இது என்
கடைசிக் கவிதையாகி
விடக்கூடாதெனும்
அச்சத்துடன் தான் எழுதுகிறேன்
ஒவ்வொரு கவிதையையும்.
இந்தக் கவிதையின்
சகோதரனோ
சகோதரியோ
நாளையோ
நான்காண்டுக்குப் பின்போ
வரவேண்டும் என்னும்
வேண்டுதலோடு.
ஆயினும்
ஏதேனும் ஓர் கவிதை
என்
கடைசிக் கவிதையாகி விடும்
என்னும்
உண்மையின்
திரைச் சீலைகள் அசைகின்றன.
எது
கடைசிப் பகலென்று அறியாத
ஒரு
காலையைப் போல
மலர்ந்து கொண்டிருக்கிறேன்.
கடைசிக்குப் பின்
முதல் என
பருவங்களும் மாறுகின்றன.
நான்
நடக்காத தெருக்களிலும்
பூக்களை உதிர்க்கும் மரங்கள்
ஏராளமாய்
வளர்கின்றன.
