Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

துக்கவெள்ளி

$
0
0

மரச் சிலுவையில்
மனிதாபிமானம்
அறையப்பட்ட நாள்.

பூப் பூத்த குற்றத்துக்காய்
பூச் செடிக்கு
தீச் சூளை பரிசு.

பாதைகளை செதுக்கியதற்காய்
பாதங்களுக்கு
மரண தண்டனை.

சுட்டது என்பதற்காய்
சூரியனுக்குச்
சிறைச்சாலை.

அதெல்லாம் இருக்கட்டும்.
யாரிந்த நாளை
துக்க தினம் என்பது ?

மடியாத விதைகள்
ஒற்றை மணிதான்.
மடிந்த பின்பு தானே
பலமடங்காய் பரிமளிக்கும் !
விதைப்புக்காய் யாரேனும்
அழுவீர்களா ?

அலைந்து கொண்டே
இருந்தால்
மேகங்கள் மேகங்களே.
விழுந்தால் தானே
வாழ்விக்கும் மழை !
மழைக்காக மகிழாமல்
அழுவீர்களா ?

சமத்துவம் போதித்த
தேவன்
மரணத்தில் கூட அதை
பின்பற்றியது சரிதானே.
சரியான ஒன்றுக்காய்
தவறாமல் அழுவீர்களா ?

முற்றுப் புள்ளியென்ற
ஒற்றைப்புள்ளிதானே
ஆக்கிய வாக்கியத்தை
முழுமையாக்கித் தருகிறது!
முழுமைக்காய் நீங்கள்
முக்காடிட்டு அழுவீர்களா ?

தயவு செய்து
இதை
துக்க தினம் என்று
பிரகடனப் படுத்தாதீர்கள்.

இது,
விண்ணகத்தின் முளை
மண்ணில் விழுந்த நாள்.

அடையாள அழுகைக்காரரிடம்
இயேசுவே சொல்கிறார்.

எனக்காக அழவேண்டாம்.
உங்களுக்காகவும்
உங்கள்
பிள்ளைகளுக்காகவும்
அழுங்கள்.



Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles