காதல் தோற்றுப் போனால்
தாடி வளர்ப்பதை
வழக்கமாக்காதீர்,
தாடி முளைக்கத் துவங்காத
நண்பர்களும் காதலித்துக் கொண்டிருக்கக்
கூடும்.
காதலி என்று
நீங்கள் சொல்லிக் கொள்பவர்
வேறு யாருடனோ
காஃபி குடிப்பதைக் காண்கையில்
சுடச் சுடக் கவிதை
எழுதி அழுது விடாதீர்கள்
அல்லது
குறைந்த பட்சம்
எழுதியதை யாருக்கும் காட்டாதீர்கள்.
காதல்
ஒரு முறைதான் வருமென்று
ஒவ்வொரு முறையும்
சொல்லித் திரியாதீர்கள்,
உங்கள் காதலி
ஏற்கனவே காதலித்திருக்கக் கூடும்.
உன் பெயரைத்தான்
என் மழலைக்குப் போடுவேன்
என
அடம்பிடித்து புலம்பாதீர்கள்,
மனைவி ஏதேனும்
பெயர் சொல்லி அடம்பிடித்தால்
சந்தேகத் தீ வளர்க்காதீர்கள்.
நினைவாக என்று
கிழிந்த கைக்குட்டை
அழுக்கு துப்பட்டா
சேமித்து வைக்காதீர்கள்,
ராத்திரி உளறல்
உண்மை உரைக்கக் கூடும்
இரவும் பகலும்
மொட்டை மாடி வெறித்து
வருடங்கள் ஓடியபின்
எந்த ரமேஷ் ?
என்று காதலி கேட்டால்
ராங் நம்பரோ என்று சந்தேகிக்காதீர்கள்.
காதல் பூவென்று
கவிதை எழுதியதை நினையுங்கள்.
கிள்ளிப் போட்டபின்
வாடிப்போவதே
வாடிக்கை எனும் நிஜமுணருங்கள்.
ஃ
