ட வேலை செய்யும் ஒருவருக்கும் வழங்கலாம் பாராட்டு. பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் அல்ல எனில் நம்மில் பலரும் பாராட்டுக்கு உரியவர்களாக இருக்க மாட்டோம் இல்லையா ?

ஏன் பாராட்ட வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் பாராட்டுகள் செய்யும் மாயாஜாலங்கள் புரிவதில்லை. பாராட்டு ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பாராட்டு, வேலை சரியான பாதையில் செல்கிறது என்பதை ஒருவர் சரிபார்க்க உதவுகிறது. பாராட்டு, ஒரு நபர் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டு பயணிக்க உதவுகிறது. 

பாராட்டில் இருக்க வேண்டிய ஒரே விஷயம், அது ஆத்மார்த்தமானதாய் இருக்க வேண்டும் என்பது தான். போலித்தனமான பாராட்டுகளைத் தோண்டிப் பார்த்தால் உள்ளே சுயநலமே ஒளிந்திருக்கும்.  

பாராட்டுவதற்கு பாசிடிவ் மனநிலை வேண்டும். வாழ்க்கையை இனிமையாகவும், ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் எதிர்கொள்பவர்களே பாராட்டுவதில் தயக்கம் காட்டுவதில்லை. சிடுமூஞ்சிகள் பாராட்டுவதற்குக் காசு கேட்கும் பார்ட்டிகள். இதில் நீங்கள் எந்த வகை ? தப்பான பக்கம் நிற்கிறீர்களெனில் உடனே நேர் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என புலம்புபவர்கள் ஒரு வகை. எந்தப் பூவில் எந்தத் தேன் இருக்குமோ என்று பார்ப்பவர்கள் இன்னொரு வகை. நேர் சிந்தனை உள்ளவர்கள் பிறரிடம் இருக்கும் நல்ல விஷயங்களைத் தேடுவார்கள். அப்போது அவர்களுக்குப் பாராட்ட நிறைய விஷயம் கிடைக்கிறது. குறை சொல்பவர்கள் எல்லா செயலுக்கும்உள் நோக்கம்கற்பிப்பதிலேயே காலத்தைச் செலவிடுவார்கள். அவர்களுக்குப் பாராட்டும் மனமே வருவதில்லை.

சந்திரனுக்கு ராக்கெட் விடுவது போன்ற சாதனை செய்தால் தான் பாராட்ட வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக் கொள்வதுண்டு. அது தப்பு ! சின்னச் சின்ன செயல்களில் உங்கள் அன்பான பாராட்டு வெளிப்படவேண்டும். உங்கள் பையன் பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தால் மட்டுமா பாராட்டுவீர்கள் ? எல்.கே.ஜி யில் ஹோம் வர்க் செய்யும் போதே பாராட்டுவீர்களல்லவா ? அதே உற்சாகத்தைப் பிறரிடமும் காட்டுங்கள். !

நல்ல விஷயத்தைப் பாராட்டுவதில் முதல் ஆளாய் நில்லுங்கள். உங்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயமும் பிறரிடம் உருவாகும். பாராட்ட வேண்டும் என முடிவெடுத்துப் பாருங்கள் உங்கள் கண்ணுக்கு பிறருடைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பாராட்டும் ஒருவகையில் தனிமனித முன்னேற்றத்துக்கு உதவுகிறது. தனிமனித வளர்ச்சி தானே சமூக வளர்ச்சியின் ஆதாரம் ! 

ஒரு கூட்டத்தில் ஒருவர் பாராட்டும் பண்பு உடையவராக இருந்தாலே போதும். பூவோடு சேர்ந்த பூக்கூடையும் மணப்பது போல, கூட இருப்பவர்களுக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டு விடும். எனவே அத்தகைய நண்பர்களோடு நீங்கள் இணைந்து இருப்பதே சிறப்பானது.

பாராட்டு அடுத்தவர்களுடைய மனதில் மகிழ்ச்சியை வரவழைக்கும். மகிழ்ச்சி என்பது அருவி போல, அது அருகில் இருப்பவர்களையும் நனைக்கும். அந்த மகிழ்ச்சி உங்களையும் ஈரமாக்கும். உங்களுடைய மனமும் உற்சாகமடையும். உற்சாகமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் என்பதையே மருத்துவம் சொல்கிறது !

ஒரு சூழல் எப்படி மோசமாய் இருக்கிறது என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது ஒரு வகையான மனநிலை. அந்த சூழலை என்ன செய்தால் சீர்செய்யலாம் என யோசிப்பது இன்னொரு மனநிலை. பாராட்டும் குணமுடையவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.

அன்பு ! அதுவே பாராட்டும் மனதுக்கான அஸ்திவாரம். மனதளவில் அன்பு இருந்தால் பாராட்டு தானாகவே ஊற்றெடுக்கும். பலருக்கு இந்த அஸ்திவாரம் வலுவற்றதாக இருப்பது தான் துயரம். ஆரம்பத்தில் பாராட்டுபவர்கள் கூட பாராட்டப்பட்ட நபர் வளர்ச்சியடைந்தால் பிறகு பாராட்டமாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சியில் பொறாமை படும் குணம் பாராட்டை அனுமதிப்பதில்லை.  

ஒருவரைப் பாராட்டும் போது அவருடைய திறமையை அளவுகோலாய் வைத்தே பாராட்டுங்கள். உங்களுடைய திறமையை வைத்தல்ல. அப்போது தான் பலவீனமான மனிதனும் பாராட்டுக்குரியவனாய் தெரிவான். ஒவ்வோர் சூழலுக்கும் ஒவ்வொரு விஷயம் தேவையானதாய் இருக்கும். மிருதங்கத்தில் துளைகள் இருந்தால் அது வீண். புல்லாங்குழலில் துளைகள் இல்லையேல் அது வீண். சூழலோடு பொருந்தி பாராட்டுகள் வெளிப்படுவது நல்லது.

என்னதான் செய்தாலும் அவனைப் பாராட்டவே முடியாதுஎன ஒருவரைப்பற்றி நீங்கள் முடிவெடுத்தால் கூட அவரிடம் இருக்கும் நல்ல செயல்கள் என்னென்ன என பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைவதைப் பார்க்க உங்களுக்கே வியப்பாக இருக்கும். அதன் பின் அவரைப் பாராட்ட காரணங்கள் உங்கள் கையிலேயே இருக்கும் !

நம்பிக்கை வையுங்கள். ஒரு நபர் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கும் போது அவருடைய வளர்ச்சி உங்களுக்கு பிரியமானதாய் மாறுகிறது. அவர் மீதான நம்பிக்கை அவரைப் பாராட்டச் செய்கிறது. அந்தப் பாராட்டு அவரை வெற்றியை நோக்கி நகர்த்தும். எனவே மனிதர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

மிக முக்கியமாக, பாராட்டும் பழக்கம் வீடுகளிலிருந்து துவங்க வேண்டும். வீடுகளில் விதைப்பது, வீதிகளில் முளைவிடும். பாராட்டு தனது முதல் சுவடை வீட்டில் வைக்கும் போது அதன் பயணச் சாலைகள் நாட்டில் விரிவடையும். கணவனோ, மனைவியோ பாராட்டுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. பெற்றோரையும் பாராட்டுங்கள். பிள்ளைகளையும் பாராட்டுங்கள். முதியவர்கள் மனதளவில் குழந்தைகள். அவர்களுக்கும் உங்கள் பாராட்டு ரொம்பவே அவசியம். 

நேரடியாகப் பாராட்டுகையில் உடல் மொழி ரொம்பவே முக்கியம். உடல் மொழி உற்சாகமாக இருந்தால் தான் பாராட்டின் முழுப் பரிமாணமும் பாராட்டப் படுபவரைப் போய்ச் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

யாரையேனும் விமர்சித்தால் கூட, சகட்டு மேனிக்கு குறைகளை மட்டுமே அடுக்காதீர்கள். அவர்களுடைய ஒரு நல்ல பண்பையாவது பாராட்டுங்கள். விமர்சனங்கள் பக்குவமாகப் பரிமாறப்படவேண்டியவை, பாராட்டுகள் மறைக்காமல் பகிரப்படவேண்டியவை !

வெறும் வார்த்தைகளிலான பாராட்டுகளைத் தாண்டி அடுத்த நிலையில் சின்னச் சின்னப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டுவது ரொம்பவே சிறப்பானது. அந்த பரிசு அவர்களுக்கு உங்கள் பாராட்டை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அது அபரிமிதமான உற்சாகத்தையும் ஊட்டும்.

பாராட்டு என்பது அன்பின் விதைகளில் முளைத்தெழும் அழகிய கொடி. அது பின்னிப் படரும் சமூகம் ஆனந்தத்தின் கானகமாய் வசீகரிக்கும்.

மனம்தரும் எந்தப் பாராட்டும்

வெற்றியின் வீதியில் தேரோட்டும்

தன்னம்பிக்கை : கல்லூரிக்குச் செல்கிறீர்களா ?

$
0
0

கல்லூரிக் காலம் மகிழ்வுகளின் வேடந்தாங்கல். கவலைகளின் திவலைகளுமின்றி ஆனந்த மழையில் இளமை ஆர்ப்பரிக்கும் காலம். முதியவர்களுடைய ஞாபக அடுக்குகளைக் கொஞ்சம் அலசிப் பார்த்தால் கல்லூரி காலக் களேபரங்களின் சுகமான ராகம் கேட்கக் கூடும். பள்ளிக்கூட மாணவர்களின் மனதில் கல்லூரிக் காலம் குறித்த கனவுகளின் வண்ணச் சாலை நீளமாகத் தெரியும்.

கல்லூரிக் காலம் வரங்களின் காலம். இந்தக் காலத்தில் என்ன விதைக்கிறோம் என்பதை வைத்தே எதிர்கால விளைச்சல் அமையும். நமது களஞ்சியம் தானியங்களுக்கானதா, பதர்களுக்கானதா என்பதை கல்லூரி வாழ்க்கை தான் நிர்ணயம் செய்கிறது. பலரும் கல்லூரி வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் குழம்பிப் போய் வாழ்க்கையைக் குழப்பங்களின் கூடாரமாக்கிவிடுகிறார்கள்.

ஊடகங்கள் காட்டும் கல்லூரி வாழ்க்கை பெரும்பாலும் நாடகங்களாகவே ஆகிவிடும். காதல், கிண்டல், கலாட்டா, சண்டை இவைகளை மட்டும் தானே சினிமா படம் பிடிக்கிறது. இவற்றைத் தாண்டிய கல்வி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, திறமை என ஏகப்பட்ட விஷயங்கள் இந்த வகுப்பறைகளுக்குள் இருக்கின்றன. 

கல்லூரிக்குச் செல்கிறீர்களெனில் முதலில் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. “இந்தியாவில் பல கோடி மக்களுக்குக் கிடைக்காத அருமையான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதுஎனும் எண்ணம் தான் அது. இந்த எண்ணம் மனதில் இருந்தால் ஏனோ தானோ எனும் சிந்தனைகளுக்கு முதலிலேயே ஒரு முட்டுக் கட்டை போட முடியும். கிடைத்திருக்கும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் எனும் உந்துதலும் கிடைக்கும். 

கல்லூரியில் சேர்ந்திருப்பது கல்லூரியைக் கட் அடித்து ஊதாரித் தனமாய் திரிவதற்கல்ல என்பது உங்களுக்கே தெரியும். வேறு வேலையில்லாமலோ, வெறுமனே பொழுதைப் போக்கவோ நீங்கள் கல்லூரிக்குள் வரவில்லை என்பதில் உங்களுக்குத் தெளிவு இருக்கும். எனவே அதைப்பற்றி நான் தனியே சொல்லத் தேவையில்லை.

அதிகாலையில் எழுந்து ஒரு வரி விடாமல் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து தேர்வு அறையில் ஜெராக்ஸ் எடுக்கும் காலம் பள்ளிக்கூடத்தோடு போய் விட்டது. கல்லூரிக் காலம் கொடுப்பதைப் படிப்பதல்ல, படிப்பதைத் தேடிப் பிடிப்பது. முன்பெல்லாம் கல்லூரி மாணவர்கள் அரசு நூலகங்களின் தூசுகளுக்கிடையே தும்மித் தும்மித் தான் தகவல்களைத் தேடினார்கள். எலியைப் பிடிக்க மலையைப் புரட்டும் கடினம் அதில் இருந்தது.

இன்றைய யுகம் மாணவர்களின் வேலையை மிக மிக எளிதாக்கியிருக்கிறது. இணையம் எனும் கடலிலிருந்து ஒரு மௌஸ் கிளிக் மூலம் கப்பல் நிறைய தகவல் மீன்களை அள்ளி எடுக்க முடியும். உலகின் பல்வேறு மூலைகளிலுமுள்ள அறிஞர்களின் சிந்தனைகளை ஏசி அறையில் இருந்து கொண்டே அறிந்து கொள்ளவும் முடியும். இந்த வாய்ப்பு இந்தத்  தலைமுறையின் கரத்தில் இருக்கும் வரம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்கள் இன்னொரு வரப்பிரசாதம். ஆர்குட், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் நட்புக் கைக்குலுக்கலுக்கே பயன்படுகிறது. அதே தளங்களை ஆர்வமுடையவர்கள் கல்வியைச் செழுமைப்படுத்தவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேள்வி கேட்டு உடனுக்குடன் பதில் பெறும் முறையை பல்வேறு கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் டுவிட்டர் மூலம் மேற்கொள்கிறார்கள்.

கல்வியறிவு பெற்ற ஒருவர், தான் சார்ந்த சமூகத்துக்குப் பயனுள்ள நபராக இருக்க வேண்டியது அவசியம். அதற்கான சமூகக் குழுக்களில் தயங்காமல் இணையுங்கள். கல்லூரிக்கு உள்ளே கவின்கலை மன்றம், அறிவியல் குழுக்கள், என்.சி.சி என ஏகப்பட்ட வாய்ப்புகள் அணிவகுக்கும். குழுக்களில் இணைந்து பணியாற்றுவது நாளை அலுவலகங்களிலும், சமூகத்திலும், குடும்பங்களிலும் கலந்து வாழும் பக்குவத்தைப் பயிற்றுவிக்கும்.

குழுக்களில் இணையும்போது ஒரு சின்ன எச்சரிக்கை மணியை மனதில் கட்டி வையுங்கள். சாதி, மதம், மொழி, இனம் என பிரிவினையை ஊக்குவிக்கும் எந்தக் குழுவிலும் இணையாதீர்கள். அப்படிப்பட்ட தேவையற்ற செயல்களில் ஈடுபடும் நேரத்தை அலுவலக நூலகங்களிலோ, ஆசிரியர்களுடன் உரையாடுவதிலோ செலவிடுங்கள். 

கனியிருக்கக் காய் கவர்ந்தற்றுஎன்பது கல்லூரி வாழ்க்கைக்குச் சாலப் பொருந்தும். எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் மது, மாது, பாலியல் என தவறானவற்றையே பெரும்பாலான சினிமாக்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன. அத்தகைய பிழைகளில் விழுந்தால் எதிர்காலம் பிழையாகிப் போகும் என்பது உறக்கத்திலும் உங்களுக்குத் தெரிந்தே இருக்கட்டும்.

எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் எனும் இலட்சியம் உங்களிடம் இருக்கும். அதை நோக்கிய பயணத்தைக் கல்லூரிக் காலத்திலேயே துவங்குங்கள். படிப்பில் கவனம் செலுத்துவது முதல், தகவல்களைச் சேமிப்பது வரை உங்கள் கவனம் இலட்சியம் சார்ந்து இருப்பது சிறப்பு. 

பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் இணையுங்கள். கல்லூரிக் காலத்திலேயே நீங்கள் உங்கள் கூச்ச சுபாவத்துக்குக் கொள்ளி வைத்தால் எதிர்காலத்தில் இண்டர்வியூ, குழு உரையாடல் போன்றவற்றில் வெற்றிக் கொடி கட்ட உங்களுக்கு ரொம்பவே வசதியாய் இருக்கும். 

தாழ்வு மனப்பான்மைகளில் மாணவர்கள் தடுக்கி விழும் காலம் கல்லூரிக் காலம் என்கின்றன புள்ளி விவரங்கள். பெரும்பாலும் படிப்பு குறித்த கவலையோ, பிற மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் மீதான கருத்து வேறுபாடோ, காதல் நினைவுகளோ இத்தகைய மனநிலைக்கு மாணவர்களை இட்டுச் செல்வதுண்டு. அத்தகைய மன அழுத்தங்களை பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ விவாதித்து மனதைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம்.

கல்லூரிக் காலத்தில் மாணவர்கள் கவனிக்காமல் விட்டு விடும் முக்கியமான ஒரு விஷயம் உடல்நலம். கண்டதையும் தின்பது, கெட்ட பழக்கங்களில் விழுவது, இரவு தூங்காமல் நீண்டநேரம் விழித்திருப்பது என பலருக்கும் உடல்நலம் குறித்த கவலையே இருக்காது. அது பிற்காலத்தில் பிரச்சினையை உண்டாக்கிவிடும். உடற்பயிற்சி, சரியான உணவு, உறக்கம் இவையெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

காலையில் அலறி அடித்து எழும்பி, பிரேக் பாஸ்ட் சாப்பிடாமல் காலேஜ் ஓடுவது காலேஜ் பசங்களுக்கே உரிய ஒரு கெட்ட பழக்கம். ரொம்பநேரம் படுக்கையில் புரண்டு சோம்பலில் புரளாமல் காலையில் எழும்பி ஒரு சின்ன உடற்பயிற்சியோடு தினத்தை ஆரம்பித்துப் பாருங்கள். உங்கள் உடலில் குடிகொள்ளும் உற்சாகம் மனதையும் இளசாக்கி வைக்கும்.

எதையும் அசட்டுத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் காலம் கல்லூரிக் காலம். தினவெடுத்த தோள்களும், உரம்படைத்த மனமும் வாய்க்கும் காலமும் கல்லூரிக் காலம் தான். இந்தக் காலத்தில் வம்புகளில் போய் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்.

இரவில் அலைந்து திரிவது, கல்லூரி விதிமுறைகளை கொஞ்சம் மீறிப் பார்ப்பது போன்றவையெல்லாம் உங்களை ஆயுள் கால தவிப்பில் விட்டு விடக் கூடும் என்பதை மறக்காதீர்கள். நண்பர்கள் வற்புறுத்துகிறார்களே என்பதற்காக உங்களுக்கு விருப்பமில்லாத எந்த செயலையும் செய்யாதீர்கள். தேவைப்படும்போது தயங்காமல் ஆசிரியர் உதவியை நாடுங்கள்.

பாட புத்தகங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதைத் தாண்டி, மனிதர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் கல்லூரிக் காலம் உதவும். கல்லூரிக் காலம் உங்களுக்கு ஏகப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கும். எனவே நீங்கள் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். 

படிப்பில் ஆர்வமுடைய நண்பர்களைக் கொண்டிருங்கள். இணைந்து படிப்பது கல்வியின் ஆழத்தை அதிகரிக்கும். குறிப்புகள் எடுத்துப் படிப்பது, வகுப்பறையில் கவனமாய் இருப்பது போன்ற அடிப்படை விஷயங்கள் எப்போதும் மனதில் இருக்கட்டும். எடுத்த குறிப்புகளைக் குப்பை போல சேர்த்து வைக்காமல் கணினியில் சேமித்து வைப்பது ரொம்பவே பயன் தரும்.

மிக முக்கியமான ஒரு விஷயம், வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பாகங்கள் என்பதை உணருங்கள். வெற்றிகளை தாழ்மையுடனும், தோல்விகளை இயல்பாகவும் ஏற்றுக் கொள்ளப் பழகினால் தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்கலாம்.

கல்லூரியில் பிள்ளைகளை அனுப்பி வைத்தவுடன் தனது கடமை முடிந்து போய்விட்டது போல ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் பெற்றோர் பலர் உண்டு. கல்லூரியில் பிள்ளைகள் என்ன பாடம் எடுத்திருக்கிறார்கள், அவர்களுடைய ஆசிரியர்கள் யார், வகுப்பறை எங்கே இருக்கிறது, என எதையுமே அவர்கள் அறிந்திருப்பதில்லை. பெற்றோர் இந்த விஷயத்தில் மாணவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும்.

பிள்ளைகள் என்னென்ன குழுக்களில் இணைந்திருக்கிறார்கள், அவர்களுடைய கல்லூரி வருகை எப்படி இருக்கிறது, அவர்களுடைய நண்பர்கள் யார் எனும் சில விவரங்களை அறிந்து வைத்திருங்கள். அதே நேரம் பிள்ளைகள் சுயமாக முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துங்கள்.  பள்ளிக்கூடக் காலத்துக்கும், கல்லூரிக் காலத்துக்குமிடையே மாணவர்களுடைய செயல்பாடுகளில் வேறுபாடுகள் தெரியும். பெற்றோர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். குய்யோ முய்யோ என கத்தி நிலமையை விபரீதப்படுத்தாமல், சில நெறிப்படுத்தும் வழிகாட்டல்களோடு தங்கள் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கல்லூரி என்பது அறிவின் நீரூற்று ! மாணவர்கள் அந்த அறிவைப் பருக வந்திருக்கும் பறவைகள். எனவே கல்லூரிக் காலத்தை வீணாக்காமல் அறிவையும் நல்ல பண்புகளையும் பெற்றுக் கொள்வதில் நீங்கள் உங்கள் நேரத்தைச் செலவிட்டால் வாழ்க்கை உங்களை வசந்தச் சிறகுகளோடு வரவேற்கும்.

அறிவுச் சிறகு விரியட்டும்

வானம் கண்ணில் தெரியட்டும்.


சிறுவர் பேச்சுப் போட்டி :நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்

$
0
0

நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்

வற்றாத வளம் தன்னை
முற்றாகத் தருகின்ற
உற்ற துணையாம் இயற்கையே போற்றி.

தீராத வரம் தன்னை
ஆறாகத் தருகின்ற
மாறாத அருளாளன் இறையே போற்றி

அனைவருக்கும் என் அன்பின் வணக்கங்கள்.

நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள் குறித்து உங்களோடு ஒரு சில வார்த்தைகள் பேசலாம் என நினைக்கிறேன்.

‘தூணிலும் துரும்பிலும் இருப்பவன் இறைவன்’ என என் அப்பா அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் இன்றைக்குப் பார்த்தால், தூணிலும் துரும்பிலும் இருப்பது நெகிழி தான் என்று சொல்லத் தோன்றுகிறது. சின்ன விஷயம் தானே என நினைத்து நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு சிறு பிளாஸ்டிக் பொருளும் பூமியின் மீது நாம் தூவும் ஒரு துளி விஷம் என்பது தான் உண்மை.

இங்கே வந்தபோது தண்ணீர் குடித்தேன். நெகிழிப் பயன்பாடு. ஒரே ஒரு பாட்டில் தானே என உதாசீனப்படுத்தி விட முடியாது. காரணம், உலக அளவில் ஒவ்வொரு நிமிடமும் விற்கப்படுகின்ற பிளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கை 10 இலட்சம் ! அடுத்த ஆண்டு இது நிமிடத்துக்கு பன்னிரண்டு இலட்சம் என மாறும் என்கிறது ஒரு ஆய்வு. ஒரு ஆண்டுக்கு சுமார் 500 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா ?

நேற்று அப்பாவுடன் கடைக்குச் சென்றபோது ஒரு பொம்மை வாங்கினேன். அதை ஒரு நெகிழிப் பையில் போட்டுக் கொடுத்தார்கள். ஒரு பை தானே என நாம் அலட்சியமாய் இருந்து விட முடியாது. காரணம் உலக அளவில் ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் ! இந்தப் பைகளெல்லாம் பூமியின் மீது போர்த்தப்படுகின்ற சவத் துணிகள் அல்லவா ?.

புள்ளி விவரங்களை அடுக்கிக் கொண்டே போனால் நேரமாகிவிடும். எனினும் கடந்த அரை நூற்றாண்டுகளில் நாம் சேமித்த பிளாஸ்டிக் குப்பைகளின் எடை சுமார் 9 பில்லியன் டன்கள். அதாவது எட்டு இலட்சம் ஈபில் டவர்களின் எடைக்கு சமமான அளவு குப்பை. இதில் வெறும் ஒன்பது சதவீதம் மட்டுமே மறு சுழற்சிக்குச் செல்கிறது. மற்றதெல்லாம் மண்ணின் மீது அழியாமல் கிடந்து, மண்ணை அழிக்கிறது. தாயாய் நினைக்கின்ற பூமிக்குச் செய்கின்ற அதிகபட்ச துரோகமல்லவா இது !!

வளமான நமது பூமியை, மலடான பூமியாய் மாற்ற இந்த பிளாஸ்டிக் மட்டும் போதும். இந்த பிளாஸ்டிக் ஆயிரம் ஆண்டுகள் வரை அழியாமல் பூமியில் கிடக்கும். அதாவது இப்போது பூமியில் போடுகின்ற பிளாஸ்டிக் கிபி 3020 ம் ஆண்டு வரை அழியாமல் இருக்கும். எவ்வளவு அச்சமூட்டும் விஷயம் இல்லையா ?

பிளாஸ்டிக்கை புதைத்தால் பூமி மாசடைகிறது.
அதை எரித்தால், காற்று மாசடைகிறது.
நீரில் மிதந்து தண்ணீர் மாசடைகிறது !

இந்த மாசு என்பது நம்மையும் நமது ஆரோக்கியத்தையும் மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல. சுமார் 11 இலட்சம் பறவைகளும், உயிரினங்களும் ஆண்டு தோறும் இந்த பிளாஸ்டிக்கினால் உயிரை இழக்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் போது நாம் கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக்கை உட்கொள்கிறோம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இதை மைக்ரோ பிளாஸ்டிக் என்கிறார்கள். இது உடலுக்கு மிகவும் தீமையானது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இன்றைக்கு பல புதிய புதிய நோய்கள் புறப்பட்டு வர ஒரு முக்கியமான காரணம் இந்த நெகிழி தான்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா ! அதை நாமே தான் தீர்மானிக்கிறோம்.

நெகிழியும் ஆபத்தும் ஒற்றை நாணயத்தின் இரட்டைப் பக்கங்கள் போல. பயன்படுத்துவதை நிறுத்துவதே பூமிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

பல நாடுகள் நம்மை அழிக்கும் நெகிழியைத் தடை செய்திருக்கின்றன. நாடுகள் தடை செய்கிறதோ இல்லையோ, நாம் அதை தடை செய்ய வேண்டும்.

கடைகளுக்குச் செல்லும் போது சுமந்து செல்கின்ற துணிப் பைகள், நெகிழிப் பயன்பாட்டை கணிசமாய்க் குறைக்கும் !

வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தினால், நெகிழியின் ஆபத்து கணிசமாய்க் குறையும் !

பிளாஸ்டிக் குடங்களைத் தவிர்த்து மண் குடங்களைப் பயன்படுத்தினால், நெகிழியின் உற்பத்தி கணிசமாய்க் குறையும். !

பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக மாற்று பாட்டில்களில் தண்ணீர் சுமந்து வந்தால், நெகிழியின் வீச்சு கணிசமாய்க் குறையும்.

பிறர் என்ன செய்வார்கள் என்று பார்ப்பதல்ல, நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்பதே சரியான வழிமுறையாகும்.

அழிவின் தோழனாம்
நெகிழியை ஒழிப்போம்.

வாழ்வின் தோழனாம்
இயற்கையைக் காப்போம்

என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி

*

சிறுவர் பேச்சுப் போட்டி : இயற்கை வேளாண்மை

$
0
0

இயற்கை வேளாண்மை

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்

அவையோருக்கு என் அன்பின் வணக்கம்.

குலோத்துங்க சோழ மன்னனின் மணி சூட்டும் விழாவுக்கு வந்திருந்தார் ஔவைப் பாட்டி. வந்திருந்த புலவர்களெல்லாம் பாக்களைப் பாடி மன்னனைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஔவைப் பாட்டியின் முறை வந்தபோது அவர் எழுந்தார். “வரப்புயர…” என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அமர்ந்தார்.

அரசவை அமைதியானது.
எல்லோரும் குழம்பினர்.

ஒற்றை வார்த்தையில்
ஒப்பற்ற மன்னனுக்குப் பாராட்டா ? அதுவும் வாழ்க எனும் வார்த்தை கூட அதில் இல்லையே என திகைத்தனர்.

மன்னர் கேட்டார், புலவரே நீர் சொன்ன வார்த்தையின் பொருள் என்ன ?

ஔவைப் பாட்டி அழகாய் விளக்கினார். மன்னரே வரப்பு உயர்ந்தால் தான் வயலில் நீர் அதிகம் நிற்கும். அப்படி நின்றால் தான் நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும். அப்படி விளைந்தால் தான் மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள். மக்கள் நலமாக இருந்தால் தான் அது நல்ல ஆட்சி என புகழப்படும். நல்ல ஆட்சி என புகழப்படுவது தான் ஒரு மன்னனுக்கு மிகப்பெரிய பாராட்டு என்றார் ஔவை. அவை மகிழ்ச்சியில் நிறைந்தது. இதைவிடப் பெரிய புகழ்ச்சி இல்லையென மன்னனும் நெகிழ்ந்தான்.

வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. அது கம்பீரமாக இருக்கும் போத் தான் ஒரு நாடு நிமிர்ந்து நிற்கும். இன்றைக்கு வேளாண்மையின் பயனை பலரும் உணரவில்லை. பலரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே பெரிது என தப்புக் கணக்கு போடுகின்றனர். உழவு இல்லையேல் வாழ்வு இல்லை. உழவு இல்லையேல் உயர்வு இல்லை.

அந்த வேளாண்மையும் நமது முன்னோர்கள் காட்டிய வழியில் இயற்கையாய், இயற்கையினால் அமையும் போது தான் உடலுக்கும், சுற்றுப் புறத்துக்கும் பயனுள்ளதாக மாறுகிறது.

விரைவாய் விளைச்சல் வேண்டுமென்றும், அதிக விளைச்சல் வேண்டுமென்றும் பேராசைப்படும் மனித இனம், செயற்கை உரங்களைக் கொண்டு விளைச்சலை உருவாக்குகிறது. இது தானியங்களின் தரத்தைப் பாதிக்கிறது. நிலத்தின் வளத்தை அழிக்கிறது. உண்பவர்களின் நலத்தைக் கெடுக்கிறது. மொத்தத்தில் மனுக்குலத்துக்கே ஆபத்தாய் மாறுகிறது.

இயற்கைக்குத் திரும்புவோம்.

மண்புழு என்பது மண்ணின் தோழன்,
செயற்கை உரத்தால் அதை சாகடிக்காதிருப்போம்.

மரபு விதைகள் நமது உழவு விதைகள்.
அதை கலப்பின விதைகளால் அழிக்காதிருப்போம்.

சாகுபடி விதிகள் நம் முன்னோரின் மொழிகள்.
அதை நவீனத்தின் கதைகளால் மறக்காதிருப்போம்.

கால்நடைக் கழிவுகள் வளத்தின் தோழர்கள்
மேனாட்டு விஷத்தால் அதை விரட்டாதிருப்போம்

உழவன் என்பவன் உலகத்தின் மையம்
வறுமையால் அவனைக் கொல்லாதிருப்போம்.

இயற்கைக்குத் திரும்புவோம், வாழ்க்கை வளம் பெறும்.
உழவினை விரும்புவோம், மனுக்குலம் நலம் பெறும்

உழவை விட்டுவிட்டு எதையும் வாழ்வில் சிந்திப்பது அறிவீனம். எனவே தான் வள்ளுவர் சொன்னார்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !

உழவினை மதிப்போம், உழவனை மதிப்போம் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

*

தன்னம்பிக்கை : குறை சொல்தல் வேண்டாமே !

$
0
0

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட தங்கதேசத்தில் வாழ நேர்ந்தால் கூட, “சேஎங்கே பாத்தாலும் மஞ்சளா இருக்கேஎன குறை சொல்லும் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் லார்ட் ஜெஃப்ரி. குறை சொல்தல் சர்வதேசக் கெட்ட குணம். 

சிலர் மனிதர்களைக் குறி வைத்து குறை சொல்வார்கள். சிலர் மனிதர்கள் என்றில்லை, விலங்குகள், தெய்வங்கள், அஃறிணைப் பொருட்கள் என எல்லாவற்றையும் குறை சொல்வார்கள். இதொன்றும் இன்று நேற்று தோன்றிய சமாச்சாரமல்ல. ஆதி மனிதன் ஆதாமே பழத்தைச் சாப்பிட்டு விட்டுநீர் தந்த இந்த ஏவாள் தான் பழத்தைக் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்என்று தானே கடவுளிடம் சொன்னார் !

நம்முடைய ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். காலையில் எழும்பி அலுவலகத்துக்குப் புறப்படும் அந்த சின்ன இடைவெளியிலேயே குற்றம் சொல்ல ஆரம்பிக்கிறோம். பின் அலுவலகம், போகும் வழி, வரும் வழி என எல்லா இடங்களிலும் அந்த குறை சொல்தல் தொடர்கதையாகிறது.  

குறை சொல்வதால் மனதுக்கு ஒரு இனம்புரியாத திருப்தி கிடைக்கிறது. அதனால் தான் பலரும் குறை சொல்கிறார்கள்என்கிறது உளவியல். குறை  சொல்லுதல் மனதுக்கு தற்காலிகமான ஒரு இளைப்பாறுதலைத் தருகிறது. அதே வேளையில் பலரைக் காயப்படுத்துகிறது. 

எதையாவது அடைய வேண்டுமென முயல்கிறோம். தொடர்ந்து அதை நோக்கிப் பயணிக்கிறோம். ஆனால் முடியவில்லை. நமது இயலாமையை ஒப்புக்கொள்ள நமது ஈகோ இடம் கொடுக்காது. சட்டென பழியைத் தூக்கி இன்னொருத்தன் தலையிலே போட்டு விட்டால் வேலை முடிந்தது ! அப்படிச் சொல்வதால் உண்மையான தோல்வியின் காரணங்கள் பிடிபடுவதே இல்லை. தோல்விக்கான காரணமே தெரியாவிடில் வெற்றிக்கான பாதையை எப்படித் தேர்வு செய்வது ?

குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு !  அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.

பிடிக்காதவர்கள் மீது தான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப்படுகிறது.  உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்என்று யாரும் சொல்வதில்லை. அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள் தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும். தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.

குறை சொல்தல் பயத்தின் வேர்களிலிருந்தும் முளைப்பதுண்டு. குறிப்பாக அலுவலக சூழல்களில் தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் , தங்களுடைய புரமோஷன், வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் அடுத்தவர்களை அழிக்கும் விமர்சனங்கள் எழுவதுண்டு. 

நம்முடைய பொறுப்புகளை விட்டுத் தட்டிக் கழிக்க விரும்பும் போதும் முன்னே வருவது இந்தக் குறை சொல்தலும், சாக்குப் போக்கும் தான். “வயிறு வலிக்குதுநான் ஸ்கூலுக்குப் போகலஎன சிணுங்கும் சின்ன வயதுப் பையன் ஞாபகத்துக்கு வருகிறானா ? 

ஈகோ எனும் ஆலமரத்தின் கிளைகள் இந்தக் குறை எனும் விழுதுகள். ஈகோ இருக்கும் மனிதர்கள் மனிதர்கள் பிறரிடமுள்ள குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்துத் திரிவார்கள். இல்லாததை இருப்பது போலச் சோடித்து மகிழ்வார்கள். ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டுப் போய்விடும்.

பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவும் சிலர் குற்றம் குறைகளை அள்ளி விடுவதுண்டு. பிறர் தன்னைக் கவனிக்க வேண்டும் எனும் ஆர்வம் அவர்களுக்கு. உளவியல் இதை, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு என்கிறது.

தன்னை புத்திசாலியாய்க் காட்டிக் கொள்ளவும் சிலர் குறை சொல்வதைக் கையில் எடுப்பதுண்டு. அடுத்தவர்களையோ, அவர்களுடைய செயல்களையோ விமர்சித்து, குறை சொல்லும்போது தன் தலைக்கு மேல் ஒரு ஒளி வட்டம் உருவாவது போல் கர்வம் அவர்களுக்குள் நுழையும்.

இப்படி குறை சொல்வது நமது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருக்கிறது. ஒரு டிராபிக் சிக்னலில் கூட குறை சொல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. ஹோட்டலில் வெயிட்டர் பத்து நிமிடங்கள் நமது டேபிளுக்கு வரவில்லையேல் குறையும், குற்றமும் சொல்ல வாய் துறுதுறுக்கிறது. 

வாய்ப்பு வந்து வாசல்க்கதவைத் தட்டும்போது கூட சத்தமா இருக்கே என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஆஸ்கர் வைல்ட். 

குறை சொல்வது நமது வளர்ச்சியை நாமே குழி தோண்டிப் புதைக்கும் செயல். குறை சொல்வதை விட்டு வெளியே வரவேண்டுமெனில் முதலில் நாம் குறை சொல்லும் பார்ட்டிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கேளுங்கள் நீங்கள் குறை சொல்லும் பார்ட்டியா என உண்மையான பதில் கிடைக்கும். இல்லையேல் நெருங்கிய நண்பர்களிடம் கேளுங்கள்.

குறை சொல்வது உங்களுக்கு எந்த நன்மையையும் தந்து விடப் போவதில்லை. இந்தப் பழக்கத்தால் என்ன நன்மை ஏற்பட்டது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும்உங்களுடைய நேரமும், உங்கள் நண்பர்களுடைய நேரமும் வெட்டியாய் செலவானது தானே மிச்சம் ? 

உங்களை யாராவது குறை சொன்னாலோ, நேர்மையற்று விமர்சித்தாலோ நீங்கள் அதைக் கைதட்டி ரசிப்பீர்களா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இல்லை என்பது தானே உங்கள் பதில் ?. அதே மனநிலைதான் உங்களால் கிண்டலடிக்கப்படும் நபருக்கும் இருக்கும் என்பதை உணருங்கள்.  

பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் குறை சொல்தல் விலகிவிடும்.   பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டுமெனில் முதலில் நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே முதலில் உங்களை உங்கள் இயல்புகளோடே ஏற்றுக் கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொண்டிருங்கள்.

குறை சொல்தல் உறவுகளிடையேயான பிணைப்பை உடைத்து விடும். பல விவாகரத்துகளுக்கே இந்தக் குறை சொல்தல் காரணமாகி விடுகிறது. அன்பு உருவாகும் இடத்தில் குறை சொல்வது இருப்பதில்லை. ஆத்மார்த்தமான அன்பை உள்ளத்தில் தேக்குங்கள் அடுத்தவர்களைக் குறை சொல்லும் பழக்கம் ஓடியே போய்விடும். 

குறையைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்த குறைகளைப் போக்கும் வழியைப் பற்றிச் சிந்திக்க மறந்து போய் விடுகிறார்கள். இருட்டைப் பற்றியே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தும் வழியைப் பாருங்கள் என்கிறார் கன்ஃபூஷியஸ்.

இருப்பதை வைத்து மகிழ்வாக வாழும் மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் குறை சொல்வதில்லை. அவர்கள் மகிழ்வாக வாழும் வழியை யோசிப்பார்கள். எதைத் தேடுகிறோமோ அதுமட்டுமே நமக்குக் கிடைக்கும் !

கடின உழைப்பாளிகள் குறை சொல்வதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதில்லை.  சோம்பேறிகள், கடின உழைப்பைத் தவிர்ப்பதற்காக குறை சொல்லும் பாணியைக் கையாள்கிறார்கள். குறை சொல்வது எதிர்மறை சக்தி. அதன் விளைவுகள் எதிர்மறையாகவே இருக்கும். தான் சரி என நிரூபிக்க மற்றவை எல்லாம் தவறு என மதிப்பிடும் மனநிலை மனதின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிரி.

குறை சொல்வதிலிருந்து வெளியே வர விரும்பினால் பாராட்டப் பழகுங்கள். ஒரு நாளைக்கு ஐந்து பேரையாவது பாராட்டுவேன் என முடிவெடுங்கள். ஒரு நபரிடமிருக்கும் குறைகளைத் தாண்டி நிறைகளைக் கண்டு பிடிப்பீர்கள்.  

அதே போல, குறை சொல்லும் நண்பர் கூட்டத்திலிருந்து வெளியே வாருங்கள். குறைந்த பட்சம் குறை சொல்லும் பேச்சை ஆதரிக்காமல் இருங்கள். குறை சொல்வது உங்களுக்குப் பிடிக்காது என்பது உங்கள் நண்பர்களுக்குப் புரிந்து விடும். அது உங்களுக்கு மரியாதையையும் பெற்றுத் தரும்.

எதையும் மாற்ற முடியாது என்று தெரிந்தால் கூடஎன்னய்யா வெயில் மண்டையைப் பொளக்குது, என்னய்யா மழை படுத்துது, இதென்ன ஒரே தூசு மண்டலமா இருக்கு  என எடுத்ததுக்கெல்லாம் சலித்துக் கொள்ளும் மனிதர்கள் வாழ்வின் ஆனந்த தருணங்களை இழந்து விடுகிறார்கள்.

இன்றிலிருந்து ஒரு மாதம் குறையே சொல்ல மாட்டேன், நல்ல விஷயங்களைப் பாராட்டுவேன் என முடிவெடுத்துப் பாருங்கள். இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் உங்களுடைய அடிப்படை இயல்பே மாறிவிடும். ஒரு வேளை தோற்று விட்டால், அந்த நாளிலிருந்து அடுத்த ஒரு மாதம் முயற்சி பண்ணுங்கள். ! 

குற்றம் சொல்வதை நீங்கள் நிறுத்தும் வினாடியில் உலகம் உங்கள் கண்ணுக்கு முன்பாக அழகாகத் தெரியும். உங்கள் உறவுகள் அழகாகத் தெரிவார்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை ஆனந்தமானவையாக மாறும். செடியில் இருக்கும் முட்களைத் தாண்டி, முட்களிடையே இருக்கும் ரோஜா கண்களில் தெரியும்.  வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்.

குறைகள் சொல்தல் இழிவாகும்

உயர்வும் இதனால் அழிவாகும்

தன்னம்பிக்கை : நேரமே கிடைக்கலீங்க

$
0
0

சுத்தமா நேரமே இல்லீங்க..” எனும் வாக்கியத்தைப் பேசாமலோ, கேட்காமலோ ஏதாவது நாள் முடிந்திருக்கிறதா ? நேரம் போதவில்லை எனும் குற்றச்சாட்டு எல்லோரிடமும் இருக்கிறது. எல்லோரும், எப்போதும் எதையோ செய்து கொண்டே இருக்கிறார்கள். கடைகள் நள்ளிரவு தாண்டியும் விழித்திருக்கின்றன. வீடுகளில் விளக்குகள் ஜாமங்கள் கடந்தும் கூட அணைக்கப்படாமல் இருக்கின்றன. சூரியனுக்கு முன்பே சாலைகளில் மக்கள் வந்து விடுகிறார்கள். 

மக்கள் ரொம்பவே பிஸி. எவ்வளவு தாங்கன் பிஸியாய் இருந்தாலும் கடைசியில்நேரம் கிடைக்கலஎனும் புராணம் தான். “நேரம் பறந்து தான் போகும். ஆனால் அதை ஓட்டற பைலட் நீங்க தான்என்கிறார் மைக்கேல் ஆட்ஷர்.

கொஞ்சம் உங்களோட வாழ்க்கையைக் கொஞ்சம் ரிவைண்ட் செய்து பாருங்களேன். உங்களுடைய நேரமெல்லாம் எப்படிப் போகிறது ? ஒரு வேலை முடிந்த அதே இடத்தில் அடுத்த வேலை பிள்ளையார் சுழி போடுகிறது. நிம்மதியாய் ஒரு காபி குடிக்க முடிவதில்லை, அப்போதும் அடுத்த வேலை குறித்த நினைவுகள் தான். வார இறுதி வந்தால் வீட்டிற்காய் செய்ய வேண்டிய ஆயிரத்தெட்டு வேலைகள் வரிசையாய்க் காத்திருக்கும். 

ஆனால் சிலரைப் பாருங்கள். பெரிய பெரிய பதவியில் இருப்பார்கள். வார இறுதியில் ஹாயாக குடும்பத்தோடு பீச் போவார்கள். காலையில் நாயையும் கூட்டிக் கொண்டு ஜாகிங் போவார்கள். அவர்களுக்கும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. ஆனால் அவர்களால் எல்லாவற்றையும் சமாளித்து எப்படி ஜாலியாகச் சுற்ற முடிகிறது ?. அதைப்பற்றிப் பேசுவதைத் தான்  டைம் மேனேஜ்மெண்ட் என்கிறார்கள். நேர மேலாண்மை என்று தமிழில் அழைக்கப்படும் இந்த விஷயம் சரியான வேலையை, சரியான நேரத்தில் செய்து முடிக்க வழிகாட்டுகிறது. அதில் முக்கியமான சில தகவல்களைப் பார்ப்போம்.

எவ்வளவுதான் ஓடியாடி வேலை செய்தாலும் கடைசியிலஅடடாஇந்த வேலையைச் செய்யாம விட்டோமே. அதைச் செஞ்ச நேரத்துல நான் இதைச் செய்திருக்கலாம்எனும் ஒரு ஏமாற்றம் ஏற்படுவது இயல்பு. இதைச் சரி செய்யசெய்ய வேண்டிய பணிகளின் லிஸ்ட்ஒன்றைத் தயாராக்க வேண்டும். அடுத்த நாளைக்கான பணிகளின் பட்டியலை முந்தின நாள் இரவிலேயே தயாராக்கி வைப்பது நல்லது. 

இப்போ அந்தப் பட்டியலிலுள்ள விஷயங்களை வரிசைப்படுத்த வேண்டும். எது அவசரமான வேலை, எது அவசியமான வேலை, எது முக்கியமற்ற வேலை என அந்த பட்டியல் இருக்க வேண்டும். கடைசி இடம் முக்கியமற்ற வேலைகளுக்கு. அதையும் முடித்தபின், பட்டியலிலுள்ள விஷயங்களையெல்லாம்சின்னச் சின்னசெயல்களாக மாற்றி எழுத முயலுங்கள். ஒவ்வொரு சின்னச் சின்ன வேலையும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வருவதாக இருந்தால் நல்லது. “ஐயாவுக்கு ஞாபக சக்தி கெட்டிஎன பந்தா விடாமல், இந்த விஷயங்களையெல்லாம் ஒரு பேப்பரில் எழுதிப் பழகினால், நீங்கள் டைம் மேனேஜ்மெண்டின் முக்கியமான ஒரு விஷயத்தைக் கற்றுத் தேர்ந்தாகிவிட்டது என்று பொருள். 

ஒரு வேலையைச் செய்யும் போது, ஒரு வேலையை மட்டும் செய்ய வேண்டும். நாம் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போதே மெயில் வாசிப்போம், இணையத்தில் உரையாடுவோம், ஃபேஸ் புக்கில் புரள்வோம்,  விரலில் எஸ்.எம்.எஸ் இருக்கும், காதில் போன் இருக்கும், மனதில் சிந்தனைகள் இருக்கும். இப்படி, ஒரு வேலை செய்வதாக நாம் சொல்லிக் கொள்ளும் நேரத்தின் பெரும்பகுதியை மற்ற சில்லறை வேலைகளே பிடுங்கிக் தின்னும். இதை விட்டு விட்டு, ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலையை மட்டும் செய்தால் உண்மையிலேயே வேலை சீக்கிரம் முடியும், சரியாகவும் முடியும்.  

சில வேலைகளைத் தூக்கி ஓரமாகவே போட்டு வைப்போம். அது ஒரு பெரிய தலைவலியாக மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகளை சின்னச் சின்ன பாகங்களாகப் பிரித்து அதில் ஒரு பாகத்தை முதலில் செய்ய ஆரம்பியுங்கள். அது உங்களை ரொம்பவே ரிலாக்ஸாக வைக்கும்.

யார் என்ன வேலை கொடுத்தாலும் சரிங்கையா.. என தலையாட்டிக் கொண்டே வாங்கிக் குவிக்காதீர்கள். உங்கள் நேரமெல்லாம் புதை குழியில் போய் விடும். உங்களுக்கு நேரமில்லையேல்சாரி டைம் இல்லைஎன சிம்பிளாக மறுத்து விடுவது உசிதம்.

அதேபோல செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதும் ஆபத்தானது. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்தால் இரண்டுமே உங்களைக் கவிழ்த்து விட வாய்ப்பு உண்டு. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது பெரும்பாலும் நேர விரயத்தில் தான் முடியும் என்கின்றன ஆராய்ச்சிகள்.

உக்காந்தா சீட்டை விட்டு எழும்பவே மாட்டான்என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். அதெல்லாம் டேஞ்சர். வேலைக்கு நடுவே இடையிடையே ஓய்வு எடுப்பது வேலையில் சுறுசுறுப்பையும், கவனத்தையும், தெளிவையும் தரும் என்கின்றனர் உளவியலார் 

எல்லா நேரத்திலும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. காலையில் உங்களுக்கு உற்சாகமாய் இருக்கும் நேரத்தில் முக்கியமான வேலைகளைச் செய்யுங்கள். மூணு மணிக்கு தூக்கம் வரும். அந்த நேரத்தில் அங்கும் இங்கும் நடந்து செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யுங்கள். இது உங்களுடைய எனர்ஜிக்கேற்ப உங்களை இயக்கும்.

நீங்கள் தாமதமாகலாம். ஆனால் டைம் எப்பவுமே கரெக்டான நேரத்துக்கு வந்து விடும்என்கிறார் பெஞ்சமின் பிராங்கிளின். ஒரு வேலையைத் திட்டமிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு டைம் லிமிட் செட் பண்ணிக்கொள்ளுங்கள். “வாசிப்புன்னு ஒரு செயல் இருந்தால் அதற்கு ஒன்றோ, இரண்டோ மணி நேரம் என உங்களுடைய வசதிப்படி நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு வேலையையும் இவ்வளவு நேரத்தில் செய்து முடிப்பேன் என ஒரு எல்லை உருவாக்கி அந்த நேரத்துக்குள் அந்த வேலையை செய்து முடியுங்கள். 

எப்போதுமே பிஸி பிஸி என சொல்லிக் கொண்டிருக்கும் நபர்களுடைய வேலைகளைக் கொஞ்சம் கவனமாய்ப் பாருங்கள். அரட்டை, சினிமா, பாட்டு, போன், மெயில் என ஏகப்பட்ட நேரத்தை தேவையில்லாமல் அழித்துக் கொண்டிருப்பார்கள். நம்மிடம் இருப்பது ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் மட்டுமே. செலவிடாத நிமிடங்கள் சேமிக்கப்படும் நிமிடங்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

எல்லாத்தையும் நான் தான் செய்யணும்என சர்வத்தையும் தன் தலையில் அள்ளிப் போடுவது சிலருடைய பழக்கம். அடுத்தவர்களிடம் வேலை வாங்குவது ஒரு கலை. அதைக் கற்றுக் கொள்ளுங்கள். யாரிடம் என்ன வேலை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுங்கள். கொடுத்தபின் அது அவர்களுடைய வேலையாகிவிடும். அதில் போய் மூக்கை நுழைத்து நேரத்தை அழிக்காதீர்கள்.

காத்திருக்கும் நேரம் சுத்த வேஸ்ட் என்பது தான் பலருடைய எண்ணம். திட்டமிட்டால் அந்த நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட முடியும். ஒரு ரிப்போர்ட் வாசிக்க வேண்டியிருக்கலாம், ஐடியாக்கள் கண்டு பிடிக்க வேண்டியிருக்கலாம், கணக்கு போட வேண்டியிருக்கலாம். இப்படிப்பட்ட வேலைகளை வெயிட்டிங் டைமில் அமைத்துக் கொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். “அடடா.. ஒரு மணி நேர வெயிட்டிங்கா, ஒரு பேப்பரும் பேனாவும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு கடைசி கட்டத்துல  யோசிக்காதீங்க !

நாம எதையும் ஒழுங்கு படுத்தி வைக்காததால் நிறைய நேரம் வீணாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள். அலுவலகத்தில் ஒரு தகவலாகலாம், வீட்டில ஒரு பொருளாகலாம். எங்கே வெச்சேன்னு தெரியாம குப்பையைக் கிளறுவதில் எக்கச்சக்க நேரம் கரைஞ்சு போகுதாம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடம் உண்டு. அது அங்கங்கே இருந்தால் நேரம் ரொம்ப மிச்சமாகும் என்பது சிம்பிள் அட்வைஸ்.

எல்லாத்துலயும் பெர்பெக்டா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பது நமக்கு தேவையற்ற டென்ஷனைத் தான் தரும். சிலர் ஷூவுக்கு பாலீஷ் போடவே ஒரு மணி நேரம் எடுத்துப்பாங்க. அப்படியே அது தேவையான்னு யோசிங்க. அந்த வேலையை அஞ்சு நிமிஷத்துல முடிச்சா உங்களுக்கு எவ்ளோ நேரம் கிடைக்கும் ! அதுல என்னென்ன வேலைகள் செய்யலாம்ன்னு யோசிங்க. குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்தால், அப்படியே உங்கள் கையை வளைத்து உங்கள் முதுகைத் தட்டிக் கொடுங்கள். அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்து, தேனீர் அருந்தி அந்த இடைவேளையைக் கொண்டாடுங்கள். 

கடைசியாக முக்கியமான ஒரு விஷயம். வேலைகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி வரிசையா செய்யும்போ உங்களோட வாழ்க்கையை மறந்துடாதீங்க. ஓய்வு, உணவு, உடற்பயிற்சி, குடும்பத்தோடு செலவிடும் நேரம், தூக்கம் எல்லாம் நிறைவா இருக்கட்டும்.

மணித்துளி என்பது காலக் கணக்கு

சரியாய் செலவிடு வெற்றிகள் உனக்கு.

தன்னம்பிக்கை : எல்லாரும் இப்படித் தானே பண்றாங்க.  

$
0
0

நீங்கள் பல முறை பார்த்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு போவார் ஒருவர். அவருக்குப் பின்னால் ஆடுகளெல்லாம் ஒரு தாள லயத்தில் நடந்து போகும். முன்னே செல்லும் ஆடுகள் பின்னால் செல்லும் ஆடுகளுக்கு வழிகாட்டும். முன்னால் செல்லும் ஆடுகள் குப்பையில் இறங்கினால் பின்னால் போகும் ஆடுகளும் குப்பையில் இறங்கும். முன்னால் செல்லும் ஆடுகள் ஓடினால் பின்னால் வருபவையும் ஓடும், நின்றால் நிற்கும். முன்னால் செல்லும் ஆடுகள் தான் பின்னால் வரும் ஆடுகளின் போக்கை நிர்ணயிக்கின்றன. இது நம் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். 

இப்போது கொஞ்சம் அமைதியாக நம்முடைய வாழ்க்கையைக் கொஞ்சம் அசைபோட்டுப் பார்ப்போம். நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது. நமது வாழ்க்கையை நாம் தான் நிர்ணயிக்கிறோமா ? இல்லை நமக்கு முன்னால் செல்லும் யாரோ நிர்ணயிக்கிறார்களா ? நிதானமாக யோசித்தால் தெரியவரும் பல விஷயங்கள் நமக்கே வியப்பாக இருக்கும்.

எல்லாரும் சொல்றாங்கஎன்பதனால் தான் எதைப் படிக்க வேண்டும் என முடிவு செய்திருப்போம். எல்லாரும் சொல்கிறார்கள் என்பதனால் தான் எங்கே முதலீடு செய்வது என்பதை முடிவு செய்திருப்போம். நமது வீடு, வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு, இலட்சியம் என பல இடங்களில் முன்னால் செல்லும் மக்களுடைய சுவடுகளைத் தான் நாம் பின்பற்றியிருப்போம். அப்படித் தானே ?  

பெரிய பெரிய விஷயங்கள் என்றில்லை. தினசரி வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களில் கூட இப்படித் தான் நடக்கிறது. அலுவலகத்தில் மீட்டிங் நடக்கும். விவாதிக்கப்படும் விஷயம் நமக்கு சுத்தமாய் உடன்பாடில்லாததாய் இருக்கும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் தலையாட்டினால் நாமும் தலையாட்டுகிறோமா இல்லையா ? 

திடீரென புதிய ஒரு ஃபேஷன் டிரஸ் சந்தைக்கு வரும். பார்த்தால் கண்றாவியாய் இருக்கும். அல்லது கற்காலத்திலேயே தூக்கிப் போட்ட ஒரு பழைய ஃபேஷனின் புதிய வடிவமாய் இருக்கும். உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஒதுக்குவீர்கள். ஆனால் அங்கும் இங்குமாக அந்த ஆடை கொஞ்சம் கொஞ்சமாய்ப் பயன்பாட்டுக்கு வரும். பிடிக்காத ஆடையைக் கூடஇது லேட்டஸ்ட் ஃபேஷன்யாஎன்று பந்தாவுக்காகவேனும் போட ஆரம்பிப்பீர்கள். கொஞ்சநாளிலேயே அப்படி ஒரு ஆடை நம்மிடம் இல்லை என்பது கவுரவக் குறைச்சல் போலத் தோன்ற ஆரம்பித்துவிடும். 

பிடிக்காத ஒரு விஷயத்தை மற்றவர்கள் செய்கிறார்களே என்பதற்காகச் செய்யத் துவங்கிவிடுகிறோம். நாம் என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை இன்னொருவர் நிர்ணயிக்கிறார் என்பது வெட்கத்துக்குரிய விஷயம் இல்லையா ? நம்முடைய தன்னம்பிக்கை என்னாச்சு ? இந்த ஆடை விஷயம் அப்படியே செருப்பு, செல்போன், வாட்ச் என எல்லா விஷயத்திலும் பொருந்திப் போகிறதா இல்லையா ?  

இப்படி குருட்டுத் தனமாய் பிறரைப் பின்பற்றும் போக்கு தான் வியாபாரிகளின் துருப்புச் சீட்டு. கருப்பு கலர் சேலை விற்காமல் தேங்கிப் போனால், “அடுத்த மாதம் கருப்புக் கலர் புடவை அணிவது புருஷனுக்கு நல்லதுஎன ஏதோ ஒரு சிந்தாமணி மூலம் சின்னப் புரளி கிளப்பி விடுவார்கள். மக்களும் கருப்புக்காக கடை கடையாக ஏறி இறங்குவார்கள். “ஏங்கா தெரியாதா.. ? அடுத்தமாசம் கருப்பு கலர் துணி போடலேன்னா, புருஷனுக்கு ஆவாதாம்ல்..” என்று சுற்றியிருக்கும் நாலு வீட்டுக்கும் விஷயத்தைப் பற்ற வைப்பார்கள். 

நான் இப்படியெல்லாம் இல்லேப்பா…”  என்று காலரையோ, துப்பட்டாவையோ தூக்கி விடும் ஜாதி நீங்களென்றால் உங்களுக்கு இதோ ஒரு பூங்கொத்து. காரணம் நீங்கள் உலகின் 5% மைனாரிட்டி குழுவில் இருக்கிறீர்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. உலகின் 95 விழுக்காடு மக்கள் ஆட்டு மந்தைகளாய் தான் இருக்கிறார்களாம். 

எந்த  சூழலில் எப்படி இருக்க வேண்டும் என்பதை மற்றவர்களை வைத்தே முடிவு கட்டுகிறோம். அப்படியில்லாமல் தன்னைத் தானே வழிகாட்டிக் கொள்ள வேண்டுமெனில் ஆழமான தன்னம்பிக்கை வேர்கள் நமக்குள் பதியமிடப் படவேண்டியது அவசியம்.

சாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844ல் பிறந்த இவர் பிரஞ்ச் நாடக உலகையும் திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம்படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் தீரவேயில்லை. அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று ! புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறக்கும் காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் ? அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள். ஆனால் அவர் அசரவில்லை. மரணம் வரை தனது மயக்கும் குரலாலும், நடிப்பாலும் பிரஞ்ச் உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.

கால்களை இழந்தபின் முடங்கிப் போய் மடிந்து போனவர்கள் பல்லாயிரம் பேர் உண்டு. ஆனால் அந்தக் கூட்டத்தில் சேராமல் தனது மனதின் கால்களைக் கொண்டு எழுந்து நின்ற சாரா பென்னட் தான் வரலாற்றில் வந்தமர்கிறார்.

உலகம் எப்போதுமே இப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. 95 சதவீதம் மக்கள் ஆட்டு மந்தைகளாய் இருக்க, 5 சதவீதம் மக்கள் அவர்களை வசப்படுத்துபவர்களாக இருக்கின்றனர் என்கிறார் பேராசிரியர் ஜென்ஸ் கிராஸ். கூட்டம் கூட்டமா பறக்கும் பறவைகளைப் பார்த்திருப்பீர்கள். யார் வழிநடத்துகிறார்கள் என்று கண்டுபிடிப்பதே கஷ்டம். ஆனால் எல்லாமே ஒன்றைப் பின்பற்றி பறந்து கொண்டிருக்கும். 

 எல்லாரும் இதைத் தான் சொல்றாங்க அல்லது செய்றாங்கஎன்பது ஒரு வகையில் நாம் தனித்து விடப் படக் கூடாதே எனும் அச்ச உணர்விலிருந்தும் எழுகிறது. தோல்வியடைந்து விட்டால் கூட நம்முடைய கூட்டத்தில் பலர் இருக்க வேண்டும் என்பதே பலருடைய எண்ணம்.  

அதற்காக மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கவே கூடாது, அறிவுரைகளை  எல்லாம் அழித்து விடவேண்டும் என்பதல்ல. தன்னம்பிக்கை உடைய மனிதராக செயல்பட வேண்டும் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். கூட்டம் சொல்கிறது என்பதற்காக ஒரு விஷயத்தைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும். சின்ன பிள்ளைகளுக்கு நாம் வழக்கமாகச் சொல்லும் அறிவுரையார் கூட சேர வேண்டும், யார் கூடச் சேரக் கூடாதுஎன்பது தான். ஆனால் பெரியவர்களானபின் நாமே அதைக் காற்றில் பறக்க விடுகிறோம் என்பது தான் ஆச்சரியம் !

அப்படி இல்லாமல் இருப்பதில் தான் நம்முடைய சிறப்பு பல வேளைகளில் வெளிப்படுகிறது. ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசினால் ஜான் மில்டன் அவர்களுடையபேரடைஸ் லாஸ்ட்எனும் படைப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பதினேழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு இன்றும் ஆங்கில இலக்கியத்தில் அசையா இடத்தில் இருக்கிறது அந்த நூல். அதை எழுதும்போது மில்டனுக்குப் பார்வையே இல்லை என்பதை அறியும் போது அதிரவைக்கும் வியப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

பேஸ்பால் விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? நம்ம ஊர் கிரிக்கெட் போல அமெரிக்காவில் விளையாடப்படும் ஒரு பிரபலமான விளையாட்டு அது. ஜிம் அபோட் என்றொரு சிறந்த வீரர் 1987 முதல் 1999 வரை சிறப்பாக விளையாடிவந்தார். பல கோப்பைகள், சாதனைகள் செய்து பலரை வியக்க வைத்த இவருக்கு பிறவியிலேயே வலது கை இல்லை ! “சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியும்என மக்களுக்கு உற்சாக உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் இப்போது ! 

சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல. மாற்றுத் திறனாளிகள் கூட கூட்டத்தோடு கோவிந்தா போடவேண்டிய கட்டாயம் இல்லை என்பதையே இத்தகைய வியத்தகு மனிதர்கள் நமக்குச் சொல்லித் தருகிறார்கள்.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் அளவு கோல் அடுத்தவர்கள் இதைச் செய்கிறார்களா என்பதல்ல. இதைச் செய்யலாமா ? இதைச் செய்தால் என்னென்ன விளைவுகள் வரலாம் ? நன்மைகள் என்னென்ன ? தீமைகள் என்னென்ன ? என ஒரு சின்ன அலசல் வழக்காடுமன்றத்தை மனதுக்குள்ளேயே ஓட்டிப் பாருங்கள். உங்கள் மனம் உங்களுக்கு மிகச் சரியான வழியைக் காட்டும். அந்த வழியில் செல்லுங்கள். அந்த வழி எல்லோரும் நிராகரித்த வழியாகக் கூட இருக்கலாம். எல்லோரும் நடக்கும் வழியில் புதையல் கிடைப்பதும் அரிதே !

ஓடும் கூட்டம் ஓடட்டும்உன்

மனமே உன்னை ஆளட்டும்

தன்னம்பிக்கை : மன்னிப்பு மகத்துவமானது !

$
0
0

வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட். இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம். 2003ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது தான் அந்தத் துயரம் நடந்தது. ஒரு நாள் சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த போது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது. நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வாரன். நீதிமன்றம் அவனைக் குற்றவாளி என தீர்ப்பிட்டது.  

சிறுமி கேய் அவனருக்கில் சென்றாள். திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். பார்த்தவர்களெல்லாம் கலங்கினார்கள். பின் சிறுமி அவனிடம் சொன்னாள், “நீங்கள் செய்தது தவறு. ஆனாலும் உங்களை நான் மன்னிக்கிறேன்”. ஐந்து வயதுச் சிறுமியின் அந்தச் செயல் அந்த நீதிமன்றத்தையே நிலைகுலைய வைத்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் நெகிழ்ந்தார்கள். அதுவரை சுட்டவன் மீது கொடும் பகையுடன் இருந்த அவளுடைய தாயும் உடனடியாக அந்த நபரை மன்னித்தார் ! இந்த நிகழ்வு அமெரிக்காவின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பலரையும் தொட்டது.

மன்னிப்பு எனும் வார்த்தை மனுக்குலத்துக்கே உரிய  மகத்துவமானது. மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய இந்தச் செயலைச் செய்வதில் தான் இன்று பலருக்கும் உலக மகா தயக்கம். அதனால் தான் நமது வாழ்க்கை சண்டை, அடிதடி, வெறுப்பு, கோபம், நோய்கள் என துயரத்தின் தெருக்களில் நொண்டியடிக்கிறது.

ஒருவர் உங்களைப் பற்றி ஏதோ தவறாகச் சொல்லி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் மீது நீங்கள் கோபம் கொள்ளும்போது உங்களுடைய மனதில் ஒரு கல்லை வைக்கிறீர்கள். அது கனக்கிறது. அந்தக் கோபத்தை மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க ஒவ்வொரு கல்லாய் அடுக்குகிறீர்கள். பாரம் கூடுகிறது, உடல் நிலை பாதிக்கிறது. இரத்த அழுத்தம் எகிறுகிறது. எல்லை மீறினால் மாரடைப்பே வந்து விடுகிறது. ஆனால் இந்த நிகழ்வின் துவக்கத்திலேயே நீங்கள் அந்த நபரை மன்னித்து விட்டால் அத்துடன் சிக்கல்கள் எல்லாம் முடிந்து விடும். 

மன்னிக்கத் தெரிந்த மனிதர்கள் ஈகோ எனும் எல்லைக்கு வெளியே நின்று வாழ்க்கையை அதன் அழகியலில் லயிப்பவர்கள். மனிதத்தின் புனிதமான பாதைகளில் பயணிக்கும் பாதங்கள் அவர்களுடையவை. 

மன்னிப்பது கோழைகளின் செயல் என பலரும் நினைக்கிறார்கள். “எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு அழிக்கும் பரம்பரை நாம்என மீசை முறுக்குகிறார்கள். உண்மையில் மன்னிப்பது தான் போரை விட வீரமானது. போர் உடல்களைத் தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு தான் மனதையே வெற்றி கொள்ளும். இதைத் தான் மகாத்மா சொன்னார், “மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது

நீங்கள் ஒரு நபரைப் பார்த்துக் கத்தியால் குத்தினால் அவருக்குக் காயம் ஏற்படும். ஆனால் ஒரு நபர் மீது கோபமாய் இருக்கிறீர்களென்றால் அவருக்கு எதுவும் நேராது. மாறாக அந்தக் கோபம் உங்களுக்குத் தான் கெடுதல் உண்டாக்கும். நீங்கள் யார் மீது கோபமாய் இருக்கிறீர்களோ அவர் இதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே மன்னிப்பு என்பது முதலில் உங்களுக்கு நீங்கள் செய்யும் நல்ல செயல் என்பதை உணருங்கள்.

பல வேளைகளில் தவறிழைக்கும் நபர்கள் தவறை உணர்ந்து தட்டுத் தடுமாறி மன்னிப்புக் கேட்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நிபந்தனையற்று மன்னியுங்கள். “சே.. இதுல மன்னிப்பு கேக்க என்ன இருக்குஎன்பது போன்ற வார்த்தைகள் நட்பையும், உறவையும் பலமடங்கு இறுக்கமாக்கும்.

சிலர் மன்னிப்புக் கேட்க தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் பழகும்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுங்கள். அவர்களை மனதார மன்னித்துவிட்டதைச் செயல்களில் காட்டுங்கள். மன்னிப்புக் கேட்கும் முன்னாலேயே மன்னிப்பது உயர்ந்த நிலை!

இன்றைய மனித உறவின் பலவீனங்கள் பலவேளைகளில் திடுக்கிட வைக்கின்றன.  பெற்றோரை மன்னிக்க மறுக்கும் பிள்ளைகள், பிள்ளைகள் மீது வெறுப்பு வளர்க்கும் பெற்றோர், அரிவாளுடன் அலையும் சகோதரர்கள். வன்மத்துடன் திரியும் தம்பதியர் !. இவை எல்லாவற்றுக்குமான சர்வ ரோக நிவாரணி மன்னிப்பு என்பதை உணர்கிறீர்களா ? 

தவறே செய்யாத  மனிதர்கள் இருந்தால், அவர்கள் மன்னிப்பு வழங்கத் தேவையில்லை. நாம் தவறும் இயல்புடையவர்கள் எனும் உணர்வு நமக்கு இருந்தால் மன்னிப்பு வழங்க மறுப்பதில் அர்த்தமில்லை ! 

மன்னிப்புக் கேட்கும்போதும் அடுத்தவரைக் குற்றம் சாட்டும் மனநிலையுடனோ, பழி போடும் மனநிலையுடனோ, ரொம்பவே தற்காப்பு மனநிலையுடனோ பேசாதீர்கள். “செய்தது தவறு வருந்துகிறேன்… “ எனும் நேர்மையுடன் பேசுங்கள். உடனடியாக மன்னிப்புக் கிடைக்கவில்லையேல் பதட்டப்படாதீர்கள். சில ஈகோ பார்ட்டிகள் மன்னிப்பு வழங்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதை மனதில் இருத்துங்கள்.

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது கதிகலங்க வைக்கிறது. “நீங்கள் ஒரு நபர்மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகிவிடும்  என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

மன்னிக்கும் பழக்குமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள். “கேம்பைன் ஃபார் பர்கிவ்னஸ் ரிசர்ஸ்சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் தனதுலேர்ன் டு பர்கிவ்” ( மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார். 

மன்னிப்பவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிகல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. “ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்என்கிறது பகவத் கீதை. இஸ்லாம் கடவுளைஅல் கஃபிர்என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம். “மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாதுஎன்கிறது கிறிஸ்தவம். ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது ? விடை தெரிய வேண்டுமெனில் தினசரியைப் புரட்டினாலே போதும் !

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.  

மன்னிப்பு கடந்தகாலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ  கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.      மன்னிப்புக் கேட்காதவர்களை மன்னிக்க மறக்காதீர்கள். 

உயிரில் உலவும் உள்ளன்பு

மலர்ந்து வருதல் மன்னிப்பு

தோற்ற காதல் என்றும் இளமையானது

$
0
0

*

காதல் தோற்பதில்லை !

‘அப்புறம் ஏண்டா இப்படி ஒரு தலைப்பு ? ” என நீங்கள் யோசிக்கலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். காதல் தோற்பதில்லை. காதல் நிராகரிக்கப்படலாம் அல்லது அங்கீகரிக்கப்படலாம். காதல் கொண்டாடப்படலாம் அல்லது கைவிடப்படலாம். ஒரு பூ தோற்றுப் போச்சு என நாம் சொல்வதில்லை. காரணம் பூப்பது தான் பூவின் வெற்றி, பறிப்பதல்ல. அப்படியே தான் காதலும். அது தோற்பதில்லை, தோன்றுவது தான் அதன் வெற்றி. நான் தோற்ற காதல் என சொல்வது, நிராகரிக்கப்பட்ட காதலை.

காதல் ஒரு பச்சைக்கிளியைப் போல, இளமையின் கதவுகளில் தனது அலகுகளால் கொத்திக் கொத்தி அழைப்பு விடுக்கிறது. சில கதவுகள் சிவப்புக் கம்பளத்தோடு கதவை அகலமாய்த் திறக்கின்றன. சில கதவுகள் அரைகுறையாய் திறக்கின்றன. சில கதவுகள் புரிந்தும் புரியாமலும் தாழ்ப்பாள் விலக்குகின்றன. இன்னும் சில கதவுகள் அடைக்கப்படுவதற்காகவே திறக்கின்றன. காதலோ கொத்துவதை நிறுத்துவதில்லை. பாதங்களில் சிவப்புக் கம்பளம் கிடைத்தாலும் சரி, அலகுகளில் குருதிக் கோடுகள் குதித்தாலும் சரி. அவை நிறுத்துவதில்லை.

பால்யகாலத்தின் சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் காலம் தனது இளமையைத் தொலைக்காமல் காத்திருக்கிறது. நாம் சந்தித்த புளியமரப் பாட்டிக்கு இன்னும் அதே புன்னகை இருப்பதாய் மனம் கற்பித்துக் கொள்கிறது. நமது கரங்களில் குச்சி ஐஸ் தந்த தாத்தாவுக்கு, இன்னும் சைக்கள் ஓட்டும் வலு இருப்பதாகவே மனம் கற்பனை செய்கிறது. அவர்கள் வியாபாரத்தை முடித்தல்ல, வாழ்க்கையை முடித்தும் சென்றிருக்கக் கூடும். எனினும் மனமோ, தான் கழற்றி வைத்த மரத்தின் மூட்டிலிருந்தே தனது காலத்தை உதறி எடுத்து உடுத்திக் கொள்கிறது.

நமது நினைவுகளின் சாலைகள் இன்னும் தார் பூசப்படாமல் இருக்கின்றன. நாம் நடந்து திரிந்த குளக்கரைப் பாதைகள் இன்னும் ஒற்றையடிப்பாதைகளாகவே கிடக்கின்றன. நாம் நீந்தித் திரிந்த குளத்தின் மேனியில் இன்னும் கலங்கிய தண்ணீர் மிச்சமிருக்கிறது. நாம் சந்தித்து நடந்த நண்பர்கள் இன்னும அரை டிராயருடன் தான் அலைந்து திரிகின்றனர். இவையெல்லாம் நமது நினைவுகளில் மட்டும். நிஜமோ யானை மிதித்த சோளக்காடாய் அடையாளங்களை முழுமையாய் அழித்து விட்டிருக்கிறது. நமது நினைவுகளின் புல்வெளிகளில் மட்டும் இன்னும் பழைய ஈரமே மிச்சமிருக்கிறது.

காதலும் அப்படியே !

பால்யத்தின் படிக்கட்டுகளிலோ, விடலைப் பருவத்தின் வாய்க்கால்களிலோ நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிளாய் அதே சுவாசத்துடன் காத்திருக்கிறது. அதில் அமர்ந்து மிதிக்கும் போது கால்களுக்குக் கீழே, கடந்து சென்ற காலங்கள் நகர்ந்து செல்கின்றன. காதல் ஒரு வசீகர வாசனையுடன் சைக்கிளின் சக்கடங்களுக்கிடையே கண்ணாமூச்சி ஆடியபடி தொடர்ந்து வருகிறது.

காதலின் பக்கங்களில் அரைத் தாவணியுடன் அசைந்து நடந்த அவளின் பாதங்கள் இன்னும் அதே கொலுசுச் சத்தத்தைத் தான் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. அதே மஞ்சள் திற தாவணி காற்றில் அசைகிறது. அவளது விரல்கள் லாவகமாய் விலக்கி விடும் அந்த கரு கரு தலைமுடி இன்னும் காற்றின் கன்னங்களில் முத்தமிட்டுச் செல்கிறது. ஓரக்கண்ணால் வெட்கம் விரிக்கும் அவளது பார்வையின் பசுத்தம் இன்னும் கறைபடியாமல் கிறங்கடிக்கிறது. அவள் கழுத்துகளில் கவிதை வாசிக்கும் அந்த கருமை நிற மாலை இன்னும் அவளது பெருவிரல் உரசலில் பெருமை கொண்டு அசைகிறது. சற்றே தலைகுனிந்து அவள் சிரிக்கும் புன்னகையை ஏறிட்டுப் பார்க்கும் சாலையோரப் பூக்கள் இன்னும் மூச்சுத் திணறித் தான் கிடக்கின்றன.

கடந்து வராத காதலுக்கு காலம் வயதைக் கூட்டுவதில்லை. அது பருவகாலத்தில் உறைந்து போன ஒரு பரிசுத்த மாணிக்கத்தைப் போல அங்கேயே தங்கி விடுகிறது.

இந்த ஹைடெக் காலத்தின் தாழ்வாரங்களில் கூட காதலன் தயங்கித் தயங்கி நீட்டிய கசங்கிய காகிதக் கடிதமே காதலியின் நடுங்கும் விரல்களில் இன்னும் ஸ்பரிசம் கூட்டும். அரும்பியும் அரும்பாமலும் இருந்த அந்த மீசையின் அடர்த்தியே காதலியின் கண்களின் ஓரங்களில் இன்னும் மிதந்து கொண்டிருக்கும். நிஜத்தில், அவன் நரைதலையுடனும், நாற்பதின் தொந்தியுடனும், பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். அல்லது வழுக்கை விழுந்த தலையைத் தடவியபடி மனைவிக்கு காய்கறி வாங்கப் போயிருக்கலாம். காதலுக்கு அதெல்லாம் அவசியமில்லாதவை. அவை நிறுத்தப்பட்ட புள்ளியிலிருந்தே நடக்கத் துவங்கும்.

வெற்றி பெற்றக் காதல் தொடர்ந்து நடக்கிறது. அதன் வருடங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. காதலர்களின் தோற்ற மாற்றத்தைக் காதலும் வாங்கிக் கொள்கிறது. காதலர்களின் ஓய்ந்து போன ஸ்பரிச நதியை காதலும் கவலையுடன் கவனித்து நகர்கிறது. ஏதோ ஒரு நிறுத்தத்தில் தண்டவாளம் மாறிப் பயணிக்கும் ரயிலைப் போல, காதலர்களின் பயணம் அவர்களை காதலின் பயணத்திலிருந்து விலக்கி வைக்கிறது. வெற்றி பெற்ற காதலுக்கு வயதாகிறது. அதன் இளமை தொலைந்து போகிறது. அதன் கவித்துவம் கரைந்து போகிறது.

தோற்ற காதல் தொலைவதில்லை !

தோற்ற காதல் என்பது காலத்தைப் பூட்டி வைக்கும் சாவி. தோற்ற காதல் என்பது சுழலும் பூமியை நிறுத்தி வைக்கும் உத்தி. தோற்ற காதல் என்பது காதலை சாகா இளமையுடன் பாதுகாக்கும் சங்கதி.

காதல் தோற்பது புனிதமானது,
அது, சூழ்நிலைச் சுனாமிகளால் சிதைக்கப்படுவதில்லை.
காதல் ஜெயிப்பது துயரமானது
அது, முதுமைச் சுருக்கங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது.

காதல் எந்தக் கணத்தில் முளை விட்டது என்பதைக் அறிய இன்னும் எந்த மென்பொருளும் கண்டுபிடிக்கப் படவில்லை. அது மண்ணில் விழுந்த பெருமழையின் முதல் துளியைப் போல ரகசியமாகவே இருக்கிறது. அது ஓயாமல் பேசும் பெருங்கடல் ஒன்று முதன் முதலாய் அனுப்பி வைத்த அலையைப் போல அறியப்படாமலேயே இருக்கிறது. அது பூமியின் இருட்டைத் துடைத்த கதிரவனின் முதல் வெளிச்சம் போல மறைந்தே இருக்கிறது. காதல் எப்போது முளைவிட்டது என்பது முக்கியமில்லை, முளை விட்டது என்பதே முக்கியம்.

காதல் எந்தக் கணத்தில் நிராகரிக்கப்பட்டது என்பது எளிது. அது ஒரு மெல்லிய மலரின் மீது மரச்சிலுவை விழுந்த தருணம். அது ஒரு அழுகின்ற குழந்தையின் வாயில் கள்ளிப் பால் கசந்த கணம். அது, பால்யத்தின் அதிகாலைக் கனவொன்றை பெருங்குரல் ஒன்று முடித்து வைத்த தினம். அது மறப்பதில்லை. அதே இடத்தில் காதலும், காலமும் காலொடிந்து கிடக்கின்றன‌. உறைந்த மௌனத்தின் உறங்காத சத்தமாய் அது இன்னும் இசை மீட்டிக் கொண்டிருக்கிறது.

காதல் ஒரு மெல்லிய மழை போல நமது நினைவுகளின் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது. வானத்தின் ஏக்கமெல்லாம் மண்ணை அடைவது மட்டுமே. மண்ணும் அதே போன்ற மழையை விண்ணுக்கு அனுப்பி வைக்கவேண்டுமென மேகம் எதிர்பார்ப்பதில்லை. ஒரு விதையின் தலையில் விதியாய் விழுவதையே அது ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பு பொய்க்கின்ற போது அது அக்கினி மழையை அனுப்புவதில்லை, இன்னும் அதிகமாய் கண்ணீர் வடிக்கிறது. உண்மைக் காதலும் அப்படியே. அது எதிர்பார்ப்புகளை எண்ணி, காதலை வினியோகிப்பதில்லை. நிராகரிக்கப்பட்டதற்காய் நரகத்தை நாடுவதும் இல்லை. காதலைப் பொழிந்து கொண்டே இருக்கிறது.

காதலால் நிரம்பி வழியும் குளத்திலிருந்து அள்ளுவதெல்லாம் காதலாகவே இருக்கும். காதலால் நிரம்பி வழியும் கோப்பையிலிருந்து சிந்துவதெல்லாம் காதலாகவே இருக்கும். காதலால் நிரம்பி வழியும் மேகத்திலிருந்து விழுவதெல்லாம் காதலாகவே இருக்கும். அது நிறம் மாறி நேசம் புதைப்பதில்லை.

காதல் வன்முறையின் போர்க்களத்தில் வெற்றி காண்பதில்லை. கோடரிகளைக் கொண்டு முல்லை மலரைக் கிள்ளி எடுக்க முடியாது. அது வலுக்கட்டாயத்தினால் சேர்த்துக் கொள்வதும் அல்ல. பெயின்ட் அடித்து விட்டால் ஆப்பிள் பழம், ஆரஞ்சுப் பழம் ஆவதில்லை. காதல் இயல்பாக மலர்வது. பரஸ்பரத் தீண்டல்களில் பரவசம் பற்றிக் கொண்டால் காதலாகிறது. பரஸ்பரத் தீண்டல்களில் பாஸ்பரஸ் பற்றிக் கொண்டால் அது நின்று விடுகிறது. இயல்பை ஏற்றுக் கொள்வதே மனிதத்தின் வெற்றி. அதுவே காதலுக்குச் செய்யும் அதிக பட்ச மரியாதை.

காதல் ஒரு யாத்ரீகனைப் போல. அது பயணத்தின் பாதையில் எப்போது வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளும். அதை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல முடியாது. காதல் ஒரு கானகக் குயில் போல அது எப்போது வேண்டுமானாலும் பாடத் துவங்கும். அதன் கழுத்தை நசுக்கி இசையை இழுத்தெடுக்க முடியாது. எதையும் ஏற்றுக் கொள்வதே காதலின் வெற்றி. அதுவே இளமையின் வெற்றி.

உண்மையில்
தோற்ற காதலே வெற்றி பெற்றிருக்கிறது !
காலத்தை !

தோற்ற காதலே ஊற்றி வைத்திருக்கிறது
இளமையை !

*

சேவியர்
வெற்றிமணி, ஜெர்மனி


தன்னம்பிக்கை : காதலியுங்கள், ஆனால் !…

$
0
0

காதலியுங்கள், ஆனால் !…

Image result for love

வாழ்க்கையை அழகாக்கும் வலிமை படைத்த மிகச் சில விஷயங்களில் காதலும் ஒன்று ! “உலகின் மிக அழகான பொருட்களை தொடடோ, பார்க்கவோ முடியாதுஎன்கிறார் ஹெலன் கெல்லர். அழகானவை பொருட்களல்ல, உணர்வுகளே என்பதையே அவருடைய வார்த்தைகள் உணர்த்துகின்றன.

அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதும் தான் உலகின் உன்னதமான விஷயங்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அன்பின் ஒவ்வோர் பக்கத்திலும் ஒவ்வோர் வாசனை ! இளைஞர்களின் வாழ்க்கைப் பக்கத்தில் அதிகமாய் வீசும் வாசனை, காதல் !

காதலும், காதல் சார்ந்த இடங்களும் தான் இளைஞர்களின் எல்லைக் கோடுகள். காதல் அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் கண்களுக்கே ரொம்ப அழகானதாக மாற்றித் தருகிறது.

ஒரு இளைஞனும், அவனுடைய தந்தையும் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சன்னல் வழியே தெரிந்த காட்சிகள் இளைஞனை உற்சாகம் கொள்ளச் செய்தன. “வாவ்மரங்கள்என்றான். “வாவ்.. வெயில் என்றான்” “அடடா பறவைகள் என்ன அழகுஎன்றான். அருகில் இருந்தவர்களெல்லாம் அவனை வித்தியாசமாய்ப் பார்த்தார்கள். தந்தையோ அவனுடைய கைகளைப் பற்றியபடி, எல்லாவற்றுக்கும் புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் மழை தூறத் துவங்கியது. இளைஞன் வழக்கம் போலவாவ்அப்பா, மழைத்துளி எவ்ளோ அழகு, அது தரையில் விழுவது அசத்தலா இருக்குஎன குதிக்க ஆரம்பித்தான். அருகில் இருந்தவருக்கு பொறுக்கவில்லை. பையனோட அப்பாவைப் பார்த்து , “பையனுக்குமூளை…” என்று இழுத்தார்.

தந்தை இல்லையென அவசரமாய் தலையாட்டிக் கொண்டே சொன்னார். “என் பையனுக்கு நேற்று வரைக்கும் பார்வையில்லை. இப்போ தான் ஆபரேஷன் பண்ணி பார்வை வந்திருக்கு. இதான் பார்வை கிடச்சப்புறம் அவன் செய்ற முதல் பயணம். அதான் அவனுக்கு ஏல்லாமே புதுசா இருக்கு ! மன்னிச்சுக்கோங்க 

காதலும் இப்படித் தான். காதல் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் விதையாய் விழுந்த உடன் அவனைச் சுற்றிய வாழ்க்கை அழகான மலர்களைச் சொரிய ஆரம்பித்து விடுகிறது. அதுவரை சாதாரணமாய் இருந்த விஷயங்களெல்லாம் அவனுக்குள் அழகியலைப் போதிக்கும் மகத்துவமான விஷயங்களாகிவிடுகின்றன.

தமிழனுக்கும் காதலுக்குமான மான தொடர்பு இன்று நேற்று வந்ததல்ல. கல்தோன்றாக் காலத்திலேயே தோன்றிய காதலை, சொல் தோன்றியக் காலத்திலேயே சொல்லி மகிழ்ந்தனர் தமிழர். சந்தேகம் இருந்தால் ஏதேனும் ஒரு பண்டைய இலக்கியத்தை தூசு தட்டிப் பாருங்கள். உள்ளேயிருந்து காதல் உதிரும் !  

இவ்வளவு அழகான காதலை பலரும் விமர்சிக்கக் காரணம் என்ன ? வெறுக்கக் காரணம் என்ன ? பதட்டப்படக் காரணம் என்ன ? அது தீண்டக் கூடாத விஷயம் என பதறக் காரணம் என்ன ?

முக்கியமான விஷயம், உண்மைக் காதலுக்கு இடையே வளரும் காதல் போன்று தோற்றமளிக்கும் களைகள் ! 

காதலிக்க மறுத்த காதலியை வெட்டிக் கொன்றான் காதலன்’, ‘காதல் ஜோடி தற்கொலை’, ‘காதலித்த பெண் மண்ணெண்ணை ஊற்றிப் படுகொலை’, ‘காதலித்த நாலே மாதத்தில் விவாகரத்துஎன்றெல்லாம் வரும் தகவல்கள் காதலைக் கொச்சைப்படுத்துகின்றன. அதனால் தான் உண்மையான காதலைக் கூட சமூகம் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது.  

இளைஞர்கள் பல வேளைகளில்உடல் ரீதியான ஈர்ப்பைக் கண்டு இதுதாண்டா காதல் என நினைத்து விடுகிறார்கள். அப்புறம் உடல் சிந்தனைகளிலேயே மூழ்கி நீச்சலடிக்கவும் செய்கிறார்கள்.  

காமநினைவுகளின் போது மூளையின் குறிப்பிட்ட பகுதி தூண்டப்படுகிறது. கோகைன் போன்ற போதைப் பொருளை உட்கொண்ட மூளையும், காம சிந்தனை நிறைந்த மூளையும் ஒரே போல இருக்கும். அது உண்மையான நபரைப் பார்க்காமல், இச்சையை  நோக்கியே சிந்தனையைச் செலுத்தும்என்கிறார் ஜூடித் ஆர்லோஃப் எனும் உளவியல் மருத்துவர் மற்றும் எழுத்தாளர். 

காமம் ஒரு நபருடைய மேனி எழிலைப் பார்த்து வருவது. கட்டுமஸ்தான உடலையோ, நளினமான உடலையோ பார்த்து தூண்டபடுவது. வந்திருக்கிறது காதலா, இல்லை ஈர்ப்பா என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இதை தொடரலாமா, அல்லது விடலாமா என முடிவெடுக்க முடியும்.

உடலையும், அழகையும் மட்டுமே உங்களுடைய கண்கள் பார்க்கிறதா ? சாதாரணமா பேச முடியலையா ? அவிழ்த்து விடப்பட்ட ஆட்டுக் குட்டிகளைப் போல உங்கள் பார்வை அழகுப் பிரதேசங்களில் இலக்கில்லாமல் ஓடித் திரிகிறதா ? அது காதலல்ல. உடல் ஈர்ப்பு !

பேசிக்கொண்டிருப்பதை விட சில்மிஷம் சுவாரஸ்யமாய் இருக்கா ? பாலியல் சிந்தனைகள் எப்போதும் இருக்கா ? உங்கள் பேச்சிலும், மெயிலிலும், எஸ்.எம்.எஸ்சிலும்   பாலியல் சார்ந்தவையே ஆக்கிரமித்திருக்கிறதா ? உஷார் ! உங்கள் காதல் இனக்கவர்ச்சியின் சிக்னலில் இருக்கிறது !

பேசும்போ எப்படிப் பேசறீங்க ? “வானவில்லைக் குறுக்காக வெட்டி ரிப்பனாகக் கட்டும் விஷயங்களையா ?” அல்லது யதார்த்தமான பிரச்சினைகள், நிகழ்வுகளையா ? வெறும் கற்பனைக் கயிறில் பட்டம் விட்டால், அது உண்மைக் காதலல்ல !


உண்மையான காதலில் நட்பு நிச்சயம் உண்டு. ஒருவேளை உங்கள் காதலில் நட்பின் அம்சம் நீர்த்துப் போயிருந்தால், அந்தக் காதலைக் கொஞ்சம் அவசரமா பரிச்சீலனை பண்ணுங்கள்.  

உண்மையான அன்பு இணைந்து நேரம் செலவிட விரும்பும். ஆனால் அது பாலியல் சார்ந்தவையாய் இருப்பதில்லை. பேசிப் பேசி நேரம் போவதே தெரியாது !  ஆனால் அது பாலியல் சார்ந்த பேச்சாய் இருக்க வேண்டுமென்பதில்லை ! 

அடுத்தவருடைய உணர்வுகளை, சிந்தனைகளை, விருப்பங்களை, சோகங்களையெல்லாம் அது காது கொடுத்துக் கேட்கும். உண்மையான பரிவுடன்ஆலோசனைகள் சொல்லும். உண்மையில் அடுத்த நபருடைய இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பதில் காதல் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டும்.

அடுத்தவரை வாழ்வில் முன்னேறச் செய்ய வேண்டுமென ஊக்கப்படுத்துவதையும், தொடர்ந்து ஆதரவு நல்குவதையும் காதல் சிறப்புறச் செய்யும். “எக்ஸாம் கெடக்குது.. வாடா சினிமா போலாம்என்பது உண்மைக் காதலல்ல ! “நல்லா எக்ஸாம் எழுது, பேனா பென்சில் எடுத்துட்டியா ? படிச்சியா ?” என அக்கறையாய் விசாரிப்பதில் அது மலரும்.

அதேபோல தப்பான காதல் குடும்பத்தினரை விட்டு விலகியே இருக்கத் தூண்டும். வெளிப்படையாய் இருக்க மறுக்கும் காதலுக்குள் சில மர்மங்கள் இருக்கலாம் !

மால்கம் கிளாட்வெல் தனதுபிளிங்க்எனும் நூலில் குறிப்பிடும் விஷயம் சுவாரஸ்யமானது.  நம்முடைய உள்ளுணர்வு ஒரு விஷயத்தை முந்திரிக் கொட்டை மாதிரி முன்னால் வந்து எச்சரிக்கும் இல்லையா ? “அது அக்மார்க் உண்மை, அதன் படி நடந்துக்கோங்கஎன்பதை அவருடைய நூல் வலுவாக முன்வைக்கிறது ! “பார்ட்டி சரியில்லையேஎன உள்மனம் எச்சரித்தால் உடனே ஒரு முற்றுப்புள்ளி போட்டு விடுங்கள் ! 

உண்மை கசக்கும் ! ஆனால் நிலைக்கும் !” காதலைப் பொறுத்தவரை சிக்கல் பொய்யில் துவங்கும். “எப்படியாவது ஆளைக் கவுக்கணும்பாஎன பொய்கள் சரசரவென ஓடி வரும். கல்யாணத்துக்கு அப்புறம் சாயம் வெளுக்கும். அது தான் காதலில் விழுகின்ற முதல் ஓட்டை. ஓட்டை விழுந்த படகு பயணத்துக்கு லாயக்கற்றதாகிவிடும். நம்பிக்கை உடைவதைப் போல உறவுகளிடையேயான விரிசல் வேறு இல்லை !

உண்மையான காதலுக்கு சில அற்புதமான குணாதிசயங்கள் உண்டு !  உண்மைக் காதல் நிஜங்களை அதன் உண்மையான இயல்புகளோடு ஏற்றுக் கொள்ளும் ! முரண்டு பிடிக்காது !  உண்மைக் காதல் அடுத்தவருடைய வலிகளில் துடிக்கும், வளர்ச்சியில் பறக்கும், தோல்வியில் துவளும். அடுத்த நபர் விலகிவிட்டாலும் கூட !

உண்மைக் காதல் ஒரு நீண்டகால ஒப்பந்தம். தற்காலிகத் தேவைகளுக்கான அடைக்கல நிழலல்ல ! 

காதல் நமது தோளில் உட்கார்ந்திருக்கும் பறவை போல என்பார்கள். இறுகப் பிடித்தால் இறந்து விடும். பிடிக்க நினைத்தால் பறந்து விடும். சுதந்திரமாய் விட்டால் தோள்களிலேயே தஞ்சமடையும் ! காதலனும், காதலியும் சுதந்திரமாய் உணர்வது காதலில் மிக முக்கியம். !

காதல் என்பது அன்பின் நிலை. அந்த அன்பு நிரம்பியிருப்பவர்கள் மற்றவர்கள் மீதும் அன்பும் கரிசனையும் காண்பிப்பார்கள். அடுத்த நபரிடம் மரியாதை செலுத்துவார்கள். செயல்களில் பணிவும் நாகரீகமும் மிளிரும் ! மன்னிப்பு மலரும் ! ஈகோ விடைபெறும். இவையெல்லாம் இல்லையேல் உள்ளே உள்ள அன்பு உண்மையா ? என கேள்வி எழுப்புங்கள் ! 

ஒரு சின்னக் கதை ! உயிருக்குள் உயிர் பொதிந்த காதலர்கள் அவர்கள். எல்லா காதலர் தினத்திலும் காதலிக்கு ஸ்பெஷல் பூங்கொத்தை பரிசளிப்பான் காதலன். காதல் வளர்ந்து திருமணமானது ! வருடங்கள் வளர வளர காதலும் வளர்ந்தது ! பூங்கொத்தும், பிரியமும்  தொடர்ந்தது. இந்தக் காதலை மரணம் கூட பிரிக்கக் கூடாதென மன்றாடினர் இருவரும். ஆனால் ரணத்தின் தேரேறி மரணம் ஒருநாள் வந்தது. காதலன் மறைந்தான், காதலி உறைந்தாள் !  

அடுத்த காதலர் தினம் துயரத்துடன் வந்தது. அவளுடைய அழுகை அணை உடைத்தது. அவனில்லாத முதல் காதலர் தினம் அது ! படுக்கையில் புரண்டு கண்ணீர் விட்டாள். திடீரென கதவு தட்டும் ஓசை. வாசலில் பூங்கொத்துடன் ஒருவன். பூங்கொத்தை வாங்கினாள். இறந்து போன காதலன் அனுப்பியிருந்தான். பூங்கொத்தில் ஒரு வாசகம். “மரணம் உயிரைத் தான் பிரிக்கும், காதலையல்லநான் உன்னை நேசிக்கிறேன்”.

அவளுக்கோ கோபம். பூ அனுப்பிய கடைக்காரரிடம் சென்றாள். “வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயாஎன சீறினாள். அவன் நிதானமாய்ச் சொன்னான்.

அம்மா, உங்க வீட்டுக்காரர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே ஒரு அக்ரீமென்ட் போட்டுகிட்டாரு. எல்லா காதலர் தினத்துக்கும் உங்க வாசலில் ஒரு பூங்கொத்து வைக்கச் சொல்லி பணம் கொடுத்தாரு. ஒருவேளை நான் நேரடியா கடைக்கு வந்து பூ தேர்வு செய்யலேன்னா, நான் இறந்துட்டேன்னு அர்த்தம். ஆனாலும் நீ பூங்கொத்து கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. ஒருவேளை மரணம் வந்து அவளையும் சந்தித்தால். கடைசியாய் ஒருமுறை அவள் கல்லறையில் பூங்கொத்தை வை. எப்போதும் கடிதத்தில் தவறாமல் எழுதுமரணம் உயிரைப் பிரிக்கும், காதலையல்ல -! ன்னு 

இதாம்மா நடந்தது ! அவன் சொன்னான். அவள் அழுதாள். அவளுடைய கண்ணீர்துளிகள் காதலில் கரைந்து பெருமிதம் அடைந்தன !  உண்மைக் காதல் ஆழமானது ! காதலின் உண்மை வேர்களில் தெரியும். பூக்களில் அல்ல. போலிகளைப் புறக்கணியுங்கள் ! 

உயிரில் உலவும் உண்மை

அதுவே காதலின் தன்மை !

Vettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.

$
0
0

Image result for maattu pongal festival

தை பிறந்தால் வழி பிறக்கும்.
சிந்’தை’ பிறந்தால் வழி பிறக்கும்.

இருளின் கானகப் பாதையில் பயணிப்பவர்களின் கனவெல்லாம் தரைக்கு எப்போது வெளிச்ச விழுதுகள் இறங்கி வரும் என்பது தான். அந்த வெளிச்சப் புள்ளிகளின் ஒற்றையடிப் பாதை போதுமானதாய் இருக்கிறது கானகப் பயணத்தைக் கடக்க. கும்மிருட்டின் கோரப் பிடியில் கிடப்பவர்களுக்கு ஒரு மின்மினியின் வெளிச்சப் பொட்டே, மாபெரும் விடுதலையின் கொடியாகத் தெரியும்.

இந்தத் தை, உங்கள் மீதிருக்கும் நிந்தை தனை அழித்து, விந்தை தனைப் பொழிந்து வாழ்வில் வசந்தத்தைத் தர வாழ்த்துகிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை நாம் பல வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்கிறோம். சாவி இருந்தால் கதவு திறக்கும் என்பதைப் போல. உண்மையில் சாவி இருந்தால் கதவு திறப்பதில்லை, சாவியைப் பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தினால் தான் கதவு திறக்கும் என்பதே உண்மை. அதே போல தான் பாதைகளும்.

நமக்கான பாதைகளை எந்த வானதூதரும் கோரைப் பாயைப் போல சுருட்டி எடுத்து வந்து, நம் முன்னால் உதறி விரிப்பதில்லை. நமக்கான பாதைகளை யாரோ தயாராக்கி வைத்து விட்டு நம்மை ஆரத்தி எடுத்து வரவேற்பதும் இல்லை. எப்படி நமக்கான சுவாசம் நம்மிடம் இருக்கிறதோ, அப்படியே நமக்கான பாதைகளும் நம்மிடமிருந்தே புறப்படுகின்றன.

வரப்புகளில் தலை சாய்த்திருக்கும் கதிர்களின் அறுவடை தை மாதத்துக்கு முன்பே முடிந்து விடும். தை வரும்போது வரப்புகளில் நடக்க வழி பிறக்கும் ! தை மாதத்தில் அறுவடையின் நிகழ்ச்சிகள் முடிந்து விட்டிருக்கும். மக்களின் தேவைக்கான தானியங்கள் களஞ்சியங்களில் இருக்கும். உழைப்பாளர்களுக்கான கூலி அவரவர் கைகளில் வந்து சேரும். தை பிறக்கும்போது அவர்களது வாழ்வுக்கான வழி பிறக்கும். இவையெல்லாம் விவசாயத்தின் விரல்பிடித்து நடந்த நம் மூதாதையர்களின் வாழ்வியல் விளக்கங்கள்.

ஆனால், விதையில்லாமல் எந்தத் தையும் முளைப்பதில்லை. விதைக்கும் காலத்தில் தூங்கி விட்டு அறுவடைக் காலத்தில் அரிவாளோடு அலைவது எவ்வளவு முட்டாள் தனமோ, அப்படித்தான் வாழ்வில் வழி பிறக்க எதுவும் செய்யாமல், மாதம் பிறந்ததும் நம் சோகம் இறந்து விடும் என நம்புவதும்.

கல்லும் முள்ளுமான கரடு முரடு பிரதேசங்களில் எப்படி ஒற்றையடிப் பாதைகள் தோன்றின ? அவையெல்லாம் ஏதோ பாதங்கள் அந்த முட்களின் முனைகளைத் தாண்டியும், கற்களின் கூர்களைத் தாண்டியும் நடந்து திரிந்த வலிகளின் வழிகள். அந்த ஒற்றையடிப் பாதைகளில் குருதியின் அம்சங்கள் இன்னும் ஒளிந்திருக்கலாம். அந்தப் பாதைகளில் அலறலில் அழுகுரல்கள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கலாம்.

அப்படித் தான் நமது வாழ்க்கையும். வாழவேண்டும், முன்னேற வேண்டும் எனும் சிந்தை முதலில் மனதில் முளைக்க வேண்டும். அந்த சிந்தனையை நீரூற்றி வளர்க்க வேண்டும். அதைக் கறை படாமல் காக்க வேண்டும். அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்க வேண்டும். அதன் பின்னர் அதனிடம் கனிகளை எதிர்பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது, அந்த காலத்தின் கண்சிமிட்டலுக்கான தயாரிப்பு நம்மிடம் இருக்கிறது.

நல்ல விதைகளை, நல்ல நிலத்தில், நல்ல பருவத்தில் விதைப்பது விளைச்சலின் தரத்தை நிர்ணயிக்கும். முள்ளிடையே விதைத்தால் அவை முட்களினால் கிழிக்கப்படும். பாறைகளில் விதைத்தால் அவை வேர்விடாமல் கரிந்து விடும். வழியோரம் விதைத்தால் அவை பறவைகளால் களவாடப்படும். நல்ல நிலத்தில் விதைத்தால் மட்டுமே அவை மிகுந்த விளைச்சலைக் கொடுக்கும்.

நமது வாழ்வில் நமது அன்பை எங்கெல்லாம் விதைக்கிறோம். அந்த அன்பு காய்ந்து விடாமல் அடிக்கடி கவனித்துக் கொள்கிறோமா ? அந்த அன்பைக் கெடுக்க நினைக்கின்ற களைகளாம் சிந்தனைகளைக் களைகின்றோமா ? அந்த அன்புக்குத் தேவையான ஊக்க உரங்களை அளிக்கின்றோமா ? அப்படிச் செய்தால் அந்த அன்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும். உரசாத தீக்குச்சி எரிவதில்லை, உணராத மனம் விரிவதில்லை. அன்பை விதைக்கத் துவங்குவோம் ஆனந்தத்தை அறுவடை செய்வோம்.

சோம்பலில் சுற்றப்பட்டுக் கிடப்பவர்களின் சன்னலின் சூரியன் உதிப்பதில்லை. அவர்களுடைய படுக்கைகளின் வெற்றிகளின் கோப்பைகள் துயில்வதும் இல்லை. அவர்கள் கனவுகளில் போர் புரிந்து, நிஜங்களில் தோற்றுப் போகிறார்கள். முதல் சுவடை எடுத்து வைக்காமல் எந்தப் பயணமும் துவங்குவதில்லை. தை பிறக்க வேண்டுமெனில் நாம் நமது உற்சாகத்தைப் பிறப்பிக்க வேண்டும்.

களத்தில் நுளையாமல் வெற்றிகளைப் பெறுவதும், களத்து மேட்டில் நுழையாமல் விளைச்சலைப் பெறுவதும் பகல் கனவின் பரிதாபங்கள். நமது வாழ்க்கை அட்சய பாத்திரங்களின் அணிவகுப்பல்ல, உழைப்பு வியர்வையின் ஈரக் கோடுகள். தேடல் இல்லாமல் எதையும் கண்டடைய முடியாது. முயற்சிகளின் முனை ஒடிந்து போனால், வாழ்வின் ஊசிகளால் வெற்றி ஆடைகளைத் தைக்கமுடியாது.

உற்சாகமான மனம், நல்ல சிந்தனைகளின் இருப்பிடம். உடலை வலுவாக வைத்திருக்கும் வாய்ப்பை சுறுசுறுப்பான சிந்தனை தான் தருகிறது. உடல் வலுவாக, உற்சாகமாக இருந்தால் தான் மனமும் உற்சாகமாக இருக்கும். “திறந்திடு சீசே” என்றவுடன் திறக்கின்ற புதையல் குகைகள் இங்கே இல்லை. திறக்க வேண்டுமெனில் அதற்கான உழைப்பைச் செலுத்த வேண்டும். கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகின்ற தெய்வங்களுக்கு இப்போது தட்டுப்பாடு. நிலத்தைப் பிய்த்து வளத்தைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கின்ற கடவுளர்களே காணப்படுகின்றனர்.

ராஜராஜன் காலத்தில் தை மாதத்தில் தான தர்மங்கள் கொடுப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். ஏழைகளுக்கு உதவுவதற்காக, வறிவர்களின் வயிறுகளை நிறைப்பதற்காக அவர் தை மாதத்தில் களஞ்சியங்களைத் திறப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். அந்தத் தை மாதம் எத்தனையோ மக்களுடைய வாழ்வில் தீபத்தை ஏற்றி வைத்தது. சோகத்தை மாற்றி வைத்தது. நமது மனதையும் அத்தகைய பிறர்நலப் பணிகளுக்காய் தயாராக்கி வைப்போம்.

இந்தத் தை மாதம் நமக்கு நல்ல வரத்தைத் தரட்டும். நல்ல வளத்தைத் தரட்டும். அதற்கான தயாரிப்புகளை நாம் செய்வோம். பறவையின் எச்சமே ஒரு மரமாய் உருமாறும் போது, மனிதனின் செயல்கள் எப்படிப் பட்ட வசீகரங்களை உருவாக்க முடியும் ? அவை கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. அதற்காக திட்டமிடுவோம், சவால்களை சந்திப்போம், புதுமைகளை உருவாக்குவோம், செயல்படுவோம்.

தங்கத்திலே செய்த அம்பாய் இருந்தால் கூட எய்தால் தான் இலக்கை அடையும். நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் துப்பாக்கியானால் கூட விசையை இழுத்தால் தான் இலக்கைச் சுட முடியும். நாம் எவ்வளவு திறமை சாலிகள் என்பதல்ல, நாம் எவ்வளவு செயல்படுகிறோம் என்பதும் முக்கியம். நம் மீது நாம் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோம் என்பதும் முக்கியம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, தை துறந்தாலும் நமது வாழ்வில் வழி பிறக்கும். பல தைகள் நமது வாழ்க்கையின் கொண்டாட்டத்தைப் புதைத்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய தைகளை நாம் பிடுங்கி எறிய வேண்டும். நமது அமைதியைக் கெடுக்கும் கோபத்தை ! அன்பை விலக்கும் விரோதத்தை ! உறவை உடைக்கும் வன்மத்தை ! தாழ்மை கெடுக்கும் கர்வத்தை ! சுயநலம் கொடுக்கும் ஆணவத்தை ! இப்படி பல்வேறு “தை”களை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இந்தத் தைகள் இருந்தால் மனிதத்தை விளைவிக்க முடியாமல் போய்விடும்.

எனவே அன்பு நெஞ்சங்களே, இந்தத் தை, உங்கள் இதயத்தில் மனிதத்தை, ஈரத்தை, நேசத்தை, இன்பத்தை நிறைக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

*

சேவியர்

தன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது !

$
0
0

நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மாஎன்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஒரு அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.

நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடை பெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளையெல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறது. 

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால் தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். “கூடா நட்பு கேடாய் முடியும்என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அது தான்.

இன்றைய இளைஞர்கள் பலரும் இந்தநட்புத் தேர்வுஏரியாவில் தவறி விடுகிறார்கள். “வாடாதண்ணியடிக்கலாம்என்று அழைப்பது தான் உண்மை நட்பின் அடையாளமென என்று நினைத்து விடுகிறார்கள். உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான். உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான். உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான் என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.

ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவது தான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப் படுத்துவதல்ல.

நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல. நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன். அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காத நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள். 

நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பா கிட்டே சொல்லாதேஎன்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும். 

உங்களுடைய இலட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா ? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய இலட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கிறதா ? என்பதைப் பாருங்கள். உங்களுடைய இலட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின் போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். ஒரு இசைக்கலைஞன் ஆவது உங்கள் இலட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாய் அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கி விட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை. 

மற்ற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாகப் விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும் போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறீர்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின் போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.

மனசுக்கு கஷ்டமாயிருக்கு, பணக் கஷ்டமாயிருக்கு, உதவி தேவையிருக்குஎன கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில் தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில்மட்டுமேஉங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்களல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே !. 

தப்பானஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். போதை, திருட்டு, பாலியல், சமூக விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும். அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே ! நண்பர்களல்ல.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். “எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.  

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா ? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். 

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்களெல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது. 

கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள் !

அன்னை தெரசா சிறுமியாக இருந்தபோது அவருடைய தோழியர்களில் ஒரு தீய தோழி இருப்பதை அவருடைய தாய் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என தெரசாவின் தாய் முடிவெடுத்தார்.. 

ஒருநாள் அவர் தெரசாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்கள் இருந்தன. அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட தெரசாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப் போன தெரசாவை தாய் நிறுத்தினாள். தனியே வைத்திருந்த ஒரு அழுகிய பழத்தை எடுத்தாள் தாய். தெரசா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை அழகிய பழங்களின் நடுவே வைத்தாள். 

ஏம்மா ? நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள் ?” தெரசா கேட்டாள்.

எல்லாம் ஒரு காரணமாய் தான். இதை அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும்போது எடுத்து வாஎன்றார் தாய்.

தெரசா அப்படியே செய்தார். 

சில நாட்களுக்குப் பின் தாய் தெரசாவை மறுபடியும் அழைத்தாள். அந்த பழக் கூடையை எடுத்து வரச் சொன்னாள். பழக்கூடையை தெரசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தாள். அந்தக் கூடையிலிருந்த பழங்கள் எல்லாம் அழுகிப் போய் இருந்தன.

தெரசா வருந்தினாள். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவளுக்கு அழுகையே வந்து விட்டது. 

தாய் தெராவை அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னாள். “பார்த்தாயா ? ஒரு அழுகிய ஆப்பிள் பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்து விட்டது. தீய நட்பும் இப்படித் தான். ஒரு தீய நட்பு ஒரு நல்ல குழுவையே நாசமாக்கி விடும். விஷம் ஒருதுளி போதும் ஒரு மனிதனைக் கொல்ல. எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை”. 

நட்பில் உண்மை நிலவட்டும்

வாழ்வின் கிழக்கு புலரட்டும் !

தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.

$
0
0

கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்கவும் முடியாத, யாருக்கும் கொடுக்கவும் முடியாத ஒரு உன்னத பொருள் நேரம் தான்.

உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, “டைம் செம ஃபாஸ்டா ஓடிடுச்சு”, “நேரம் போகவே மாட்டேங்குதுஎன காலத்தைக் குறை சொல்கிறோம் 

ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்தில் எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள். ஒன்பது மணிக்கு நடைபெறும் மீட்டிங்கிற்கு எத்தனை பேர் தாமதமின்றி வந்து சேர்கிறார்கள் ? பத்து நிமிடம் லேட்டா போனா ஒண்ணும் ஆவாது என்பது தானே பலருடைய மனநிலை ?

மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்ததுஎன்கிறார் சேக்ஸ்பியர். நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இந்த ஒரு வரியே சாட்சி. 

பங்சுவாலிடி என்பது ஏதோ அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. குடும்பத்திலும், சமூகத்திலும் தினம் தினம் கடை பிடிக்க வேண்டிய ஒரு செயல் தான். சரியான நேரத்துக்கு ஒரு மாத்திரை சாப்பிடுவது கூட இதன் ஒரு பாகம் தான். 

நேரம் தவறாமைக்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன். ஒரு முறை அவர் தேர்தலில் ஜெயித்த உறுப்பினர்களை இரவு உணவுக்கு அழைத்தார். குறித்த நேரத்தில் யாருமே வரவில்லை. வாஷிங்டன் அமைதியாக மேஜையில் அமர்ந்து உணவு உண்ணத் துவங்கினார். அவர் சாப்பாட்டை முடிக்கும் தருவாயில் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். வந்தவர்களுக்கு வியப்பு. விருந்தினர்கள் வரும் முன்னால் விருந்துக்கு அழைத்தவர் சாப்பிடுகிறாரே என்று முணு முணுத்தனர்.

வாஷிங்டன் நிதானமாய்ச் சொன்னார். “நான் காலம் தவறுவதில்லை. என்னுடைய சமையல்காரரும் நேரம் தவறுவதில்லை. எனவே அவர் சரியான நேரத்தில் பரிமாறினார், நான் குறித்த நேரத்தில் சாப்பிடுகிறேன்”. வந்தவர்கள் வெட்கப்பட்டார்கள். நேரம் தவறாமையை அதிபர் எந்த அளவுக்கு பின்பற்றினார் என்பதைக் கண்டு கொண்டனர்.

நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு. நேரம் தவறாமல் இருக்கும் நபரை மற்றவர்கள் ரொம்பவே மதிப்பார்கள். தனது வாழ்க்கையை சரியாய் வாழத் தெரிந்தவரே நேரம் தவறாமையைக் கடைபிடிப்பார். அவர் நேர மேலாண்மையில் கில்லாடி என நிர்வாகம் அவரை கண்ணியத்துடன் கவனிக்கும்.

பிறரை நீங்கள் மதிக்கிறீர்கள்என்பதன் முதல் அடையாளம் காலம் தவறாமை. ஒரு சந்திப்புக்காகவோ, வேலைக்காகவோ சரியான நேரத்தில் நீங்கள் ஆஜராகிறீர்களெனில் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவரையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது அதன் வெளிப்படையான பொருள். உங்களுக்காக யாரும் காத்திருப்பதும் நல்லதல்ல, யாருடைய நேரத்தையும் நீங்கள் வீணடிப்பதும் நல்லதல்ல. காலம் தவறாமை சொல்லும் இன்னொரு விஷயம், நீங்கள் அந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள் என்பது தான்.  

நேரம் தவறாமல் சரியான நேரத்தில் வரும் நபர் எப்போதுமே திறமைசாலியாகவும், தன்னம்பிக்கை உடையவராகவும் பரிமளிப்பார். அவருக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். 

காலம் தவறாமை உங்களை நம்பிக்கைக்குரிய நபராய் அடையாளம் காட்டும். சொன்ன நேரத்தில் வருவது. சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பது. ஒப்புக் கொண்ட நேரத்தை மதிப்பது, இவையெல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். 

டயானா டிலோன்சர் எனும் எழுத்தாளர்நெவர் பி லேட் எகைன்எனும் நூலை எழுதினார். இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து மிக சுவாரஸ்யமானது. “நேரம் தவறாமையை பின்பற்றாத மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் தாமதத்தையே தொடர்கிறார்கள். நல்லதோ கெட்டதோ, எங்குமே அவர்களால் சரியான நேரத்தில் இருக்கவே முடிவதில்லைஎன்கிறார் அவர். 

தாமதமாய் வருவது தவறு, அந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும் எனும் சிந்தனை உங்கள் மனதில் முளைக்க வேண்டியது முதல் தேவை. அப்போது தான் உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை நீங்களே கொஞ்சம் அலசுவீர்கள். காலையில் ஏன் தினமும் லேட்டாகிறது ? கொஞ்சம் சீக்கிரம் எழும்பினால் என்ன ? போன்ற சிந்தனைகள் உங்களிடம் அப்போது தான் எழும்.

சரியான நேரத்தில் கலந்து கொள்ளவேண்டும்என எப்போதுமே நினைக்காதீர்கள். பத்து நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள். அப்போது தான் சரியான நேரத்திலாவது நீங்கள் அங்கே இருக்க முடியும். 

நேரம் தவறாமை நமது திட்டமிடுதலைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணமாக, இரண்டு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு மணிநேரத்தை ஒதுக்காதீர்கள்.  முடிக்க முடியாத அளவுக்கு நெருக்கமான கால இடைவெளிகளில் நிகழ்வுகளை வைத்துக் கொள்ளாதீர்கள். அது எப்போதுமே உங்களைச் சிக்கலில் தள்ளி விடும்.

பலருக்கும் உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு வேலையைச் செய்யத் துவங்குவது. சட்டென ஒரு முறை மின்னஞ்சலைப் பார்த்து விடுவோம், ஒரு நபருக்கு போன் செய்து முடித்து விடுவோம் என கடைசி நிமிட பரபரப்பை உருவாக்குவார்கள். உங்களைத் தாமதப்படுத்தும் மிக முக்கிய காரணியே இந்த கடைசி நிமிட திடீர் வேலை தான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

முக்கியமான ஒரு நிகழ்வுக்கு முன்னும் பின்னும் முக்கியமற்ற செயல்களைத் திட்டமிடுங்கள். அப்போது தான் முக்கியமான நிகழ்வை எந்தவித பதட்டமும் இல்லாமல் முடிக்க முடியும்.

எதிர்பாராத வேலைகளுக்காகவென கொஞ்சம் நேரத்தை எப்போதுமே ஒதுக்கி வைத்திருங்கள். போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருக்கலாம், டயர் பஞ்சராகலாம், எதிர்பாராத ஒரு அழைப்பு வரலாம், இப்படி எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து கொஞ்சம்கூடுதல்நேரத்தை ஒதுக்கி வையுங்கள். 

இப்போதைய தொழில் நுட்பம் உங்களுக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்து தருகிறது. செல்போன் அலாரம், ரிமைண்டர்கள், கணினி மென்பொருள்கள் போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி உங்கள் நேரத்தைத் திட்டமிடலாம். அதே போல வீட்டில் எல்லா அறைகளிலும் ஒவ்வொரு கடிகாரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் உங்களுக்கு அது ரொம்பவே உதவும்.

சீக்கிரமே போய்விட்டால் என்ன செய்வது எனும் எண்ணம் பல வேளைகளில் தாமதத்தை உருவாக்கிவிடும். அந்த காத்திருப்பு நேரங்களில் என்ன செய்யலாம் என யோசித்து வையுங்கள். ஒரு புத்தகம் படிப்பது கூட உங்களை சலிப்படைய வைக்காது. 

தாமதமாய் வருவது பெரிய மக்களுக்கே உரிய தகுதி என்றோ, தாமதமாய் வந்தால் நீங்கள் பெரிய நபராகப் பார்க்கப் படுவீர்கள் என்றோ தயவு செய்து நினைத்து விடாதீர்கள். உண்மையில், நேரம் தவறாமை தான் உங்களை தலைமைப் பண்பு உடையவராய்ச் சித்தரிக்கும். பல வாய்ப்புகளின் கதவுகளையும் அது சத்தமில்லாமல் திறந்து வைக்கும். 

சிலவேளைகளில் தாமதம் தவிர்க்க இயலாததாகி விடும். அந்த நேரத்தில் சம்பந்தப் பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவித்து விடுங்கள். தாமதமாய் நுழையும் போது, மன்னிப்புக் கேட்கவும் மறக்க வேண்டாம். ஒருவேளை கலந்து கொள்ளவே முடியாத சூழலெனில்  சாரிஎன முன்னரே மறுத்து விடுதல் நல்லது.

சிலருடைய தாமதத்துக்கான காரணங்கள் சின்னபுள்ளத் தனமானவை. “குழந்தை அழுதுடுச்சு”, “காபி கொட்டிடுச்சு”, ”ஒரு போன் கால் வந்துடுச்சுஎன உச்சுக் கொட்டுவார்கள். இவையெல்லாம் காரணங்களல்ல, உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கும் காரணிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இங்கிலாந்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு, “லேட்டா வருபவர்களால்மேலாளர்கள் எரிச்சலடைகிறார்கள் என்று அடித்துச் சொன்னது. லேட்டா வருபவர்கள் சொல்லும்காரணங்கள்பெரும்பாலும் பொய்களாகவே பார்க்கப்படும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நேரம் தவறாமையைக் கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துத் தான் எதையும் கற்றுக் கொள்ளும். சரியான நேரத்துக்கு தூங்குவது, சாப்பிடுவது, படிப்பது என எல்லாமே பெற்றோரைப் பின்பற்றியே பிள்ளைகள் நடக்கும். நீங்களே குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு லேட்டாய் கொண்டு விட்டீர்களெனில் குழந்தையும் அதையே தான் கற்றுக் கொள்ளும் என்பதை மறக்காதீர்கள் !

கடைசியாக, நேரம் தவறாமையை நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டால் தேவையற்ற பல மன அழுத்தங்களையும், மன உளைச்சல்களையும் நீங்கள் வென்று விடலாம். சொன்ன வாக்கைக் காப்பாற்றி விட்டோம் எனும் ஆழ்மன நிம்மதியும், மகிழ்வும் உங்களை உற்சாகமாய்ச் செயல்பட வைக்கும்.

காலம் தவறா ஆச்சரியம்

வெற்றிக் கிளையில் பூச்சொரியும்

தன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.

$
0
0

கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவர், சிறந்த தலைவராய் இருக்க முடியாதுஎன்கிறார் அரிஸ்டாட்டில். 

நமது வரலாற்றையோ, வாழ்க்கையையோ புரட்டிப் பார்த்தாலே பல தலைவர்கள் சட்டென நமது கண்ணுக்குப் புலப்படுவார்கள். நெல்சன் மண்டேலா நமது மனக்கண்ணில் புன்னகையுடன் வருவார். அடுத்த வினாடியே இறுகிய கண்களுடன் ஹிட்லரும் வரலாம். அன்னை தெரசா மனதில் சிரிக்கும் அடுத்த வினாடியில் ராஜபக்சேவும்  எட்டிப் பார்க்கலாம். சிலர் அவர்களுடைய நல்ல பண்புகளுக்காகவும், சிலர் அவர்களுடைய கொடூர பண்புகளுக்காகவும் நமது மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.

தலைவர்கள் எந்த நிறத்திலோ, எந்த வடிவத்திலோ இருக்கலாம். ஒல்லிப் பிச்சானாய், ஆறடி உயரத்தில் மனதில் தோன்றும் ஆபிரகாம் லிங்கனாகவும் இருக்கலாம், வீல் செயரில் வலம் வரும் ரூஸ்வெல்டாகவும் இருக்கலாம். முதுமையின் சுருக்கம் முகமெங்கும் கூடாரமிட்டிருக்கும் கிருஷ்ணாம்பாளாகவும் இருக்கலாம், பளிச் ஆடையுடன் வலம் வரும் பில்கேட்ஸ் ஆகவும் இருக்கலாம். 

தலைவர்கள் யாரும் ரெடிமேடாய் செய்யப்படுபவர்கள் அல்ல. மக்களிடையே இருந்து புறப்பட்டு வருபவர்கள் தான். ஒரு குழுவில் பத்து பேர் இருப்பார்கள். ஒருவர் தலைவராகிவிடுவார். ஒரு நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் இருப்பார்கள் ஒரு சிலர் தலைவர்களாகிவிடுவார்கள். அந்த குறிப்பிட்ட மனிதர்களை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவர்களிடம் ஏதோ ஒருஸ்பெஷாலிடி  இருப்பது புரியும். தலைவர்களாக வேண்டுமெனும் விருப்பம் நம்மிடம் இருந்தால், இந்த சிறப்புத் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்த்துக் கொண்டாலே போதுமானது !

மனதளவில் உற்சாகமாக இருக்க வேண்டியது தலைவருடைய முதல் பண்பு. உற்சாகமாக இல்லாத ஒரு தலைவரால் தனது குழுவையும் உற்சாகமாக வைத்திருக்க முடியாது. ஏகப்பட்ட எரிச்சல்கள், கஷ்டங்கள், மன அழுத்தம் இவையெல்லாம் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி மனதை உற்சாகமாய் வைத்திருக்க வேண்டியது தலைவருக்கான முக்கியமான தகுதிகளில் ஒன்று.  

கற்காலத்தில் தலைவர்கள் உடல் பலத்தால் நிர்ணயிக்கப் பட்டனர். தற்காலத்திலோ, மக்களோடு இரண்டறக் கலக்க முடிபவர்களே நல்ல தலைவர்கள்என்கிறார் மகாத்மா காந்தி. தலைவர் என்பவர் மக்களோடு கலந்து அவர்களுக்கு முன்னால் செல்லும் ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். தான் எல்லோருக்கும் பணியாளன் எனும் மனநிலை உடையவனே மிகச் சிறந்த தலைவன்.

 சாரிமறந்துட்டேன்என நாம் சகஜமாகச் சொல்லும் வார்த்தை தலைவருடைய அகராதியிலேயே இருக்கக் கூடாது. ரொம்ப நேர்த்தியாக எல்லா செயல்களையும் ஒழுங்குபடுத்திச் செய்ய வேண்டியது அவருடைய மிக முக்கியமான பணி. எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எனும் சிறப்பான திட்டமிடல் ரொம்ப அவசியம்.

தலைவர் என்பவர் எல்லா வேலைகளையும் செய்பவர் அல்ல ! எல்லா வேலைகளையும் செய்ய வைப்பவர். யாரிடம் எந்த வேலையைக் கொடுக்கலாம். எந்த வேலையைக் கொடுக்கக் கூடாது. அவர்களிடம் நாசூக்காய் வேலை வாங்குவது எப்படி எனும் சூத்திரங்களெல்லாம் ஒரு நல்ல தலைவனின் அடையாளங்கள்.

ஜெய் தீசன் என்பவர் ஐந்து மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உழைப்பவர். நல்ல தலைமைப் பண்புகள் கொண்ட அவரிடம் யாராவது ஃபைல் கொண்டு வந்து கையொப்பமிடச் சொன்னாலோ, மெயில் வாசித்து பதில் போடச் சொன்னாலோநேரமில்லை அப்புறம் பார்க்கலாம்என்று ஒதுக்கி வைப்பார். அன்று இரவு அந்த வேலைகளையெல்லாம் வீட்டில் வைத்து முடித்துவிட்டு அலுவலகத்துக்கு வருவார். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவர் ஒரு ரகசியத்தை வெளியிட்டார். “எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது !”. உடன் பணிசெய்தவர்களெல்லாம் அதிர்ந்தனர். இப்படி ஒரு குறையை வெளியே தெரியாமல் எப்படி மறைத்தார் என ரொம்பவே வியந்தனர். தனது 56வது வயதில் தான் கொஞ்சம் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார் அவர்.

மக்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், எப்படிச் செய்ய வேண்டுமென சொல்லாதீர்கள். அப்போதுதான் வியப்பூட்டும் வகையில் வேலை சிறப்பாக நடக்கும்என்கிறார் ஜார்ஜ் எஸ் பேட்டன். இது மக்களுடைய உண்மையான திறமைகளை வெளிகொணரும் நல்ல முயற்சி என்பதைத் தலைவர்கள் அறிவார்கள்.

தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு குணம் தைரியம். சில முடிவுகள் எடுக்கும் போது மன திடம் ரொம்பவே தேவைப்படும். தோல்வியை நேர்மையாய் ஏற்றுக் கொள்வதும் தைரியத்தின் ஒரு பாகமே !

சொல்லப் படாத ஒரு விஷயம் எப்போதும் கேட்கப்படுவதில்லை. தேவையான விஷயங்களை பகிர்ந்து கொண்டே இருப்பது முக்கியமான தலைமைப் பண்பு. அதே போல, பிறர் பேசுவதைக் பொறுமையுடன் கேட்பதும் தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதி. அப்படிக் கேட்கும்போது தான் பல்வேறு விதமான ஐடியாக்கள் தலைவருக்குக் கிடைக்கும். மக்களும் உற்சாகமடைவார்கள்.

தனது மக்களைப் பற்றித் தெரியாதவர் நல்ல தலைவராய் இருக்க முடியாது. வெறும் அலுவலக விஷயங்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களையும்  தெரிந்திருப்பது தலைவருக்கும், அவருடைய குழுவுக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும். 

தன்னம்பிக்கையும், பாசிடிவ் சிந்தனையும் தலைவருக்குத் தேவையான இரண்டு விஷயங்கள். தலைவருக்கே தன்னம்பிக்கை இல்லையேல் குழுவும் தன்னம்பிக்கை இல்லாமல் தான் இருக்கும். 

குழப்பமான வேளையில் வழிகாட்ட வேண்டியது தலைவருடைய இன்னொரு பணி. மற்றவர்களை உற்சாகப் படுத்தி அந்த சூழலை எதிர்கொள்ள வைப்பது அவருடைய சிறப்புத் தகுதி. வேலையைச் சரியாய் செய்வது மட்டுமல்ல, சரியான வேலையைச் செய்வதும் ஒரு தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் கடமையாகும். 

தலைவர் என்பவர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குழுவினருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பவராக இல்லாமல் போனால் ஒருவர் நல்ல தலைவராகப் பரிமளிக்க முடியாது.  

எல்லோருமே ஒரு திறமைசாலியைத் தலைவராகக் கொண்டிருக்கவே விரும்புவார்கள். எனவே தலைவருக்கு நல்ல திறமைகள் இருக்க வேண்டியது அவசியம். தனக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதும், அந்தத் திறமைகளைப் பயன்படுத்துவதும், புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களாகும்.

பல தலைவர்கள் திட்டுவதற்குக் காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுவதற்குக் காட்டுவதில்லை. தனது மக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டுதலாய் இருக்க வேண்டியதும், அப்படிச் செயல்படும் போது மனம் திறந்து பாராட்ட வேண்டியதும் தலைமைப் பண்பின் அம்சங்களாகும். தனது குழுவின் செயல்பாடை வைத்து தான் தலைவரின் மதிப்பு கணக்கிடப்படும் எனும் எண்ணம் எப்போதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டும்.

நிறுவனத்தில் இலட்சியத்தை நோக்கிச் செல்பவராக ஒரு தலைவர் இருக்க வேண்டும். எங்கே இருக்கிறோம், எங்கே செல்ல வேண்டியிருக்கிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் எனும் மூன்று அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்தை அடைய புதுமையான திட்டங்கள், வித்தியாசமான சிந்தனை போன்றவற்றைப் பயன்படுத்தினால் சிறந்த தலைவராகலாம்.

ஆப்பிள் நிறுவன சி.. கடந்த பத்து ஆண்டின் சிறந்த சி.. ஆக சமீபத்தில்  தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு ஜாம்பவான் நிறுவனங்கள் எலக்ட்ரானிக் பிளேயர்களைத் தயாரித்து இசை உலகை ஆக்கிரமித்திருந்த சமயம் அது. தனது புதுமையான திட்டங்களால் இசை, சினிமா, மொபைல் என மூன்று ஏரியாவிலும் புகுந்து பட்டையைக் கிளப்பி, நிறுவனத்தை சரேலென உச்சியில் கொண்டு போய் நிறுத்தினார் இவர். காரணம் இவரிடமிருந்த தனித்துவமான வித்தியாசமான சிந்தனைகள்.

ரிஸ்க் எடுக்கத் தயங்காதவராகவும் தலைவர் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில்கால்குலேட்டட் ரிஸ்க்எனப்படும் கணிக்கப்பட்ட ஆபத்துகளை எடுக்கத் தயங்காதவர் தான் தடைகளைத் தாண்டி முன்னேற முடியும். எல்லோரையும், எப்போதும் திருப்திப் படுத்துவது தலைவருடைய வேலையல்ல. எல்லோரையும் எப்போதும் கூடவே வைத்துக் கொள்வதும் தலைவருடைய பணியல்ல என்பதை ஒரு தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருங்கள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தத் திறமைகளை உங்களுடைய அலுவலகத்தில் வெளிப்படச் செய்யுங்கள். விரைவிலேயே தலைமைப் பதவிகள் உங்களை வந்தடையும் !

உங்களுடைய வெற்றிக்கான காரணம் என்ன ?” 

வெற்றிகரமான ஒரு நிறுவனத் தலைவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்.

சரியான முடிவுகள் ! . சரியான முடிவுகளை எடுப்பதால் தான் நான் வெற்றியடைந்திருக்கிறேன்.” அவர் பதில் சொன்னார்.

சரி, எப்படி உங்களுக்குச் சரியான முடிவுகளை எடுக்கும் திறமை கிடைத்தது

அனுபவம் ! அனுபவமே எனக்கு சரியான முடிவுகளை எடுக்கக் கற்றுத் தருகிறது.

அது சரி.. அனுபவத்தை எப்படிப் பெற்றுக் கொண்டீர்கள்

சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் அவர், தவறான முடிவுகளை எடுப்பதனால் அனுபவம் கிடைக்கிறது”.

துணிவும், பணிவும் தலைமைக்கு

இருந்தால் வாழ்க்கை வளமைக்கு !

Viewing all 490 articles
Browse latest View live