Quantcast
Channel:
Viewing all 490 articles
Browse latest View live

ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல

$
0
0

ஊருக்கு தான் உபதேசம்
எனக்கல்ல

 

Image result for giving advice

*

“நேற்று ஆபீஸ் போயிட்டிருந்தப்போ எனக்கு படபடப்பா வந்துச்சு, வியர்த்துக் கொட்டிச்சு, காலியாயிடுவேன்னு நினைச்சேன். ஒருவழியா ஆபீஸ் போய் சேர்ந்தேன்.நல்ல வேளை மெடிக்கல் டெஸ்ட்ல பிரச்சினை ஒண்ணும் இல்லேன்னு சொல்லிட்டாங்க” என்றான் நண்பன்.

“உடம்பு போட்டுச்சுப்பா.. தொப்பை வேற பெருசாயிட்டே போவுது. டெய்லி காலைல வாக்கிங் போ.. ” என்றேன் கரிசனையுடன். அருகில் நின்றிருந்த என் மனைவி என்னைப் பார்த்த பார்வையில் நக்கலும், கிண்டலும் நாலு கால்ப் பாய்ச்சலில் ஓடித் திரிந்தன. நாலு வருஷமாய் எப்படியாவது என்னை வாக்கிங் போக வைக்கலாம் என கற்ற வித்தை அத்தனையும் மொத்தமாய் இறக்கியும் தோற்றுப் போய் நின்றவள் அவள்.

திரும்பும் வழியில் மனைவி சொன்னார், “ஊருக்கு தான் உபதேசம். சொல்றது ஒண்ணையும் செய்றதில்லை ” ! கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது அக்மார்க் உண்மை என என்னுடைய வாழ்க்கை அனுபவமே கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது. ஏன்னா சொல்றது ஈசி. அதுல எந்த கஷ்டமும் இல்லை. அட்வைஸ் பார்ட்டிகளை ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ எனும் பிரிவின் கீழ் அடுக்கி வைக்கலாம்.

சீக்கிரம் படுத்து தூங்குங்க என பிள்ளைகளை விரட்டும் நாம் தூங்குவதென்னவோ நள்ளிரவை நெருங்கும் போது தான். ராக்கெட் விடுகின்ற வேலை ஏதும் இல்லை, வெட்டியாக தொலைக்காட்சியையோ, ஸ்மார்ட்போனையோ நோண்டிக்கொண்டிருக்கும் வேலை தான். அட்வைஸை விட பயனுள்ளது ஒரு முன்மாதிரி வாழ்க்கை என்பதை நாம் உணர்வதில்லை.

எனக்கு அவ்வப்போது தோன்றும்,

கடந்த தலைமுறை ஆட்கள் நம்மை அட்வைஸ் செய்து கடுப்படித்ததால் தான் இப்போது நாம் அட்வைஸ் கூடைகளுடன் அலைகிறோமோ என்று.

“அதிகாலையில எழும்பி படிடா… மனசுல நல்லா பதியும்” என அப்பா சொன்னதுண்டு. நான் கேட்டதில்லை. ஆனால் இப்போது அந்த அட்வைஸை பிள்ளைகளுக்குக் கொடுக்கத் தவறுவதில்லை.

ஹெல்தியா சாப்பிடுடா. எதுக்கு இந்த ஜங்க் ஃபுட் எல்லாம் சாப்பிடறே ? காய்கறி, பழம் எல்லாம் தான் உடம்புக்கு நல்லது தெரியுமா ? அதுல என்னென்ன சத்து இருக்கு தெரியுமா ? என நான் அடுக்கிக் கொண்டே போகும் அட்வைஸின் போது அம்மாவின் குரல் மனதில் கேட்கும். “டேய், இதையெல்லாம் நான் சொன்னப்போ கேட்டியா ?”

ஊருக்கு தான் உபதேசம். நாம் அதில் எதையும் கண்டுகொள்வதில்லை. அல்லது பெரும்பாலானவற்றைக் கண்டு கொள்வதில்லை.

ஒரு காரணம், அட்வைஸ் எளிது. ஒருவர் உதவி நாடி நம்மிடம் வருகிறார் என வைத்துக் கொள்வோம், அவர்களுடைய தேவைக்கு கொஞ்சம் பணம் கொடுப்பதை விட எளிது நாலு அட்வைஸை கொடுப்பது. அந்த அட்வைஸை வைத்து அவர் என்ன வீடா கட்ட முடியும் ?

இரந்து திரிபவரிடம், “வேலைக்கு போலாம்ல” என்பதில் தொடங்கி, அலுவலகத்தில், “இதை அப்படி செய்திருக்கலாம்ல” என்பது வரை அட்வைஸ்கள் நம்மிடமிருந்து புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் எப்படி பிறருடைய அட்வைஸ்களை கிழித்துக் காற்றில் பறக்கவிடுகிறோமோ அதே போல தான் நம்முடைய அட்வைஸ்களையும் பிறர் கிழித்துக் கால்வாயில் மிதக்க விடுவார்கள். கடலில் பெய்யும் மழையினால் வேருக்கென்ன லாபம் ?

நம்மிடம் ஒருவர் வந்து எனக்கு இந்த விஷயத்துல கொஞ்சம் அட்வைஸ் கொடுங்க என கேட்டால், காது கொடுத்துக் கேளுங்கள். “உன் பிரச்சனை உன் பாடு. இதுல எல்லாம் என்னோட அட்வைஸ் கேக்காதே’ என உதாசீனப்படுத்தாதீர்கள். சக மனிதனின் கவலை நமது கவலை எனும் சிந்தனை கொள்ளுங்கள்.

ஒருவேளை ஒருவர் நம்மிடம் அட்வைஸ் கேட்கவில்லையேல், தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அட்வைஸை எறியாதீர்.

சரி, அதுவும் எப்படிப்பட்ட சூழல்களில் அட்வைஸ் செய்யலாம் ?

ஒருவர் வந்து, ‘மட்டன் பிரியாணி பண்ணலாமா, சிக்கன் பிரியாணி பண்ணலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க ?” என கேட்டால் நீங்கள் ஆச்சார சைவமாய் இருந்தால் அமைதியாய் இருப்பதே நல்லது. அதை விட்டு விட்டு பத்து நிமிடம் அவரிடம் மட்டன் பிரியாணி புராணத்தைச் சொல்ல ஆரம்பிக்காதீர்கள். இல்லையே, “நான் தயிர்சாதம் மட்டும் தான் சாப்பிடுவேன். ஆனா என் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் மட்டன் பிரியாணி தான் பிடிக்கும்” என சொல்லலாம்.

சுருக்கமாக, எது நமக்குத் தெரியுமோ, எதில் நமக்கு அனுபவம் இருக்கிறதோ, அதைப்பற்றிய ஆலோசனைகளை மட்டுமே சொல்லவேண்டும் என்பதை ஒரு அடிப்படை விதியாகக் கொள்ளலாம்.

அதேபோல என்னோட ஹெல்த்துக்கு நான் ஏதாச்சும் பண்ணனும். என்ன பண்ணலாம் என ஒருவர் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். “டெய்லி காலைல சிரசாசனம் பண்ணுங்க. அப்படியே சர்வாங்காசனமும் முடிச்சுட்டு, சைக்ளிங் போங்க” என உங்களுடைய பட்டியலை ஒப்புவிக்காதீர்கள். வந்து கேட்பவருடைய நிலமை என்ன ? அவருடைய வயது என்ன ? அவருடைய உடல்நிலைக்கு எது தாக்குபிடிக்கும் என பல விஷயங்களை அறிந்து சொல்லுங்கள். அல்லது வேறு ஒரு பயிற்சியாளரை அணுகச் சொல்லுங்கள்.

சுருக்கமாக, உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதற்காக எல்லோருக்கும் அது ஒத்து வரும் என நினைப்பது தவறு. அனுபவம் இருக்கும் எதையும் அட்வைசாக எல்லோருக்கும் சொல்லவும் கூடாது. அடுத்தவர் பார்வையில் அதை அலசிய பிறகே சொல்லவேண்டும்.

உங்களிடம் ஒருவர் அட்வைஸ் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது அவர்களுடைய தேவை சார்ந்த விஷயம் தானே தவிர, உங்களுடைய அறிவு சார்ந்த விஷயம் அல்ல. எந்த நோக்கத்துக்காகக் கேட்கிறாரோ அந்த விஷயத்தைப் பற்றிய அறிவுரைகளை மட்டும் நல்குங்கள். “ஒரு நாய்க்குட்டி வாங்கலாம்ன்னு இருக்கேன். என்ன பிரீட் வாங்கலாம்” என ஒருவர் கேட்டால் உடனே உற்சாகமாகி நாய்ங்கறது என்ன தெரியுமா ? என கிமு கதைகளை ஆரம்பிக்காதீர்கள். எது தேவையோ அதைச் சொல்லுங்கள்.

சுருக்கமாக, எனக்கு இதெல்லாம் தெரியும் என்பதை வெளிப்படுத்துவதல்ல அட்வைஸ். உனக்கு எது தேவை என்பதைப் பரிமாறுவது மட்டுமே.

ஒருவர் உங்களிடம் ஒரு அட்வைஸ் கேட்டால், முழுமையாய் புரிந்து கொள்ளும் முன் அறிவுரை சொல்ல ஆரம்பிக்காதீர்கள். ஏன் இந்த அறிவுரை ? எதை நிறைவேற்றப் போகிறீர்கள் ? உங்களுடைய இலட்சியம் என்ன ? எதை நோக்கிய பயணம் உனது ? என பல விஷயங்களைக் கேட்டு பின்னர் அதற்குத் தக்கபடி ஒரு பதிலை சொல்லுங்கள். உதாரணமாக “என்ன படிக்கலாம் ?” என கேட்பவனிடம் “விமானியாகறதுக்குப் படி” என சொல்வதை விட, “உன் விருப்பம் என்ன ? உனக்குப் பிடித்தது என்ன ?” என்பதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உயரத்தைப் பார்த்தாலே பயப்படுபவனுக்கு மாலுமி ஆவது சரியான தேர்வாய் இருக்காது.

சுருக்கமாக, துப்பாக்கிக்கு உள்ளே நுழைந்து சுடுவதை நிறுத்த வேண்டும். ஒரு அறிவுரை சொல்லும் முன் அறிவுரை கேட்பவரின் நோக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சில இடங்களில் தோல்வியடைந்திருப்போம். அந்த இடங்களில் எல்லோரும் தோல்வியடைவார்கள் என முடிவு செய்து விடக்கூடாது. சிலருக்கு சில விஷயங்கள் இயல்பாகவே வரும். சிலருக்கு சில விஷயங்கள் சுட்டுப் போட்டாலும் வராது. எனவே நமது தோல்வியின் சுவடை அடுத்தவரின் தலையில் ஆலோசனையாய்ச் சுற்றி வைக்கக் கூடாது.

சுருக்கமாக, அட்வைஸ் என்பது பிறரை உற்சாகமூட்டுவதாய் இருக்க வேண்டும். நமது தோல்வியின் பயத்தையோ, எதிர்சிந்தனையையோ பிறர் மனதில் விதைப்பதாய் இருக்கக் கூடாது.

நம்முடைய உணர்வு நிலையும், பிறருடைய உணர்வு நிலையும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை. சிலர் ரொம்பவே சென்சிட்டிவ் ஆக இருப்பார்கள். சிலர் எருமை மாடு கணக்கா இருப்பார்கள். இருவருக்கும் ஒரே மாதிரி அட்வைஸ் ஒத்து வராது. உதாரணமாக “என் மாமியாருக்கு நான் ஒரு பதில் சொல்லணும், அட்வைஸ் பண்ணு” என தோழி கேட்டால் என்ன சொல்வீர்கள் என யோசித்துப் பாருங்கள்.

சுருக்கமாக, கேட்கும் நபருடைய இயல்பு, குணாதிசயம் போன்றவற்றைப் புரிந்தபின் அதற்கான பதிலைச் சொல்வது மிகச் சிறப்பு.

நீங்கள் ஒரு சிறந்த நண்பராகவோ, சமூக ஆர்வலராகவோ, வயது முதிர்ந்தவராகவோ, நிறைய அனுபவம் உடையவராகவோ இருக்கலாம். அதற்காக எல்லாம் தெரியும் எனும் எண்ணம் இருக்கவே கூடாது. சில அட்வைஸ்களுக்கு சிலரை நாடும்படி வைக்க வேண்டும். “நான் தற்கொலை பண்ணலாம்ன்னு இருக்கேன். எப்படி பண்ணலாம்” என ஒருவர் கேட்டால், அவரை கையோடு கூட்டிக்கொண்டு போய் கவுன்சிலிங்கில் உட்கார வைக்க வேண்டும்.

சுருக்கமாக, எல்லா விஷயத்துக்கும் நாமே அட்வைஸ் சொல்ல வேண்டும் என்பதில்லை. சரியான நபர்களிடம் நாம் அவர்களை அனுப்பி வைப்பது மிகச்சிறந்த செயலாக இருக்கும்.

அதே போல எந்த ஒரு விஷயத்திலும் நாம் சொல்கின்ற அட்வைஸ் மனித மாண்புக்கும், மனித நேயத்துக்கும், அழகான உறவுகளுக்கும் எதிரான ஒன்றாய் இருக்கவே கூடாது. அதன் பெயர் அட்வைஸ் அல்ல. விஷம். அட்வைஸ் ஒருவரை வாழவைக்கும். அவர் சார்ந்த சமூகத்தையும் வாழ வைக்கும். ஆனால் விஷம் ஒருவரை அழிக்கும் விஷமத்தனமானது.

சுருக்கமாக, நமது அட்வைஸ் எதிர்மறை விளைவை எங்கும் உருவாக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

கடைசியாக ஒன்று. நான் இதுவரை எழுதிய எதுவுமே உங்களுக்கான அட்வைஸ் அல்ல. கண்ணாடி முன்னால் நின்று எனக்கு நானே சொல்லிக் கொண்டவை. எனவே தயவு செய்து அட்வைஸ் பிரம்புடன் அடிக்க வராதீர்கள்.

*

சேவியர்.


தன்னம்பிக்கை : இல்லையென்றாலும் கவலையில்லை

$
0
0

ஆஸ்திரேலியாவிலிருந்த அந்த மருத்துவமனை வராண்டாவில் பதட்டத்துடன் காத்திருந்தார் தந்தை. உள்ளே அவருடைய மனைவிக்குப் பிரசவம். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அப்பாவுக்கு ஒரே சந்தோசம். கொஞ்ச நேரத்திலேயே மகனைக் கொண்டு வந்து காட்டினார்கள். ஆர்வத்துடன் மகனைப் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை. நிக் வாயிச்சஸ் பிறந்த 1982ம் ஆண்டு டிசம்பர் 4 பெற்றோருக்கு துயர நாளாய் ஆகிவிட்டது.

ஐயோ இவன் என்ன செய்வான் ? இவனால் நடக்க முடியாதே, கையால் செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்ய முடியாதே. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். குழந்தை சிறுவனானான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். பள்ளிக்கூடத்தில் அவமானப் பார்வையும், பரிதாபப் பார்வையும் அவனைப் புரட்டிப் போட்டன. எல்லோரைப் போலவும் தான் இல்லையே என அழுத அவனுடைய ஒரே பிரார்த்தனை என்ன தெரியுமா ? “கடவுளே முடி வளர்வது போல, என்னோட கை கால்களும் வளரட்டுமே என்பது தான்”.

முடியைப் போல கை கால்கள் வளராது எனப் புரிந்த வயதில் தற்கொலை செய்ய முயன்றான் சிறுவன் நிக். அதிலும் அவனுக்கு வெற்றியில்லை. தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு. எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தில் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும். ஒரு நாள் ஒரு மாற்றுத் திறனாளி கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கால்ஃப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன. 

அதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார். அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான காலண்டர். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது. கால்ஃப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

இன்று 24க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். இலட்சக் கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர்லைஃப் வித்தவுட் லிம்ப்எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.

கணினி மென்பொருள் போன்ற நிறுவனங்களில் பணியாளர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட இவருடைய வீடியோ காட்சிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. நாம் தடுமாறி கீழே விழுந்தால் கைகளை ஊன்றி எழுவோம். அல்லது கால்களைக் கொண்டு எழுவோம். காலும் கையும் இல்லாத அவர் விழுந்து விட்டு எழும் காட்சியை வீடியோவில் பார்க்கும் போது தன் மேல் குறையிருக்கிறது என்று நினைக்கும் எல்லோருமே அந்த நினைப்பை மாற்றிக் கொள்வது உறுதி !

தனக்கு ஏதோ குறையிருக்கிறது என்று நினைப்பது இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறியிருக்கிறது. நான் கொஞ்சம் கறுப்பா இருக்கேனோ ? இன்னிக்கு போட்டிருக்கிற டிரஸ் என்னை கொஞ்சம் டல்லா காட்டுதோ ? என்பது தொடங்கி தங்களுக்கு ஏதோ குறை இருப்பதாய் கற்பனை செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இன்று அனேகம். 

நல்லா இருப்பவர்களே இப்படி இருந்தால் கொஞ்சம் குறைபாடு உள்ளவர்களுடைய கதி என்னாவது ? “கொஞ்சம் முதுகு வலி. அதுமட்டும்  இல்லேன்னா பட்டையைக் கிளப்பியிருப்பேன்…. ”,”எனக்கு இங்கிலீஷ் தான் பேச வராது. அது மட்டும் இல்லேன்னா நான் எங்கேயோ போயிருப்பேன்… “  என சாதாரணமான பிரச்சினைகளைக் கூட பேனர் கட்டி விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். 

சாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844ல் பிறந்த இவர் பிரஞ்ச் நாடக உலகையும் திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம்படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் தீரவேயில்லை. அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று ! புகழில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் ? அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள். ஆனால் அவர் அசரவில்லை. அதன் பின்பும் மரணம் வரை தனது வசீகரக் குரலாலும், நடிப்பாலும் பிரஞ்ச் உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.

தான் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலானவன். என் குணாதிசயங்களும், திறமைகளும் எனக்கு மட்டுமே எனும் சிந்தனை இன்று பலருக்கும் வருவதேயில்லை. “காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் அன்றைய தினம் முழுதும் உங்களோடு கூடவே வரும்என்பதுதான் உளவியலின் பால பாடம்.

ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசினால் ஜான் மில்டன் அவர்களுடையபேரடைஸ் லாஸ்ட்எனும் படைப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பதினேழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு இன்றும் ஆங்கில இலக்கியத்தில் அசையா இடத்தில் இருக்கிறது அந்த நூல். அதை எழுதும்போது மில்டனுக்குப் பார்வையே இல்லை தெரியாது என்பதை அறியும் போது அதிரவைக்கும் வியப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

ஒரு டம்ளரில் பாதி தண்ணீர் ஊற்றி கொடுத்தால், அடடா பாதி காலியா இருக்கே என்று சொல்வது சோர்ந்தவர்களின் சிந்தனை. ஆஹா, பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்வது தான் நிக் போன்றவர்களின் சிந்தனை. எந்தக் குறை உடலில் இருந்தாலும் மனம் வலுவாய் இருந்தால் சாதிப்பதற்குத் தடை ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா ? செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமாஎன்பார்கள். பதில் முடியும் என்பது தான் ! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே ! அவர் சிம்பொனி அமைத்த போது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது ! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையை ரசிக்க முடியாதா ?

எது இல்லாமலும் ஒரு மனிதனால் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் எனும் வேகமும், சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதுமானது. 

1880ம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள ஆர்தர்கேட் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகான குழந்தை ஒன்றரை வயது வரை வெகு சாதாரண குழந்தையாய் தான் இருந்தது. திடீரென வந்த ஒரு நோய் குழந்தையின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. பார்வை போய்விட்டது. கேட்கும் திறனும் போய்விட்டது. பார்க்காமல், கேட்காமல் இருந்த அந்தக் குழந்தையை எப்படி வளர்த்துவதென திகைத்தனர் பெற்றோர்.

படிக்க வைப்பது எப்படி ? பாடம் சொல்லிக் கொடுப்பது எப்படி ? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனி சுலிவன் எனும் பெண் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் துணிந்தார். எப்படி ? ஒரு கையில் பொம்மையை வைப்பார், மறு கையில் பொம்மை என ஆங்கிலத்தில் என எழுதுவார். ஆனால் குழந்தையால் ஒரு கையில் இருக்கும் பொருளுக்கான வார்த்தை தான் மறுகையில் எழுதப்படுவது என்பது மட்டும் புரியவேயில்லை. ஒரு நாள் ஒருகையில் குளிர்ந்த நீரை திறந்து விட்டுவிட்டு மறுகையில்வாட்டர்என எழுதியபோது தான் குழந்தைக்கு பளிச் என மனசுக்குள் பல்ப் எரிந்திருக்கிறது. பின் அசுர வேகத்தில் வார்த்தைகள் கற்பிக்கப்பட்டன.

இவளால் என்ன செய்ய முடியும் என பரிதாபமாய்ப் பார்க்கப்பட்ட அந்த பெண் உலகையே பிரமிக்க வைத்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்றார். உலகிலேயே கேட்கும் திறன் மற்றும் பார்வை இரண்டும் இல்லாமல் பட்டம் பெற்ற முதல் நபர் எனும் பெருமை அவருக்குக் கிடைத்தது. பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் முன்னேற்றக் குழுக்கள் போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினரானார். மிகச் சிறந்த பேச்சாளராகவும், அசத்தலான எழுத்தாளராகவும் பரிமளித்தார். பன்னிரண்டு நூல்கள், பல நூறு கட்டுரைகள் என அவருடைய எழுத்துப்பணி பிரமிப்பூட்டுகிறது. அமெரிக்க அரசு சிறப்பு நாணயம் வெளியிடுமளவுக்கு பெருமையடைந்த அந்தப் பெண்மணி தான் ஹெலன் கெல்லர்.

நம்மிடம் எது இல்லை என்று பார்த்து முடங்குவது துயரங்களின் தெருக்களில் நடப்பது போன்றது. நம்மிடம் என்ன ஸ்பெஷல் என்று பார்த்து வாழ்வதே வெற்றியின் வீதிகளில் வீறு நடை போடுவது போன்றது. நமது உடல் தான் நமது மனத்தைத் தூக்கிச் சுமக்கிறது என நாம் தவறாக நினைத்து விடுகிறோம். இல்லை ! நமது மனம் தான் நம்மை அதன் விருப்பத்துக்கு ஏற்ப அழைத்துச் செல்கிறது. 

உறுதியான மனமே சாதனையின் ஆதாரம்.

அதுமட்டும் இல்லையேல் வாழ்வே சேதாரம்.

Digital Addiction : வினையாகும் விளையாட்டு

$
0
0

Image result for digital addiction

கடந்த வாரம் தனது ஆறு மாதக் கைக்குழந்தையோடு வீட்டுக்கு வந்திருந்தார் உறவினர் ஒருவர். கொஞ்ச நேரத்தில் அம்மாவின் கையிலிருந்த குழந்தை அழத் துவங்கியது. உடனே குழந்தையின் அப்பா தனது ஸ்மார்ட்போனை ஆன் பண்ணிக் குழந்தையின் கையில் கொடுத்தார். சட்டென அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்தது குழந்தை.

சமீபத்தில் இரண்டு செய்திகளைப் படித்தேன். பப்ஜி விளையாட்டில் ஆர்வமாயிருந்தான் ஒரு பதின் வயது சிறுவன். அவனைப் பெற்றோர் கண்டித்தார்கள் என்பதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டான். இன்னொரு செய்தியில், தொடர்ந்து பப்ஜி விளையாடிக்கொண்டே இருந்த இளைஞனை பெற்றோர் கண்டித்தார்கள். விளைவு தனது தந்தையையே கொலை செய்து விட்டான் மகன்.

இரண்டாவது பத்தியில் எழுகின்ற அதிர்ச்சிகளுக்கான பிள்ளையார் சுழியை முதல் பத்தியில் எழுதப்பட்டிருக்கின்ற நிகழ்வு இடுகிறது. மழலைப் பருவத்தில் விதைக்கின்ற தவறுகள் பதின் வயதுகளில் விளையத் துவங்குகின்றன. கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பார் என படித்த காலங்கள் எல்லாம் பழசாகிப் போய்விட்டன. இப்போது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஸ்மார்ட்போன்கள் தான்.

ஜவுளி கடைகளில் பெற்றோர் துணி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஓரமாய் இருக்கைகளில் அமர்ந்து பிள்ளைகள் போனில் கேம் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். துணி எடுக்கும் பெற்றோருக்கு தொந்தரவு இருக்கக் கூடாதாம். இரயில் பயணங்களில் பிள்ளைகள் கைகளில் ஸ்மார்ட்போனோடு இருக்கைகளில் ஒட்டவைக்கப்பட்டிருப்பார்கள். அங்குமிங்கும் ஓடிட்டு திரியக் கூடாதாம்.

“பையன் அழுவான், கொஞ்ச நேரம் விளையாடட்டும்”. ” போனை குடுக்கலேன்ன ஒரு வேலை செய்ய முடியாது.. சத்தம் போட்டுட்டே இருப்பான்”. “அவன் ரொம்ப சேட்டை, போனை குடுங்க அவன் ஏதாச்சும் பண்ணிட்டு இருக்கட்டும்” என்பன போன்ற சிந்தனைகள் தான் பிற்காலத்தில் பிள்ளைகளை ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக்குகிறது. முதலில் பிள்ளைகளை அமைதியாக உட்கார வைக்கும் சங்கிலியாய் இருக்கும் போன்கள், பின்னர் அவர்களுடைய வாழ்வின் குரல்வளையை நெரிக்கும் தூக்குக் கயிறுகளாய் மாறிவிடுகின்றன.

பிள்ளைங்க கொஞ்ச நேரம் விளையாடினா என்ன தப்பு ? எனும் அலட்சியப் போக்குகள் தான் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளை விளையாட்டுகளுக்கு அடிமையாக்குகின்றன. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘கம்ப்யூட்டர் விளையாட்டு அடிமைத்தனம்’ என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால் இன்று அது சீரியஸ் விஷயமாக மாறியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக உலக நலவாழ்வு நிறுவனம் ( ) தனது பட்டியலில் விளையாட்டு அடிமைத்தனம் (கேமிங் அடிக்ஷன்) என்பதையும் புதிதாகச் சேர்த்திருக்கிறது. சர்வதேச அளவில் விளையாட்டுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதே இதன் காரணம். இப்போது பல நாடுகள் இதை “மென்டல் டிஸார்டர்” அதாவது மனக் குறைபாடு என்று ஒத்துக் கொண்டு அதற்கான சிகிச்சைகளையும் அளிக்கின்றன.

எனவே இது விளையாட்டு சமாச்சாரமல்ல, சீரியஸ் சமாச்சாரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிள்ளைகளை இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும். பிள்ளைகளுக்கு கேம்ஸ் அடிக்சன் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும், அதிலிருந்து அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே கொண்டுவருவதும் அவசியம்.

முதலில் அதை நம்மிடமிருந்து துவங்க வேண்டும். நமது செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் குழந்தைகளோடு இருக்கும் போதாவது செல்போன்களை மூட்டை கட்டி ஓரமாய் வைத்து விட வேண்டும். பெற்றோரின் நடவடிக்கைகளைப் பார்த்தே பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்பதை உணரவேண்டும்.

பிள்ளைகள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாய் இருக்கிறார்களா என்பதைச் சோதித்தறிய சில வழிகள் உண்டு. கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

1. விளையாட்டைப்பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பது. மற்ற விஷயங்களைப் பேசும்போது கூட விளையாட்டு நினைவாகவே இருப்பது.

2. விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லையேல் வருந்துவது. எரிச்சல் படுவது. கோபப்படுவது. எதிர்ப்பை ஏதோ ஒரு வகையில் தீவிரமாய்க் காட்டுவது.

3. விளையாட ஆரம்பித்தால் நிறுத்த முடியாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பது. இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என நீடிப்பது.

4. முன்பு ஈடுபட்டிருந்த மற்ற செயல்களிலெல்லாம் ஆர்வம் குறைவது. அல்லது வேறெதிலும் ஆர்வமே இல்லாமல் போவது.

5. படிப்பில் ஆர்வம் குறைவது. கவனம் செலுத்த முடியாமல் போவது. கவனச் சிதைவு ஏற்படுவது.

6. மற்ற விஷயங்களிலுள்ள பாதிப்பு எதையுமே கருத்தில் கொள்ளாமல் விளையாட்டின் மீது மீண்டும் மீண்டும் வேட்கை கொள்வது.

7. விளையாடுவதற்காக பொய் சொல்வது. எப்படியாவது விளையாட விரும்புவது. முக்கியமான தேர்வு நேரங்களில் கூட விளையாட விரும்புவது.

8. எல்லாவற்றையும் விட முதன்மையானதாக விளையாட்டு மாறிப் போவது. விளையாட்டில் மட்டுமே மன திருப்தி கிடைப்பது.

9. பிறரோடு உள்ள உறவுகள் குறைந்து குறைந்து, டிஜிடல் உறவு அதிகரிப்பது. மற்ற நேரங்களில் அமைதியாய் இருக்க நினைப்பது. குணாதிசயங்களில் மாறுதல்கள் நிகழ்வது.

10. உடல் எடை குறைதல், தூக்கம் தடுமாறுதல், சாப்பாடு குறைவது, மயக்கம் வருவது போன்ற உடல் பாதிப்புகள்.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தை விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கிறது என்று பொருள். அந்த ஆர்வம் வளர்ந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வர உதவுங்கள்.

அதற்காக உடனே ஓடிப் போய் எல்லா டிஜிடல் கருவிகளையும் உடைத்து விட்டு, “சுபம்” போட நினைக்காதீர்கள். அது எதிர் விளைவுகளைக் கொண்டு வரும். சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

1. எதுவும் அளவோடு இருப்பது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு விளையாட குறிப்பிட்ட நேரம் கொடுங்கள். உதாரணமாக, வார இறுதிகளில் தினம் ஒன்றோ இரண்டோ மணி நேரங்கள் கொடுக்கலாம். எவ்வளவு நேரம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் விளையாடும் நேரத்தை நாள்காட்டியில் குறித்து வைக்க வேண்டும்.

2. இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விளையாட அனுமதிக்கவே கூடாது. அதில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

3. கணினியையோ, விளையாட்டு கருவியையோ, மொபைலையோ விளையாட அனுமதித்தால் அது பெற்றோரின் முன்னால், பொது இடத்தில் இருக்க வேண்டும். தனியறைகளில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.டிஜிடல் நேரத்தைக் குறைத்து பிள்ளைகளை வேறு விளையாட்டுகளில் ஈடுபட வைக்க வேண்டும். வெளியே அழைத்துச் செல்வது. பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது போன்றவற்றின் மூலம் டிஜிடல் ஆர்வத்தைக் குறைக்கலாம்.

5. வீட்டுப்பாடம், படிப்பு போன்றவற்றை முதன்மையாய் வைத்திருப்பது. அதை எல்லாம் முடித்த பின்பே விளையாட அனுமதிப்பது மிக முக்கியம். விதிமுறைகளை மீறாமல் இருக்க வேண்டியது அவசியம். மீறினால் டிஜிடல் டைம் குறையும் என சொல்லுங்கள்.

6. டிஜிடல் விளையாட்டுகளினால் நிகழ்கின்ற உடல், உளவியல் பிரச்சினைகளை பிள்ளைகளிடமும், அவர்களுடைய நண்பர்களிடமும் வாய்ப்புக் கிடைக்கும்போது பேசுவது. அதை தகவல் பகிர்தலாகவோ, ஒரு நண்பனின் அறிவுரை போலவோ சொல்வது பயனளிக்கும்.

7. குழந்தைகளுக்கு உடற்பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும். உடல் உற்சாகமாக இருக்கும் போது டிஜிடல் ஆர்வம் குறையத் துவங்கும். உடலின் சோர்வும், உடலின் ஆக்சிஜன் குறைபாடும் டிஜிடல் ஆர்வத்தை அதிகரிக்கும்.

8. குடும்ப நேரம், நண்பர்களின் நேரம், உறவினர்களின் நேரம் இவற்றை அதிகரிக்க வேண்டும். உறவுகளைக் கட்டியெழுப்பும் போது மாற்றங்கள் உருவாகும்.

9. ‘இந்த ஒரு கேமையும் முடிச்சுட்டு வரேன்’ போன்ற விண்ணப்பங்களை நிராகரியுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் விளையாட்டை முடித்து விட்டு, அல்லது ‘சேமித்து’ விட்டு வெளிவர குழந்தைகளைப் பழக்குங்கள். ‘இன்னும் பத்து நிமிசம் தான் இருக்கு… கேமை சேவ் பண்ணிக்கோ’ என அன்பாய் அறிவுறுத்து அவர்களை மெல்ல மெல்ல பழக்குங்கள்.

10. தொடர் விளையாட்டுகள், நண்பர்களோடு ஆன்லைனில் இணைந்து விளையாடுவது, அடிமைத்தனத்துக்கு மிக எளிதில் கூட்டிச் செல்லும் விளையாட்டுகள் போன்றவற்றை தவிர்த்து வேறு விளையாட்டுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விளையாடச் சொல்லுங்கள்.

டிஜிடல் விளையாட்டுக்கு அடிமையாகிப் போன சிறுவர்களை மீட்பது எளிதான செயல் அல்ல. ஆனால் மிகவும் தேவையான செயல். மது, போதை, புகை போன்ற அடிமைத்தனங்களைப் போலவே வலிமையானது டிஜிடல் அடிமைத்தனம். ஒருவேளை உங்களால் உங்கள் குழந்தையை வெளிக்கொணர முடியவில்லையேல் உளவியலார்களின் ஆலோசனையை நாடுங்கள். சிறுவர் கவுன்சிலிங் பயனளிக்கும்.

ஸ்மார்ட்போன்களும், டிஜிடல் கருவிகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால் நிச்சயம் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடியவையே. தடுமாறாமல் இருப்போம், தலைமுறையைக் காப்போம்.

*

சேவியர்

தன்னம்பிக்கை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.

$
0
0

எப்படா அடுத்தவனை அவமானப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என அல்ப சந்தோசத்தோடு அலையும் மக்கள் எக்கச்சக்கம். ஏன் தான் மக்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்களோ ? என நாம் பல வேளைகளில் தலையைப் பிய்த்துக் கொள்வோம். விஷயம் புரிபடாது ! பெரும்பாலான அவமானங்கள் மூன்று வகை தான். ஒன்று நம்ம உருவம் சார்ந்தது. இரண்டாவது நமது செயல் சார்ந்தது. மூன்றாவது நமக்கு சம்பந்தமே இல்லாத நம்ம சூழல் சார்ந்த விஷயம். 

இதுல ஏதாவது நாலு குறை கண்டுபிடித்து நம்ம காதுல கொஞ்சம் ஈயம் ஊற்றிட்டு அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க. நாம அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம். இல்லேன்னா, அந்த அவமானத்தை மறைக்க நம்ம பங்குக்கு நாமும் நாலுபேரை இன்சல்ட் பண்ணிட்டு திரிவோம்.  இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.

நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடி கட்டிக் குடியிருக்கலாம்.

ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் ஒரு பெண் போய் நடிக்க  வாய்ப்புக் கேட்டார். அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்த தயாரிப்பாளர் சிரித்தார். “என்னம்மா.. உன்னை பாத்தா ரொம்ப சாதாரண பொண்ணா இருக்கே ? நடிகைக்குரிய எந்த ஒரு இலட்சணமும் உன்கிட்டே இல்லையே ? நீ ஸ்டாராக முடியாது. வேற ஏதாச்சும் வேலை பாரும்மாஎன்று கூறி திருப்பி அனுப்பினார். பெண்கள் கேட்க விரும்பாத ஒரு அவமான வார்த்தைநீ அழகா இல்லைஎன்பது தான். அந்தப் பெண்ணோ அந்த அவமானத்தை போர்த்துக் கொண்டு சோர்ந்து போய் படுத்து விடவில்லை. விக்கிரமாதித்ய வேதாளமாய் மீண்டும் மீண்டும் முயன்றார்.

ஒரு காலகட்டத்தில் வாய்ப்புக் கதவு திறந்தது. பின் உலகமே வியக்கும் நடிகையாகவும். சர்வதேச மாடலாகவும். அற்புதமான பாடகியாகவும் அந்தப் பெண் கொடி கட்டிப் பறந்தார். அந்தப் பெண் மர்லின் மன்றோ. இன்னிக்கு கூட நம்ம சினிமா பாடலாரிசியர்கள்நீ மர்லின் மன்றோ குளோனிங்காஎன அவரை விடாமல் துரத்திக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே !

அவமானங்களை எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.

பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவு வரும்போது முதல் பக்கத்தில் சாதனை புரிந்த மாணவர்களின் படங்கள் வரும். தொடர்ந்த நாளிதழ்களில் தோற்றுப் போய் விட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் இடம்பெறுவதுண்டு. ஒரு சாதாரண தேர்வில் தோற்றுப் போவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்க முடியும் ? அடைக்கப்பட்ட ஒரு கதவின் முன்னால் நின்று புலம்புவது திறந்திருக்கும் கோடானு கோடி கதவுகளை உதாசீனப்படுத்துவதற்குச் சமமல்லவா ?

பள்ளிக்கூடத்தில் தோற்றுப் போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பவர்கள் வின்ஸ்டன் சர்ச்சிலை அவமானப்படுத்துகிறார்கள். அவர் ஆறாம் வகுப்பிலேயே தோற்றுப் போனவர். அந்தத் தோல்வியுடனேயே மனம் உடைந்து போயிருந்தால் பின்னாளில் அவர் அடைந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா ? இங்கிலாந்து நாட்டில் இரண்டு முறை பிரதமராய் இருந்தவர் சர்ச்சில். பிரிட்டிஷ் பிரதமர்களிலேயே இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கியவர் இவர் மட்டும் தான். ஆறாம் வகுப்பில் தோல்வி பெற்ற ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கிறது ! இது தான் தன்னம்பிக்கையின் வியப்பூட்டும் விளையாட்டு.

தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக் கூடாது. நம்மை ஒருவர் அவமானப் படுத்துகிறார் என்றால், நம்மிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

சார் எங்ககிட்டே ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு இதை புத்தகமா போடுவீங்களா ?” எனும் கோரிக்கையுடன் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் விக்டர் ஹேன்சன் இருவரும் ஒரு பதிப்பகத்தை அணுகினார்கள். 

சாரி.. இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. ஓவர் அட்வைஸா இருக்குஎன பதிப்பகத்தார் அதை நிராகரித்தனர். எழுத்தாளர்கள் சோர்ந்து விடவில்லை. இரண்டாவது மூன்றாவது நான்காவது என வரிசையாய் எல்லா பதிப்பகங்களிலும் ஏறி இறங்கினார்கள். அந்த புத்தகம் எத்தனை இடங்களில் நிராகரிக்கப்பட்டது தெரியுமா ? சுமார் 140 இடங்களில். இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. கடைசியில் ஒருவழியாக அந்த நூல் அச்சானது. கடைகளுக்கு வந்த உடனேயே உலகம் முழுவதும் அதன் விற்பனை சட்டென பற்றிக் கொண்டது. இன்று உலகெங்கும் 65 மொழிகளில், ஏகப்பட்ட தலைப்புகளில், பத்து கோடிக்கு மேல் பிரதிகளில் என அந்த நூல் பிரமிப்பூட்டுகிறது. அந்த நூல் தான்சிக்கன் சூப் ஃபார் சோல்” !.  நிராகரித்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனியும் படி அந்த நூலின் பிரபலம் இருப்பது நாம் அறிந்ததே.

140 அவமானங்களுக்குப் பின் இந்த வெற்றியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் தங்கள் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம். ஒரு சிறுகதை நிராகரிக்கப்பட்டாலே கதை எழுதுவதை மூட்டை கட்டி வைக்கும் மக்கள் வாழும் ஊரில் தானே அவர்களும் வாழ்கிறார்கள் ! அவமானங்களோடு மூலையில் படுத்திருந்தால் இன்று அவர்கள் உலகின் பார்வையில் தெரியவே வந்திருக்க மாட்டார்கள்.

ஏய் உன் மூஞ்சி சதுரமா இருக்கு. நீயெல்லாம் நடிகனாவியா ? உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைஎன்று விரட்டப்பட்டவர் தான் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஜான் டிரவோல்டா. இன்று அவருக்கு இந்தியாவிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள். “என் மூஞ்சி எப்படி வேணா இருக்கலாம். ஆனா நான் நடிகனாவேன், ஏன்னா எனக்குத் திறமை இருக்குஎன்பது தான் அவருடைய பதிலாய் இருந்தது. முயற்சி அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

உறுதியான மனம் இருந்தால் அவமானங்கள் வரும்போது மனதின் கதவை இறுக அடைத்துத் தாழ் போட்டுக் கொள்ளலாம். நாம் அனுமதிக்காவிடில் அவமானங்கள் நமக்குள் போய் அமர்வதேயில்லை.  பிறர் அவமானமான வார்த்தைகளைப் பேசும்போது அதை வரவேற்று உள்ளே உட்காரவைத்து அதையே நினைத்து உருகி, நமது வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது. 

யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.

இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காதுஎன்றாராம். 

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார். 

அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.

வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்

வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்

தன்னம்பிக்கை : பலவீனங்களை பலங்களாக்குவோம்

$
0
0

எனக்கொரு வீக்னெஸ் இருக்கு. இல்லேன்னா நான் வாழ்க்கைல ஜெயிச்சு கொடி நாட்டியிருப்பேன்எனும் உரையாடலை எல்லா இடங்களிலும் சகஜமாகக் கேட்கலாம். பலவீனங்கள் இல்லாத மனிதன் இல்லை. ஆனல் பலவீனத்தை முதலீடாய்க் கொண்டு வாழ்வில் வெற்றிபெற்றவர்களைப் பார்க்கும் போது தான் பலவீனங்கள் பலங்களை நோக்கிய படிக்கட்டுகள் எனும் உண்மை புரியும்.

உலகைக் கலக்கிய பீட்டில்ஸ் இசைக்குழுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுடைய ஆரம்ப காலத்தில் ஒரு ரிக்கார்டிங் நிறுவனத்திடம் போய் ஆல்பம் போடுவதற்கான வாய்ப்பைக் கேட்டார்கள். பாட்டைக் கேட்ட நிறுவனத்தினர்பாட்டு பரவாயில்லை. ஆனா உங்க கிட்டார் சவுண்ட் மண்டையைப் பொளக்குது. அதனால இதை தேர்வு செய்ய முடியாதுஎன அனுப்பி வைத்தனர். இன்றைக்கு பீட்டில்ஸ் குழுவினரின் பலமாகக் கருதப்படுவதே அந்த கிட்டார் இசை தான் ! அந்த அதிரடிக்கும் சத்தத்துக்காகவே அவர்கள் உலகம் முழுவதும் பிரபலமானார்கள் ! அந்த கிடார் இசையை கழித்துப் பார்த்தால் பீட்டில்ஸ் இன்று இல்லை !

ஐயோ நாலு பேரு சொல்லிட்டாங்களேஇது ஒரு பெரிய குறை போல இருக்கு. இனிமே கிட்டார் இசையை கம்மியா வைச்சு மியூசிக் போடுவோம்என்று அவர்கள் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அவர்களுக்கென ஒரு தனி அடையாளம் இல்லாமலேயே போயிருக்கும். எது பலவீனம் என்று மற்றவர்கள் நினைத்தார்களோ அதையே தங்களது பலம் என அவர்கள் நிரூபித்தார்கள் .!

நம்முடைய வாழ்க்கையிலும் பல விஷயங்களை நாம் பலவீனம் என நினைத்திருப்போம். ஆனால் அதே விஷயங்கள் தான் நமக்கு பலமான விஷயங்களாக மாறிவிடும். “சே என் பல்லு கொஞ்சம் அசிங்கமா இருக்குஎன புலம்பிக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு திடீரென வாய்ப்பு வரும்உங்க பல்லு ரொம்ப அழகா இருக்கு. மாடலா நடிக்க முடியுமா ?”. அல்லது காதலன் கசிந்துருகி சொல்வான், “உன் பல்லு தான் எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம்”. 

எனக்கு பலவீனம் இருக்கிறது என புலம்புவதால் உண்மையில் எதையுமே சாதிக்க முடியாது. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன அறிமுகம். இயற்பியலுக்காக ஏகப்பட்ட பங்களிப்பைச் செய்தவர் அவர். அவருடைய பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்நூல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்அதிகம் விற்பனையாகும்புத்தகமாக இருந்தது. தமிழில் காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என வெளியான இந்த நூல் இன்றும் உலகின் பெஸ்ட் நூல் என பாராட்டப்படுகிறது. 

இவர் உடலின் பெரும்பாலான பகுதிகள் செயலிழந்த நிலையில் இருப்பவர். வீல் சேரில் தான் வாழ்க்கை. உடல் பாகங்கள் ஏதும் அசையாது. பேசுவதற்குக் கூட ஒரு கணினி வேண்டும் எனும் நிலை ! ஆனாலும் இவருடைய சாதனைகளின் தாகம் மட்டும் குறையவே இல்லை. இந்த நோய் இருப்பதனால் முழு நேரத்தையும் சிந்தனையிலும், வாசிப்பிலும் செலவிடுகிறேன் என்கிறார் இவர் தன்னம்பிக்கையாக. பலவீனத்தை பலமாய்ப் பார்க்க மனம் பலமாய் இருக்க வேண்டும். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்டம் அந்த மனம் இருக்கிறது. அதனால் தான் அவர் இன்னும் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார்.

ஒருவருடைய பலம் இன்னொருவருக்கு பலவீனமாகும். ஒருவருடைய பலவீனம் இன்னொருவருக்கு பலமாய் இருக்கும். புல்லாங்குழலை எடுத்துக் கொள்ளுங்கள். துளைகள் இல்லையேல் அதில் இசை இல்லை. மிருதங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் துளைகள் இருந்தால் அதில் இசை இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம், அடுத்தவருடன் ஒப்பிட்டு நம்முடைய பலங்களை பலவீனமாய்க் கருதாமல் இருக்க வேண்டியது முக்கியம்.

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்

குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.

இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான். இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். 

பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்

குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனேஎன்றான்

புன்னகைத்தபடியே குரு சொன்னார்உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது. பலவேளைகளில் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அந்த வடிவமாகவே நாம் மாறிவிடுகிறோம். பிறருடைய விருப்பங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நமது இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் வேகத் தடையாக அமைந்து விடுகிறது. பல வேளைகளில் அந்த விமர்சனங்கள் பெரும் புதை குழிகளாய் மாறி நம்மை விழுங்கி விடுவதும் உண்டு.

பல வேளைகளில் நம்மால் எதைச் செய்ய முடியாது என்பதைப் பற்றியே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் அது சமூகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்களுடனான ஒப்பீடாகவே இருக்கும். பிறர் பலவீனமாய் நினைக்கும் விஷயம் தான் நம்மை உலகுக்கே கொண்டு போய் சேர்க்கும் பலமான விஷயமாய் இருக்கும்.

இது என்னோட பலவீனம் என நாம் நம்பும் வரை அது நம்முடைய பலவீனமாய் தான் இருக்கும். இது பலவீனமல்ல பலம் என நாம் நம்பும் வினாடியில் நமது பலவீனமே நமது மிகப்பெரிய பலமாய் மாறிவிடும். 

பலவீனம் இல்லாமல் வாழ்வில்லை

பலமாய் மாறிடில் தாழ்வில்லை.

 0 

தன்னம்பிக்கை : அடுத்தவன் என்ன சொல்வானோ ?

$
0
0

அடுத்தவன் என்ன நினைப்பானோஎன்ற கவலை இன்று பெரும்பாலான மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவர்களின் மன நிலைக்கு ஏற்ப தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் அமைத்துக் கொள்பவர்களால் வெற்றி பெற முடியாது.  அடுத்தவர்கள் உங்களை விமர்சிக்கிறார்களென்றால் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்கின்றனர் உளவியலார்கள். ஒன்று அவர்களுக்குத் தேவையான ஒன்று உங்களிடம் இருக்கிறது. அல்லது நீங்கள் இருக்கும் இடத்தை அடைய அவர்கள் விரும்புகிறார்கள். 

ஒருவர் ஒரு பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை புதுசு புதுசாக ஐடியாக்கள் தயாராக்குவது. அவரும் உற்சாகமாக அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். ஆனால் அந்த வேலையிலிருந்து அவரை கொஞ்ச நாளிலேயே துரத்தி விட்டார்கள். “உன்னோட ஐடியாக்களெல்லாம் சின்ன புள்ளத் தனமா இருக்குஎன்பது தான் அவர்கள் சொன்ன காரணம். 

அந்த நபர் அவர்களுடைய விமர்சனத்தைப் பொருட்படுத்தவில்லை. அந்த சின்ன புள்ளைத் தனத்தை வைத்தே மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். அவர் தான் வால்ட் டிஸ்னி. மிக்கி மவுஸ்ஐத் தெரியாத குழந்தைகளும், பெரியவர்களும் இன்று இல்லை என்பதே நிலை ! சின்னப்புள்ளத் தனம் என விமர்சிக்கப்பட்டவர் வரலாற்றின் சிம்மாசனத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். அடுத்தவர்களுடைய விமர்சனத்தை தலையில் ஏற்றி தன்னுடைய தன்னம்பிக்கையை உடைத்திருந்தாரெனில் இன்று வால்ட் டிஸ்னி எனும் உலகப் பிரம்மாண்டம் இல்லாமலேயே போயிருக்கலாம்.

தண்ணி அடிக்கலேன்னா பிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. தம் அடிக்கலேன்னா பசங்க நக்கல் அடிப்பாங்கஎன்பதற்காகவே அந்த கெட்ட பழக்கங்களில் விழுந்து விடும் இளைஞர்கள் எக்கச் சக்கம். அடுத்தவர்களுடைய விமர்சனங்களுக்காக தீய வழியில் செல்வதை விட, தனக்காக நேர் வழியில் நடப்பது எவ்வளவோ மேல் அல்லவா ?

தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களுடைய விமர்சனங்களுக்கு ஏற்ப ஆடுகிறார்கள் என்பது அறிஞர்களின் கருத்து. அதாவது மகுடி ஊதும் பாம்பாட்டிக்கு முன்னால் தலையாட்டும் பாம்பைப் போல இவர்கள் விமர்சனங்களுக்குத் தக்கபடி தலையாட்டுகிறார்கள். கடைசியில் பாம்பாட்டியின் பெட்டிக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள். வாழ்க்கை எனும் வசந்தத்துக்குள் உற்சாகமாய் உலவ இவர்களால் முடிவதில்லை. சுதந்திரச் சிறகுகளை பிறருக்காய் முறித்துக் கொண்டு வானத்தையே தொலைத்து விடுபவர்கள் இவர்கள்.

மைக்கேல் ஜோர்டன் அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர். அவரைத் தெரியாத விளையாட்டு வீரர்கள் இருப்பார்களா ? கிரிக்கெட் உலகின் பிராட்மேன் போல கூடைப்பந்து உலகின் ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன். அவர் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவரை கூடைப்பந்து அணியில் சேர்க்காமல் விரட்டி விட்டனர். சோகத்தில் வீட்டுக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு அழுதார். ஆனாலும் தனது கனவை அவர் கலைத்து விடவில்லை. தன்னால் நன்றாக விளையாட முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். விளையாடினார். சாதனைகளின் எல்லைகள் வரை சென்றார். இன்று அவருடைய நுணுக்கங்கள்  விளையாட்டு வீரர்களுக்குப் பாடமாக இருக்கிறது ! பார்வையாளர்களுக்குப் பிரமிப்பாய் இருக்கிறது !! காரணம் அவர் விமர்சனங்களைக் கண்டு பயந்து ஓடவில்லை ! நத்தை ஓட்டுக்குள் தன்னுடைய திறமையை அடகு வைக்கவும் இல்லை.

“:ஐயோ இவன் ஒரு மக்குப் பையன். இவனுக்கு ஒண்ணுமே சொல்லிக் குடுக்க முடியாது. இப்படி ஒரு மக்குப் பையனை நான் பாத்ததேயில்லைஎனும் விமர்சனத்தை வாங்கியது யார் தெரியுமா ? தாமஸ் ஆல்வா எடிசன் ! “ஒழுங்கா காது கேக்காத இவனெல்லாம் என்னத்தை சாதிக்கப் போறான்என்று அவரைப் பற்றிப் பேசினார்கள். அவர் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. இன்று உலகிலேயே அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருப்பவர் அவர் தான். 1093 பொருட்களுக்கான காப்புரிமை அவரிடம் இருக்கிறது. புகைப்படக் கருவி, மின்விளக்கு, வீடியோ கருவி என பல வியத்தகு விஷயங்களின் காரண கர்த்தா இவர் தான். இப்போது சொல்லுங்கள், அடுத்தவர்கள் சொல்வதற்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமா ?

விமர்சனங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று நம்மை ஆக்கப்பூர்வமாய் சிந்திக்க வைக்கும் விமர்சனங்கள். அவை நமக்கு தூண்டுதலாய் இருக்கும். இதைத் தருபவர்களெல்லாம் நமது நலம் விரும்பிகள். பெற்றோர், நெருங்கிய நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களெல்லாம் இந்தப் பட்டியலில் வருவார்கள். இவற்றைக் கவனமுடன் கேட்டு நம்மை சீர் தூக்கிப் பார்ப்பது பயனளிக்கும். 

இன்னொரு வகை குதர்க்க விமர்சனங்கள். இவை பெரும்பாலும் தன்னம்பிக்கையற்ற மனிதர்களிடமிருந்தே வரும். அடுத்தவர்களை மட்டம் தட்டி நிம்மதி அடைவர்கள் இவர்கள். ஒருவகையில் தங்களுடைய இயலாமையை மறைக்க அடுத்தவர்களைக் காயப்படுத்திப் பார்ப்பவர்கள் இந்த வகை மனிதர்கள் என்று சொல்லலாம். இவர்களுடைய விமர்சனங்களை அப்படியே அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள்.

விமர்சனங்களை எதிர்கொள்ள சிறந்த வழி நகைச்சுவைதான் ! நகைச்சுவை உணர்வு இந்த நேரத்தில் உங்களுக்கு ரொம்பவே கை கொடுக்கும். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அவமானப் படுத்துபவர்களுடைய நோக்கம் நாம் காயப்பட வேண்டும் என்பது தான். நாம் காயமடைந்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று அர்த்தம். அதை விட்டு விட்டு நாம் கொஞ்சம் நகைச்சுவையாய் பதிலளித்தால் பல அவமானங்கள் அப்படியே அமுங்கிப் போய்விடும்.

என்னடி, இவ்ளோ குண்டாயிட்டேஎன யாராவது நக்கலடித்தால், “அப்படியா ? நல்ல வேளை சொன்னேடி. நான் என்னவோ சைஸ் சீரோ ரேஞ்சுக்கு ஒல்லியா இருக்கிறதா நெனச்சேன்என்று சிரித்துக் கொண்டே கடந்து போனால், இன்னொரு முறை அந்த நபர் அவமான வார்த்தைகளோடு வரமாட்டார். அப்படியே வந்தாலும் உங்களிடம் அடுத்த ஜோக் தயாராய் இருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் !

விமர்சனங்களிலிருந்து எதையேனும் கற்றுக் கொள்ள முடிந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அந்த வினாடியின் முடிவிலேயே அதை உடைத்து எறிந்து விட்டு புன்னகையுடன் நடையைக் கட்டுங்கள். 

நீங்களாகவே உங்களை செல்லாக்காசு, திறமை இல்லாதவன், உருப்படாதவன், அழகில்லாதவன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களும் அப்படியே சொல்லும்போது சோர்ந்து விடுவீர்கள். மாறாக நீங்கள் உங்களை திறமைசாலியாக, ஸ்பெஷல் மனிதனாக, அழகானவனாக நினைத்துக் கொள்ளும் போது மற்றவர்கள் அதற்கு எதிராக விமர்சனம் செய்யும் போது அது உங்களைப் பாதிக்காது. 

ஒரு சிறுவன் இசை கற்றுக் கொள்ள ஆர்வமாய் வந்தான். கொஞ்ச நாட்கள் பயிற்றுவித்த ஆசிரியர் சொன்னார், “இசையில இவன் படு வேஸ்ட். இவனெல்லாம் இசையில எதையுமே கற்றுக் கொள்ள முடியாது !” அந்த சிறுவன் யார் தெரியுமா ? உலகின் மூலை முடுக்கெல்லாம் இசையால் பிரமிப்பூட்டிய பீத்தோவான். இசையில் அவர் எப்படி என்பதை உலகமே அறியும். இவன் லாயக்கில்லாதவன் என்று சொன்ன ஆசிரியரை யாரும் அறியமாட்டார்கள் என்பது தான் நிஜம்.

விமர்சனங்களை எடுத்துக் கொள்வதற்கு ஒரு எளிய வழி உண்டு. ஒரே விமர்சனம் பலரிடமிருந்து வந்தால் அதில் உண்மை இருக்கலாம் ! ஒரு நபரே அடிக்கடி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் அதில் பெரும்பாலும் உண்மை இருக்காது. அந்த நபரை நீங்கள் தவிர்ப்பதே நல்லது.

காயப்படுத்தும் கிண்டலும் கேலியும் பொறாமையின் வெளிப்பாடுகளே. பொறாமை தாழ்வு மனப்பான்மையின் பிள்ளை. தாழ்வு மனப்பான்மையோ தன்னம்பிக்கை இல்லாத மனிதனின் குணம். இப்படி சங்கிலித் தொடரைப் பிடித்துப் பார்க்கும் போது, கிண்டல், கேலி போன்றவற்றின் பின்னால் பதுங்கியிருப்பவன் தன்னம்பிக்கை இல்லாத மனிதனே என்பது எளிதில் புரியும். எனவே அவனுடைய வலையில் விழாமல் தண்ணீரைப் போல நழுவி விடுங்கள்.

விமர்சனங்களைப் புரிந்து கொள்ள ஒரு மூன்று நிலை சோதனையை நீங்கள் செய்யலாம். 

ஒன்று, யாரோ உங்களை எப்படியோ விமர்சித்திருந்தால், கண்களை மூடி அந்த விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை முழுமையாக மனசுக்குள் ஓடவிடுங்கள். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கண்டறியுங்கள். அந்த விமர்சனத்தின் வேர்கள் உங்களுக்குப் புரியவரும். ஒருவேளை அந்த விமர்சனம் உங்களுக்கு உங்களைப்பற்றிய சில புதையுண்ட உண்மைகளைக் கூட புரியவைக்கலாம்.

இரண்டு, விமர்சனம் சொன்ன நபரின் இடத்தில் நீங்கள் அமர்ந்து யோசியுங்கள். அந்த நபர் ஏன் இந்த விமர்சனத்தைச் சொன்னார் என்பதை நிதானமாய் யோசியுங்கள். உங்கள் மீதான அக்கறையா, கோபமா எது அவரை அந்த விமர்சனத்தைச் சொல்லத் தூண்டியது ? அந்த விமர்சனம் சொன்னதால் அவருக்கு என்ன லாபம் என யோசியுங்கள். பல புதிய விஷயங்கள் புரியக் கூடும். 

மூன்றாவது, ஒரு மூன்றாவது நபராய் நீங்கள் மாறி அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்கள் மீதான அந்த விமர்சனம் மூன்றாவது நபர்டைய பார்வையில் ஏற்புடையதா என்பதை அலசுங்கள்.  

கடைசியாக நீங்கள் மீண்டும் உங்கள் இடத்துக்கு வரும்போது அந்த விமர்சனத்தில் உண்மை உண்டா இல்லையா என்பது புரிந்திருக்கும். 

அதில் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்களில் உண்மை இல்லையேல் முழுமையாய்க் கை கழுவி விட்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுங்கள். அவர்களுடைய குற்றம் குறை பேச்சுகளுக்கு நீங்கள் வளைந்து கொடுத்தால், உங்களுடைய தன்னம்பிக்கை எனும் குதிரையின் கடிவாளத்தை அவன் கையில் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். சொந்த வீட்டை யாராவது வழிப்போக்கனுக்குக் கொடுப்பார்களா ?

நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிக்க வேண்டியது நீங்கள் தான். மற்றவர்கள் அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். வெற்றி வசப்படும்.

நிறுத்த முடியுமா வருகிற விமர்சனம்அதில்

நிஜங்கள் குறைவு என்பதே நிதர்சனம்

தன்னம்பிக்கை : திட்டமிடு, வெற்றி வானில் வட்டமிடு. 

$
0
0

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பாத மனிதர்கள் இருக்க முடியாது. விரும்புவதால் மட்டுமே ஒருவர் வெற்றிகளைப் பெற்றுவிடவும் முடியாது. வெற்றிக் கதவைத் திறப்பதற்கான சாவிகள் கையில் இருக்க வேண்டியது அவசியம். அந்தச் சாவிகளில் முக்கியமானதுதயாராதல்எனும் சாவி. ஒரு சூழலை எதிர்கொள்வதற்கு நம்மை எந்த அளவுக்குத் தயார்படுத்திக் கொள்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும்.  

ஆபிரகாம் லிங்கனை அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. மேடைப்பேச்சிலும், விவாதங்களிலும் உலகப் புகழ் பெற்றவர். மிகத் திறமையான ஜனாதிபதி, தலை சிறந்த தலைவர் என உலகின் மூலை முடுக்கெல்லாம் தன்னுடைய பெயரை எழுதியவர். ஒரு முறை அவர் வழக்கம் போல அசத்தலான ஒரு மேடைப்பேச்சை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பிரமித்துப் போனார்கள். அதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் ரொம்பவே வசீகரிக்கப்பட்டான். பேச்சு முடிந்தபின் அவன் அவரிடம் கேட்டான்

சார். ரொம்ப ரொம்ப பிரமாதமா பேசறீங்க. இதன் ரகசியத்தைச் சொல்ல முடியுமா ?”. ஆபிரகாம் லிங்கன் சிரித்துக் கொண்டே சொன்னார்

நான் மேடையில் அரை மணி நேரம் பேசினதைத் தான் கேட்டாய். அதற்காக அரை நாள் நான் தயாரானதைப் பார்க்கவில்லையே” !

அவருடைய அந்தப் பதிலில் அடங்கியிருந்தது அவருடைய வெற்றிக்கான ரகசியம் !. “தயாராதல் ! “

ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய ஒவ்வோர் மேடைப்பேச்சுக்கும் முன்பும் தன்னை மிகச் சிறப்பாகத் தன்னைத் தயாரித்துக் கொள்பவர். எல்லாரும் எல்லா விஷயங்களிலும் கில்லாடிகளாய் இருக்க முடிவதில்லை. எனவே ஆபிரகாம் லிங்கனுக்கே தயாரிப்பு தேவைப்படுகிறது. அந்தத் தயாரிப்பு தான் அவருடைய உரையை வசீகரிக்கும் விதமாக மாற்றியமைக்கிறது. அந்த தயாரிப்பு தான் அவரை மேடைப் பயமின்றி பேச வைக்கிறது. அந்தத் தயாரிப்பு தான் அவரை உலகத் தலைவருக்குரிய குணாதிசயத்தோடு பணியாற்ற வைக்கிறது.

அவர் மட்டுமல்ல, உலகின் புகழ் பெற்ற எல்லா பேச்சாளர்களுடைய வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான தயாராகும் வழிகள் அடங்கியிருக்கின்றன. கண்ணாடியின் முன் நின்று பேசுவது, வீட்டில் உள்ள நபர்களை கூட்டமாய் நினைத்து அவர்கள் முன் உரையாற்றுவது, டேப் ரிகார்டரில் ரெக்கார்ட் பண்ணிப் பழகுவது என ஒவ்வொருவருடைய வாழ்க்கை அனுபவமும் சொல்லும் பாடம் ஒன்று தான். தயாராதல் மிக முக்கியம் !

 வெற்றிக்கு மிக மிக முக்கியமான தேவை தன்னம்பிக்கை. தன்னம்பிக்கைக்கு முக்கியத் தேவை தயாராதல் !” என்கிறார் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரரான ஆர்தர் ஆஷே. வெற்றிக் கோப்பைகளுடன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருடைய தன்னம்பிக்கையின் ரகசியம் என்ன என்ற வினாவுக்கு அவர் சொன்ன பதில் தான் இது ! தயாரிப்பு இல்லாத மனிதர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் வெற்றியாளர்களாய் ஜொலிக்க முடியாது.

விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் சில நிமிட விளையாட்டுக்காக ஆண்டுக் கணக்கில் தங்களைத் தயாரித்துக் கொள்வார்கள். அந்தத் தயாரிப்பு தான் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை அவர்களுடைய கையைப் பிடித்து உள்ளங்கைக்குள் வெற்றிக் கோப்பையைத் திணிக்கிறது. 

தன்னம்பிக்கைக்கும் அதீத நம்பிக்கைக்கும் வேறுபாடு உண்டு. இரண்டு பேர் மலையேறச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மலையேற்றத்துக்குரிய உபகரணங்களோடு மலையேறச் செல்கிறார். இன்னொருவர் எந்த ஒரு உபகரணமும் எடுக்காமல் மலையேறச் செல்கிறார். இது தான் தன்னம்பிக்கைக்கும், அதீத நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம். 

ஒரு செயலைச் செய்யும் முன் அந்தச் செயலுக்கான அனைத்து தயாரிப்புகளையும் செய்வது தன்னம்பிக்கையாளரின் வழக்கம். அதீத நம்பிக்கை உடையவர்களோ சரியான தயாரிப்புகள் இல்லாமல் களமிறங்குவார்கள். தயாரிப்புகள் இல்லாமல் இறங்கும் மனிதர்கள் கடைசியில் அதிர்ஷ்டத்தைத் தான் துணைக்கு அழைக்க வேண்டும். தன்னம்பிக்கைக்காரருடைய வெற்றியோ முழுக்க முழுக்க அவரைச் சார்ந்தே இருக்கிறது.  !

குடும்ப வாழ்க்கையிலும் இந்த அதீத நம்பிக்கை சிக்கலைக் கொண்டு வந்து சேர்க்கிறது. உதாரணமாக, காதலிக்கும் போது தங்கள் வாழ்க்கையில் காதலிக்கும் நபரை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம், வசீகரிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். ஒரு காதல் கடிதத்தை எழுதவே இராத்திரி முழுதும் விழித்திருந்து பேப்பர் கிழிக்கிறார்கள். அந்தத் தயாரிப்புகள் அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது. காதல் வாழ்க்கை தென்றலாய் வீசுகிறது. 

அதே நேரம், அவர்கள் திருமணத்தில் இணைந்தபின்இனிமேல் இவர் நமக்கேஎனும் அதீத நம்பிக்கை எதையும் தயாரிக்காத ஏனோ தானோ எனும் சூழலுக்குத் தம்பதியரைத் தள்ளி விடுகிறது. வாழ்க்கை தன்னுடைய சுவாரஸ்யத்தையும், பிடிமானத்தையும் இழந்து தத்தளிக்கத் துவங்குகிறது.

எனக்கு இதெல்லாம் தெரியும் என தம்பட்டம் அடிப்பதை தன்னம்பிக்கை என பலர் நினைக்கிறார்கள். அது தன்னம்பிக்கையல்ல. தன்னம்பிக்கை வார்த்தைகளில் மிளிர்வதல்ல, அது செயல்களில் ஒளிர்வது. 

சரியாய் தயாரானவன் தேர்வுக்கு எந்த விதமான பதட்டமும் இல்லாமல் செல்வான். அவனுடைய கண்களில் தன்னம்பிக்கை நட்சத்திரங்கள் சுடர்விடும். தயாராகாமல் ஏனோ தானோ என்று செல்பவனோ அதிர்ஷ்டத்தையும், அடுத்தவனையும் நம்பியே தேர்வு எழுதச் செல்வான். வெற்றி எப்போதுமே தயாராய் இருப்பவனுக்காய் தயாராய் இருக்கிறது !

ஒரு வெற்றிக்கு என்னென்ன தேவையோ அவற்றை அனைத்தையும் தயாராய் வைத்திருக்கும் போது நமக்கு முன்னால் இருக்கும் பணி எளிதாக முடிந்து விடுகிறது. உதாரணமாக ஒரு சாலையைக் கடக்க வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். அது ரொம்பவே எளிதான வேலை. அதே நேரம் ஒரு கால் ஊனமாய் உள்ள மனிதன் என்று வைத்துக் கொள்ளுங்கள் ! அந்த வேலை மிகக் கடினமானதாகி விடுகிறதல்லவா ? இந்த ஊனம் தன்னம்பிக்கைக்கு ஒரு வேகத் தடையையும் தந்து விடக் கூடுமல்லவா ? எனவே தயாராதல் என்பது ஒவ்வோர் சூழலுக்கும் ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது !

ஐந்து மணி ரயிலைப் பிடிக்க நான்கு மணிக்கே கிளம்புவது ரொம்ப எளிதான வேலை. ஆனால் அதே ரயிலைப் பிடிக்க ரொம்பவே தாமதமாய்க் கிளம்பும் சூழலை நினைத்துப் பாருங்கள். எத்தனை பரபரப்பு, எவ்வளவு கஷ்டம் ! சரியாய்த் திட்டமிடுதல், சரியாகத் தயாராதல் இவை இல்லாவிடில் தேவையற்ற மன அழுத்தம் நம் முதுகில் ஏறி அமர்ந்து விடுகிறது. அதுவே நமக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்து விடுகிறது.

சிலர் வேலையில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே வெற்றி வானில் வட்டமிடுவார்கள். அதற்குக் காரணம் சிறப்பான திட்டமிடுதலும், அதற்காகத் தயாராவதும் தான். வந்தோமா, போனோமா என்று இருப்பவர்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் செல்வதில்லை. அவர்கள் காற்றில் பறக்கும் பட்டத்தைப் போன்றவர்கள். எப்போதும் நிலத்திலுள்ள கயிறோடு கட்டப்பட்டு இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு  இலக்கு இருப்பதில்லை. எனவே அவர்களால் எந்தத் திசையில் பறக்க வேண்டுமென முடிவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்குச் சொந்தமாகச் சிறகுகள் இருப்பதில்லை. எனவே சுயமாக செயல்பட முடிவதில்லை. அவர்கள் எப்போதும் இன்னொருவரைச் சார்ந்தே இருப்பார்கள்.

திட்டமிட்டுப் பறப்பவர்கள் கழுகைப் போன்றவர்கள். அவர்களுடைய சிறகுகள் அவர்களுக்கு வலுவூட்டும். அவர்களுடைய பார்வை அவர்களுக்குத் திசைகளைக் காட்டும். அவர்களுடைய பயணம் அவர்கள் திட்டமிட்ட திசையில் நடக்கும். அவர்களுடைய வெற்றியையோ, தோல்வியையோ இன்னொருவர் நிர்ணயிக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கை மொத்தத்தில் அவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

வெற்றியின் ரகசியங்களில் ஒன்று இது தான். வெற்றி என்பதைப் பெற ஏதேதோ வேண்டுமென நாமாகவே கருதிக் கொள்கிறோம். ஆனால் சில வேளைகளில் வெற்றிக்காக சரியான திட்டமிடுதலும், தயாரித்தலுமே போதுமானதாக இருக்கிறது. 

உட்கார்ந்து எழுதவே ஒரு இடம் இல்லாமல் கஷ்டப்பட்டார் ஒரு எழுத்தாளர். வெளியே உறைய வைக்கும் குளிர். கையில் போதுமான அளவு பணம் இல்லை. ஒரே ஒரு காபி வாங்கிக் கொண்டு அந்த காபி ஷாப்பில் பல மணிநேரம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஒரு நாவலுக்கான முயற்சியில் தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தத் தயாரிப்பு தான் அந்த எழுத்தாளரை உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக்கியது. இன்று அவருடைய நாவலுக்காய் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடியற்காலையிலேயே கடைகளில் நிரம்பி விடுகிறது கூட்டம். அவர்தான் ஹாரிபாட்டர் நாவலை எழுதிய ஜே.ஜே ரௌலிங்கர். 

வெற்றியை நோக்கிய பயணத்தில் இந்த தயாரிப்பு ரொம்பவே அவசியம். இன்றைக்கு வெற்றியாளர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கும்போது புலப்படும் விஷயம் ஒன்று தான். அவர்கள் தங்கள் இலட்சியத்துக்காக தங்களைத் தயாரித்துக் கொண்டார்கள்.

அலெக்சாண்டர் கிரகாம்பெல்லிடம் ஒருமுறை கேட்டார்கள்உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்ன ?” 

வேறொன்றுமில்லை, சிறப்பாகத் தயாராவதே எனது வெற்றியின் ரகசியம்என்று பளிச் எனப் பதிலளித்தார் அவர். 

தயாராதல் வெற்றியின் ரகசியம்

தயாராவோம் வெற்றிகள் அவசியம்.

காணாமல் போகுமா டெபிட்/கிரடிட் கார்ட்கள் ?

$
0
0

காணாமல் போகுமா டெபிட்/கிரடிட் கார்ட்கள் ?

Image result for credit debit cards

நமது வாழ்க்கையை கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்த்தால் வங்கிப் பரிவர்த்தனைகளில் நாம் கடந்து வந்த வியப்பூட்டும் பாதையைப் புரிந்து கொள்ளலாம். முன்பெல்லாம் வங்கியில் வரிசையில் நின்று செல்லான் எழுதிக் கொடுத்து, அவர்கள் தருகின்ற அந்த வெண்கல நிற வட்ட வடிவ டோக்கனை வாங்கி, நமது முறை வரும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும்.

ஏடிஎம் வந்தபின் நிலமை மாறியது. நினைத்த நேரத்தில் சென்று நமக்குத் தேவையான அளவு பணத்தை ஏடிஎம்களில் எடுத்துக் கொள்ளலாம் எனும் வசதி வந்தது. வங்கிகளில் முண்டியடித்த கூட்டமெல்லாம் வண்டியேறிப் போய்விட்டது.

“அட, இது தான் தொழில்நுட்பம்” என நாம் வியக்கும் விஷயங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே மாயமாகி விடுவதை நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் அடுத்து வழியனுப்பி வைக்கப் போகும் விஷயம் இந்த கிரடிட் கார்ட், டெபிட் கார்ட்களாகத் தான் இருக்கும் என்பதே வல்லுநர்களின் கணிப்பு.

ஆன்லைன் வர்த்தகங்கள் வந்தபின் ‘பணமில்லா’ பரிவர்த்தனை சூடுபிடித்தது. இப்போது அந்த நிலையைத் தாண்டி ‘கார்ட் இல்லா’ பரிவர்த்தனை விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முதுகெலும்பாய் இருப்பவை ஸ்மார்ட் போன்கள் தான். ஸ்மார்ட்போன்களுள்ள டிஜிடல் வாலெட்களும், யூபிஐ போன்ற உடனடி பணப் பரிவர்த்தனை வசதிகளும் கார்ட்களின் தேவையை காலாவதியாக்கிக் கொண்டிருக்கின்றன.

கார்ட்களின் தேவை இல்லாமல் போனால் மிகப்பெரிய அளவிலான பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும். இந்த கார்ட்களின் பிளாஸ்டிக் கழிவு மட்டுமே ஆண்டுக்கு 1.27 கோடி டன் என கணக்கிடப்பட்டுள்ளது. சமீப காலமாக கார்ட்கள் இல்லாமல் நிகழ்கின்ற பரிவர்த்தனைகள் விஸ்வரூப வேகமெடுத்திருக்கிறது. இவை படிப்படியாய் கார்ட்களின் தேவையை இல்லாமல் செய்யும். அல்லது டிஜிடல் கார்ட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும்.

கார்ட்கள் கையில் இருப்பது ஒருவகையான பாதுகாப்பு உணர்வைத் தருவதாக ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் கருதுகின்றனர். ஆனால் பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் கார்ட்களைப் பயன்படுத்துவதை கணிகசமாகக் குறித்திருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

ஹைப்ரிட் பாதுகாப்பு எனும் அம்சம் இப்போது இத்தகைய மென்பொருட்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி நீங்கள் செய்கின்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் உங்கள் மொபைபில் ஒப்புதல் கொடுக்க வேண்டும். அது வேலட் ஆகவோ, ஓடிபி ஆகவோ, ஆப் பாஸ்வேடாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மென்பொருள் கட்டமைப்புக்கு ஏற்ப அது செயல்படும்.

கார்ட் தகவல்களை டோக்கன்களாக சேமித்து வைக்கும் ‘டோக்கனைசேஷன்’ எனும் தொழில்நுட்பம் இப்போது பெரும்பாலான வங்கி மென்பொருட்களில் இணைக்கப்படுகிறது. இதனால் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும். நமது வங்கி சார்ந்த தகவல்கள் எங்கும் சேமிக்கப்படாமல் ஏதோ ஒரு டோக்கன் எண்ணின் கீழ் பத்திரமாய் பாதுகாக்கப்படும் என்பது தான் இந்த தொழில்நுட்பம்.

ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு சரி, ஆனால் கையில் காசு வேண்டுமானால் ஏடிஎம் போக வேண்டுமே ? அதற்கு கார்ட் தேவைப்படுமே ? என நாம் யோசிப்போம். அதற்கான மாற்றுவழிகளை இப்போது வங்கிகள் முயன்று கொண்டிருக்கின்றன. பல புதிய முயற்சிகள் ஏற்கனவே வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளன. உதாரணமாக பயோமெட்ரிக் பரிசோதனையின் மூலம் பணம் கொடுக்கும் ஏடிஎம்கள் புழக்கத்தில் உள்ளன. உங்களுடைய வங்கியில் உங்களுடைய பயோமெட்ரிக் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் மட்டும் போதும். நீங்கள் இத்தகைய ஏடிஎம்களில் சென்று உங்கள் விரலையோ, கண்ணையோ காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்டேட் பேங்கின் யோனோ அமைப்பு ஏடிஎம்மில் கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்திலுள்ள முக்கியமான வங்கியான ஆர்பிஎஸ் மொபைல் ஆப்பில் ஒரு கடவுச் சொல்லை உருவாக்கி, அதைக் கொண்டு ஏடிஎம் களில் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா காமன்வெல்த் வங்கி, ஸ்பெயினிலுள்ள பாங்கோ சபாடெல் வங்கி போன்றவைகளும் கார்ட் இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்க வகை செய்கின்றன.

பிரிட்டனிலுள்ள பிரபல வங்கியான பார்க்லேஸ் வங்கியானது பயனர்களுக்கு கையில் அணிந்து கொள்ளும் வாட்ச் போன்ற ஒரு கருவியை வழங்குகிறது. கேய்க்ஸா வங்கியும் அத்தகைய ஒரு வாட்சை உருவாக்கி ஸ்பெயின் முழுவதும் சுமார் மூன்று இலட்சம் இடங்களில் இதைப் பயன்படுத்தக் கூடிய கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது. பிபேண்ட் எனப்படும் அந்த கருவியைக் கொண்டு பயனர்கள் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்ளலாம். ஹெரிடேஜ் வங்கியானது ஒரு ஆடையை வடிவமைத்திருக்கிறது. அந்த ஆடையைக் கொண்டு பயனர்கள் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

நபர்கள் தங்களுக்கிடையே பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் பர்சன் டு பர்சன் வாய்ப்புகளை இப்போது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றன. ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் போதே ஆன்லைனில் லோன் வாங்கிப் பயன்படுத்தும் ‘ஆன் தி ஸ்பாட் கார்ட்லெஸ் கிரடிட்’ வசதியை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே மொபைலிலுள்ள க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்து பரிவர்த்தனை செய்யும் முறை பிரபலமாகியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் லிங்க் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையும் இப்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

பையோ (பல்ஸ்வாலெட்) ஒரு புதிய பணப் பரிவர்த்தனை முறையை களமிறக்கியிருக்கிறது. அதன் மூலம் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது பயனர்கள் தங்கள் உள்ளங்கையை அப்படியே பி.ஓ.எஸ் கருவியில் பதித்தால் போதும். பரிவர்த்தனை நடந்து விடும் ! பாம் செக்யூர் பயோமெட்ரிக் தொழில்நுட்பம் என இதை அழைக்கின்றனர்.

“ஐயோ பர்சை மறந்துட்டேனே” என பதட்டப்பட வேண்டிய சூழல் எழாத ஒருநாள் உருவாகும். அப்போது நமது கையில் எதுவுமே இருக்க வேண்டிய தேவை இல்லை. நாமே நடமாடும் கார்ட்களாவோம், நமது விரல்களே கடவுச் சொற்களாகும், நமது கண்களே அனுமதிச் சாவிகளாகும். அறிவியல் புனை கதை போல தோன்றும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

*

சேவியர்

Thanthi


தன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு  

$
0
0

வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்பதை எப்போதுமே நமது மனம் தான் முடிவு செய்கிறது. சிலர் காலையில எழும்பும்போதேஎன்னத்த எழுந்து.. என்னத்த கிழிச்சு..” என்று உற்சாகத்தை முழுமையாய் போர்வைக்கு அடியில் புதைத்து விட்டுத் தான் எழும்புவார்கள். அவர்களிடம்எப்படி இருக்கீங்க ?” என்று கேட்டுப் பாருங்கள்என்னத்த சொல்ல, ஏதோ வண்டி ஓடுது..” என்பார்கள்.

சிலர் அப்படியல்ல, காலையில் எழும்பும் போதே ஒரு புதிய நாளைத் தரிசிக்கப் போகிறோம் எனும் பூரிப்பில் எழும்புவார்கள். சூரியக் கதிர்கள் அவர்களுக்கு வரவேற்புக் கம்பளம் விரிப்பதாய் தோன்றும். உற்சாகத்தை உடுத்திக் கொண்டு தான் படுக்கையிலிருந்தே குதித்தெழுவார்கள். அவர்களிடம் போய்எப்படி இருக்கிறீங்க ?” என்று கேட்டால்சூப்பரா இருக்கேங்க. எனக்கென்ன குறை ? வாழ்க்கை ரொம்ப அழகா இருக்குஎன்று புன்னகைப்பார்கள்.

இந்தகைய உற்சாக மனம் உடையவர்கள் தான் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வெற்றியாளர்கள். அவர்கள் காலை முதல் மாலை வரை உற்சாகமாகவே இருப்பார்கள். எதையும் ஆனந்தமாய் அணுகுவார்கள். அன்றைய இரவு வரை அவர்களுக்கு வாழ்க்கை ஆனந்த நிகழ்வுகளையே கொடுத்துக் கொண்டிருக்கும். அவர்களுடைய இரவு செபம் கூடஆண்டவா, அழகான இந்த நாளுக்காக நன்றிஎன்பதாகத் தான் இருக்கும்.

தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு உற்சாகம் வருவதில்லை. எப்படியோ ஒரு நாளை ஓட்டிட்டேன் என படுக்கையில் சரியும் அவர்களுடைய இரவு செபம் பெரும்பாலும்ஆண்டவா, நாளைக்காவது நல்ல நாளா இருக்கட்டுமேஎன்பதாகத் தான் இருக்கும். 

தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல் கட்டளை என்ன தெரியுமா ? நம்மை நாமே நேசிப்பது. அடுத்தவர்களை நேசிப்பதைப் பற்றி நமக்குத் தெரியும். பெரும்பாலான நேரத்தை அதற்காகத் தான் செலவிடுகிறோம். பெற்றோரை நேசிக்க, வாழ்க்கைத் துணையை நேசிக்க, பிள்ளைகளை நேசிக்க, நண்பர்களை நேசிக்க. இப்படியே ஓடிப் போகும் வாழ்க்கையில் நாம் நேசிக்க மறந்து போகும் ஒரு அப்பாவி நபர் நாம் தான் !

நம்மை நேசிப்பதற்கு முதல் தேவை நம்மை ஏற்றுக் கொள்வது. எப்படி இருக்கிறோமோ, அப்படியே ஏற்றுக் கொள்வது. கண்ணாடியில் காலையில் நம் முகத்தைப் பார்க்கும்போதே அந்த பிம்பம் நமக்கு உற்சாக மூட்டவேண்டும். நமது நிறம், தோற்றம், குரல், திறமைகள், இத்யாதிகள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும். 

உங்கள் குழந்தை எந்த நிறமாக இருந்தாலும், எப்படி இருந்தாலும் கொஞ்சமும் தயக்கமில்லாமல் உற்சாகமாய் கட்டி அணைப்பீர்களல்லவா ? அந்த உற்சாகத்துடன், அதே ஆத்மார்த்தமாய் உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன் இயல்புகளோடு தன்னை ஏற்றுக் கொள்வது தன்னம்பிக்கைக்கான முக்கியத் தேவை.  

பெரும்பாலும் தன்னம்பிக்கைக் குறையாடுகள் நான்கு காரணங்களால் வரலாம் என்கின்றனர் உளவியலார்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் பயம், ஒரு சூழலை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் எனும் பயம், மன அழுத்தம் மற்றும் எதிர்மறைச் சிந்தனைகள்.

இவற்றை எதிர்கொள்வதும், தன்னம்பிக்கை மனிதனாக துளிர் விடுவதும் கடினமான விஷயமல்ல. எத்தனை வேகமாய் தண்ணீர் ஓடினாலும் எதிரேறிச் செல்லும் சின்ன மீன்களைப் போல, உங்களைச் சுற்றி என்ன சூழல் ஓடினாலும் நீங்கள் எல்லாவற்றையும் கடந்து தன்னம்பிக்கை மனிதனாய் நிலை பெற முடியும். அதற்கு நிரூபிக்கப்பட்ட ஒரு சின்ன பயிற்சி உண்டு.

முதலில் உங்களுடைய சிறந்த பண்புகள் என்னென்ன என்பதை நீங்கள் பட்டியலிடுங்கள். உங்களுக்குத் தெரிந்த, நீங்களே மறந்து போயிருந்த பல விஷயங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறட்டும். பின்பு உங்கள் நெருங்கிய நண்பர்களிடம்என்னிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன ?” என்று கேளுங்கள். அவர்கள் சொல்வதையும் குறித்துக் கொள்ளுங்கள். 

எல்லோருக்கும் உங்களிடமிருக்கும் ஏதோ ஒரு விஷயம் பிடித்துப் போகலாம். இப்படிப் பட்டியலிடுகையில் உங்களுடைய வலுவான நல்ல விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். “அட ! நானா இப்படி ?” என உங்களுக்கே ஒரு வியப்பு மேலிடும். உங்கள் தன்னம்பிக்கை முனை கூர்மையாகும். 

நேர்மறைச் சிந்தனைகளை அதிகரிப்பது ஒரு வகை. எதிர்மறைச் சிந்தனைகளை அழிப்பது ஒரு வகை. மனதில் எதிர் மறைச் சிந்தனைகள் அழிய அழிய, நேர் சிந்தனை மனதில் நிரம்பும். எதிர் சிந்தனைகளைக் கொட்டி நிரப்பி வைத்திருக்கும் குடுவையில் நேர் சிந்தனைகளை ஊற்ற முடியாது. எனவே எதிர் சிந்தனைகளை வெளியே கொட்டுவது ரொம்ப முக்கியம்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கு கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தபோது பல்பின் உள்ளே பயன்படுத்த வேண்டிய இழையை உருவாக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்தார். முடியவில்லை. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை வைத்து அந்த இழையை முயன்றார். தோல்வியே மிஞ்சியது. அருகில் இருந்த உதவியாளர் நிக்கோலா டெஸ்லா சொன்னார், “சேஎல்லாமே வேஸ்டாப் போச்சு. ஒண்ணுமே உருப்படியா அமையவில்லை”.

எடிசன் அவனை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னார், ”பத்தாயிரம் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு தோல்வியடைந்த முயற்சியும், சரியான பாதையில் ஒரு அடி முன்னே வைக்க உதவுகிறது 

இது தான் வெற்றியாளர்களுடைய பார்வை. இந்தப் பார்வை தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பார்வை. எந்தத் தோல்வியும் தன்னம்பிக்கையுடைய மனிதனுக்கு எதிரே அணை கட்ட முடியாது. ஆறாம் வகுப்பில் படுதோல்வி அடைந்தவர் தானே உலகப் புகழ்பெற்ற சர் வின்ஸ்டன் சர்ச்சில் ! தோல்வி அவரை தன்னம்பிக்கையின் தேசத்திலிருந்து கடத்திச் சென்று விடவில்லை. அவருடைய தன்னம்பிக்கை அவரை வெற்றிகளின் சாம்ராஜ்யத்தில் உச்சத்தில் வைத்தது !

உங்களால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்ற வேண்டிய விஷயத்தை மாற்றுங்கள். இரண்டுக்குமிடையேயான வேறுபாடைக் கண்டறியும் ஞானம் பெற்றிருங்கள்.” இதுவே மகிழ்வான வாழ்க்கையின் அடிப்படை. தன்னம்பிக்கைக்கான வலுவான சிந்தனையாக இன்றும் போற்றப்படும் இது  1800களில் ரெயின்ஹோல்ட் என்பவரால் எழுதப்பட்டது.

சில விஷயங்கள் நம்மால் மாற்ற முடியாது. உதாரணமாக நீங்கள் குள்ளமாய் இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை மாற்ற முடியாது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஏகப்பட்ட தம் அடிப்பீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை மாற்றியாக வேண்டும். ஏனெனில் அது மாற்ற முடிகிற விஷயம். இந்த இரண்டுக்குமான வித்தியாசம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ! 

இந்த வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளாமல் குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக வேண்டுமென லேகியம் சாப்பிடுவதுண்டு. புகை பிடிப்பவர்கள்தம்மெல்லாம் விட முடியாத பழக்கம்பா…” என சொல்லித் திரிவதுண்டு. இது இரண்டுமே தப்பான அணுகு முறை. ஏற்றுக் கொள்ள வேண்டியதை ஏற்றுக் கொள், மாற்றிக் கொள்ள வேண்டியதை மாற்றிக் கொள். ஆனந்த வாழ்க்கையின் அடிப்படை இது.

நீங்கள் உங்களுக்குள்ளே நல்ல சிந்தனைகளை வளர்ப்பது ஒரு நிலை. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நல்ல நேர் சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டியது இன்னொரு நிலை. ஒரு நல்ல காமெடி படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனநிலை உற்சாகமாய் இருக்கிறது. ஒரு சோகமான படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனம் பாரமாய் இருக்கிறது இல்லையா ? இதே போல தான் உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்களும் உங்களை மகிழ்ச்சியாகவோ, துயரமாகவோ வைத்திருக்க முடியும்.

என்னய்யா வாழ்க்கை…?” , “என்னய்யா பொழப்பு இது…” என்றெல்லாம் வாழ்வில் பிடிப்பே இல்லாதவர்கள் உங்களைச் சுற்றியிருந்தால் உங்களுக்குள்ளும் அந்த சிந்தனை நிச்சயம் புகுந்து விடும். எனவே அப்படிப்பட்ட நண்பர்களை கொஞ்சம் விலக்கியே வைத்திருங்கள். 

சில நண்பர்கள் அதற்கு நேர் எதிராக இருப்பார்கள். அப்பப்போ மனசு கஷ்டமாயிருந்தா உங்களுக்கே ஒரு சில நண்பர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். சரிதானே ? அவர்களுக்குப் போன் பண்ணத் தோன்றும். அவர்களைப் போய்ப் பார்க்கத் தோன்றும். காரணம் அவர்களுடைய பாசிடிவ் அணுகு முறை. 

அந்த நண்பர்களுடைய வார்த்தைகளுக்கு உங்களை சோர்வுச் சரிவிலிருந்து தூக்கி விடும் கைகள் இருக்கும். வைக்கோல் போரில் விழுந்த ஒரு துளி நெருப்பாக அவர்களுடைய வார்த்தைகள் உற்சாக நெருப்பைப் பற்ற வைக்கும். அப்படிப்பட்ட நண்பர்களோடு நெருக்கமாய் இருங்கள். தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருங்கள். அவர்களுடைய சுறு சுறுப்பு உங்களையும் பற்றிக் கொள்ளும். 

ஜிம் கேரிஎன்ற பெயரைச் சொன்னாலே ஒரு சின்னப் புன்னகை உங்களுடைய உதடுகளில் வந்து அமர்ந்து கொள்ளலாம். ஹாலிவுட்டின் கவுண்டமணி அவர். சின்னப் பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும் அவருடைய நடிப்பு அத்தனை நகைச்சுவை நிறைந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், ஐம்பதுக்கும் மேற்பட்ட உயர் விருதுகளை வாங்கியும் ஹாலிவுட்டில் நிரந்தர இடம் பிடித்தவர் இவர். 

இவருடைய இளமைக்காலமோ சோகமானது. கனடாவில் மூன்று சகோதர சகோதரிகளுடன் வறுமையில் உழன்றவர். படிப்பதற்குப் பணமில்லாததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டார். அந்த வறுமையிலும் தனது நகைச்சுவைத் திறன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். உள்ளூர் நகைச்சுவைக் குழு ஒன்றில் இணைந்து சிரிப்பூட்டினார். பொருளாதாரம் எவ்வளவு தான் இறுக்கினாலும் தன் மீதான நம்பிக்கையை அவர் சற்றும் தளர விடவில்லை. 

காலம் அவரை அமெரிக்காவுவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடி பெயர வைத்தது. அங்கும் அதே தொழிலைத் தொடர்ந்தார். படிப்படியாய் தனது எல்லையை விரிவாக்கி இன்று ஹாலிவுட்டின் பணக்கார நடிகர்களில் ஒருவராக பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக இருக்கிறார். உன்னை நீயே நம்பாவிடில் வேறு யார் நம்புவார் ? என நம்மைப் பார்த்துக் கேட்கிறது ஜிம்கேரியின் வியப்பூட்டும் வாழ்க்கை.

படிப்பில் அதிக ஆர்வமில்லாத  அந்தச் சிறுவனுக்கு ஆடை வடிவமைப்பதில் அலாதியான ஆர்வம். நியூயார்க்கில் வசித்து வந்த அவனுடைய வீட்டில் ஒன்பது சகோதர சகோதரிகள். பள்ளி இறுதியாண்டுகளில் படிக்கும்போது நகருக்குச் சென்று ஜீன்ஸ்கள் வாங்கி வந்து அதை மாடர்ன் ஸ்டைலில் மாற்றியமைத்து விற்பான். ஒரு சின்ன கடையையும் ஆரம்பித்தார். இருபத்தாறாவது வயதில் அந்தக் கடை ஏழு கிளைகளுடன் சர சரவென வளர ஆரம்பித்தது. 

ஆனால் அதிக நாள் அந்த பிஸினஸ் நிலைக்கவில்லை. தொழில் முற்றிலுமாய் வீழ்ச்சியடைந்தது. அவர் மனம் தளரவில்லை. அவரை வேலையில் அமர்ந்த கால்வின் கிளைன், பெரி எலிஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் முன்வந்தன. அவரோ தன்மீதான நம்பிக்கையை விட்டு விடவில்லை. தன்னால் மீண்டும் ஜொலிக்க முடியும் என நம்பினார். படிப்படியாய் அதற்கான வேலைகளில் இறங்கினார். புதிய நிறுவனம் ஒன்று உதயமானது. 

முதலில் ஆண்களுக்கான ஃபேஷன் ஆடைகளில் ஆரம்பித்து பின் பெண்களுக்கானது, குழந்தைகளுக்கானது என விரிவாக்கினார். படிப்படியாய் வளர்ந்தார். அந்தத் துறையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார். இன்று உலகில் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகியிருக்கும் டாமி ஹில்பிகர் (Tommy Hilfiger) தான் அந்த நிறுவனம். தன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வில் ஜெயித்துக் காட்டியவருடைய பெயரிலேயே அது இயங்குகிறது ! உன்னை நீயே நம்பாவிடில் வேறு யார் நம்புவார் ? என நம்மைப் பார்த்துக் கேட்கிறது இவருடைய வியப்பூட்டும் வாழ்க்கை.

உன்னை உளமார நேசி

உயர்வு அதில்தானே யோசி !

தன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது

$
0
0

நான் எதுக்குமே லாயக்கில்லாதவன்..” என உள்ளுக்குள்ளே ஒரு குரல் உங்களிடம் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறதா ? உஷார் ! நீங்கள் தாழ்வு மனப்பான்மை எனும் பசித்த சிங்கத்தின் பற்களுக்கு இரையாகக் கூடும். 

தாழ்வு மனப்பான்மை என்பது படிகளற்ற படுகுழி. அதற்குள் குடியிருப்பவர்கள் கால்களற்ற மனிதர்கள். அவர்களால் வாழ்வின் சமவெளியையோ, வெற்றியின் சிகரங்களையோ பார்க்கவே முடியாது !.

தாழ்வு மனப்பான்மைக்கும், தன்னம்பிக்கைக் குறைவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தாழ்வு மனப்பான்மை உடையவர்களால் தன்னம்பிக்கை வாதிகளாக பரிமளிக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் வெற்றியாளராகும் சாத்தியம் இல்லை.

தாழ்வு மனப்பான்மை உருவாக பல காரணங்கள் இருக்கலாம். சின்ன வயதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய அவமானங்கள். யாரும் ஏற்றுக் கொள்ளவில்லையே எனும் ஏக்கம். யாரும் அங்கீகரிக்கவில்லையே எனும் ஆதங்கம். அம்மா அப்பாவால் கைவிடப்பட்ட நிலை. அல்லது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை இப்படி ஏதோ ஒரு சில காரணங்கள் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை விதையை நட்டிருக்கக் கூடும். அவை உங்களுக்குள்ளேயே வேர்விட்டுக் கிளை விட்டு தாழ்வு மனக் கானகமாக  பிற்காலத்தில் வளரும். எதையும் முளையிலேயே கிள்ளி எறிவது மிகவும் சுலபம். தாழ்வு மனப்பான்மையும் அப்படியே !

சிலருக்கு இப்படி எந்த சிக்கலும் இல்லாத மழலைக்காலம் வாய்த்து விடும். வளர்ந்தபின்நான் கருப்பா பயங்கரமா இருக்கேன்”, “நான் குண்டா அசிங்கமா இருக்கேன்”, “நான் குள்ளமா கொடூரமா இருக்கேன்”, “நால் ஒல்லியா பல்லி மாதிரி இருக்கேன்இப்படியெல்லாம் தன் தோற்றம் குறித்த எதிர் சிந்தனைகள் கூடு கட்டிக் குடியேறிவிடும். இந்த சிந்தனைகளெல்லாம் தாழ்வு மனப்பான்மையை கம்பளம் விரித்து வரவேற்கும் சக்தி படைத்தவை. நாளடைவில் மற்ற எல்லோருமே தன்னை விடப் பெரியவர்கள், தான் மட்டும் உதவாக்கரை எனும் நினைப்புடன் ஓட்டுக்குள் மறைந்து கொள்ளும் ஆமை போல ஆகி விடுவார்கள்.

இன்னும் சிலருக்கு தாழ்வு மனப்பான்மை என்பது அடுத்தவர்களுடைய வசதி வாய்ப்பைப் பார்த்து வந்து விடும். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கார் வாங்கினால் இவருடைய மனசில் இவர் தன்னையே சின்னவராய்ப் பார்க்க ஆரம்பித்து விடுவார். எதிர் வீட்டுக்காரர் ஒரு எல்..டி டிவி வாங்கினால் தாழ்வு மனம் கொஞ்சம் கூடும். அலுவலகத்தில் அடுத்து இருப்பவர் லூயி பிலிப் சட்டை போட்டால், தோழி புதிதாய் சங்கிலி வாங்கினால், சக பணியாளன் ஒரு நிலம் வாங்கினால் இப்படி அடுத்தவர்களுடைய பொருளாதார பலங்களெல்லாம் இவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். அவர்களைப் போல நம்மால் இருக்க முடியவில்லையே எனும் துயரத்தில் ஆழ்ந்து விடுவார்கள்.

வேறு சிலருக்கு எல்லா வசதிகளும், வாய்ப்பும் இருக்கும். படித்திருப்பார்கள். வேலையில் இருப்பார்கள். காரில் பயணிப்பார்கள். அவர்களுக்கும் தாழ்வு மனப்பான்மை வரும். பல வேளைகளில் அறிவு ரீதியான தாழ்வு மனப்பான்மை. தன்னை விட அறிவாளியாய் மற்றவர்கள் இருக்கிறார்களே எனும் சிந்தனை. குழுக்களில் தனது கருத்தைப் பரிமாற ஆயுட்கால தயக்கம், மீட்டிங்களில் வாய் மூடி மௌனித்திருப்பது, தனது எழுத்துக்களை வெளியே காட்டுவதற்குக் கூட வெட்கம் என இவர்களுடைய தாழ்வு மனப்பான்மை இன்னொரு விதமானது !

இன்னும் சிலருக்கு அடுத்தவர்களுடைய வெற்றி தாழ்வு மனப்பான்மையைக் கொண்டு வரும். “அவனைப் பாரு ஆறே மாசத்துல கடனை எல்லாம் அடச்சுட்டான். நானும் இருக்கேனேஎனும் சுய பச்சாதாபம் தாழ்வு மனப்பான்மையாய் மாறி விடும். எல்லோரும் தங்களைப் பார்த்தே சிரிப்பது போலவும், தங்களை நக்கலடிப்பது போலவும் கனவுகள் வரும். 

தாழ்வு மனப்பான்மையின் வடிவங்களையும், முகங்களையும் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், “நமது மனதில் நாமே நம்மைக் குறித்த தாழ்வான ஒரு சிந்தனையை உருவாக்குவதுதான் தாழ்வு மனப்பான்மை. அதை உருவாகும் காரணிகள் நமக்கு உள்ளேயோ வெளியேயோ இருக்கலாம்.  

தாழ்வு மனப்பான்மை மனதளவிலான பாதிப்புகளை உண்டாக்குவதுடன், உடலையும் வெகுவாகப் பாதித்து விடுகிறது. தாழ்வு மனப்பான்மையுடையவர்களுடைய மூளைத் திறன் குறைந்து அவர்கள் பெரும் மறதிக்காரர்களாகி விடுவார்கள் என்கிறது கனடாவிலுள்ள மாண்ட்ரீயலில் நடந்த ஆய்வு முடிவு ஒன்று. இது தவிர மன அழுத்தம், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, இதய நோய், தலை வலி, உடல் வலி, கான்சர் என தாழ்வு மனப்பான்மை தரும் நோய்களின் பட்டியல் அச்சுறுத்துகிறது ! எனவே தாழ்வு மனப்பான்மை எனும் புதை குழியில் விழாமல் கவனமாய் நடப்போம்.

சரி தாழ்வு மனப்பான்மை எனும் கூட்டிலிருந்து வெளியே வர முடியுமா ? 

நிச்சயமாக ! என்பது தான் அழுத்தமான பதில்.

முதலில் உலகத்தில் எல்லோருமே தனித்துவமானவர்கள் எனும் உண்மையை மனதில் தெளிவாக எழுதிக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் சில திறமைகள் நிச்சயம் உண்டு. சில குறைபாடுகளும் நிச்சயம் உண்டு. ஒரு காளானைத் தொட்டுப் பார்த்து நல்ல காளானா விஷக் காளானா என கண்டுபிடிக்கும் பாட்டியின் திறமை தனித்துவமானது. கணினியில் உலகைக் கண்டு பிடிக்கும் பேரனின் திறமை இன்னொரு விதமான தனித்தன்மை ! இந்த உண்மையை உணர்தல் முதல் தேவை.

இந்த நடிகனெல்லாம் வெற்றி பெற வாய்ப்பே இல்லைஎன ஒரு நடிகனைப் பார்த்து கிண்டலடித்தார் அமெரிக்காவிலுள்ள கொலம்பியாவின் துணை ஜனாதிபதி ஒரு முறை ! பிற்காலத்தில் அந்த நடிகர் ஹாலிவுட்டிலேயே அதிகம் சம்பளம் வாங்கக் கூடியவராய் மாறினார். அவர் ஹாரிசன் ஃபோர்ட் ! அவருடைய திறமை மேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது ! “இவரே சொல்லிட்டாரே.. இனிமே நான் அவ்ளோ தான்…” என தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்து விடவில்லை.

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் தங்களுடைய வெற்றிகளைக் கொண்டாடமாட்டார்கள். மாறாக அதை விடப் பெரிய பெற்றி பெற்றவர்களை நினைத்து தங்களைத் தாங்களே சோர்வாக்கிக் கொள்வார்கள். அந்தப் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். நமது சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட மனதளவில் கொண்டாட வேண்டும். யாராவது பாராட்டினால் ஏற்றுக் கொள்ளுங்கள். பாராட்டுக்கு நன்றி சொல்லுங்கள். வெற்றிகளின் விளக்கு வெளிச்சத்தின் முன் தன்னம்பிக்க இருட்டால் தாக்குப் பிடிக்க முடியாது.

யாராவது ஏதாவது ஒரு எதிர் கருத்துச் சொன்னால் உடனே எல்லாம் மூழ்கி விட்டது போல இடிந்து போய் விடாதீர்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொள்ளுங்கள். விமர்சனங்களின் உண்மைத் தன்மையை அறியுங்கள். அவை நல்லவையெனில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்ள முடியவில்லையெனில் விட்டு விடுங்கள். எக்காரணம் கொண்டும் விமர்சனங்களின் அடிப்படையில் உங்களை நீங்களே சிறுமைப் படுத்திக் கொள்ளாதீர்கள்.

பள்ளிக்கூடத்தில் மோசமாகப் படிக்கிறான் என்று அடிக்கடி திட்டு வாங்கிக் கொண்டிருந்தார் ஒரு மாணவர். கணக்குப் பாடத்தில் அவர் படு வீக். சரி வீட்டிலிருக்கும் தோட்டத்தைப் பராமரிக்கலாமென்றால் அங்கும் தோல்வி. எங்கும் விமர்சிக்கப்பட்ட அவர் தான் பிற்காலத்தில் உலகை பிரமிக்க வைத்த ஐசக் நியூட்டன். 

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் செயல்களுக்கான பொறுப்பு உங்களுடையது என்பதை உணருங்கள். அப்போது தான் உங்களுடைய வாழ்க்கையை மாற்றுவதற்கான வலிமையும் உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள். அது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். உங்கள் செயல்களிலும் மாற்றத்தைக் கொண்டு வரும்.

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வர இன்னொரு முக்கியமான தேவை பழைய நினைப்புகளிலிருந்து வெளியே வருவது தான். குறிப்பாக உங்களை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் தோல்விகள், பிறருடைய கிண்டல்கள் போன்றவற்றையெல்லாம் மூட்டையாய்க் கட்டி இந்தியக் கடலில் எறிந்து விடுங்கள். 

இன்னொரு முக்கியமான விஷயம், தோல்வி என்பது சகஜம் எனும் வாழ்க்கையின் உண்மையைப் புரிந்து கொள்வது. பிறப்பைப் போல, இறப்பைப் போல தோல்விகளும் மாற்ற முடியாதவை. ஏதோ ஒருவகையில் எல்லோருமே தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம் எனும் உண்மையைப் புரிந்து கொள்வது அவசியம். தோல்விகளை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டால் அந்தத் தோல்விகள் உங்களுடைய தன்னம்பிக்கையை உடைப்பதில்லை !

ஜான் கிரிஸாம் எனும் எழுத்தாளரை அறிந்திருப்பீர்கள். நாவல் உலகில் பல கோடி பணம் சம்பாதித்தவர். அவருடைய நூல்கள் சுமார் 25 கோடி பிரதிகளுக்கு மேல் உலகெங்கும் விற்றுத் தீர்ந்தது. ஆனால் அவருடைய முதல் நாவலை வெளியிட அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 12 பதிப்பகங்கள் அவரை நிராகரித்தன. 16 பதிப்புலக ஏஜெண்ட்கள் அவரை ஏளனம் செய்தனர் ! அவர் அசரவில்லை. தோல்விகள் ஒரு நாள் வெற்றியாய் மாறும் எனும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

பிறரோடு இணைந்து வாழப் பழகுங்கள். பிறரைப் பார்த்துப் புன்னகைப்பது கூட தாழ்வு மனப்பான்மையை உடைக்கும் என்கின்றனர் உளவியலார்கள். புன்னகையுடன் வாழ்க்கையை அணுகுங்கள் இது உங்களை வலுவாக்கும்.

உங்களுடைய குறைகளைக் குத்திக் காட்டி உங்களைச் சிறுமைப்படுத்துவோரை விட்டு தூரமாய் போய் விடுங்கள். அதாவது உங்களை ஏதாவது ஒரு வகையில் தாழ்வு  மனப்பான்மையில் உழலச் செய்யும் மனிதர்களை அறவே தவிர்த்து விடுங்கள். அதே போல நீங்களும் பிறரைச் சிறுமைப்படுத்தும் குணாதிசயங்களை விட்டு விடுங்கள். பிறரைக் கிண்டலடிப்பது, ஏளனமாய்ப் பார்ப்பது போன்றவை உங்களிடம் இருந்தால் அதை நிறுத்தி விடுங்கள்.

பேசுங்கள், உங்களுடைய மனதில் பூட்டப்படும் சிந்தனைகள், விமர்சனங்கள், பதில்கள் கூட உங்களைக் கடுமையான மன அழுத்தத்தில் தள்ளிவிடும். எனவே பேசவேண்டியவற்றைப் பேச வேண்டிய இடத்தில் பேசிப் பழகுங்கள் ! ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காத, உங்கள் மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு வேலையில் நீங்கள் இருந்தால் அதை விட்டு விடுங்கள். வாழ்க்கை ஆயிரம் கதவுகளோடு காத்திருக்கிறது எனும் உண்மை உணருங்கள்.

தாழ்வுமனம் தோல்வியின் வீடு

தோல்வியற்ற மனதையே நாடு

தன்னம்பிக்கை : பதின் வயது, தடுமாறும் மனது 

$
0
0

பதின்வயது பக்குவமாய்க் கையாள வேண்டிய வயது. சட்டென உடைந்து விடும் முட்டையைப் போல சில நேரம், உடைக்கவே முடியாத பாறை போல சிலநேரம் என மாறி மாறி வித்தை காட்டும் அவர்களுடைய மனம் புதிர்களின் புகலிடம். “தன்னம்பிக்கையெல்லாம் பெரியவர்களுக்கான விஷயம்என பல வேளைகளில் நாம் ஒதுக்கி வைப்பதுண்டு. உண்மையில் தன்னம்பிக்கை பதின் வயதுப் பெண்களுக்குத் தான் ரொம்பவே தேவை. 

இன்றைய வாழ்க்கைச் சூழல் பதின் வயதுப் பெண்களின் மீது ஏகப்பட்ட சுமைகளை இறக்கி வைக்கிறது. அவர்களுக்கு முன்னால் விளம்பர மாடல்களும், திரை நட்சத்திரங்களும் ரோல் மாடல்களாக விரிகிறார்கள். நட்சத்திரங்களின் உடலமைப்பு, நிறம், குணாதிசயம் இவையெல்லாம் இருந்தால் தான் அங்கீகரிக்கப்படுவோம் எனும் தப்பான எண்ணம் அவர்களுடைய மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து விடுகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கையின் மேல் விழும் மிகப்பெரிய அடி இது ! 

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இன்றைய முகப்பூச்சு விளம்பரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். கறுப்பு நிறம் நல்லதென்று ஏதேனும் ஒரு முகப்பூச்சு சொல்கிறதா ? கறுப்பிலிருந்து எப்படி வெளியே வரலாம் என்பதை மட்டுமே அது பேசுகிறது. அதாவது சிவப்பு நிறம் மட்டுமே அழகானது, மற்ற எந்த நிறமானாலும் பூச்சுகளைக் கொண்டு சரி செய்யப்பட வேண்டும் என்பதே அவை போதிக்கும் பாடம். இந்தியாவில் எத்தனை கருப்பு நிறப் பெண்கள் இருப்பார்கள் ! அவர்களில் எத்தனை பேருடைய தன்னம்பிக்கையை இத்தகைய விளம்பரங்கள் தவிடு பொடியாக்கியிருக்கும் ?

இப்படி சமூகமும், ஊடகங்களும், சக மனிதர்களும் இடுகின்ற பட்டியலுக்குள் அடங்க முடியாமல் போகும் போது பதின் வயதினரின் தன்னம்பிக்கை தவிடு பொடியாகி விடுகிறது.

பதின்வயதினரின் தன்னம்பிக்கை உடைந்து போக சின்னச் சின்ன விஷயங்களே போதுமானது ! நண்பர்கள் மத்தியில் பாப்புலராய் இருப்பது பதின் வயதினருக்கு இனிமை தரும் சமாச்சாரம். அந்த பாப்புலாரிடி இல்லாமல் போகும் போது கூட அவர்களுடைய தன்னம்பிக்கை சிதைந்து போய் விடுகிறதாம். ஃபேஸ் புக்கில் நிறைய நண்பர்கள் சேரவில்லை என்றாலே கவலைப்பட்டு அப்செட் ஆகி விடும் இளம் பெண்கள் இருக்கிறார்கள். 

எட்டு, ஒன்பது வயதுகளில் பெண்களிடம் தன்னம்பிக்கை அபரிமிதமாக இருக்கும் என்கின்றன பல்வேறு ஆய்வு முடிவுகள். அதே பெண்கள் சில ஆண்டுகள் கழிந்து பதின் வயதுக்குள் நுழையும்போதோ தன்னம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்து விடுகிறது. இதற்கு அவர்களுடைய உடல் மாற்றங்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

பெரியவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய தன்னம்பிக்கையை அவர்களே தான் கட்டி எழுப்ப வேண்டும். பதின் வயதுப் பெண்களுக்கோ, பெற்றோர், நண்பர்கள், உடன்பிறந்தோர் ஆகியோருடைய உதவியும் வெகுவாகத் தேவைப்படுகிறது. அதற்காக அட்வைஸ் மழையை அவிழ்த்து விடவும் முடியாது. காரணம் பதின் வயதுப் பெண்களுக்கு அட்வைஸ் என்பது உலக மகா அலர்ஜி. எனவே சொல்ல வேண்டியதை அவர்களுடைய பாணியில், அவர்களுடைய மொழியில் நாசூக்காகச் சொல்ல வேண்டும் !. 

குறிப்பாகப் பெற்றோர் தங்கள் பதின் வயதுப் பிள்ளைகளிடம் நதியில் மிதக்கும் படகைப் போல மிதந்து வாழ்வைப் புரிய வைக்க வேண்டும்.

எங்க காலத்துல பன்னிரண்டு முழம் புடவை கட்டினோம்…” என கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சக தோழிகளெல்லாம் ஜீன்ஸில் சுற்றும் போது, உங்கள் மகள் புடவையில் போனால் அவளுடைய தன்னம்பிக்கை தான் பாதிக்கப்படும். எனவே குணாதிசயம் சிதையாமல் சில அடையாளங்கள் மாறிப் போவதைக் கண்டு பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. 

குறிப்பாக தலை முடியை ஸ்டைலாக வெட்டுவது, நிறம் மாற்றுவது, தங்க நகையை கழற்றி வைத்து விட்டு தோசைக் கல் கம்மல் மாட்டுவது, இதெல்லாம் பதின் வயது பேஷன். தன்னைச் சுற்றியிருக்கும் நண்பர்களைப் போல உடையணியாவிடில் நிராகரிக்கப்பட்டு விடுவோம் எனும் பயம் அவர்களிடம் இருக்கும். எனவே அவர்களுடைய மாற்றத்தின் நிலையறிந்து அனுசரித்துப் போவது அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும்.

உங்கள் மகள் செய்யும் அனைத்தையும் நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் புரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் பதின் வயதில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என நினைவு வருகிறதா ? ! பெரும்பாலும் தனிமையிலும், குழப்பத்திலும் கழிந்திருக்கத் தானே வாய்ப்பு அதிகம். அதே உணர்வுகள் உங்கள் மகளுக்கும் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மகளை ஏதாவது ஒரு நல்ல பொழுதுபோக்கில் ஈடுபட வையுங்கள். அது அவளுக்கு ரொம்பப் பிடித்ததாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்குப் பிடித்ததை அவளிடம் திணிக்காதீர்கள். அது அவளுக்கு ஹாபியாய் இருக்காது ! வேலையாய் மாறிப் போய்விடும். அதே போல சமூகக் குழுக்கள், பள்ளிக் குழுக்கள், ஆலயக் குழுக்கள் போன்றவற்றில் ஈடுபட வையுங்கள். அவர்களுடைய தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்ப இவையெல்லாம் உதவும்.

எந்தக் காரணம் கொண்டும் பதின் வயதினரை இளக்காரமாய்ப் பேசாதீர்கள். அவளுடைய நடை உடை பாவனைகளைக் கிண்டலடிக்கவே அடிக்காதீர்கள். குறிப்பாக பிறருக்கு முன்னால் வைத்து அப்படி ஒரு சிந்தனையே உங்களுக்கு வர வேண்டாம். அவளுடைய தன்னம்பிக்கையின் வேர்களில் அது கோடரியாய் விழும்.

உங்கள் மகள் தவறான வழியில் செல்கிறாள் எனில் அவளுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டியது உங்கள் கடமை. அதில் இரண்டு வகை உண்டு. “நீ செய்வது தவறுஎன்று தவறைச் சுட்டுவது ஒரு வகை, எது சரியானது  என வழிகாட்டுவது இன்னொரு வகை. நீங்கள் இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்கின்றனர் உளவியலார்கள்.

உங்கள் மகளிடம் நிறைய நேரம் செலவிடுங்கள். பெரும்பாலான பெற்றோர் செய்கின்ற மிகப்பெரிய தவறு மகள் வளர்ந்து விட்டால் தனியே விட்டு விடுவது. இது பெற்றோர் குழந்தைகளிடையே பெரிய இடைவெளியை உருவாக்கி விடும். பதின் வயதினருக்கு அது மிகுந்த மன உளைச்சலைத் தரும். எனவே உங்கள் மகளுடன் போதுமான நேரம் செலவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். அது அவளுடைய பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். அந்தப் பாதுகாப்பு உணர்வே அவளுடைய தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பும்.  

உங்கள் மகளுடைய ஆரோக்கியத்தில் கவனமாய் இருங்கள். உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துங்கள். சரியான உடற்பயிற்சி உங்கள் மகளுடைய தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளுடைய மன அழுத்தம், தடுமாற்றம் போன்ற பல விஷயங்கள் மறையும். ஏழைகளுக்கு உதவுவது, நேர்மையாய் இருப்பது, நல்ல கல்வி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களிலெல்லாம் உங்கள் மகளை ஈடுபடுத்துங்கள். இவையெல்லாம் உங்கள் மகளை தன்னம்பிக்கையில் வளர்த்தெடுக்கும் விஷயங்கள். 

பாராட்டுங்கள். உங்கள் மகளின் சின்னச் சின்ன நல்ல விஷயங்களுக்கெல்லாம் அவளைப் பாராட்டுங்கள். அவளுக்குத் தன்னம்பிக்கை தரக் கூடிய எந்த விஷயத்தையும் பாராட்டத் தயங்காதீர்கள். ஒருவேளை உங்கள் மகள் குண்டாய் இருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவளுடைய தோற்றம் அழகாக இருக்கிறது என பாராட்டுங்கள் !

விளையாட்டில் ஆர்வமுடைய பிள்ளைகளைத் தடுக்காதீர்கள். விளையாட்டு அவர்களுடைய உடல் ஆரோக்கியம், குழு மனப்பான்மை போன்ற பல விஷயங்களுக்கு நல்லது. கூடவே அவர்களுடைய மன அழுத்தங்களும் இதனால் அடிபட்டுப் போய் விடும்.

இந்தப் பதின் வயது தான் பாலியல் ஈர்ப்பு, போதை, அதீத பொழுது போக்கு என எல்லை தாண்டிச் சென்று சிக்கி விடும் அபாயம் உண்டு. குறிப்பாக தந்தையின் வழிகாட்டுதல் இல்லாத பெண்களும், தன்னம்பிக்கை இல்லாத பெண்களும் தான் இத்தகைய சிக்கல்களில் போய் சிக்கிக் கொள்வார்கள் என்கின்றன ஆய்வுகள். எனவே பதின் வயது மகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வழிகளை விட்டு விடாமல் இருக்க வேண்டியது அவசியம்.

சினிமா பிரபலங்கள், விளம்பர மாடல்களெல்லாம் உண்மையைப் பிரதிபலிப்பதில்லை எனும் விஷயத்தைப் புரிய வையுங்கள். அதீத மேக்கப், லைட்டிங், கேமரா கோணம், கிராபிக்ஸ் என ஏகப்பட்ட விஷயங்கள் இதில் உண்டு. இவற்றை உங்கள் மகளிடம் இயல்பாக விளக்கலாம். இவர்களைப் போல ஆக வேண்டுமென பதின் வயதினர் பலரும் டயட், ஸ்லிம் மாத்திரை என தப்பாய் குதிக்கும் போது அவர்களுடைய உடலும் மனமும் பாதிப்படைகிறது. பலர் உயிரை இழக்கவும் இது காரணமாகி விடுகிறது.

முக்கியமாக பதின் வயதுப் பெண்கள் தன்னைப் பற்றி அறிந்து கொண்டிருப்பதும், தங்களால் எதையும் செய்ய முடியும் என ஆழமாய் நம்புவதும், சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் எல்லைகளில் உலவ முடியும் எனும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டியதும் அவசியம். பதின் வயதினரின் தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்புவது வலுவான ஒரு இளைய சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்குச் சமம்.

பதின் வயதை உரமூட்டுவோம்

எதிர் காலத்தை நிறமூட்டுவோம்

தன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் ! 

$
0
0

ஆணும் பெண்ணும் சமமெனும் வாதங்கள் எதற்கு ? பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றவா ?” என பெண்கள் உற்சாகக் குரல் கொடுக்கும் காலம் இது. வாழ்வில் உயரவேண்டும் எனும் வேட்கை பெண்களை அலுவலகங்களுக்குள் நுழைய வைக்கிறது. அதே பெண்கள்  தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருந்து விட்டால் அலுவலகத்திலுள்ள உயரிய இருக்கைகளெல்லாம் அவர்களுக்காகக் காத்திருக்கும்.

தன்னம்பிக்கைக்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வீட்டில் மதிக்கப்படும் ஒருவர் அலுவலகத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் வாய்ப்பு அதிகம். வீட்டிலோ, நண்பர்களாலோ நிராகரிக்கப்படும் நபர் அலுவலக சூழலில் தன்னம்பிக்கை இல்லாமல் அவஸ்தைப் படவும் வாய்ப்பு அதிகம் என்கின்றன உளவியல் ஆய்வுகள்.

நமது வாழ்க்கைச் சூழல் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்களை மையப்படுத்தியே அமைந்து விட்டது. ஆண்களை விடப் பெண்களுக்குத் தன்னம்பிக்கையும், அதைத் தேடும் வேட்கையும் அதிகமாய்த் தேவைப்பட அது தான் காரணம்.  

அலுவலக ஆண்கள் சக பெண் பணியாளரைக் கொஞ்சம் இளக்காரமாய்ப் பார்ப்பதும், பெண் உயரதிகாரிகளைக் கொஞ்சம் பொறாமையாய்ப் பார்ப்பதும் வெகு சகஜம். இந்த உளவியல் எதிர்ப்புகளுக்கு பலியாகாமல் இருக்க வேண்டியது பெண்களின் தேவை. தன்னுடைய பலங்களின் மேல் வைக்கும் நம்பிக்கையும், தனது பலவீனங்களை ஏற்றுக் கொள்ளும் திடமும் பெண்களை அலுவலகத்தில் திரும்பிப் பார்க்க வைக்கும்.

பொம்பளைங்களுக்கு புரமோஷன் எல்லாம் எப்படிக் கிடைக்கும்ன்னு நமக்குத் தெரியாதா ? சிரிச்சுப் பேசி மயக்கி வாங்கிடுவாங்க…” என்று துவங்கி, பெண்களின் வளர்ச்சியை கீழ்த்தரமாய் விமர்சிக்கும் வாய்கள் அலுவலகத்தில் ஏராளம் உண்டு. அந்த விமர்சனங்களை வாங்கி பரிமாறிக் கொள்ளும் வராண்டாக்களுக்கும் பஞ்சமில்லை. இவையெல்லாம் பெண்களுடைய தன்னம்பிக்கையை உடைக்கும் விஷயங்கள். இதிலிருந்து தப்பி வருவதில் இருக்கிறது அலுவலகப் பெண்களின் முதல் வெற்றி. இத்தகைய விமர்சனங்கள் நீங்கள் வளர்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துபவை என்பதை உணர்ந்தாலே போதும்.  

அலுவலகத்தில் ஆண் பெண் பேதமெல்லாம் கிடையாது என்று நீங்கள் முதலில் மனதில் எழுதிக்கொள்ள வேண்டும். அப்படியே ஒரு பாகுபாடு திரை மறைவில் இயங்கினால் கூட எந்த நிறுவனமும் அதை வெளிக்காட்டுவதில்லை. எனவே நிர்வாக விதிமுறைப்படி பெண்களுக்கு எதுவும் மறுக்கப்படப் போவதில்லை. அதையே துருப்புச் சீட்டாய்க் கொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் சமம் எனும் எண்ணமே தன்னம்பிக்கையை உயர்த்தும் நெம்பு கோல் தான். எல்லோரும் சமமெனில், அங்கே திறமைசாலிகளுக்கு மட்டும் தானே வரவேற்பு !  

கேரல் ஆன் பார்ட்ஸ் என்பவர் கான்க்லோமெரேட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பணி இடமாற்றம் கேட்டார். “பெண்களெல்லாம் இந்த வேலை செய்ய முடியாது. டிரான்ஸ்பர் கிடையாதுஎன்று சொல்லி விட்டார்கள். அவர் அசரவில்லை. அந்த நிறுவனத்தையே உதறினார் அவர். தன்னுடையை திறமையின் மேல் அசாத்தியத் துணிச்சலுடைய அவர் தான் இன்று புகழ் பெற்ற யாகூ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (CEO). 

சின்ன வேலையோ, பெரிய வேலையோ உங்களுக்கு இடப்படும் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றுங்கள். சின்னச் சின்ன வேலைகளை செவ்வனே செய்து முடிப்பவர்களுக்குத் தான் பெரிய பெரிய வாய்ப்புகள் காத்திருக்கும் எனும் அடிப்படையை மறக்காதீர்கள். புதிது புதிதாக படித்துக் கொண்டே இருங்கள். உங்களுடைய அசரடிக்கும் கல்வியினாலும், திறமையினாலும் அலுவலகத்தில் கவனிப்புக்கு உள்ளானீர்களெனில் நீங்கள் வென்று விட்டீர்கள் என்று அர்த்தம். 

தயக்கமில்லாத மனம்இன்னொரு தேவை. பெரும்பாலானவர்கள் அலுவலகத்தில் உயரதிகாரியிடமோ, சக பணியாளரிடமோ அலுவல் நிமித்தமான ஒரு சின்னக் கேள்வியைக் கேட்கக் கூடத் தயங்குவார்கள். “இது ரொம்ப சாதாரண கேள்வியோ ? இது கூட தெரியலையான்னு நெனச்சிடுவாங்களோ ?” போன்ற தயக்கம் தான் இதன் காரணம். உண்மையில் சாதாரண கேள்வி என்று ஒன்று கிடையவே கிடையாது. தயங்காமல் கேள்வி கேட்பவர்கள் தான் பதிலைப் பெற்றுக் கொள்கிறார்கள்.  

நீங்கள் அடிக்காத எந்த ஷாட்டும் கோலாக மாறுவதில்லைஎன்பார் வேன் கிரெஸ்கி எனும் உலகப் புகழ் ஹாக்கி வீரர். முதல் சுவடு எடுத்து வைக்காத பயணங்கள் இல்லை. சிறகை விரிக்காமல் வானத்தில் பாதைகள் இல்லை. எனவே தோல்விகள் ஏற்படுமோ, பிறருக்கு முன்னால் ஒரு அவமானச் சின்னமாய் நிற்போமோ எனும் பயமே வேண்டாம். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனிதனை அவமானங்கள் சந்திப்பதில்லை.  

தயங்குபவர்கள் அலுவலக சூழலில் முன்னேற முடியாது. அவர்களை மிதித்து, அவர்களுடைய முதுகில் ஏறி மற்றவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அப்புறம் காலம் முழுதும், மிதிபட்டுக் கொண்டே கிடக்க வேண்டியது தான். எனவே தயக்கம் இல்லாத அணுகுமுறை அலுவலக வாழ்வில் ரொம்ப அவசியம். 

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். “இது என்னால் முடியும்என்று சொல்வது மட்டுமல்ல தன்னம்பிக்கை, “இதை  என்னால் செய்ய முடியாது..” என்று சொல்வதும் தன்னம்பிக்கையின் வடிவம் தான். குறிப்பாக அலுவலக சூழலில் உங்களால் முடியாத விஷயங்களைமுடியாதுஎன்று மறுத்தால் தான் நீங்கள் கம்பீரக் குதிரை ! இல்லையேல் பொதி சுமக்கும் கழுதை தான். எப்போதும் உங்கள் முதுகில் ஏதேனும் விழுந்து கொண்டே இருக்கும் !

வேலை விஷயத்தில் நான் ரொம்ப திறமைசாலிஎனும் உயர்வான அபிப்பிராயம் இருக்க வேண்டியது அவசியம். நம்மை நாமே உயர்வாக நினைக்கவில்லையேல் பிறர் உயர்வாக நினைக்கப் போவதில்லை. 

பெண்களின் தன்னம்பிக்கைக் குறைபாடுகளுக்கு பெற்றோரும் ஒரு வகையில் காரணம் என்கின்றனர் உளவியலார்கள். சின்ன வயதிலிருந்தே அவர்களை சிறப்புக் கவனம் எடுத்து தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தால் அவர்கள் அலுவல் வீதிகளில் நடக்கும் போது தலை கவிழ்வதில்லையாம் ! சின்ன வயதில் அப்பா, அம்மா பிறகு நண்பர்கள், அதன் பின் கணவன் அவருடைய குடும்பம் என பிறர் சொல்லும் கருத்துக்களின் பிரதிபலிப்பாய் பெண்கள் தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். 

உண்மையில் பெண்கள் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதன் பிம்பமல்ல. தான் யார், தன்னுடைய இயல்பு என்ன என்பதைப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்தெந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறீர்களோ, அப்படியே ஆகிவிடுகிறீர்கள். “உங்களுக்கு எஜமானர் நீங்களேஎனும் சிந்தனை இருந்தால் மட்டுமே உங்களால் வெற்றியடைய முடியும்.

ஏஞ்சலினா ஜூலி ஹாலிவுட்டைக் கலக்கும் ஹீரோயின். ஒருகாலத்தில் தாழ்வு மனப்பான்மையினால் உழன்றவர். அதிலிருந்து வெளியேறி தன்னம்பிக்கையைத் துணையாக்கியபின்பு அவருடைய வாழ்க்கை வெற்றிகரமாய் மாறியது ! அவரைப் பார்த்து வியப்பவர்கள் அவருடைய தன்னம்பிக்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும்.

உங்கள் ஒவ்வோர் செயலிலும் தன்னம்பிக்கை புலப்பட வேண்டியது அவசியம். உங்கள் நடையில், உங்கள் கைகுலுக்கலில், உங்கள் பேச்சில் ஏன் நீங்கள் அமர்வதில் கூட உங்களுடைய தன்னம்பிக்கை வெளிப்படட்டும். எந்தக் காரணம் கொண்டும் அலுவலக விஷயங்களைச் செய்யும் போது எமோஷனாகாமல், கண்ணீர் விடாமல், தழு தழுக்காமல் இருங்கள். இவையெல்லாம் குடும்ப வாழ்வில் நல்லதாக இருக்கலாம். ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு எதிராய் ஒரு முத்திரை குத்தப்பட இவையெல்லாம் காரணமாகிவிடும். 

உங்கள் முன் மாதிரிகளை நிஜ வாழ்க்கையிலிருந்து கண்டெடுங்கள். தொலைக்காட்சியோ, சினிமாவோ உங்களுக்கு நிஜமான ஒரு முன்மாதிரிகையைத் தராது. அவர்களைப் போல தோற்றமளிக்க வேண்டும் என நினைப்பது உங்களுடைய மன அழுத்தத்தைத் தான் அதிகரிக்குமே தவிர தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யாது.

உங்களை எதெல்லாம் ஊக்கமூட்டுமோ அதையெல்லாம் விரும்பிச் செய்யுங்கள். அது அலுவலக வேலையாய் இருக்கலாம், சமூக சேவையாய் இருக்கலாம் அல்லது கவிதை எழுதுவதாய் கூட இருக்கலாம். அதே போல யாரெல்லாம் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கிறார்களோ அவர்களோடு மட்டுமே அதிக நேரம் செலவிடுங்கள்.   

உங்கள் மனம் ஒரு அழுத்தமற்ற பூந்தோட்டமாக இருக்கவேண்டும். அதில் சுதந்திரக் காற்று சுற்றி வரவேண்டும். அலுவலகத்தில் உங்களுடைய தன்னம்பிக்கை உங்களை உயர்த்தும் போது, உங்கள் வீட்டிலும் அந்த மகிழ்ச்சி பரவும். வீட்டில் ஆனந்தம் அதிகரிக்கும் போது அந்த மகிழ்ச்சி அலுவலகத்தில் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

தன்னம்பிக்கைப் பயணத்தில் உயர்வுகளும் தாழ்வுகளும் வந்து கொண்டே இருக்கும். தாழ்வுகளைக் குனிந்து பார்த்து மருகுவதை விட, உயர்வுகளை உதாரணமாய்க் கொண்டு மேலும் உயர்வுகளை நோக்கிப் பயணிப்பதே சிறந்த அணுகு முறையாகும்.

அமெரிக்கரான மேரி ஆஷ் பிறந்தது 1918ம் வருடம். தனது பதினேழாவது வயதில் ஸ்டான்லி ஹோம் புராடக்ட்ஸ் எனும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலையில் ரொம்ப ஸ்மார்ட் என பெயரெடுத்தார். அந்த நிறுவனத்துக்கு வரும் பலருக்கும் பயிற்சி கொடுப்பதே அவர் தான். பெண் என்ற காரணத்துக்காக அலுவலகத்தில் அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கவேயில்லை. இவர் பயிற்சி கொடுத்த ஆண்களெல்லாம் பதவி உயர்வு வாங்கிச் செல்ல இவருக்கு தார்மீகக் கோபம் உருவானது. அந்த கோபத்தை ஆக்கபூர்வமாய் செலவிட நினைத்தார். 

பதினேழு ஆண்டுகாலம் உழைத்தும் தன்னை மதிக்காத அந்த நிறுவனத்தை உதறினார். சில ஆண்டுகளில் வெறும் ஐயாயிரம் டாலர்களுடன் ஒரு அழகு சாதனம் விற்கும் கடை ஆரம்பித்தார். அது இன்றைக்கு வேர்விட்டுக் கிளை விட்டு சுமார் 45 நாடுகளில் பரவியிருக்கிறது. நிறுவனத்தின் இன்றைய லாபக் கணக்கு ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் என்கிறது புள்ளி விவரம். அவரை மதிக்காத நிறுவனம் இன்று அட்ரஸ் இல்லாமல் போய்விட்டது. நிராகரிக்கப்பட்டவரோ இன்று உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார். தன்னம்பிக்கை மனதில் இருந்தால் சாதனைக்கு எதுவும் தடையில்லை எனும் உதாரணப் பெண்மணிகளில் ஒருவர் இவர். 

இயலாதென முடங்கியது கற்காலம்

வெற்றியென முழங்குவதே தற்காலம் !

தன்னம்பிக்கை : இனிமேல் முடியாது

$
0
0

 போலாம் ரைட்என்றவுடனே ரன்வேயில் ஓடி, காற்றைப் பிடித்து விண்ணில் தாவி பறந்து விடுகிறது ஆகாய விமானம்.  ஆனால் அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தரைட்ஸ் சகோதரர்களுக்குஅது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை. ஆர்வில், வில்பர் எனும் மில்டன் ரைட்டின் இரண்டு பிள்ளைகளுமே படிப்பில் அப்படியொன்றும் சுட்டிகளில்லை. சின்ன வயதில் அவருடைய தந்தையார் வாங்கிக் கொடுத்த குட்டி பறக்கும் ஹெலிகாப்டர் அவர்களை ரொம்பவே வசீகரித்தது. பேப்பர், மூங்கில், ரப்பர் போன்றவைகளால் உருவாக்கப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டர் பறந்தபோது அவர்கள் பிரமித்தும் போனார்கள். அது உடைந்தபோது அதே போல ஒன்றை அவர்களாகவே உருவாக்கி வியப்பூட்டினார்கள். 

பறக்கும் ஆசை அப்போதே அவர்களுடைய மனதுக்குள் குடியேறிவிட்டது. படித்தார்கள், ஆனாலும் படிப்பில் பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை. ஒரு டிப்ளமோ கூட முடிக்கவில்லை. படிப்பை முடிக்காமல் வெளியேறியவர்களை கடுமையான மன அழுத்தம் சந்தித்தது. நோயாளியான அம்மா, உதவி தேவைப்படும் அப்பா எனும் சூழல் தான் அவர்களுக்கு வாய்த்தது. 

இருவருமாகச் சேர்ந்து ஒரு பிரிண்டிங் பிரஸ் ஆரம்பித்தார்கள். பத்திரிகை ஆரம்பித்தார்கள். எதுவும் அவர்களுக்குக் கை கொடுக்கவில்லை. சரி ஒரு சைக்கிள் கடை ஆரம்பிக்கலாம் என நினைத்தார்கள். சின்னக் கடை துவங்கி நான்கு ஆண்டுகளில் ரைட் சைக்கிள் நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்தார்கள். ஆனாலும் அவர்களுடைய தேடல் அதில் இருக்கவில்லை.

கடைசியில் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு விமானம் செய்ய ஆரம்பித்தார்கள். வேதாளத்தைப் பிடிக்கப் போன விக்கிரமாதித்யனாய் முயன்று கொண்டே இருந்தார்கள். பெரிய சைஸ் பட்டம், கிளைடர், இறக்கைகளுடன் கூடிய விமானம், சக்தியில் இயங்கும் விமானம் என படிப்படியாய் முயன்று கொண்டே இருந்தார்கள். ஆயிரக்கணக்கான தோல்விகளின் முடிவில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அதுதான் இன்றைய அதி நவீன விமானங்களின் தாய்வீடு.

இவ்வளவு தான். இதற்கு மேல் முயற்சி செய்ய முடியாதுஎனும் வாசகத்தை யாரோ ஒருவரிடமிருந்து தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். தொழிலில், படிப்பில், நட்பில், காதலில் என எல்லா இடங்களிலும் இந்த சலிப்பு பலருக்கும் வந்து விடுகிறது. ரைட் சகோதரர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வரவில்லை. அப்படி ஒரு எண்ணம் வந்திருந்தால்விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள்எனும் பெயர் அவர்களுக்குக் கிடைத்திருக்காது.

முயற்சி இல்லாமல் வளர்ச்சி இல்லை என்பது தான் உண்மை. எந்தக் கணத்தில் முயற்சியைக் கை விடுகிறோமோ, அப்போது வெற்றிக்கான கதவுகளும் அடைக்கப்பட்டு விடும். “இலட்சியத்தை நோக்கி எவ்வளவு மெதுவாய் போகிறாய் என்பது பிரச்சினையல்ல, நின்று விடாமல் இருப்பதே முக்கியம்என்கிறார் கன்ஃபூசியஸ்.

கூட்டுப்புழுவின் கூடுடைக்கும் பொழுதுகளைப் பார்த்திருக்கிறீர்களா ? பிரம்மப் பிரயர்த்தனம் செய்து அவை கூட்டை உடைத்து வெளியேறுகின்றன. எந்த வினாடியிலும் முயற்சியை நிறுத்தி வைப்பதில்லை. அப்படி நிறுத்தி வைத்தால் அவை வண்ணத்துப் பூச்சியாக வடிவெடுப்பதில்லை.

தொடர்ந்த முயற்சியே வெற்றியைத் தரும். எப்போது முயற்சி செய்வதை நிறுத்தி விடுகிறோமோ அப்போது தோல்வி நம்மை அமுக்கிப் பிடிக்கிறது. நான் அதைப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் வெற்றியை அடையாமல் போனதேயில்லைஎன்கிறார் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஹாரிசன் ஃபோர்ட். துவக்க காலத்தில் யாரும் இவரை சிவப்புக் கம்பளம் வைத்து வரவேற்கவில்லை. உதாசீனம், நிராகரிப்பு, அவமானம் இவையெல்லாம் இவருடைய வாசலில் குவிந்து கிடந்தன. இவரிடம் இருந்ததோ முயற்சியும், அதை முன்னெடுத்துச் சென்லும் தன்னம்பிக்கையும் தான். முயன்று கொண்டே இருந்தார். காற்றுக்கு முன்னேறிச் செல்லும் பட்டம் போல ஹாலிவுட் வானில் உயரப் பறக்கிறார்.

இனிமேல் முடியாதுஎனும் மனநிலை அலுவலக வாழ்க்கையில் மட்டுமல்ல குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல்களைக் கொண்டு வருகிறது. குடும்பச் சண்டைகள், விவாதங்கள், விட்டுக் கொடுத்தல் போன்றவற்றில் இந்த மனநிலை வரும்போது உறவில் விரிசல்கள் எழுகின்றன. வீட்டை விட்டு ஓடிப் போகும் மகன்களும், பெற்றோரைப் புறக்கணிக்கும் மகள்களும், விவாகரத்து கேட்கும் தம்பதியரும்இனிமேல் முடியாதுஎனும் நிலையில் வருபவர்கள் தான்.

அமெரிக்காவின் இந்தியானாபோலீஸ் எனுமிடத்திலுள்ள ஆரோன் ரால்ஸ்டனுக்கு மலையேறுவதென்றால் உயிர். 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலுள்ள புளூ ஜான் கேன்யன் மலையில் ஏறியபோது விபத்தில் சிக்கிக் கொண்டார். அவருடைய வலது கை மலையிடுக்கில் மாட்டிக் கொண்டது. முதலில் கையை எப்படியாவது எடுத்து விடலாம் என்று தான் நினைத்தார். கை வெளியே வரவில்லை. வசமாய் சிக்கிக் கொண்டது. நேரம் செல்லச் செல்ல திகில் அவருடைய மனமெல்லாம் நிரம்பியது. ஆளரவம் அற்ற மலை அது. மலையேற வருவதைப் பற்றி அவர் யாரிடமும் சொல்லவும் இல்லை. கையில் போனும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீரும் தீர்ந்து வருகிறது.

மணித்துளிகள் கடந்து நாட்களாகின்றன. ஒன்று இரண்டு மூன்று என நாட்களும் நகர்ந்து விட்டன. முழுதாய் ஐந்து நாட்கள் இடைவிடாமல் போராடினார். யாராவது வருவார்களா என கத்திப் பார்த்தார். ஒரு பயனும் இல்லை. கை சிக்கிக் கொண்டது சிக்கிக் கொண்டது தான். தனது வீடியோவை எடுத்து தன்னையே படம் பிடித்தார். இதோ சாகப் போகிறேன் என குடும்பத்துக்கு செய்தி கொடுத்தார். மலையில் தனது தோற்றம், மறைவு நாட்களைக் கூட வெட்டி வைத்தார். 

இதற்கு மேலும் முடியாதுஎனும் நிலமைக்கு அவர் அப்போது வந்திருந்தால்விபத்தில் சிக்கி இளைஞர் பலிஎனும் ஒரு வரிச் செய்தியாகியிருப்பார். ஆனால் அவர் துவளவில்லை. தன்னிடமிருந்த ஒரே அறுபடாத கத்தியைக் கொண்டு தனது வலது கையை வெட்டினார். அப்போது அவர் தரையிலிருந்து அறுபத்து ஐந்தடி உயரத்தில் இருந்தார் ! ஒற்றைக் கையுடன் தட்டுத் தடுமாறி கீழே வரும் வழியில் ஒரு தம்பதியரைச் சந்தித்தார். ஆறு மணிநேரத்துக்குப் பின் ஹெலிகாப்டர் அவரை மீட்டது. அந்த போராட்டம் தான் .ஆர். ரஹ்மானின் இசையில் 127 ஹவர்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படமானது.

உயிரின் கடைச் துளி இருக்கும் வரை தளராமல் போராடுவோர் வாழ்வில் வெற்றியடைவார்கள் எனும் உயரிய பாடத்தை அவருடைய வலி மிகுந்த வாழ்க்கை சொல்லித் தருகிறது.

வெற்றிக்கான மந்திரத்தைச் சொல்லும்போது அதன் வழிகளாக இவற்றைச் சொல்வார்கள். ஒரு இலட்சியத்தை உருவாக்குங்கள். அதை அடைவதற்கான பயணத்திற்கு என்னென்ன தேவையோ அவற்றைத் தயாரியுங்கள். வெல்ல முடியும் எனும் அசைக்க முடியாத நேர் சிந்தனையை மனதில் கொண்டிருங்கள். வாய்ப்புகளின் வால் கிடைத்தால் கூட இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள். தோல்விகளிலோ, தவறுகளிலோ துவண்டு விடாமல் மீண்டும் உற்சாகமாய் முன்னேறுங்கள். எப்போதும் உங்களைச் சுற்றி தன்னம்பிக்கையான மனிதர்களைக் கொண்டிருங்கள். வெற்றி கிடைக்கும் வரை முயற்சியை முறித்துப் போடாதீர்கள். !

முதல் சுவடு எடுத்து வைக்காமல் வெற்றிக்கான பயணம் ஆரம்பமாவதில்லை. அதே நேரம் எல்லைக் கோட்டில் கடைசிச் சுவடை வைக்காவிடில் பயணம் வெற்றியாய் அமைவதுவும் இல்லை. துவக்கம் மட்டுமே வெற்றியைத் தந்து விடாது. கொஞ்சமாய் முயன்று விட்டு முடங்கிவிட்டாலும் நமக்குக் கிடைக்க வேண்டிய புதையல் கிடைக்காமலேயே போய்விடும்.

இசைக்கலைஞர்களுக்குப் பரிச்சயமான பெயர் பாப்லோ கேசல்ஸ். வயலினைப்  போல இருக்கும்செல்லோஎனும் இசைக்கருவியை இசைப்பதில் உலகப் புகழ் பெற்றவர். அவருடைய மரண காலம்  வரை சுமார் ஆறுமணி நேரம் இசைப் பயிற்சி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 95வது வயதில் ஒருமுறை அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். “இந்த வயதிலும் ஏன் கடினமாக ஆறு மணி நேரம் பயிற்சி செய்கிறீர்கள் ?”. சின்னப் புன்னகையுடன் அவர் சொன்னார். “ஏனெனில் நான் இசையில் தொடர்ந்து வளர்வதாய் நினைக்கிறேன். அதனால் தான் நிறுத்தாமல் பயிற்சி எடுக்கிறேன்”.

முயற்சியின் கிளைகள் வளரும் வரைதான் வாழ்க்கை மரத்தைக் கரையான் அரிக்காது. முயற்சிப் பாதங்கள் நடப்பதை நிறுத்தும்போது நம் தலைக்கு மேல் வல்லூறுகள் வட்டமிடத் துவங்கும். “இதற்குமேல் முடியாதுஎன்பவனுக்கு வரலாற்றின் பக்கங்களில் இடமில்லை. வாழ்வின் பக்கங்களின் அவன் நடந்த தடமும் நிலைப்பதில்லை.

பிலிப் பெட்டிட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? கயிறு மேல் நடப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. அந்த நுட்பத்தை அவருக்கு யாரும் கற்றுத் தரவில்லை. தனது வீட்டின் பின்னால் கயிறு கட்டி நடந்து பழகினார். கயிறு மேல் நடப்பது, குதிப்பது, பல்டியடிப்பது என சாகசங்கள் கொஞ்ச நாளிலேயே போரடித்து விட்டது. உயரமான கட்டிடங்களுக்கிடையே கயிறுகட்டி நடந்தால் என்ன ? எனும் சிந்தனை உந்தித் தள்ள, அதற்கான முயற்சியில் இறங்கினார். பாரீஸிலுள்ள பழமை வாய்ந்த உயரமான நாட்ரி டாம் ஆலயத்தின் கோபுரங்களுக்கிடையே கம்பி கட்டி நடந்தார். பின் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள ஹார்பர் பாலத்திடையே கம்பி கட்டி நடந்து வியக்க வைத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களுக்கிடையே கம்பி கட்டி நடக்க வேண்டும் என்பது அவருடைய தீராத ஆவல். 1960களில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தபோது பாரீஸிலிருந்து பல முறை நியூயார்க் சென்று அந்தக் கட்டிடத்தைப் பார்த்தார். 1368 அடி உயரத்தில் இருந்தது கட்டிடத்தின் உச்சி. இரண்டு கட்டிடங்களுக்கிடையே சுமார் 200அடி தூரம். ஹெலிகாப்டரில் பல முறை பறந்து கட்டிடங்களைப் படம் பிடித்தார். பல முறை கட்டிடத்துக்குள் காவலாளி கண்ணில் மண்ணைத் தூவி நுழைந்து வேவு பார்த்தார்.

ஒரு தடவை போலீஸின் கையிலும் வசமாக மாட்டினார். இனிமேல் கனவு அவ்வளவு தான் என உடைந்து போய்விடவில்லை. மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருந்தார். கடைசியில் வெகு ரகசியமாக கம்பிகள், கட்ட வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் மாடியில் கொண்டு சேர்த்தார்கள். நள்ளிரவில் ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து மறு கட்டிடத்துக்கு அம்பு மூலம் நூல் எறிந்து, கம்பி இழுத்து என பிரம்ம பிரயர்தனம் செய்து கம்பியை இழுத்துக் கட்டினார்கள்.

1974 ஆகஸ்ட் 7ம் தியதி காலையில் கம்பியில் நடந்தார் பெட்டிட். சில்லிடும் குளிர், வழக்கத்தை விட அதிகமான காற்று, எப்போது வேண்டுமானாலும் பெய்யத் தயாராய் இருக்கும் வானம், பனிமூட்டம் என அவரைச் சவால்கள் சந்தித்தன. பெட்டிட் தயங்கவில்லை. கம்பியின் மீது அசைந்தாடி நடந்து எல்லோரையும் அதிர்ச்சிகுள்ளாக்கினார். காவலர்கள் வந்து அவரைக் கைது செய்யும் வரை சுமார் 45 நிமிடங்கள் கம்பியில் நடந்தும், அமர்ந்தும், குதித்தும் சாகசம் செய்து கொண்டிருந்தார்1

இந்த முயற்சியின் துவக்கம் முதல் கைது வரை பெட்டிட் சந்தித்த சவால்களும், சிக்கல்களும் கொஞ்ச நஞ்சமல்ல. ‘இனிமேல் முடியாதுஎன ஒரு முறை  நினைத்திருந்தால் கூட அவருடைய இலட்சியம் நிறைவேறியிருக்காது என்பதே உண்மை. 

நில்லாமல் தொடரட்டும் முயற்சிகள்அவை

உயிருக்கு உரமூட்டும் பயிற்சிகள்

தன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் நுழைவுச் சீட்டுகள்

$
0
0

விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போலஎன்ற பாரதியார் பாடல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுதந்திரமாய்ப் பறக்கும் சிட்டுக் குருவி சிலிர்ப்பின் அடையாளம். எப்போதேனும் சிட்டுக் குருவியின் கூட்டைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா ? நேரம் கிடைக்கும் போது கவனித்துப் பாருங்கள். சிட்டுக்குருவிகளின் கூடுகள் எப்படி இருக்கின்றன ? கடந்த ஆண்டு எப்படி இருந்தன ? கடந்த நூற்றாண்டில் எப்படி இருந்தன ? வியப்பூட்டும் பதில் என்னவென்றால், நூற்றாண்டுகளாக இவற்றில் ஏதும் மாற்றம் இல்லை என்பதே!

விலங்குகள், பறவைகள் போன்றவையெல்லாம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை. மனிதனுடைய வாழ்க்கையோ மாற்றங்களால் கட்டமைக்கப்பட்டது. அந்த மாற்றங்கள் தான் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டு வருகிறது. 

சிலருக்கு மாற்றங்கள் எதுவும் பிடிப்பதில்லை. குறிப்பாக அலுவலக வேலை, பிஸினஸ் போன்றவற்றில் மாற்றம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறார்கள். கிணற்றுத் தவளையைப் போல வட்டமடித்துக் கொண்டே இருப்பதில் தான் அவர்களுக்குத் திருப்தி அதிகம். அட்டவணையை மாற்றி எதுவும் செய்யமாட்டார்கள். வட்டத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கும் கடிகார முள்போல அவர்களுடைய வாழ்க்கை பேட்டரி தீரும் வரை ஓடி முடிகிறது.

ஒரு புதிய ரக செல்போனைப் பார்த்தவுடன் நமது செல்போனை மாற்றி விடலாமா எனத் தோன்றுகிறது. ஒரு எல்..டி டிவியைப் பார்த்ததும் நமது சின்ன டிவியை மாற்றி விடலாமா என தோன்றுகிறது. புத்தம் புதிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தவுடன் மாற்றத்துக்காக மனம் தயாராகிவிடுகிறது. ஆனால் முக்கியமான வேலை சார்ந்த மாற்றங்கள் வரும்போது மட்டும் பயம் வந்து கூடாரமடிக்கிறது. 

வெற்றியாளர்கள் மாற்றத்தைக் கண்டு பயந்து ஓடுவதில்லை. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சரியான மாற்றத்தை தேடிப் போய் அணைத்துக் கொள்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் பொருளாதார வீழ்ச்சியில் வழுக்கியது. பலர் வேலையிழந்து, பணமிழந்து சிக்கலில் விழுந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். ஆனால் மாற்றங்களைக் கண்டு மிரண்டு போனவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு மடிந்தே போனார்கள்.

மாற்றம் நல்லது என்று பலரும் சொன்னாலும் மாற்றங்களை மக்கள் வெறுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. 

என்ன நடக்கப் போகிறதோ தெரியலையே ! எனும் பயம் முதலாவது. ஒரு வட்டத்துக்குள்ளேயே நீந்திக் கொண்டிருப்பவர்கள் சட்டென ஒரு மாற்றத்தைக் காணும் போது நிலை குலைந்து போகிறார்கள். தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனை பிடித்து தரையில் விட்டால் துடிப்பதைப் போல இவர்கள் துடித்து விடுகிறார்கள். உண்மையில் விடப்பட்டது தரையில் அல்ல, கடலில் எனும் வாழ்வின் உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

என்னோட வேலை என்ன ஆகும்ன்னு தெரியலையே ? என்னோட எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலையே, வாழ்க்கையை ஓட்ட என்ன செய்வேன்னு தெரியலையே என்றெல்லாம் மாற்றம் குறித்த திகில் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.  

இரண்டாவது பயம் கட்டுப்பாடு சேர்ந்தது. நம்ம கையில கண்ட்ரோல் எதுவும் இல்லையே எனும் பயம் அது !. நடக்கும் மாற்றங்களெல்லாம் வேறு ஏதோ ஒரு நபருடைய கட்டுப்பாட்டில் இருப்பது போல ஒரு எண்ணம் இவர்களுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். நமது வாழ்வின் கடிவாளம் நம்மிடம் இல்லையேல் இதில் எப்படி வெற்றி பெறுவது எனும் பயம் அவர்களுக்கு மாற்றத்தைக் கண்டு விலகி ஓடும் மனநிலையைத் தந்துவிடும்.

மூன்றாவது பயம் தோல்வி சார்ந்தது. சூழல் மாறிவிட்டால் வெற்றி பெற முடியுமா எனும் குழப்பம். புதிய இடம் எப்படி இருக்குமோ ? புதிய தலைமை எப்படி இருக்குமோ ? தரப்பட்டிருக்கும் புதிய வேலையில் திறமையாய் செயல்பட முடியுமா ? ஒருவேளை வெற்றி பெறாவிடில் வேலை நிலைக்குமா ? இப்போது இருக்கின்ற நல்ல பெயர் தொடருமா என சங்கிலித் தொடர் போலத் தொடரும் பயங்கள் இதில் அடக்கம்.

நான்காவது பயம் சோம்பேறிகளின் பயம். இந்த வேலையை நாலுவருஷமாவோ, நாப்பது வருஷமாவோ பண்றேன். இதோட எல்லா நுணுக்கங்களும் எனக்குத் தெரியும். கண்ணை மூடிட்டு கூட இந்த வேலையைச் செய்ய முடியும். இனிமே புதிய வேலையைச் செய்தா எப்படி ? இப்போ இருக்கிற இந்த ரிலாக்ஸான சூழல் நிலைக்குமா ? எனும் பயம் அது. ரொம்பவே சொகுசான வேலை சுழற்சியிலிருந்து வெளிவர பயப்படும் மனநிலை இது.

மாற்றங்களை வெறுப்பவன் அழுகத் துவங்குகிறான், மாற்றங்களை ஏற்காதவர்கள் கல்லறை மனிதர்கள் மட்டுமேஎன்கிறார் இங்கிலாந்தின் ஹேரால்ட் வில்சன். 

ஒருவர் பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து டிராஃப்டேட்டா எனும் சின்ன நிறுவனத்தை ஆரம்பித்தார். டிராபிக் சிக்னல் தகவல்களிலிருந்து தகவல்களைப் பெற்று அவற்றைப் பயனுள்ள அறிக்கைகளாக மாற்றுவது தான் அவர்களுடைய திட்டம். ஓரளவு நிறுவனம் வெற்றிகரமாய் இயங்கிக் கொண்டிருந்தபோது அவர் அதை உதறிவிட்டு மாற்றத்தை நாடினார். அந்த மாற்றம் அவருக்கு உலகப் புகழைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் !

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நம்மைச் சந்தித்துக் கொண்டே தான் இருக்கும். மாற்றங்களை எந்த அளவுக்கு எதிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு மாற்றங்களுக்குள் இணைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். திசை மாறித் திசை மாறி ஓடும் நதியின் ஓட்டத்துக்கு ஏற்ப நீந்துவதே எளிதானது. எதிரேறுதல் கடினமானது. எனவே மாற்றங்களை மனதளவில் ஏற்றுக் கொள்வதே, மாற்றங்களைப் பழகிக் கொள்வதன் முதல் படியாகும். 

ஒரே பள்ளிக்கூடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி பணிமாற்றம் பெற்றுச் செல்லும்  ஆசிரியர்களின் மன உளைச்சல் கடுமையானது. அவர்கள் பழகிய சூழலை விட்டு வெளியேறுவதை சுமையாகக் கருதுகிறார்கள். புதிய நபர்களைப் பரிச்சயப்படுதல், புதிய சூழலில் நடைபோடுதல், புதியவற்றைச் செய்தல் என பல்வேறு நல்ல அம்சங்கள் அதில் உள்ளன. இரண்டு மணிநேர திரைப்படத்துக்கே பல மாற்றங்கள், இனிய ஆச்சரியங்களெல்லாம் எதிர்பார்க்கும் நம்மில் பலரும் வாழ்க்கையில் அத்தகைய ஆச்சரியங்களைச் சந்திக்கப் பயப்படுவது வியப்பளிக்கிறது.

கோயில் திருவிழாக்களில் விற்கும் கலைடாஸ்கோப் பார்த்திருப்பீர்கள். ஒரு முனையைக் கண்ணில் வைத்து சுழற்றிச் சுழற்றிப் பார்க்கும் போது பிரம்மாண்டமான காட்சிகள் விரிவடைந்து நம்மை வியப்பூட்டும். அப்படிக் காட்டுபவை ஒரு சில வண்ணத் துண்டுகள் தான். மாற்றமும் அத்தகையதே. ஒரு சின்ன மாற்றம் கூட நம்முடைய பார்வையில் மிகப்பெரிய விஸ்வரூப வேறுபாடைக் காட்டக் கூடும். எனவே மாற்றங்களைக் குறித்து மலையளவு கற்பனைகள் வளர்க்காமல், அதன் இயல்பிலேயே அணுகுவதே சிறந்தது.

காலங்களைத் தாண்டி வாழ்பவை மிகவும் வலுவான பிராணிகளோ, மிகவும் அறிவார்ந்த பிராணிகளோ அல்ல. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பிராணிகளே  தலைமுறை தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனஎன்கிறார் டார்வின் ! மாற்றங்களை ஏற்றுக் கொள்வதன் தேவையை தனது பாணியில் சொல்கிறது டார்வினின் தத்துவம். குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் எனும் அவருடைய கோட்பாடு கூட மாற்றத்தின் மீதான கட்டமைப்பு தானே !

முன்னேற்றத்துக்கான மாற்றங்களை விரும்பும் மனம் பாசிடிவ் மனநிலையிலிருந்தே புறப்படுகிறது. நான் இந்த மாற்றத்துக்காகப் பயப்படுகிறேனா ? பயப்படுகிறேன் எனில் ஏன் பயப்படுகிறேன் ? இந்தப் பயம் நியாயமானது தானா எனும் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்பதே நமக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அள்ளித் தரும். எத்தனை முறை மாற்றத்தைக் குறித்து நேர்மறையாய் சிந்தித்திருக்கிறோம், எத்தனை முறை எதிர் மறையாய் சிந்தித்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். நீங்கள் வெற்றியாளரா, இல்லையா என்பது புரியவரும்.

அமெரிக்காவிலுள்ள மேசிஸ் எனும் மிகப்பெரிய விற்பனை நிலையம் இன்று சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்கள் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தை ஆரம்பித்த ரௌலண்ட் ஹஸி மேசி என்பவர் இந்தக் கடையை ஆரம்பிக்கும் முன் நான்கு கடைகள் ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக நான்குமே தோல்வியடைந்தன. ஒவ்வோர் தோல்வியிலும் மாற்றத்தைக் கற்றுக் கொண்டார். அதை விரும்பி ஏற்றுக் கொண்டு அடுத்த நிலைக்குத் தாவினார். கடைசியில் மேசிஸ் அவருக்கு வெற்றி தந்தது. இன்று 800 க்கும் மேற்பட்ட கடைகள் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

துணிச்சலுக்கும் முட்டாள் தனத்தும் வேறுபாடு உண்டு. விமானத்திலிருந்து பாராசூட்டுடன் குதிப்பதற்கும், எதையும் யோசிக்காமல் குதிப்பதற்குமான வித்தியாசமாய் இதைச் சொல்லலாம். எனவே மாற்றத்தை நோக்கி இடம் பெயரும் முன் அது குறித்த புரிதலும், அறிதலும் இருக்க வேண்டியது அவசியம். அதன் பின் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முதல் சுவடை வைக்கும்போதே இதன் முழு பொறுப்பும் என்னுடையது என்பதை மனதில் எழுதுங்கள். அது மாற்றத்தை வெற்றிகரமாக மாற்றும் உத்வேகத்தை உங்களுக்குத் தரும்.  

மாற்றங்களை எதிர்கொள்வோம்

வாழ்வினிலே  இனி வெல்வோம்

தன்னம்பிக்கை : மறுத்தல் உயர்வு தரும்.

$
0
0

தமிழில் நாம் சொல்வதற்குத் தயங்கும் ரொம்பக் கஷ்டமான வார்த்தை என்ன தெரியுமா ? “முடியாதுஎன்பது தான். இந்தியக் கலாச்சாரத்தில்மறுத்துப் பேசுவதுஎன்பது கொஞ்சம் அநாகரீகமானது. “பெரியவங்க சொன்னா மறுத்துப் பேசாதேஎனும் பாட்டி அட்வைஸ்  முதல், “ஐயாவோட பேச்சுக்கு மறுப்பு ஏதுங்கஎனும் கக்கத்தில் துண்டை சொருகும் உழைப்பாளியின் பதில் வரை, மறுத்துப் பேசக் கூடாது என்பதையே போதிக்கிறது.

முடியாதுஎன்று சொல்ல விடாமல் நம்மை பின்னுக்கு இழுக்கும் காரணிகள் பல உண்டு. அந்த நபருடனான நட்பு முறிந்து விடுமோ ? நம்மை நம்பி வந்துக் கேட்கிறார் முடியாது என்பது நல்லாவா இருக்கும் ? முடியாதுன்னு சொல்லிட்டா ரொம்ப வருத்தப்படுவாரே ? ஒருவேளை கோபப்படுவாரோ ? இப்படிப்பட்ட காரணங்கள் தான்சரிஎனும் தலையாட்டல்களுக்குக் காரணமாகிவிடுகிறது. மறுத்துப் பேசாமல் இருப்பது நம்முடைய முதுகின் மேல் சோதனைகள் விக்கிரமாதித்ய வேதாளமாய் வந்தமரக் காரணமாகி விடுகிறது என்பதை நாம் உணர்வதில்லை. 

சரிஎன சொல்வது மிகவும் எளிது. “இதை வாங்கித் தருவீங்களா டாடி ?” என்று மகள் கொஞ்சுவாள். “இந்த வேலையைச் செய்ய முடியுமா ?” எனும் மேலதிகாரி  விண்ணப்பம் வைப்பார். “இதைப் பண்ணுடா பிளீஸ்எனும் நண்பன் கேட்பான். “சரிஎனும் ஒரு வார்த்தைப் பதில் ரொம்பவே எளிது. ஆனால் அந்த ஒரு பதிலுடன் வேலை முடிந்து போவதில்லை. அதன் விளைவால் நடக்கும் நிகழ்ச்சிகள் நமக்குப் பிடிக்காததாகவோ, நம்மால் செய்ய முடியாததாகவோ இருந்து விடுகிறது.

நமக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைச் செய்ய நாம் ஒத்துக் கொள்ளும் போது, நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்யும் வாய்ப்பு தடை பட்டுப் போகிறது. உதாரணமாக, அலுவலகத்தில் அதிகமான வேலை தரப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். “சாரிஇன்னிக்கு முடியாதுஎன்று சொல்வது உங்களுடைய தன்னம்பிக்கையின் அடையாளம். அதை விட்டு விட்டு, “சரி குடுங்கஎன இழுத்துப் போட்டுக் கொண்டால் உங்களுடைய மாலை நேர திட்டங்களெல்லாம் காலி. 

குழந்தை ஏதோ ஒரு பொருளை விரும்பிக் கேட்கிறது. அது தேவையற்றது என நீங்கள் நினைக்கும்போதுமுடியாதுஎன்று சொல்வதே நல்லது. எல்லாவற்றுக்கும் சரி எனும் பதிலைச் சொல்வது குழந்தைகளின் பதின் வயது காலத்தில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்கின்றனர் உளவியலார்கள். முடியாது என சொல்லி மறுத்து, தோல்வியின் முகத்தையும் குழந்தைகளுக்குக் காட்ட வேண்டியது அவசியம். அது தான் பிற்காலத்தில் தோல்விகள் சகஜம் என்பதைக் குழந்தைகளுக்குப் போதிக்கும். அது தெரியாத இளசுகள் தான் தோல்வி எனும் வார்த்தையைக் கேட்டதும் தற்கொலைக்குத் தயாராகி விடுகிறார்கள். 

நெருங்கிய நண்பர்களுக்கிடையேமறுப்புஇல்லாதபோது பல கெட்ட பழக்கங்கள் வந்து தொற்றிக் கொள்கின்றன. “ஒரு தம் போடுவோம் மச்சிஎனும் போதுவேண்டாம், சாரி.. “ என ஒரு சின்ன மறுப்பைச் சொன்னாலே தப்பித்து விடலாம். “முடியாதுஎன்று சொல்வது நம்மை நாமே மதிப்பதற்குச் சமம் என்கின்றனர் உளவியலார். என்னோட நேரத்தை நான் மதிக்கிறேன் என்பதன் அடையாளம் தான் தேவையற்றவைகளுக்குநோசொல்வது ! அடுத்தவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் நீங்கள் அடுத்தவர்களை மதிக்கிறீர்கள், உங்களை மதிக்கவில்லை என்பது தான் ஒருவரிச் செய்தி!ச்ச்ச்

முக்கியமான வேலையில் இருக்கும்போது சிலர் போன் பண்ணி சாவாகாசமாய்ப் பேசத் துவங்குவார்கள். “ஏலே ராசா என்னலே செய்றேஎன ஆரம்பிப்பவர்களிடம் ஒரு நிமிடம் பேசிவிட்டுசாரி.. அப்புறம் பேசலாமா ? கொஞ்சம் பிஸிஎன்று சொல்லக் கூட தயங்குகிறோமா இல்லையா ? 

தன்னுடைய இலட்சியம் என்ன என்பதில் தெளிவாக இருப்பர்களால் எளிதில் மறுப்பைச் சொல்ல முடிகிறது. அரைவேக்காடு மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் மறுத்துச் சொல்லத் தயங்குகிறார்கள். காரணம், அது சரியா தவறா என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை ! 

எல்லாவற்றையும் தலையாட்டிக் கொண்டே ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஆயுள் ரொம்பக் கம்மி. காரணம் அவர்களிடம் எப்போதுமே மன அழுத்தம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும். மறுக்காததற்காக தன்மீதான கோபமும், தன்னை இந்த சூழலில் மாட்டி விட்டதற்காக மற்றவர்களிடம் கோபமும் எப்போதும் இவர்களிடம் இருக்கும். கோபம் கொந்தளிக்கும் மனம் நோய்களின் கூடாரம் தானே ! 

முடியாதுஎன்று சொல்வது தவறில்லை எனும் மனநிலை முதல் தேவை. சொல்வதற்கெல்லாம் சரி என தலையாட்டிக் கொண்டிருக்க யாராலும் முடியாது. அமெரிக்கர்கள்நோசொல்வதற்குத் தயங்குவதில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம். முடியாத விஷயத்தைமுடியாதுஎன்று சொல்லி விட்டுச் சென்று விடுவார்கள். அதே போல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும்நோசொல்லத் தயங்குவதில்லை. அதனால் தான் அவர்களுக்கு எப்போதுமே குடும்பத்தைக் கவனிக்க கொஞ்சம் நேரம் கிடைக்கிறது !

சரிஎன ஒத்துக் கொண்டால் அதன் தொடர்ச்சியான விளைவுகள் என்னென்ன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். “என்ன, ஒரு அரை மணி நேர வேலை தானே !” என்று பல வேளைகளில் நினைப்போம். அந்த அரை மணி நேரம் அதன் பின் வரக்கூடிய எல்லா வேலைகளையும் பின்னுக்குத் தள்ளும். இதே போல நான்கைந்து அரை மணி நேர வேலை வந்தால் நிலமை என்னவாகும் ? பிஸி..பிஸி.. என ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். “சாரி.. முடியாதுஎன்று ஒரு மறுப்பை சரியான நேரத்தில் சொன்னால் மற்ற அனைத்துமே அதனதன் இடத்தில் கட்சிதமாய் வந்து அமரும் ! ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நேற்றைக்குத் தொலைத்த பணத்தை இன்று மீட்கலாம். ஆனால் நேச்ச்ற்று தொலைத்த நேரத்தை என்றுமே மீட்க முடியாது !

சரி என்று சொல்வதற்கு ஒரு வார்த்தை போதும். சாரி.. என்று சொல்வதற்கு ஒரு சின்ன விளக்கமும் தேவைப்படும். மன்னியுங்கள், ஒரு முக்கியமான வேலையில இருக்கேன் . சாரி, இது எனக்குப் புடிக்காத விஷயம். சாரி, இப்போதைக்கு புதுசா எதையும் ஒத்துக் கொள்ற மாதிரி இல்லை. எனக்கு டைமே இல்லை. இப்போதைக்கு என்னோட கவனத்தை இதுல செலுத்தற மனநிலைல நான் இல்லை. சாரி, இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. சாரி, எனக்கு கொஞ்சம் குடும்பம் சார்ந்த வேலைகள் இருக்கு. சாரி, எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும். இப்படி ஏதாவது ஒரு சின்ன காரணம் சொல்லிவிட்டாலே போதுமானது !

மறுக்கும் போது உங்களுக்கு மாற்று வழி ஏதேனும் தோன்றினால் அதைச் சொல்லலாம். உதாரணமாகநாளைக்குக் காலையில முடியாது, நாளை மறுநாள்னா ஓகே”. அல்லதுஎன்னை விட மாலதி இந்த வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என நினைக்கிறேன்என்பது போல ஏதோ ஒன்று.  மாற்று வழி சொல்லவேண்டும் என்பது கட்டாயமில்லை.  மனதில் தோன்றினால் மட்டும் சொல்லுங்கள். ! தேவையில்லாத விஷயங்களைச் சொல்லி அது பூமராங் மாதிரி உங்களைத் திரும்பித் தாக்காமல் இருக்க வேண்டும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அகஸ்டின் ஓக் மண்டினோ புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர். அவருடைய பல புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைத்தவை. அவருடைய கிரேட்டஸ்ட் சேல்ஸ்மேன் இன் வேல்ட் புத்தகம் ஐந்து கோடிக்கு மேல் விற்றுப் பட்டையைக் கிளப்பியது. அவர் எழுத்தாளராவதற்கு முன் வாழ்வில் பல்வேறு சோதனைகளில் சிக்கினார். மிகப்பெரிய குடிகாரராய் மாறினார். கடைசியில் மனதை ஒருமுகப்படுத்தி, குடிக்குநோசொல்லி எழுத்துக்கு வரவேற்புக் கம்பளம் விரித்தார். அது தான் இன்று அவரை உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர்களின் வரிசையில் அமர வைத்திருக்கிறது. எனவேநோசொல்வது மற்றவர்களோடு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்கள் மனம் உங்களை தவறு செய்யத் தூண்டும் போதெல்லாம் கூட எழும்பட்டும் குரல்நோ

சில மின்னஞ்சல்களுக்கு உடனடியாக மறுப்பு எழுதவேண்டுமென்பதில்லை. சைலண்டாக இருந்து விடலாம். மௌனம் என்பது மறுப்பு என்பது தான் மின்னஞ்சல் மொழி. பதிலைத் தாமதப்படுத்துவது, பதிலளிக்காமல் இருப்பது, உடனடியாக நோ சொல்வது எது அந்தச் சூழலுக்குத் தேவை என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்

உங்களுடைய வேலைகளையெல்லாம் தரம்பிரியுங்கள். எது அதி முக்கியம் என்பது முதல், எது அவசியமற்றது என்பது வரை தரம் பிரியுங்கள். அதனடிப்படையில் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். எதை மறுக்கவேண்டும் என்பது உங்களுக்கு அப்போது புரியும். மறுத்துப் பேசுவது உங்களுக்கு நல்ல பெயரைத் தான் சம்பாதித்துத் தரும் என்பது தான் உண்மை.  அவரு முடியும்ன்னா முடியும்னு சொல்லுவாரு, சொன்னா முடிச்சிடுவாருஎனும் டயலாக்கை நீங்கள் ஆங்காங்கே கேட்டிருக்க வாய்ப்பு உண்டு ! எல்லாவற்றுக்கும் தலையாட்டுபவர்கள் பெரும்பாலும் இளிச்சவாயன் பட்டத்துக்குள் தாமாகவே போய் சேர்ந்து விடுகிறார்கள்.

உலகின் பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வாரன் பஃபெட் சொல்லும் சேதி சுவாரஸ்யமானது. சாதாரண வெற்றியாளர்களுக்கும், சாதனை வெற்றியாளர்களுக்குமிடையே உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா ? சாதனை வெற்றியாளர்கள் ஏறக்குறைய எல்லாவற்றுக்கும் நோ சொல்வார்கள்என்கிறார் இவர். முக்கியமானவை தவிர எல்லாவற்றையும் மறுத்துவிட வேண்டும் என்பதே இவரது வெற்றி பார்முலா.  

மறுப்புச் சொல்லிட மறக்கவும் வேண்டாம்

வாழ்வின் இனிமையை துறக்கவும் வேண்டாம்

 


தன்னம்பிக்கை : அழுத்தமற்ற மனமே அழகானது. 

$
0
0

மன அழுத்தம். இன்று எல்லா இடங்களிலும் பரவலாகப் பேசப்படக்கூடிய விஷயம் இதுவாகத் தான் இருக்கும். பேசறவங்க பேசிட்டுப் போகட்டும் என விட்டு விடவும் முடியாது. காரணம் இன்று உலகிலுள்ள நோய்களில் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நோய்களுக்கான காரணம் இந்த மன அழுத்தம் தான் என்று சொல்லி அசரடிக்கிறது அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று. 

மன அழுத்தத்துக்கான காரணங்கள் இவ்ளோ தான் என பட்டியலிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, வேலை, குடும்பம் இப்படி மன அழுத்தத்துக்கான காரணிகள் நீண்டு கொண்டே போகும். ரொம்ப சத்தம், அதிக வெளிச்சம் இதெல்லாம் கூட சிலருடைய மன அழுத்தத்தை சகட்டு மேனிக்கு அதிகரித்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மன அழுத்தம்னா என்ன ? எனும் கேள்விக்கும் மிகச் சரியான பதிலைச் சொல்லிவிட முடியாது. நம்மை வெளியிலிருந்தோ, உள்ளிருந்தோ தாக்குகின்ற பிரச்சினைகளுக்கு நமது உடலும் மனமும் தருகின்ற பதில் தான் இந்த மன அழுத்தம் என்பது மருத்துவ விளக்கம். டென்ஷன், எரிச்சல், கோபம், கவனமின்மை, சோர்வு, குழப்பம், வேகமான இதயத் துடிப்பு என இந்த மன அழுத்தத்தின் பிள்ளைகள் எக்கச்சக்கம்.

இந்த மன அழுத்தங்களை மொத்தமாகக் கொட்டி நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். முதலில் வருவது யூஸ்ட்ரெஸ்.சட்டென உங்களுக்கு ஒரு லாட்டரி அடித்ததென்று வைத்துக் கொள்ளுங்கள் ? உங்களுக்கு எப்படியிருக்கும் ? அந்த வகை மன அழுத்தம் இந்த வகையில் வருகிறது. படிப்பில் சாதனை செய்வது, தம்பதியர் பெற்றோராவது, கார் வீடு போன்றவை வாங்குவது, விடுமுறைக்கு பிடித்தமான இடத்துக்குச் செல்வது, அல்லது ஒரு திக் திக் திகில் படம் பார்ப்பது. இப்படிப்பட்ட விஷயங்களுக்காய் வருகின்ற அழுத்தம் இந்த வகை. இந்த மன அழுத்தம் கொஞ்சம் சமர்த்து !

இரண்டாவது வகை மன அழுத்தம் டிஸ்ட்ரெஸ் எனப்படுகிறது. திடீரென நேர்கின்ற ஒரு மரணம். பணச் சிக்கல்கள், வேலைப் பழு, உறவுகளுக்கிடையே வருகின்ற சிக்கல், உடல்நலமின்மை போன்றவற்றினால் வருவது தான் இந்த வகை மன அழுத்தம். ரொம்பவே சிக்கலை உண்டாக்கும் இந்த வகை மன அழுத்தத்தை அதன் கால அளவை வைத்து அக்யூட் அல்லது குரோனிக் என இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். அக்யூட் என்றால் கொஞ்ச நேரம் இருக்கும் மன அழுத்தம். குரோனிக் என்பது நீண்ட கால மன அழுத்தம்

ஹைப்பர்ஸ்ட்ரெஸ் என்பது மூன்றாவது வகை. ஒரு மனிதனை அவனுடைய இயலாமையின் எல்லை வரை தள்ளிக் கொண்டே போனால் நிகழ்வது தான் இந்த மன அழுத்தம். வீட்ல பிள்ளைகளைக் கவனித்துவிட்டு, அலுவலகம் ஓடி வேலை செய்து, மீண்டும் வீட்டுக்கு வந்து குடும்பத்தைக் கவனிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு சர்வ சாதாரணமாய் வருகின்ற மன அழுத்தம் இது. வருகின்ற பணத்தை வைத்துக் கொண்டு வாடகை கொடுக்கவா, குழந்தைகளைப் படிக்க வைக்கவா, சாப்பிடவா என திணறித் திரியும் வறுமைக் கோட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் மக்களில் பலர் இந்த மன அழுத்தத்தில் வாழ்பவர்கள் தான்.

இன்னொரு  வகை மன அழுத்தம் ஹைப்போஸ்ட்ரெஸ் எனப்படும். இது கொஞ்சம் வித்தியாசமான மன அழுத்தம். “என்னய்யா ஒரேமாதிரி வேலையைச் செய்து செய்து போரடிக்குதுஎன்பவர்களின் மன அழுத்தம் இந்த வகையானது. இவர்களிடம் உற்சாகமோ, சாதிக்கும் வேகமோ, சுறுசுறுப்போ இருக்காது.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஃபேமிலி பிஸிசியன்ஸ்அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் 89 சதவீதம் மக்கள் தங்களுடைய வாழ்வில் கடுமையான மன அழுத்தத்தைச் சந்தித்திருந்தார்கள் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. நடுவயது நபர்கள் இத்தகைய கடுமையான மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களுக்கு உணர்வு ரீதியான நட்பு ரொம்ப அவசியமாம். இல்லையேல் அவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் மரணமடையும் வாய்ப்பு அதிகம் என அதிர வைக்கிறது இந்த ஆய்வு. 

மன அழுத்தம் பல்வேறு நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. தலை வலி முதல், நெஞ்சு வலி வரை ஏகப்பட்ட நோய்களுக்கும் மன அழுத்தம் காரணமாகி விடுகிறது. தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் வந்தால் அது குழந்தைகளையும் நேரடியாய்ப் பாதிக்கும் என குண்டைத் தூக்கிப் போடுகிறார் அமெரிக்காவின் மருத்துவர் மாயோகிளினிக்ஸ். 

நகைச்சுவை உணர்வு இருப்பவர்களுக்கு மன அழுத்தம் எளிதில் வராது. சிலர் எல்லா விஷயங்களையுமே இலகுவாக எடுத்துக் கொள்வார்கள். தேடித் தேடி சிரிப்பவர்கள் அவர்கள். இவர்களுக்கு மன அழுத்தமே இருக்காது என்கிறார் மனோதத்துவ நிபுணர் லீ பெக். 

மன அழுத்தம் குறித்து ஆராய்ச்சிகள் செய்த சார்லஸ் ஸ்விண்டால் என்ன சொல்கிறார் தெரியுமா ? “ மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து சதவீதமும், அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது 90 சதவீதமும் நிர்ணயிக்கின்றனஎன்கிறார். அதாவது மன அழுத்தம் வேண்டுமா ? வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியது நாம் தான் என்பது அவருடைய தீர்மானமான முடிவு.

உதாரணமாக, குடும்பத்தில் பிரச்சினை வந்தால்எல்லாமே உன்னால தான்என தப்பைத் தூக்கி அடுத்தவர் தலையில் போடாமல், “நமக்கு ஒரு பிரச்சினை வந்திருக்கு, அதை எப்படித் தீர்ப்பது என்று பார்ப்போம்என அமைதியாய் அணுக வேண்டும். பிரச்சினைகளைத் தோண்டாமல், தீர்வுகளைத் தேடுவது மன அழுத்தமற்ற சூழலுக்கு உத்தரவாதம் என்கிறார் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.

இந்த மன அழுத்தம் சர்வதேச அளவில் எல்லோரையும் பின்னிப் பிணைந்திருப்பதால் தான் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் எனப்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் பயிற்சிகளுக்கும் பஞ்சமில்லை. மென்பொருள் நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ ஊழியர்களை சுற்றுலா, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சிரிப்பு நிகழ்ச்சிகள் என ஏதாவது செய்து உற்சாகமூட்டுகின்றன. 

உலக பிரபலங்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள், கடுமையான மன அழுத்தத்தில் உழன்று அதிலிருந்து வெளிவந்தவர்கள் எக்கச் சக்கம். வின்ஸ்டன் சர்ச்சில், பிரபல நாவலாசிரியர்கள் அகதா கிறிஸ்டி, ஜே.கே ரௌலிங், இளவரசி டயானா, பிரிட்னி ஸ்பியர்ஸ், பெயிண்டிங் பிதா மகன் வான்கோ, ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர், மைக்கேல் ஏஞ்சலோ, ஐசக் நியூட்டன், லியோ டால்ஸ்டாய் என இந்தப் பட்டியல் ரொம்பவே பெருசு. மன அழுத்தத்தைத் தாண்டி வரலாறு படைக்க முடியும் என்பதன் சான்றாக இவர்களெல்லாம் நமக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார்கள்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட பத்து கட்டளைகள் இவை.

  1. கடைசி நிமிட பரபரப்பை நிறுத்துங்கள். எங்காவது செல்ல வேண்டுமெனில் ஒரு அரை மணி நேரம் முன்னதாகவே கிளம்புவது. காலையில் ஒரு பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுவது. பயணத்துக்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக் கொள்வது போன்றவற்றை வழக்கமாக்குங்கள். 
  2. ஒரு நேரம் ஒரு வேலையை மட்டும் செய்யுங்கள். எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்து கொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை! போதுமான  ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும். 
  3. உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள். இரைச்சல், வெளிச்சம், தாமதம், சில வகை வாசனைகள், சில நபர்கள் இத்யாதி..இத்யாதி என இந்தப் பட்டியல் எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.
  4. உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உடல் மன அழுத்தத்தின் எதிரி. உடலில் இரத்த ஓட்டமும், ஆக்ஸிஜன் ஓட்டமும் சீராக இருக்கும் போது உடலில் மன அழுத்தம் வரும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங் போன்றவையும் உங்கள் தினசரி வேலையில் இடம் பெறட்டும்.
  5. தீய பழக்கங்களைக் கைகழுவி விடுங்கள். புகை மது, போதை போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள். 
  6. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. 
  7. ஒரு நல்ல பொழுதுபோக்கைக் கைவசம் வைத்திருங்கள். உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் விளையாடுவது. செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.
  8. பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள். நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கத்தை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.  
  9. சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட கொண்டாடுங்கள். சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத் தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.
  10. 10.பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.

அழுத்தமற்ற மனதுஇனி

வெற்றிகளே உனது

தன்னம்பிக்கை : மாத்தி யோசி, வெற்றியை ருசி…

$
0
0

ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பதே கூட நமக்குத் தெரிவதில்லை.  வாழ்க்கையின் பெரும்பாலான விஷயங்களில் இது நடந்து விடுகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் விடையாக நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு தீர்வையே தேர்ந்தெடுக்கிறோம். ஒரு கட்டத்தில் அதுவே பழகிப் போக, “இந்தப் பிரச்சினைக்கு இது மட்டும் தான் தீர்வுஎன முடிவு கட்டி விடுகிறோம்.  

துப்பறியும் நாவல்களைப் படிக்கும்போது நமக்கு ஆங்காங்கே மெல்லிய ஆச்சரியம் எழுவதற்கான காரணமும் அது தான். “அடடாஇது நமக்கு தோணாம போச்சே !”  என்று கதாநாயகர்களைப் பாராட்டுகிறோம். தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளானாலும் சரி, அலுவலகப் பிரச்சினைகளானாலும் சரி, வித்தியாசமாய் யோசித்து புதிது புதிதாய்த் தீர்வுகளைக் கண்டுபிடிப்பவர்களை வெற்றி தேடி வந்து அரவணைத்துக் கொள்ளும். 

வித்தியாசமாய் யோசிப்பவர்கள் தனித்துத் தெரிகிறார்கள். சாமந்திப் பூக்களின் தோட்டத்தில் ஒரு பூ மட்டும் நீல நிறமாய்த் தெரிந்தால் சட்டென கண்களை ஈர்த்து விடுவதைப் போல.  

விண்வெளியில் காற்று இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். விண்வெளி வீரர்கள் சாதாரண பேனா கொண்டு போனால் பயன் இருக்காதாம். எனவே வெற்றிடத்தில் எழுதுவதற்குரிய ஸ்பெஷல் பேனாவைக் கண்டு பிடிக்க அமெரிக்கர்கள் பிரம்மப் பிரயர்த்தனம் செய்தார்கள். கடைசியில் பல கோடி ரூபாய்கள் செலவு செய்து வெற்றிகரமாக ஒரு பேனாவைக் கண்டு பிடித்தார்கள். ரஷ்யர்களுக்கும் இதே சிக்கல் வந்ததாம். அப்போது ரஷ்ய விண்வெளி ஊழியர் ஒருவர் சொன்னார்,”எதுக்குப் பேனா ? ஒரு பென்சில் கொண்டு போய் எழுதுவோமே” ! அவர்களுக்கு இரண்டு ரூபாயில் பிரச்சினை தீர்ந்தது !

விண்வெளியில் வைத்து எழுதவேண்டும்என்பது தான் கொடுக்கப்படும் பிரச்சினை. அதற்குத் தீர்வு பல மில்லியன் டாலர் பேனாவாகவோ, இரண்டு ரூபாய் பென்சில் ஆகவோ இருக்கலாம். ஆனால் எது லாபகரமானது ? எந்தச் சிந்தனை வலுவானது ? எந்தச் சிந்தனை எளிதானது ? எது  வழக்கத்துக்கு மாறாகச் சிந்திக்கிறது ? இவை தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். 

ஒரு பெரிய சோப் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஒரு புகார் வந்தது. ஒருவர் வாங்கிய சோப்களில் ஒரு கவருக்குள் சோப் இல்லை. வெறும் கவர் மட்டுமே இருந்தது !  நிறுவனத்துக்கு இதே போல அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் புகார்கள் எழ, நிர்வாகம் இதற்கு ஒரு பரிகாரம் கண்டுப் பிடிக்க முயன்றது. கம்பெனியிலுள்ள பெரிய வல்லுனர்கள் எல்லாம் ஒரு அறையில் கூடி விவாதித்தார்கள். ஏகப்பட்ட ஐடியாக்கள் வந்தன.

சோப்கள் வரிசை வரிசையாக ஒரு பெல்ட் வழியாக ஊர்ந்து போய்க் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சேரும். அந்த இடத்துக்கு வந்து சேருவதற்கு முன் அந்தக் கவர்களிலெல்லாம் சோப் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். சோப் இல்லையேல் அதை எடுத்துத் தனியே வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

சரி. கவருக்குள் சோப் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது ? ஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள். ஒருவர் சொன்னார். “ஒரு எக்ஸ்ரேக் கருவியைப் பொருத்தலாம். அந்தக் கருவி ஒவ்வொரு சோப்பாக ஸ்கேன் செய்து உள்ளே சோப் இருக்கிறதா இல்லையா என்பதைக் காட்டி விடும். அப்புறம் ஒரு ரோபோ கையை வைத்து அந்த டப்பாவை எடுத்துத் தனியே வைக்கலாம் ! 

இன்னொருவர் சொன்னார். சோப் ஊர்ந்து போகும் இடத்தில் ஒரு சின்ன எடை மிஷின் ஒன்றை வைக்க வேண்டும். சோப் இல்லையென்றால் எடை குறைவாய் இருக்கும். அதை அப்புறப்படுத்தி விடலாம்

இப்படி ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். நீங்களாய் இருந்தால் இந்தச் சூழலில் என்ன பதில் சொல்வீர்கள் ? இதில் எது சிறந்த வழி ? அல்லது இதை விடச் சிறந்த எளிய வழி உண்டா ? இவை தான் இங்கே கேள்விகள்.

கூட்டத்திலிருந்த ஒருவர் ஒரு அட்டகாசமான ஐடியா சொன்னார். “சோப்கள் ஊர்ந்து வரும் இடத்தில் ஒரு பெரிய ஃபேனை வேகமாகச் சுழல விடுங்கள். சோப் இல்லாத கவர்களெல்லாம் தானே பறந்து போய்விடும். பறக்காத கவர்களிலெல்லாம் சோப் இருக்கிறது என்று அர்த்தம் ! ” இது தான் அவருடைய ஐடியா ! மிக எளிமையான, செலவில்லாத இந்த ஐடியா கரகோஷத்துடன் அங்கீகரிக்கப் பட்டது.

இதை ஆங்கிலத்தில்அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்என்பார்கள். அதாவது வழக்கமாக மக்கள் யோசிப்பது போல யோசிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாய் யோசிப்பது. லேட்டரல் திங்கிங் என்றொரு சமாச்சாரமும் உண்டு. அதுவும் ஏறக்குறைய இதே அடிப்படையிலானது தான். ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக வழக்கமாக உள்ள வழிகளையோ, சட்டெனப் புலப்படும் வழிகளையோ விட்டு விட்டு வேறு புதுமையான வழிகளை யோசிப்பது தான் இரண்டுக்குமான அடிப்படை. ஒரு சின்ன வித்தியாசமான ஐடியா போதும் ஒரு நிறுவனம் உச்சிக்குப் போக ! ஐபேட், ஐபோன் போன்றவற்றின் வருகைக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் அடைந்திருக்கும் பிரமிப்பூட்டும் வளர்ச்சி நாம் அறிந்ததே.

ஐடியாக்களைக் கண்டுபிடிக்க செலவு ஏதும் இல்லை. மூளையைக் கசக்க வேண்டும் அவ்வளவு தான். பெரிய பெரிய கண்டுபிடிப்புகளெல்லாமே சின்னச் சின்ன ஐடியாவின் நீட்சிகள் தான். ஒரு காலத்தில் தீக்குச்சியும், அதை உரசி நெருப்பு பற்ற வைக்கும் மருந்தும் தனித்தனியே இருந்தன. பெட்டிக்குள் குச்சியைப் போட்டு, அதன் பக்கவாட்டில் மருந்து தடவி உரச வைக்கலாம் என்பது ஒரு சின்ன ஐடியா தான். ஆனால் எவ்வளவு அட்டகாசமான ஐடியா இல்லையா ?

எட்வர்ட் டி பானோ என்பவர் லேட்டரல் திங்கிங் விஷயத்தில் புலி. இவர் எழுதிய 40 நூல்கள் இருபத்து ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இவருடைய பார்வையில், அறிவும் சிந்தனையும் வேறு வேறு. வித்தியாசமானச் சிந்தனையை யார் வேண்டுமானாலும் பயிற்சியின் மூலமாக உருவாக்கலாம். ஏன் ? எப்படி ? எனும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் போதுமாம்.

இன்னொரு விதமாகச் சொன்னால், லேட்டரல் திங்கிங் என்பது ஒரு விஷயத்தை பலருடைய பார்வையில் பல கோணங்களில் யோசிப்பது. உதாரணமாக வீடு கட்டுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். படுக்கையறை நல்ல வெளிச்சமாய் இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். 

எலக்ட்ரீஷியன்நிறைய லைட் போடலாம்என்பார். கார்ப்பெண்டரோ, “ ரூம் சன்னலைப் பெரிசு பெருசாக வைக்கலாம் ?” என்பார். “பளிச் நிறத்தில் பெயிண்ட் அடித்தால் வீடு வெளிச்சமாய்த் தெரியும்.” என்பது பெயிண்டரின் பார்வையாய் இருக்கும். டிசைனரோஇரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டலாம், நிறைய கண்ணாடி பொருத்தலாம்என்பார். வாஸ்துக்காரர் ஒருவேளைபெட்ரூமை கிழக்குப் பக்கம் பார்க்கிறமாதிரி வையுங்கஎன்பார்.  இப்படி எழும் பலருடைய கோணத்தை நீங்கள் ஒருவரே யோசித்துச் சொன்னால் உங்கள் சிந்தனை வளர்ச்சியடைகிறது என்று பொருள்.  

வாழ்க்கை எந்த அளவுக்கு போட்டிகளும், சவால்களும் நிறைந்ததோ அந்த அளவுக்கு வாய்ப்புகளும், வரவேற்புகளும் நிரம்பியது. உங்களுடைய சிந்தனை கூர்தீட்டப்பட்டதாக இருந்தால் பாதைகளில் சிவப்புக் கம்பளம் நிச்சயம் உண்டு. வந்தோமா, போனோமா என்றிருக்காமல் தினசரி செய்யும் வேலைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் ? என்ன புதுமைகள் புகுத்தலாம் என யோசித்துக் கொண்டே இருங்கள். ஆச்சரியமூட்டும் உயரிய இருக்கைகள் உங்களுக்கு இடமளிக்கும்.

ஒரு கோடீஸ்வரர் இருந்தார். அவருக்குப் பயங்கரமான கண் வலி. அவருடைய வலியைப் போக்க வழி தெரியாமல் எல்லா மருத்துவர்களும் கையைப் பிசைந்தார்கள். கடைசியில் ஒரு துறவியைக் கூட்டி வந்தார்கள். அவர்உங்கக் கண்ணுக்கு நிற அலர்ஜி வந்திருக்கிறது. இன்னும் ஒரு மாசத்துக்குப் பச்சை நிறங்களை மட்டும் பாருங்க. மற்ற நிறங்களைப் பார்க்காதீங்கஎன்றார் இவர் கோடீஸ்வரரல்லவா ? வீடு, படுக்கை துணிகள் எல்லாமே பச்சை கலராய் மாற்றப்பட்டன. பச்சை உடை, பச்சை முகமூடி இல்லாமல் யாரும் அவரை நெருங்க முடியவில்லை.  

ஒரு மாதம் கழிந்து துறவி வந்தார். அவர் மீதே பச்சை பெயிண்டைக் கொட்டினார்கள். துறவி அதிர்ச்சியடைந்தார். கோடீஸ்வரரோ, “மன்னியுங்கள் உங்க உடை காவி நிறம். அதனால் தான் பச்சை பெயிண்ட் கொட்டச் சொன்னேன்.” என்று சமாதானப்படுத்தினார் . துறவி வாய்விட்டுச் சிரித்தார். “இவ்வளவு களேபரத்துக்குப் பதிலா நீங்க மட்டும் ஒரு பச்சைக் கலர்க் கண்ணாடி வாங்கி கண்ணுல மாட்டியிருந்தா போதுமே ! ” என்றார் !

இது தான் எளிய, அதே நேரம் வலிமையான சிந்தனை. எந்த ஒரு செயலைச் செய்யவும் பல வழிகள் இருக்கும். நமக்கு ரொம்பவேப் பரிச்சயமான வழியில் நடப்பதைத்தான் நாம் விரும்புவோம். ஆனால் அந்த வழியை விட்டு விட்டு இன்னொரு வழியில் நடக்கும் போது தான் புதுமைகளைக் கண்டடைய முடியும்.

கூரான சிந்தனைகள் கருவாகட்டும்

எதிர்காலம் வளமாக உருவாகட்டும்.

தன்னம்பிக்கை : வேலையே வாழ்க்கையல்ல

$
0
0

என் வீட்டுக்காரர் எப்பவுமே ஆபீஸ் ஆபீஸ்னு அதையே கட்டிகிட்டு அழறாருஎனும் புலம்பலைக் கேட்டதில்லையெனில் நீங்கள் நிஜமாகவே புண்ணியம் செய்தவர்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி போல இந்த புலம்பல்கள் எல்லா இடங்களிலும் காற்றைப் போல சர்வ சுதந்திரமாக அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. 

ஆபீஸ் எனக்கு முதல் வீடு, வீடு எனக்கு இரண்டாவது ஆபீஸ்எனும் கரகரப்பான குரல் மறு முனையிலிருந்து எழுகிறது. வீட்டில் தூங்குவதைத் தவிர வேறெதையும் பெருசாய் செய்துவிடாத மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கை என்பது அலுவலகத்தில் வேலை செய்வது, அதை அப்படியே வீட்டிலும் தொடர்வது !  

இப்படி ஒரு வாழ்க்கை தேவையா ? என இவர்களிடம் கேட்டுப் பாருங்கள். “வாழ்க்கைல முன்னேறணும்ன்னா இப்படியெல்லாம் செய்தே ஆகணும்என்பார்கள். சரி, வாழ்க்கை என்றால் என்ன என்று இன்னொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் ? முழிப்பார்கள். நமது வாழ்க்கை தனது அர்த்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறதோ எனும் கவலை எழுகிறது. ரிட்டையர்ட் ஆகும் வரை ஓயாமல் வேலை செய்து விட்டு, கடைசியில் திரும்பிப் பார்க்கும் போது நாம் அனுபவிக்காமல் தவற விட்ட தருணங்கள் நம்மைப் பார்த்து நகைக்கும்.

வேலை முக்கியமானது, வாழ்க்கைக்குத் தேவையானது. ஆனால் அதுவே வாழ்க்கையல்ல எனும் தெளிவு நமக்கு ரொம்பவே அவசியம். வேலையின் வேலிகளைக் கடந்த ஒரு வாழ்க்கை வசந்தங்களோடும், மழலைப் புன்னகையோடும் நம்மைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே இருக்கிறது. வாழ்வின் உன்னத நிமிடங்கள் இங்கே தான் உலவிக் கொண்டிருக்கின்றன.

வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில்வர்க்லைஃப் பேலன்ஸ்என்கிறார்கள். இந்த சமநிலை தடுமாறும் போது தான் வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் சிதைந்து போகின்றன. அல்லது வேலையின் முன்னேற்றம் முடங்கிப் போகிறது.

வேலை, ஆரோக்கியம், குடும்பம், நட்பு, உயிர் என ஐந்து பந்துகளை மேலே எறிந்து விளையாடும் விளையாட்டு தான் வாழ்க்கை. இதில் வேலை மட்டும் ரப்பர் பந்து, தரையில் விழுந்தாலும் துள்ளி வரும். மற்ற எல்லாமே கண்ணாடிப் பந்துகள். விழுந்தால் கீறல் விழலாம், உராய்வுகள் ஏற்படலாம் ஏன் உடைந்தே கூட போய்விடலாம். எப்போதுமே பழைய வசீகரத்துக்கு அவை திரும்ப முடியாது. எனவே வாழ்க்கைக்கும் வேலைக்குமிடையே சீரான ஒரு சமநிலை இருக்க வேண்டியது அவசியம்  என்கிறார் பிரைன் டைசன்.

வேலையையே கட்டிக் கொண்டு அழுபவர்கள் உடலைக் கவனிக்க மாட்டார்கள். மருத்துவரைப் பார்க்க வேண்டும், ஒரு செக்கப் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் போக மாட்டார்கள். காரணம் கேட்டால், “ரொம்ப வேலை, டைமே கிடைக்கலைஎன்பார்கள். வேலைக்காக தங்களுடைய ஆரோக்கியத்தையே அடகு வைக்கும் இத்தகைய மனிதர்கள் ஒரு காலகட்டத்தில் நோயின் வீரியத்தால் வீழ்த்தப்பட்டு மருத்துவமனைக் கட்டிலில் அசையாமல் படுத்திருப்பார்கள். 

மறு புறம் மனநலமும் அவர்களைப் புரட்டிப் போடும். எரிச்சலும், கோபமும் அவர்களுடைய இரு அகக் கண்களாக மாறும். வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது உடல் சோர்வில் சுற்றப்பட்ட கசங்கிய தலையணையாய் தெரியும். குடும்பத்தினர் சொல்வதை கவனிக்கவோ, அவர்களோடு உற்சாகமாய் நேரம் செலவிடவோ மனமிருக்காது. உளைச்சல், அழுத்தம் என இவர்களுடைய மனம் யானை புகுந்த வயல் போல சின்னாபின்னமாகிக் கிடக்கும்.

வேலையை இழந்து விடுவோமோ எனும் பயம் தான் பெரும்பாலான மக்கள் அதிக நேரம் வேலை செய்வதன் காரணம்என்கிறார் உளவியலார் ராபர்ட் புரூக்ஸ். ஒருவேளை உங்களுடைய வேலை உங்களுக்குத் தேவையான ஓய்வு நேரத்தைத் தராவிட்டால் சம்பளம் குறைந்ததானாலும் அடுத்த  வேலையை நோக்கிப் போவதே நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள். ! 

புளூஸ்டெப்ஸ் டாட் காம் எனும் இணைய தளம் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. ஊழியர்களின் வேலைவாழ்க்கை சமநிலைக்காக நிறுவனங்கள் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடுவதில்லை என குற்றப்பத்திரிகை வாசித்தவர்கள் 82% பேர். இன்னொரு சர்வே 70% ஊழியர்களிடையே வேலை அழுத்தம் குறித்த கவலையும், தேவையான நேரத்தைக் குடும்பத்துடன் செலவிட முடியவில்லையே எனும் ஆதங்கமும் இருப்பதாய்ச் சொன்னது. 

மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உலகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவையே இதன் காரணம் என பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்தனர்.  இந்த வேலைவாழ்க்கைச் சமநிலைப் பிரச்சினை ஒரு சர்வதேசப் பிரச்சினையாக வேர் விட்டிருப்பதையே இத்தகைய ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

வர்க்லைஃப் பேலன்ஸ் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் அதை எப்படி உருவாக்குவது என்பதில் தடுமாற்றங்கள் இருக்கும். இதற்கு மலையைப் புரட்டி வெளியே எறிய வேண்டிய தேவையெல்லாம் இல்லை. சின்னச் சின்ன சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே போதுமானது. உதாரணமாக, வாரம் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வீட்டுக்குக் கிளம்பி வருவது கூட குடும்ப உறவின் இடைவெளியை சீரமைக்க உதவும். 

வேலையை வேலைசெய்யும் இடத்திலேயே விட்டு விட்டு வாருங்கள். அலுவல் நேரம் முடிந்த பின்னும் அதை முதுகிலும், மூளையிலும் தூக்கிச் சுமப்பது தவறு. ஒருவேளை வீட்டிலிருந்து செய்யும் வேலையெனில் இவ்வளவு மணி நேரம் தான் வேலை என தெளிவாய் வரையறுத்து அந்தக் கோட்டில் நில்லுங்கள்.

அடுத்த வாரத்துக்கான திட்டமிடுதல் பயனளிக்கும். ஆனால், அதில் தங்கள் ஆனந்தங்களுக்கான நேரம் இடம் பெற வேண்டியது அவசியம். நண்பரைப் பார்ப்பது, பூங்கா போவது, வீட்டிலேயே இருப்பது என எதுவானாலும் சரி, போடும் திட்டத்தில் நிலைத்திருங்கள். “இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதேஎன ஏதாவது வேலையை தலையில் இழுத்துப் போடாதீர்கள்.

எவ்வளவு மணி நேரம் வேலை செய்தோம் என்பதை விட, இந்த மணி நேரத்தில் எவ்வளவு வேலை செய்தோம்என்பதே திறமையை வெளிப்படுத்தும். சிலர் காலை முதல் மாலை வரை வேலை செய்வார்கள். இவர்களுடைய பெரும்பாலான நேரம் கிசு கிசுக்களிலோ, இணையத்தில் ஆர்குட், ஃபேஸ் புக் போன்ற இடங்களிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ செலவிடப்படும். இந்த அனாவசிய நேரத்தையெல்லாம் விலக்கினால் அந்த நேரத்தை வேலை தாண்டிய வாழ்க்கைக்காகச் செலவிடலாமே !

வேலை வேலை என்று அலைபவர்கள் கட் பண்ணும் ஒரு விஷயம் உடற்பயிற்சி. உண்மையில் அவர்கள் நிறுத்தக் கூடாத ஒரு வேலை அது தான். உடற்பயிற்சி செய்பவர்களால் முழு நாளிலும் உற்சாகத்தைக் கட்டிக் காக்க முடியும். அதே போல நிம்மதியாய்த் தூங்கவும் பழகுங்கள். தூக்கத்தை விட்டு வேலை செய்யத் துவங்கினால் சீட்டுக் கட்டு போல வாழ்க்கை சரிந்து விடும்.

வாழ்க்கைக்கும், வேலைக்கும் இடையே அழுத்தமான கோடு கிழியுங்கள். 

வாழ்க்கைக்கும், வேலைக்கும் இடையே அழுத்தமான கோடு கிழியுங்கள். வேலை நேரத்தில் ஆத்மார்த்தமாய் வேலை செய்வதும், மற்ற நேரத்தை மன மகிழ்ச்சியாய்ச் செலவிடுவதும் அவசியம். அவ்வப்போது லீவு போட்டு குடும்பத்தோடு ஹாயாக எங்கேயாவது போவது, நண்பர்களுடன் கொட்டமடிப்பது என திட்டமிடுங்கள். “லீவ் எடுக்காவிட்டால் பணம் கிடைக்கும்என லீவை எல்லாம் பணமாய் மாற்ற முயலாதீர்கள். பெயர், பணம், புகழ், பதவி எல்லாமே தற்காலிகமானவை. ஆழமான அன்பு, உற்சாகமான நட்பு, குடும்ப உறவு போன்றவையே வாழ்க்கையை அழகாக்குபவை. 

உங்க அலுவலகத்திலேயே சிலர் வேலைவாழ்க்கை சமநிலையை வெகு ஜோராகக் கடைபிடிப்பார்கள். அவர்களோடு சகவாசம் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் மனநிலை உங்களை எப்போதுமே சட்டென எட்டிப் பிடித்து விடும். அமெரிக்கா போன்ற நாடுகளில் வெள்ளிக்கிழமை மாலையில் அலுவலகத்தை விட்டு வெளியேறினால், மீண்டும் திங்கட்கிழமை காலையில் அலுவலகம் நுழையும் வரை வேலையே பார்க்க மாட்டார்கள். முழுக்க முழுக்க குடும்பத்தோடு செலவிடுவார்கள். அப்படி ஒரு பாலிஸியை நீங்களும் கைக்கொள்ளுங்கள். வார இறுதிகள் அடுத்த வாரத்துக்கான உற்சாக டானிக்கை உற்பத்தி செய்து தரும்.

வேலை செய்வது வாழ்க்கையை நிம்மதியாக வாழத்தான் தான். வேலையே அதற்கு வேட்டு வைத்து விடக் கூடாது. குடும்ப ஆனந்தங்களை மீண்டெடுக்கவும், சுவாரஸ்யமாய்க் கொண்டாடவும் மனதில் அது குறித்த சிந்தனைகளைப் பசுமையாய் வைத்திருங்கள். எதிர்பாராத நேரத்தில் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ கொடுக்கும் ஒரு சின்ன அன்புப் பரிசு கூட குடும்ப வாழ்வின் பிணைப்பை அதீத வலுவாக்கித் தரும் ! 

அன்பாக வாழ்ந்திடப் பழகு

அன்பின்றி அமையாது உலகு

தன்னம்பிக்கை : நீ என்னவாக விரும்புகிறாய் ? 

$
0
0

நீ என்னவாக விரும்புகிறாய்” – இந்தக் கேள்வியை பல வேளைகளில் பலரும் நம்மிடம் கேட்டிருப்பார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒரு பதில் நம்மிடம் தயாராய் இருந்திருக்கும். “நான் டாக்டராவேன், நான் இன்சினியராவேன், நான் டீச்சராவேன்எனும் பதில்கள் பள்ளிக்கூடத்துக்கு.  அந்தப் பதில்கள் பெரும்பாலும் நமது பெற்றோரைப் பார்த்தோ, தெரிந்தவர்களைப் பார்த்தோ உருவாக்கிய பிம்பமாகவே இருக்கும். பலவேளைகளில்டீச்சர் கேட்டா, சயிண்டிஸ்ட் ஆவேன்னு பதில் சொல்லுப்பாஎன குழந்தைகளிடம் அவர்களுக்கான பதிலையும் நாமே உருவாக்கி அனுப்பி வைக்கிறோம்.

கல்லூரி காலத்தில் இலட்சியம் ஒருவேளை நல்ல ஒரு வேலை கிடைப்பதாய் இருக்கலாம். வேலைக்குச் சென்றபின்போ, நமது மேலதிகாரியின் இருக்கையை எட்டிப் பிடிப்பதே ஒரே  இலட்சியமாகிப் போகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட ஒரு கேள்வியை எதிர்கொள்ளவே முடியாமல் தடுமாறிப் போய் விடுகிறோம். 

உண்மையிலேயே நாம் என்னவாக விரும்புகிறோம் ? . எப்போதாவது ஆர அமர இதைப்பற்றி யோசித்திருப்பாமா ? “இல்லைஎன்பதே நமது உள்மனம் சொல்கின்ற பதிலாய் இருக்கும். இப்படி ஒரு சிந்தனையே தேவையில்லை எனும் சூழலே நமக்குச் சின்ன வயது முதல் அமைந்தும் விடுகிறது. 

ஞானத்தின் துவக்கம் தன்னை அறிதலில் இருந்து துவங்குகிறதுஎன்கிறார் அரிஸ்டாட்டில். “பிறரைப் பற்றி அறிவது அறிவு. தன்னைப் பற்றி அறிவதே ஞானம்என்கிறார் லியோ ட்ஸூ. தான் யார், தனது இயல்புகள் என்ன ? தனது ஆழ்மன ஆசைகள் என்ன ? தனது பாதை ஏது ? என்பதை உணர்கின்ற வினாடியில் தான் புதிய உலகமே நமது கண்களுக்கு முன்பாக விரியத் துவங்குகிறது. 

வில்மா ரொடோல்ஃப் அமெரிக்காவிலுள்ள டென்னிஸி மாகாணத்தில் பிறந்தார். பிறந்தபோது அவளுடைய எடை வெறும் இரண்டு கிலோ. குறைப்பிரசவம். சின்ன வயதிலேயே போலியோ வந்து பற்றிக்கொள்ள இடது கால் செயலிழந்து விட்டது. உலோகக் கவசம் போட்டால் மட்டுமே கால் நேராக நிற்கும் எனும் சூழல். அவளிடம் சின்ன வயதில்நீ என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டார்கள். “விளையாட்டு வீராங்கனையாக வேண்டும். ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெறவேண்டும்என்றாள் அவள் கண்கள் மின்ன. 

நேராக நிற்கவே முடியாத கால்கள். மனதிலோ ஓட்டப்பந்தய வீராங்கனையாகவேண்டும் எனும் தழல். காலத்தின் கோலம் அவளை சின்னவயதில் ரொம்பவே சோதித்தது. கடுமையான காய்ச்சல், சின்னம்மை, பெரியம்மை, இருமல் என இல்லாத நோய்களெல்லாம் அவளை வந்து பிடித்தது. ஒருவழியாக பன்னிரண்டாவது வயதில், உலோகத்தின் துணையில்லாமல் நிற்கத் துவங்கினாள்.

அதன்பின் வாய்ப்புக் கிடைத்த அனைத்து ஓட்டப் பந்தயங்களிலும் ஓடினாள். தவறாமல் கடைசியில் வந்தாள். ஆனால் அவளுக்குள் இருந்த ஆவலும், வேட்கையும் கொஞ்சமும் அணையவேயில்லை. படிப்படியாய் தனது இலட்சியத்தின் பாதையில் ஒட்டிக்கொண்டே இருந்த அவர் 1956ம் ஆண்டு தொடர் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார் !

1960ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களையும் நிலை குலைய வைத்தது. நூறு மீட்டர் இருநூறு மீட்டர், நானூறு மீட்டர் என மூன்று ஓட்டங்களிலுமே தங்கப்பதக்கங்கள் வென்று உலகையே பிரமிக்க வைத்தார். எல்லாமே சாதனை வெற்றிகள். உலகின் மிக வேகமான வீராங்கனை என அவளை உலகம் கொண்டாடியது. நேராக நிற்கவே தடுமாறிய வில்மா, வரலாற்றின் பக்கங்களில் புயலாக புகுந்து கொண்டார்.

என்னவாகவேண்டும் எனும் தெளிவு உள்ளுக்குள் குடிகொள்ளும்போது எல்லாமே தொட்டுவிடும் தூரத்தில் வந்து சேர்ந்து விடுகிறது. எல்லாவற்றையும் அடையும் அளவிட  முடியாத வலிமையை மனம் தந்து விடுகிறது.  

என்னவாக விரும்புகிறோம் என்பதில் தெளிவாக இருப்பவர்கள் பாதியிலேயே பாதை மாறிப் போவதில்லை என்பதற்கு உதாரணங்களாக கோலிவுட் கவுண்டமணி முதல் விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் வரை வரிசையில் நிற்கிறார்கள். எது தனது உண்மையான வலிமை, எதை நோக்கி நான் செல்ல வேண்டும் எனும் தெளிவைப் பெற்றவர்களே வெற்றியாளர்களாய் பரிமளித்திருக்கிறார்கள் என்பதை வரலாறு கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது !

மாமரத்துக்கு என்னதான் உரம் போட்டாலும், மினரல் வாட்டரையே ஊற்றினாலும் அதில் ஆப்பிள் காய்க்கப் போவதில்லை. ஆப்பிள் தான் வேண்டுமென அதில் பழங்களை ஒட்டி வைத்தாலும் அது பயன் தரப் போவதில்லை. மாறாக, மாமரத்தின் இயல்பை அறிந்து அதற்கேற்ற பராமரிப்பை நல்கினால் மிகச்சிறந்த மாமரமாய் அது மாறும். அப்படியே மனிதனின் இயல்புகளும்.  

அதன் முதல் படியாக இருப்பது உணர்தல் !  தன்னுடைய உண்மையான விருப்பம் எது ?. தனது இயல்பான வலிமை எது என கண்டறிவதே முதல் தேவை. இரண்டாவது அந்த விருப்பத்தை நோக்கிய பாதையில் பயணிப்பது. விருப்பமான பாதையில் பயணிப்பதைப் போன்ற ஆனந்தமான அனுபவம் வேறு இருக்க முடியாது. இலட்சியங்கள் காதலைப் போல !. காதலிக்காகவோ, காதலனுக்காகவோ கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் சுவாரஸ்யமாய்க் காத்திருக்கும் அற்புதத் தருணம் போன்றது அது. பலருக்கும் அத்தகைய வாழ்க்கை அமைவதில்லை என்பது தான் துயரம்.

உங்கள் அருகில் இருக்கும் நபரிடம் கேட்டுப் பாருங்கள், “இது தான் நீங்கள் விரும்பிய வாழ்க்கையா ?” என்று ! பெரும்பாலானவர்களின் பதில் உங்களை வியக்க வைக்கும். எழுத்தாளராக விரும்பி கிளார்க்காக வேலை செய்பவர்கள், பாடலாரிசியராக விரும்பி ஹோட்டலில் வேலை செய்பவர்கள், டீச்சராக விரும்பி .டியில் வேலை செய்பவர்கள் என பல முகங்களை நீங்கள் தரிசிக்கலாம். கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தங்கள் இலட்சியங்களையும், இயல்புகளையும் பரணில் தூக்கிப் போட்டவர்கள் இவர்கள்.

இன்னும் சிலர் இலட்சியத்தின் பாதையில் ஒட்டத்தை ஆரம்பிப்பார்கள். கால் இடறியவுடனே பாதை மாற்றி விடுவார்கள். அல்லது போதுமடா சாமி என ஒதுங்கிவிடுவார்கள். அப்படி ஒதுங்காதவர்களைக் கூட சுற்றியிருப்பவர்கள் உசுப்பேற்றுவார்கள். “இதெல்லாம் உனக்கு விதிச்சதில்லைப்பா… ”, “இதெல்லாம் உனக்குச் சரிப்படாதுஎனும் விமர்சனங்கள் அவர்களைத்  தடம் மாற்றி ஏதோ மூலையில் மிச்ச வாழ்க்கையைக் கழிக்க வைக்கும்.  

நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ உங்களுக்குத் தடையாக இருக்கும் சிக்கல்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். பின்னுக்கு இழுக்கும் நண்பர்களாய் இருக்கலாம், படிப்பாய் இருக்கலாம். தங்குமிடமாய் இருக்கலாம். வேலையாய் இருக்கலாம். அந்த சிக்கல்களை அடையாளம் கண்டு கொண்டால் அதிலிருந்து மீள்வதும் எளிதாகிவிடும்.

எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்பாஎன்று பலரும் தங்கள் இலட்சியங்களின் மேல் காலத்தின் கூடாரமடித்துப் படுத்துறங்குவதுண்டு. உண்மையில் அப்படி ஒரு நேரம் வருவதேயில்லை. நாம் தான் பயணத்தைத் தொடரவேண்டுமேயன்றி, கூரையைப் பிய்த்துக் கொண்டு தெய்வம் கொட்டுவதெல்லாம் கதைகளில் மட்டுமே சாத்தியம். 

இலட்சியங்கள் சமரசமற்ற ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும். நண்பன் சொன்னான், மாமா சொன்னார், மச்சான் சொன்னான் என்றெல்லாம் உங்கள் இலட்சியங்களை உருவாக்காதீர்கள். அது போல இலட்சியம் மிகவும் தெளிவான ஒரு புள்ளையை அடைவதாக இருந்தால் நல்லது. உதாரணமாக, சினிமா துறையில் வெற்றி பெறவேண்டும் என்று சொல்வதை விட, சினிமா துறையில் இயக்குனராக வேண்டும் எனும் சிந்தனை கூர்மையானது. இத்தகைய தெளிவான பார்வை அதை நோக்கியப் பயணத்தை நெறிப்படுத்துகிறது. சஞ்சலங்களை விட்டு விலகி நடக்கும் பலம் தருகிறது.  

புல்லாங்குழல் இசைக்க விருப்பம் இருப்பவர், காலம் முழுதும் வீணை கற்றுக் கொண்டிருந்தால் அவருடைய ஆசை எப்போதுமே நிறைவேறப் போவதில்லை. புல்லாங்குழலுக்கான இசைப்பயிற்சியில் நுழைவதே ஒரே வழி. இலட்சியங்களைக் குறித்த தெளிவான பாதை இத்தகைய தயாரிப்புகளை எளிதாக்கித் தரும். 

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இலட்சியம் எதுவாகவும் இருக்கலாம். இலட்சியங்கள் ஒரு பதவியையோ, இருக்கையையோ சென்றடைய வேண்டிய கட்டாயமில்லை. அன்பான, கருணையான, நேர் சிந்தனையுடைய, கோபப்படாத மனிதனாக மாறவேண்டும் எனும் இயல்புகளின் இலட்சியம் கூட ஆராதிக்கப்பட வேண்டியதே.

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அந்த நிலையை அடைந்துவிட்டதாகவே மனதில் உங்களைக் கருதிக் கொள்ளுங்கள். அவர்களைப் போலவே உங்களுடைய சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ளுங்கள். அப்போது விரைவாகவே அந்த இடத்தை அடைந்து விடுவீர்கள் என்கிறார் ஜான் கால்ஹன் எனும் வல்லுனர்.

வெற்றியாளர்கள் கருப்பாகவோ, வெள்ளையாகவோ, ஒல்லியாகவோ, குண்டாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லாரிடமும் பொதுவாக ஒரே ஒரு விஷயம் இருக்கும். அது  தன்னைக் குறித்த தெளிவான புரிதலும், இலக்கைக் குறித்த விலகாத  பார்வையும், அதை நோக்கிய தளராத பயணமும் தான்.

இலக்கு எதுவெனும் அறிதல் கொள்

வெல்லும் மனதிடம் அதையே சொல்.

தர்பார் : ஒரு விரிவான விமர்சனம்

$
0
0

தர்பார் எனும் இந்தி டப்பிங் திரைப்படத்தை முதல் நாளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதொன்றும் புதிதல்ல. ஏதோ விமர்சனம் எழுதுவதற்காக அலாரம் வைத்து எழுந்து போய் படம் பார்க்கும் இந்த டிஜிடல் தலைமுறை மனிதன் அல்ல நான். ரத்தமும் சதையும் போல‌ உள்ளுக்குள் ரஜினியிசமும் ஊறிப் போன அக்மார்க் ரஜினி ரசிகன். அவர் தொடங்கியும் தொடங்காமலும் இருக்கின்ற அரசியலோ, பேசியும் பேசாமலும் இருக்கின்ற சமூக சிந்தனைகளோ இந்த விமர்சனத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது முன் குறிப்பு.

மும்பையில் இருக்கின்ற அத்தனை தாதாக்களையும் உண்டு இல்லையென துவம்சம் செய்யும் ஒரு வெறிபிடித்த வேங்கையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதை விட ஒரு அட்டகாசமான கதாபாத்திரம் ரஜினிக்கு யாரால் கொடுக்க முடியும். “அவரு யாரையோ தேடறாரு.. யாருன்னு தான் தெரியல” என ஆங்காங்கே பில்டப்கள் ஏற்றப்படுகின்றன. என்கவுண்டர்கள் என்ட்லெஸ் ஆகப் போனபோது வழக்கம் போல ஒரு பாப் கட்டிங் மனித உரிமை அதிகாரி வருகிறார். அவரையும் உருட்டி மிரட்டி அறிக்கையில் கையெழுத்து வாங்க வைக்கிறார் ஆஅ, அதாவது ஆதித்ய அருணாச்சலம், ரஜினி.

அதன் பிறகு மும்பை, நாசிக், கோவா என பல இடங்களில் போதை கும்பலையும், குழந்தை கடத்தும் கும்பலையும் கழுவி சுத்தம் செய்கிறார். அந்த களையெடுக்கும் படலத்தில் ஒரு முக்கியமான நபர் கொல்லப்படுகிறார். அந்த நபருக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட ஒருவர் குடுமியோடு வந்து தலைவரை அழிக்கப் பார்த்து, வேறு வழியில்லாமல் அழிந்து போகிறார். இப்படி ஒரு மாஸ் மசாலா படத்தின் மானே தேனே பொன்மானே என காதல், அப்பா மகள் சென்டிமென்ட், நகைச்சுவை என மேலாக்கில் தூவியிருக்கிறார்கள். இருந்தாலும் கடைசியில், “சாருக்கு ஒரு ஊத்தாப்பம்” என்று தான் பார்வையாளர்கள் காதில் கேட்கிறது.

ரஜினியின் முகமும், பார்வையும், ஸ்டைலும், சண்டைக்காட்சிகளும் ரசிகர்களை மயிர்க்கூச்சரியச் செய்கின்றன. அதன்பின் அந்த மயிர் கூச்சரிய மறந்து தூங்கி விடுகிறது என்பது தான் சோகம். ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைன்ட் என்பது போல, ரஜினி இப்படி முழுக்க முழுக்க அட்டகாசமான பங்களிப்பு செய்தும் படத்தில் ஒரு திருப்தி வரவில்லை என்பது தான் உண்மை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதாவது வெந்து கொண்டிருக்கின்ற பானையிலிருந்து ஒரு அரிசியை எடுத்து சாப்பிட்டு பாத்து சோறு வெந்துதா, வேகலையா, வேகுமா என்பதையெல்லாம் கண்டுபிடிக்கும் பாட்டிகால வழிமுறை அது. இப்பல்லாம் குக்கர் விசிலடிக்காவிட்டால் நமக்கு சோறு வெந்துதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அது அப்படியே இருக்கட்டும். சினிமாக்களைப் பொறுத்தவரையில் ஹீரோ அறிமுகமாகும் காட்சியை வைத்து அந்த படம் எப்படிப் போகும் என்பதைக் கணிக்கலாம்.

இந்தப் படத்தில் ஊரிலுள்ள அத்தனை வில்லன்களும் ஆளுக்கு ஒரு துப்பாக்கியோடு ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். அங்கே ரஜினி வருவார் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. வருகிறார். வானத்திலிருந்து வருகிறார், ஸ்டைலாக, ஸ்லோவாக‌. நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் அவரை நோக்கிச் சீறிப் பாய்ந்தாலும் அவரது ஸ்லோமோஷனை விட வேகமாக அவற்றால் பயணிக்க முடியவில்லை. தோற்றுப் போய் வேறெங்கோ முட்டி மோதி கீழே விழுந்து கதறி அழுகின்றன. இருநூறு கைத்துப்பாக்கிக்கு எதிராக மெஷின் கண்ணை எடுத்தால் அது ஹீரோ, அதுவே வெறும் வாளை எடுத்தால் மாஸ் ஹீரோ. ரஜினி வாளை எடுக்கிறார், எல்லாருடையை வயிற்றையும் கிழிக்கிறார். ஸ்டைலாக செயரில் உட்கார்ந்து சிரிக்கிறார். வில்லன்களெல்லாம் ஓரமாய், ஏகமாய்ப் பயந்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள். ரசிகர்களும் தான்.

அப்படிப் பதம் பார்த்ததால் தான், படம் முழுவதும் நம்மைப் பதம் பார்க்கிறது திரைக்கதை. படத்தில் தொடக்கத்திலேயே மகளுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைச் சொன்னபிறகு, அந்த கதாபாத்திரத்தின் மீதான சஸ்பென்ஸ் உடைந்து விடுகிறது. அதனாலேயே ஜாலியான அப்பா மகள் காட்சியைக் கூட அனுதாபத்தோடு பார்க்கும் மனநிலை நமக்கு வந்து விடுகிறது.

அதேபோல, வில்லன் யார் என்பது பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது, ஆனால் பாவம் ஆளானப்பட்ட ஆதித்ய அருணாச்சலத்துக்கு இந்த மேட்டரை யாரும் சொல்லவில்லை. அவர், ‘யாரோ ஒருத்தர்’ அவரு இப்படியா ? அப்படியா என்றெல்லாம் கேட்கும்போது தியேட்டரில் பலர் வெண்ணிற ஆடை மூர்த்தியாய் மாறி உதட்டை உருட்டியதைக் கேட்க முடிந்தது.

நான் மும்பைக்கு போகணும்ன்னா மூணு கண்டிஷன் என அமர்க்களமாய் ஆரம்பிக்கிறார் ரஜினி. ஒன்று, வேலையை முடிக்காம பாதில‌ வரமாட்டேன். ரெண்டு, யாராய் இருந்தாலும் விடமாட்டேன். மூணு, தாடியை எடுக்கமாட்டேன். அப்படியே நான்காவதாக, “பேன்டை இன் பண்ண மாட்டேன்” என்றும் சொல்லியிருக்கலாம் என தொடர்ந்து வருகின்ற காட்சிகள் நமக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஒரு ரஜினி ரசிகனாக ரஜினியை வைத்துப் படமெடுப்பதற்கும், ரஜினி ரசிகர்களுக்காகப் படமெடுப்பதற்கும் உள்ள வேறுபாட்டை பேட்டையும், தர்பாரும் நமக்குப் புரிய வைக்கின்றன.

ஒரு கட்டத்தில் இது சிங்கம் 4 படமா ? இதை இயக்கியது ஹரியா எனும் சந்தேகமே வந்து விடுகிறது. சந்தேகம் வந்த கொஞ்ச நேரத்திலேயே அந்தப் படத்தில் வருவது போல சில காட்சிகளும் வந்து வியக்க வைக்கிறது. சந்தோஷ் சிவன் போன்ற ஜாம்பவான்களுக்கு இந்தப் படத்தில் வேலை குறைவு. குறைந்தபட்சம் புதுமையாய் எதையும் சிந்தைக்க வேண்டிய வேலை சுத்தமாய் இல்லை.

பவர்புல் வில்லன் இல்லாத ரஜினி படம் என்றைக்குமே வியக்க வைக்காது. இந்தப் படத்திலும் வில்லன் பெரிய சைஸ் புஸ்வாணம். சுனில் ஷெட்டியைச் சுற்றி டான்கள் முதியோர்க் கல்வி ஸ்கூல் மாணவர்கள் போல அமர்ந்திருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் போல உணர்ச்சியற்ற முகபாவனையோடு மிரட்ட நினைக்கிறார் அவர். ஆனால் அவருக்குக் கொடுக்கப்படும் காட்சிகள் ஸ்பெஷல் வில்லனை சாதா வில்லனாக மாற்றித் துவைத்துக் காயப் போடுகிறது.

வலியண்ணன் தோட்டத்து வேலியை, பெருச்சாளிகள் ஓட்டை போடுவது போல தேச எல்லையை கட்டிங் பிளேயர் வைத்து கட்பண்ணி இந்தியாவுக்குள் வருகிறார் வில்லன். டிரோன்களை வைத்து அட்சர சுத்தமாய் மனிதனை ஸ்னேன் பண்ணி சுடுகின்ற இந்த ஹைடெக் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் காலத்தில், பட்டனை அமுக்கினா கத்தி விரியும் என ஒரு சிறுபிள்ளை விளையாட்டை நடத்துகிறார். அந்த கத்தியை ஒரு சோபாவில் குத்தி கிழித்து, செய்முறை விளக்கமும் சொல்கிறார். ஒரு பாழடைந்த பில்டிங்கில் போனதும், அட இங்கே செம பாதுகாப்பு என்கிறார். இவரையெல்லாம் எப்படி சர்வ தேசத்து போலீஸ்படையும் தேடித் தேடித் தோற்றுப் போச்சு என்பது ஹரிக்கே விளக்கம், சாரி முருகதாஸ் இல்ல ?

கடைசிக் காட்சியில் வில்லன் தப்பித்துப் போகிறான். ஐயோ, எங்கே போனான்னு தெரியலையே என ஹீரோ டென்ஷன் ஆகிறார். அப்போ வில்லனே கூப்பிட்டு, தான் எங்கே இருக்கிறோம் என்பதைச் சொல்கிறார். ஹீரோ ஒண்டிக்கட்டை என்பதால், செத்துப் போன போலீஸ்காரங்க குடும்பங்களை பணையக் கைதிகளாய்ப் பிடித்து வைத்திருக்கிறார். அப்புறம் என்ன, நூறு இள வில்லன்களை கத்தியை வைத்தே வேட்டையாடிய‌ ரஜினி, கிழ வில்லன் ஒருவரை ஒற்றைக்கு ஒற்றை வேட்டையாடுவது பெரிய விஷயமா என்ன ?

ரஜினி படங்களிலேயே பார்க்க முடியாத ஒரு அதிசயம், அவரது போலீஸ் படையில் கூடவே நடக்க ஒரு இளம் பெண் போலீசை சேர்த்திருப்பது. ஐபிஎல் ஆட்டத்துக்கு சீர் லீடர்ஸ் தேவைப்படுவது போல, ஆதித்ய அருணாச்சலத்தின் ஆட்டத்திற்கும் ஒரு சீர்லீடர் தேவைப்பட்டிருப்பது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும், எழுபது வயசுல தலைவர் இதெல்லாம் பண்றாருல்ல என்கிறார்கள். ஏதோ எழுபது வயசுல அவரு இதையெல்லாம் பண்ணணும்ன்னு நாம கம்பல் பண்ணின மாதிரி.

ரொம்ப சாரி, நயந்தாரா ந்னு ஒரு நடிகையும் இந்தப் படத்துல இருக்காங்க. மறந்துட்டேன். யோகிபாபு உண்மையிலேயே சில ஒன் லைனர்களில் வசீகரிக்கிறார். ‘நீயெல்லாம் பையனா ?’ , ‘உன்னை விட பெரியவன்னா போதி தர்மனை தான் புடிக்கணும்’ என்றெல்லாம் சகட்டு மேனிக்கு தலைவரை அவர் கலாய்ப்பது ரசிக்க வைக்கிறது. ஆனா, ‘உன் வயசுக்கு’ நயந்தாரா ஒரு கேடா என அவளோட அண்ணன் கேக்கும்போ பாவமா இருக்கிறது. எழுபது வயசுல இவ்ளோ கஷ்டப்படறாருல்ல, கன்சிடர் பண்ணினா என்னவாம் ?

படத்தில் ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ், உண்மையிலேயே கலங்க வைக்கிறார். அவரது கண்களும் நடிக்கின்றன. அவர் நடிக்கும்போது தலைவர் போட்டி போட்டு நடித்து கஷ்டப்பட வேண்டாமென அவரை படுக்க வைத்து விடுகிறார்கள். பாவம் எழுபது வயசாகுதுல்ல ?!

பல காட்சிகள் சட்டென ஆரம்பித்து சடக்கென முடிந்து விடுகின்றன. உதாரணமாக கைதிகளைக் கொண்டு வில்லனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் காட்சி. பேச ஆரம்பிச்சு ஒரு நிமிசத்துல நேரடியாக போலீஸ் பட்டாளம் வில்லனின் இடத்தை முற்றுகையிடுகின்றன. காணாமல் போன பெண்களைக் கண்டுபிடிக்க கிடைக்கின்ற க்ளூ எல்லாம் ராஜேஷ்குமாராக வேண்டுமென நினைத்து பள்ளிப் பிள்ளைகள் எழுதிப் பார்க்கும் துப்பறியும் கதை போல இருந்தது. அதிலும், மூக்கில வெள்ளையா இருந்துச்சு… ஓ.. அப்போ கோகைன்… என்று சொல்லும்போது, ஷப்ப்பா… என்றிருக்கிறது.

இரண்டு காட்சிகள் முருகதாஸ் டச்சுடன் இருந்தன. ஒன்று மந்திரியின் மகளைக் கண்டுபிடித்த பின்பும், அதைச் சொல்லாமல் அவளைத் தேடும் சாக்கில் அவர் நடத்துகின்ற வேட்டை. இன்னொன்று வில்லன், பொதுமக்களைக் கொண்டே போலீஸை வேட்டையாட வைக்கும் காட்சி. இரண்டுமே அட போட வைத்தன.

ரயில் நிலைய சண்டைக்காட்சி ‘சிறப்பு, வெகு சிறப்பு’ பாணியில் வியக்க வைத்தது. சில இடங்களில் ரஜினியே அடுத்த தலைமுறை நடிகர்களின் மேனரிசத்தைச் செய்தது வியக்க வைத்தது. ரசிக்கவும் வைத்தது.

அனிருத் மட்டும் இல்லாமல் போயிருந்தால் ரசிகர்களுக்கு உற்சாகமே இல்லாமல் போயிருக்கும். ஒண்ணுமே இல்லாத வாணலியில் கூட அம்மாக்கள் கிளறோ கிளறென்று கரண்டியால் கிளறுவது போல, ரசிகர்களை உருப்பேற்றி உசுப்பேற்றி விட்டதில் முக்கிய பங்கு அனிருத்தையே சாரும். அதிலும் அண்ணாமலை இசை, பில்லா கால சிக்னேச்சர் இசையையெல்லாம் நவீனப்படுத்தி அளித்திருப்பது புதுமை.

படம் முடிந்தபோது அருகில் இருந்த நண்பர் கேட்டார், உண்மையிலேயே இது முருகதாஸ் படம் தானா ? அவர் கேட்டு முடித்ததும் திரையில் கொட்டை எழுத்தில் எழுதிக்காட்டினார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் முருகதாஸ் என்று. நல்லவேளை, சந்தேகம் தீர்ந்தது.

அட்டகாசமான ரேஸ்காரை களமிறக்கியவர்கள், அதற்கான டிராக்கைப் போட மறந்தது ஏமாற்றமே.

தர்பார் என்றால் அரசவை என்று பொருள். இங்கே அரை சுவை என வைத்துக் கொள்ளலாம். தமிழாவது வாழட்டும்.

Viewing all 490 articles
Browse latest View live