பாரதி தாசனே.
உன்னை
எழுதும் தகுதியேனும்
எனக்கிருக்கிறதா ?
இரவல் ஒளிவாங்கி
இரவில் விரிக்கும்
சந்திரப் பாடல்களோடு
சிந்திப்பவர்கள் நாங்கள்,
நீயோ
சூரியனிடம் சங்கமித்து
இன்னோர்
சூரிய குடும்பத்தையே சந்தித்தவன்.
மூட நம்பிக்கையின்
மூலைகளெங்கும்
நீ அடித்துச் சென்ற வெளிச்சம்
இன்னும்
ஈரம் காயாமல் இருக்கிறது.
பாட்டுக்குள் உயிர் வைத்த
பாரதியை
உயிருக்குள் வைத்து
உடனிருந்தாயே,
அந்த பிரமாண்டப் பாக்கியம்
சத்தியமாய் எமக்குச் சாத்தியமில்லையே.
கிறுக்கன் என்றெல்லாம்
எழுதி எழுதி,
நீ
தெளிய வைத்தவைகள் தான்
எத்தனை எத்தனை ?
உன் அனல் கவிதைகளின்
சுடு மூச்சில்
எங்கள்
பட்டாம்பூச்சிக் கவிதைகள்
சிறகுகள் இழக்கின்றன.
நாங்கள்
சுதந்திரமாய் எழுதுகிறோம்
நீ
சுதந்திரத்துக்காய் எழுதினாய்.
கவிதை எழுதி,
கர்வக் கிரீடம் சூட்டி
நீ கனவுகளுக்குள் பயணிக்கவில்லை,
போராட்டக் கால
புகலிடப் புலிக்குகையானாய்.
இருந்த பொருளை
இந்தியாவுக்காய் இறைத்தாய்.
சாதிச் சங்கிலிகளின் கனத்தில்
மானிடக் கழுத்துகள்
தலைகுனிந்து கிடந்ததை,
நிமிர்ந்து நின்று எழுதினாய்.
நதியைக் காண
கடல் கரை தாண்டுமா ?
உன் பாடலின் பிரமிப்பில்
பெரியார் பலநாள்
பரவசப் பட்டாராமே?
எழுந்த போது கதிரவனாகவும்
விழுந்த போது
விழுதாகவும் தான்
உன் பயணம்.
விறகுக் கூட்டில் பயிரான
சிறகுச் காடு நீ,
பறப்பதற்கு என்றுமே பயப்பட்டதில்லை.
நீ,
உருக்காலைகளை
உற்பத்தி செய்தவன்.
வெயிலுக்கெல்லாம் பயந்து
முதுகெலும்பை என்றும்
முறித்துக் கொண்டதில்லை.
தன்மான இயக்கத்தின்
தரமான தயாரிப்பல்லவா நீ.
அன்னிய மொழி நம்
அடுக்களை வந்தபோது,
தமிழ் தாகத்தால்
அருவிகளை எரிக்கவே
ஆயுதமெடுத்தவன் அல்லவா நீ.
தமிழ் சுவாசிக்க
சங்கடப் பட்டவர் காலத்தில்,
சுவாசச் செடி
பயிரிட்டவனல்லவா நீ.
உன்,
எழுத்துக்களின்
கால்வாசியைக் கூட
என்
பாய்மரக் கப்பல்
படித்துக் கடந்ததில்லை.
இப்போது,
கவிதைச் சுக்கானோடு
கரையிலமர்கிறேன்.
கோபித்துக் கொள்ளாதே.
0
