Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

சிறுவர் பேச்சுப் போட்டி :நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்

$
0
0

நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்

வற்றாத வளம் தன்னை
முற்றாகத் தருகின்ற
உற்ற துணையாம் இயற்கையே போற்றி.

தீராத வரம் தன்னை
ஆறாகத் தருகின்ற
மாறாத அருளாளன் இறையே போற்றி

அனைவருக்கும் என் அன்பின் வணக்கங்கள்.

நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள் குறித்து உங்களோடு ஒரு சில வார்த்தைகள் பேசலாம் என நினைக்கிறேன்.

‘தூணிலும் துரும்பிலும் இருப்பவன் இறைவன்’ என என் அப்பா அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் இன்றைக்குப் பார்த்தால், தூணிலும் துரும்பிலும் இருப்பது நெகிழி தான் என்று சொல்லத் தோன்றுகிறது. சின்ன விஷயம் தானே என நினைத்து நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு சிறு பிளாஸ்டிக் பொருளும் பூமியின் மீது நாம் தூவும் ஒரு துளி விஷம் என்பது தான் உண்மை.

இங்கே வந்தபோது தண்ணீர் குடித்தேன். நெகிழிப் பயன்பாடு. ஒரே ஒரு பாட்டில் தானே என உதாசீனப்படுத்தி விட முடியாது. காரணம், உலக அளவில் ஒவ்வொரு நிமிடமும் விற்கப்படுகின்ற பிளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கை 10 இலட்சம் ! அடுத்த ஆண்டு இது நிமிடத்துக்கு பன்னிரண்டு இலட்சம் என மாறும் என்கிறது ஒரு ஆய்வு. ஒரு ஆண்டுக்கு சுமார் 500 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா ?

நேற்று அப்பாவுடன் கடைக்குச் சென்றபோது ஒரு பொம்மை வாங்கினேன். அதை ஒரு நெகிழிப் பையில் போட்டுக் கொடுத்தார்கள். ஒரு பை தானே என நாம் அலட்சியமாய் இருந்து விட முடியாது. காரணம் உலக அளவில் ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் ! இந்தப் பைகளெல்லாம் பூமியின் மீது போர்த்தப்படுகின்ற சவத் துணிகள் அல்லவா ?.

புள்ளி விவரங்களை அடுக்கிக் கொண்டே போனால் நேரமாகிவிடும். எனினும் கடந்த அரை நூற்றாண்டுகளில் நாம் சேமித்த பிளாஸ்டிக் குப்பைகளின் எடை சுமார் 9 பில்லியன் டன்கள். அதாவது எட்டு இலட்சம் ஈபில் டவர்களின் எடைக்கு சமமான அளவு குப்பை. இதில் வெறும் ஒன்பது சதவீதம் மட்டுமே மறு சுழற்சிக்குச் செல்கிறது. மற்றதெல்லாம் மண்ணின் மீது அழியாமல் கிடந்து, மண்ணை அழிக்கிறது. தாயாய் நினைக்கின்ற பூமிக்குச் செய்கின்ற அதிகபட்ச துரோகமல்லவா இது !!

வளமான நமது பூமியை, மலடான பூமியாய் மாற்ற இந்த பிளாஸ்டிக் மட்டும் போதும். இந்த பிளாஸ்டிக் ஆயிரம் ஆண்டுகள் வரை அழியாமல் பூமியில் கிடக்கும். அதாவது இப்போது பூமியில் போடுகின்ற பிளாஸ்டிக் கிபி 3020 ம் ஆண்டு வரை அழியாமல் இருக்கும். எவ்வளவு அச்சமூட்டும் விஷயம் இல்லையா ?

பிளாஸ்டிக்கை புதைத்தால் பூமி மாசடைகிறது.
அதை எரித்தால், காற்று மாசடைகிறது.
நீரில் மிதந்து தண்ணீர் மாசடைகிறது !

இந்த மாசு என்பது நம்மையும் நமது ஆரோக்கியத்தையும் மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல. சுமார் 11 இலட்சம் பறவைகளும், உயிரினங்களும் ஆண்டு தோறும் இந்த பிளாஸ்டிக்கினால் உயிரை இழக்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் போது நாம் கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக்கை உட்கொள்கிறோம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இதை மைக்ரோ பிளாஸ்டிக் என்கிறார்கள். இது உடலுக்கு மிகவும் தீமையானது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இன்றைக்கு பல புதிய புதிய நோய்கள் புறப்பட்டு வர ஒரு முக்கியமான காரணம் இந்த நெகிழி தான்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா ! அதை நாமே தான் தீர்மானிக்கிறோம்.

நெகிழியும் ஆபத்தும் ஒற்றை நாணயத்தின் இரட்டைப் பக்கங்கள் போல. பயன்படுத்துவதை நிறுத்துவதே பூமிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

பல நாடுகள் நம்மை அழிக்கும் நெகிழியைத் தடை செய்திருக்கின்றன. நாடுகள் தடை செய்கிறதோ இல்லையோ, நாம் அதை தடை செய்ய வேண்டும்.

கடைகளுக்குச் செல்லும் போது சுமந்து செல்கின்ற துணிப் பைகள், நெகிழிப் பயன்பாட்டை கணிசமாய்க் குறைக்கும் !

வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தினால், நெகிழியின் ஆபத்து கணிசமாய்க் குறையும் !

பிளாஸ்டிக் குடங்களைத் தவிர்த்து மண் குடங்களைப் பயன்படுத்தினால், நெகிழியின் உற்பத்தி கணிசமாய்க் குறையும். !

பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக மாற்று பாட்டில்களில் தண்ணீர் சுமந்து வந்தால், நெகிழியின் வீச்சு கணிசமாய்க் குறையும்.

பிறர் என்ன செய்வார்கள் என்று பார்ப்பதல்ல, நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்பதே சரியான வழிமுறையாகும்.

அழிவின் தோழனாம்
நெகிழியை ஒழிப்போம்.

வாழ்வின் தோழனாம்
இயற்கையைக் காப்போம்

என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி

*


Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles