நீ வருவதாகச் சொன்ன
அந்த நாளின்
இமைகள் பிரிந்திருந்த
இரவில்,
நீ வரவேயில்லை.
பின்னிரவுப் பொழுதொன்றில்
யாரோ
வீட்டைத் தட்டும்
ஓசை கேட்க,
வெளியே
உனக்குப் பதிலாய்
உற்சாகமாய் நின்றிருந்தாள்
உன் தோழி.
தயக்கங்கள் ஏதுமின்றி
சட்டென்று தழுவி
என்
உடலெங்கும் நழுவினாள்.
அவளிடம் இருந்த
இரவு நேர வெட்கத்தின்
வசீகரத்தின்
என்
காத்திருத்தலில் தவிப்பெல்லாம்
கரையத் துவங்கியது.
கரைந்து வழிந்து கொண்டிருந்தேன்
நான்
அவளது காலடிகளில்.
சண்டையிடவோ,
கோபித்துக் கொள்ளவோ
அவளிடம் ஏதுமிருக்கவில்லை.
பிரியும் வரை
இறுக்கமாய் நின்றிருப்பதைத் தவிர.
அன்று நிம்மதியாய்த்
தூங்கினேன்.
இனிமேல்
உன் தோழியை
அடிக்கடி அனுப்பி வை
என்னும் டைரிக் குறிப்போடு.
சட்டென்று சன்னல் திறந்து
நன்றி சொல்லி
கையசைத்து
சாரல் தெரித்துச் சிரிக்கிறாள்
தோழி.
