நண்பர்களே
ஏன் இந்த சிந்தனை ?
போர்கள் வாழை மரங்கள்,
ஒன்றின் முடிவில்
இன்னொன்று முளைக்கும்.
போர்ப்பயிரை நிறுத்துங்கள்.
பாதுகாப்புக்காய்
எழுபது விழுக்காட்டை ஒதுக்கி,
பாட்டாளிகளைப்
பட்டினிக்குள் பதுக்கி,
வறுமைக்கோட்டை
இறுக்கிக் கட்டும்
இந்த மண்டையோட்டு அறுவடை
இருபதாம் நூற்றாண்டிலுமா ?
ஒவ்வோர்ப்
போரின் பின்னாலும்
பலியிடப்படும் பொருளாதாரம் !
தீயிடப்படும்
தியாகிகளின் உயிர் !!
மிஞ்சுவதெல்லாம்
மட்கிப்போன தடயங்கள் மாத்திரம்.
உலகத்தைக் கோரைப்பாயாய்
சுருட்டிக் கட்டியவர்கள் எல்லாம்,
விரலிடுக்கில்
சிறு வெண்கலம் கூட
எடுத்துச் சென்றதில்லை.
நீயா.. நானா போட்டிகள்
எப்போதுமே
மூன்றாவது மனிதனென்று தானே
முடிவாகியிருக்கிறது !
மலைச்சரிவுகளில் ஞானிகள்
முளைக்கலாம்.
ஆனால்
மனச் சரிவுகளில் தான்
மனிதர்கள் முளைக்க முடியும்.
தேசியப்பறவையாய்
மயில் இருந்தும்
வல்லூறுகளை மட்டும்
வழிபடுவது நியாயமில்லை என்பதால்,
இதோ.
முதல்
சமாதானப் புறாவை பறக்கவிடுகிறேன்
தயவு செய்து அதை
சமையலுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
